ஸ்ரீசைலத்தில் மூலவரைத் தொட்டு வணங்க வில்லையே என்ற குறை மறுநாள் நீங்கியது.
அது எப்படி என்பதைப்பற்றியும், கோவிலின் சிறப்பு, நந்தியின் சிறப்பு பற்றியும் நாளை தொடரும். ( அதுதான் முடியவில்லை ) என்று சொல்லி இருந்தேன் அல்லவா?
போன பதிவில்
காலை நந்தியால் கிளம்ப டாக்ஸி பிடித்தோம், மல்லிகார்ஜுனர்சதன் சத்திரத்திற்கு பக்கம் இருந்த ஒரு கடையில் டாக்ஸி ஏற்பாடு செய்து தந்தார்கள்.
அதற்குள் எனக்கு மறுபடியும் மல்லிகார்ஜுனரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது சரி போய் வரலாம் என்று கிளம்பினோம், அங்கு டிக்கட் கொடுக்கும் இடத்தில் யாருமே இல்லை கூட்டமும் இல்லை அதனால் டிக்கட் எடுக்காமல் போனோம், அங்கே போனால் இன்ப அதிர்ச்சி.
நேரே கருவறைக்குள் போங்கள் போங்கள் என்று விரட்டினார்கள் எங்களுக்கு முன் ஒரு பத்து பேர் இருந்தார்கள். அதனால் போகும் போதே பார்த்துக் கொண்டு போனோம் கவசம் எதுவும் சாற்றாமல் சிவன் அழகாய் தெரிந்தார். நம்மை அபிஷேகம் செய்ய வைத்து தலையை சிவன் மேல் வைத்து வணங்கி எழ சொன்னார்கள். என் கணவர் நம் தலையை வைத்து வணங்க தயங்கிய போது குருக்களே என் கணவரின் தலையை கீழே அமுக்கி வணங்க வைத்தார். இறைவனை கண்களில் நீர் ததும்ப வருடி , வணங்கி மகிழ்ந்தோம்.
காலையில் பணம் இருப்பவர், இல்லாதவர் என்று பேதம் இல்லாமல் அனைவரும் இறைவனைக் கட்டித் தழுவி வணங்க வைத்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.
கருவறைக்கு போகும் வழியில் சுவரின் இருபக்கமும் அடியார்களின் வாழ்க்கை வரலாறு செதுக்கப்பட்டு இருந்தது.தெலுங்கில் இருந்ததால் ஒன்றும் புரியவில்லை. ஒரு பெண் கண்களில் கண்ணீருடன் இறைவனை வணங்கும் காட்சி , சிவன் அடியார்கள் வணங்கிய காட்சி எல்லாம் இருந்தது.
வெளியில் வந்தால் விபூதி கவர் , அல்லது விபூதி கட்டி சின்னது முதல் பெரிய பெரிய லிங்கம் அளவு இருந்தது. பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.
விபூதி கட்டி விற்கும் பக்கத்தில் சதுரமாய் கல் இருந்தது. அதில் கட்டங்கள் இருந்தது அதில் எல்லோரும் காசை நிற்க வைத்தார்கள் நிற்க வைக்க மிகவும் பிரயத்தனப் பட்டுக் கொண்டு இருந்தார்கள். நானும் வைத்து பார்த்தேன். நாம் இங்கு நகர்ந்தவுடன் காசை எடுத்து உண்டியலில் போட்டு விட்டார் விபூதி விற்பவர். காரணம் தெரியவில்லை.
பாலில் பழம் சீனி போட்ட பிரசாதம் கொடுக்கிறார்கள் சில சன்னதிகளில். ஸ்ரீராமரும், பாண்டவர்களும், சத்ரபதி சிவாஜியும் வணங்கியதாக சொல்கிறார்கள்.
12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று ஸ்ரீசைலம், சகதி பீடத்தில் ஒன்று அம்மன் பிரமராம்பாள் கோவில்.
மல்லிகாபுரி இளவரசி, மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா(மருதமரம்) மலர்களால் வணங்கியாதல் மல்லிகார்ஜுனர் என்று அழைக்கப்பட்டாராம். ஸ்ரீசைலத்தை வணங்கியவர்களுக்கு மறுபிறவி இல்லையாம். (மிகவும் நல்லதுதான் )
மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு மூன்று தலங்கள் உள்ளன.
வடதிசையில் உள்ளது-மல்லிகார்ஜுனம்=ஸ்ரீசைலம்
மத்தியில் உள்ளது-மத்தியார்ஜுனம்=திருவிடைமருதூர்(மகாலிங்கேஸ்வரர்)
தெற்கில் உள்ளது-புடார்ஜுனம்=திருப்புடைமருதூர், நாறும்பூநாதர்
திருக்கோயில்,நெல்லை மாவட்டம்,முக்கூடல் அருகில்
கோவில் வாசல் பக்கம் நாகலிங்க மரம் இருக்கிறது, அதை அம்மன் சினிமாவில் வரும் அம்மன் போல் மஞ்சளால் அழகு படுத்தி இருக்கிறார்கள்.
கோவில் தெப்பக்குளம் சீர் செய்து கொண்டு இருக்கிறார்கள்
அம்மன் மரத்திற்கும் குளத்திற்கும் நடுவில் ஒரு கோவில் இருக்கிறது அங்கு வீரபத்திரர் கோவில் உள்ளது. ( கோவில் மதிலில் எழுதி இருக்கும் வாசகம் பாருங்கள்) இது மட்டும் தான் ஆங்கிலத்தில் நல்லவேளை தெலுங்கு தெரியாத வெளியூர் பயணிகளுக்கு வசதியாக இருக்கிறது.
கோவிலுக்கு வெளியே இருபுறமும் சிவலிங்கங்கள். முன் புறம் நந்தி. எல்லா சிவலிங்கங்களுக்கும் தேங்காய் உடைத்து வைத்து இருக்கிறார்கள். தொன்னையில் பிரசாதம் வைத்து இருந்தார்கள்.
பிறகு கோவில் தரிசனம் முடித்து வந்தபின் சத்திரம் பக்கத்திலேயே உணவை முடித்து விட்டு டாக்ஸி டிரைவரிடம் ஸ்ரீ சைலத்தில் பார்க்க வேண்டிய கோவில் எல்லாம் கூட்டிப் போங்கள் என்றோம். முதலில் சாட்சி கணபதி கோயிலுக்குக்கூட்டிப் போனார்.
ஸ்ரீசைலம் போகும் முன் இந்த கணபதியை வணங்கி விட்டுத் தான் போவார்களாம் ஆனால் நாங்கள் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனரை வணங்கி விட்டு இறங்கும் போது தான் வணங்கினோம் தெரியாமல் செய்த தப்பை மன்னித்து விடுவார் விநாயகர் !
கடையில் விபூதி கட்டிகள், குங்குமம்
ஷேர் ஆட்டோக்கள் ஊர் முழுவதும்
காலை நீட்டிக்கொண்டு சுகமான பயணம்
ஊர் முழுவதும் இந்த அம்மா கையில் உள்ளது போல் பிளாஸ்க், கூடையில் மிகவும் சின்ன கப்பில் டீ, அல்லது காப்பி வைத்துக் கொண்டு விற்கிறார்கள் ஒரு வாய் காப்பி தான் இருக்கும் 10 ரூபாய்
ஆந்திரா மிளகாய் சிவப்பாய் காயப்போட்டு இருப்பதே ஒரு அழகு.
பாதாள கங்கை செல்லும் வழி
சாட்சி கணபதிக்கு பின் பாதாள கங்கை கூட்டி போனார் ஆனால் வெகு தூரம் போகும் படியும், குரங்குகள் படுத்தின பாடும் அங்கு போகும் ஆசை இல்லாமல் செய்து விட்டது. கீழே போய் பார்த்தாலும் த்ண்ணீர் இல்லை என்றார்கள் அதனால் போகவில்லை.
அடுத்து சிகரம் என்ற இடத்திற்கு கூட்டிப் போனார். நல்ல உயரமான இடம் அங்கு இருந்து பார்த்தால் ஊரின் அழகு தெரிகிறது. அங்கு போக படிகளும் இருக்கிற்து , வாகனங்களும் போகிறது. கார் மேலே போகவும் டிக்கட் உண்டு. அங்கு இருக்கும் கோவிலுக்குள் கீழே சிவலிங்கமும், கொஞ்சம் படிகள் ஏறி ப்போனால் கைலாயம் மலை போல் மலை முழுவதும் சிவலிங்கள் போல் அமைத்து இருந்தார்கள்.
குரங்குகள் நம் கையில் இருக்கும் கைப் பைகளை பிடுங்க வருகிறது குரங்களை அங்கு உள்ள பாதுகாவலர் கவண்கல் வீசி விரட்டி நம்மை மேலே போக வைக்கிறார்.
அதற்கு மேல் கொஞ்சம் படிகள் ஏறி போனால் ஒரு கல்லின் மேல் நாகம் சுற்றியது போல் இருந்தது. அந்த வட்டகல்லின் மேல் நந்தி இருந்தது நந்திக்கும் அந்த வட்டகல்லுக்கும் இடையில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. அதில் எள்ளும் அரிசியும் போடுகிறார்கள், (சிறு கவரில் இரண்டு ரூபாய்க்கு விற்கிறார்கள்) பின் நந்தியின் இரண்டு கொம்புகளைப் பிடித்துக் கொண்டு கொம்புகளுக்கு இடையில் தூரத்தில் தெரியும் ஸ்ரீசைலத்தை வணங்குகிறார்கள்.
நந்தி தவம் இருந்து நீண்ட ஆயுளைப் பெற்று சிவனுக்கு வாகனமானது இங்குதான். நந்தி தவம் இருந்த இடம் நன்தியால். நந்தி கோவில்கள் ஒன்பது இருக்கிறதாம்.. நாங்கள் ஒரு ஐந்து பார்த்தோம்.
மகாநந்தி எனும் இடத்தில் உள்ள நந்தி பார்க்கில் மகா நந்தியை தரிசனம் செய்தோம். நாம் போட்டோ எடுக்க கூடாது. அவர்கள் ஆள் வைத்து இருக்கிரார்கள். அவர்கள் எடுத்து தருவார்கள் . நாங்கள் உள்ளே போய் பார்த்தோம் போட்டோ எடுக்க வில்லை. வெளியே போய் அலைபேசியில் எடுத்தபடம்.
பக்கத்து கடை வாசலில் இருந்து எடுத்த படம்.
பிறகு நவபிரம்மா கோவில் பார்த்தோம். தொல்லியல் துறையின் பொறுப்பில் உள்ளது, அழகிய கலை வேலைப்பாடு நிறைந்த கோவில், அது அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்.