திங்கள், 20 ஜூலை, 2015

குறிஞ்சி ஆண்டவர் கோயில்


குறிஞ்சி ஆண்டவர் கோவில்
    கொடைக்கானலில் பூக்கும் அழகிய மலர்களால் ஆன அர்ச்சனைக்கூடைகள் 
வெளிச்சுற்று கோபுர சுவர் அழகுபடுத்தப்படுகிறது
12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூக்கள்  பூக்கும், இந்த குறிஞ்சி ஆண்டவர் கோவில் கொண்டுள்ள பகுதியில். குறிஞ்சிப் பூ பூக்கும் சமயம் குறிஞ்சி ஆண்டவருக்கு சமர்ப்பிக்கப்படும்.

சிறு வயதில் பள்ளியிலிருந்து சுற்றுலா வந்தோம், குறிஞ்சி பூ பூக்கும் சமயம் .அந்தப் பூக்களைப் பத்திரமாய் அட்டையில் ஒட்டி அதன் மேல் கண்ணாடி கவர் ஒட்டி பள்ளியில்  சுற்றுலா வராதவர்களுக்குக் காட்டி மகிழ்ந்தது  நினைவுக்கு வந்தது.

                                            குறிஞ்சிப் பூ- படம், (நன்றி - கூகுள் )
குறிஞ்சி முருகன் கோவிலை லீலாவதி என்பவர் கட்டி இருக்கிறார், இப்போது பழனி கோவிலின் உப கோவிலாக பராமரிக்கப்படுகிறது.
மிகவும் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் குருக்கள் , பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. 

 கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை , அதனால்  கோவிலிருந்து தூரத்தில் தெரியும் பழனி மலையின் அழகிய காட்சி, கோவில் வாசலில் இருக்கும் கடைகள் , நம் ஊர் பக்கம் பார்க்க முடியாத  சிட்டுக்குருவி, அங்கு மரத்தில் படர்ந்த கொடியில் வித்தியாசமான காய் இவற்றை இங்கு காட்சி ஆக்கி இருக்கிறேன்.
யானை யானை! அம்பாரி யானை!
வெட்டி வேர் யானை முகன்
மரத்தில் செய்த அழகிய   கலைப் பொருட்கள்
பளிங்குச் சிலைகள்
வீட்டில் தொங்க விட  சரவிளக்குகள், ஊதுபத்தி ஸ்டாண்டு, அழகிய வேலைப்பாடு அமைந்த சிற்பங்கள்.

சிரிக்கும் புத்தர்
வித்தியாசமான காய்
சிட்டுக்குருவி
சிட்டுக்குருவியின் மஞ்சள் மூக்கு தெரியுதா?
தூரத்தில் இருக்கும் இரண்டு  மலைகள் - பழனி மலை, இடும்பன் மலை.
                                             பனி மூட்டத்தில் எடுத்தது.

                                                             வாழ்க வளமுடன்.
                                                              =================

வியாழன், 16 ஜூலை, 2015

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்


கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற  முருகன் தலம் . இந்த ஊரே பாறையின் மீது அமைந்து உள்ளதாம். நாங்கள் போனமாதம் போய் இருந்தோம்.


”கோவில் போகும் வழி எல்லாம் பாதை கொஞ்சம் மோசமாக இருக்கும் மரங்கள் அவ்வப்போது விழும் ஆனால் உடனே அப்புறப்படுத்தி
விடுவார்கள் ” என்றார் எங்கள்  டிரைவர். சில இடங்களில் அவர் சொன்னது போல் வழியில் சில இடங்களில்  மரங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கோவில் குருக்கள் கொடைக்கானலில் இருந்து தான் வருகிறார். 

நாங்கள் போனபோது குருக்கள் கோயிலில் இருந்தார்,  குழந்தை வேலப்பரை மிக அழகாய்  விபூதி அலங்காரம் செய்து இருந்தார்.  அன்று சஷ்டி என்றும் மாலை சஷ்டி பூஜை செய்யும் குழுவினர் வருவார்கள்  என்றும் அபிஷேகம் நடக்கும் என்றும் குருக்கள் சொன்னார். ஆஹா! நம்மை சஷ்டி அன்று முருகன் அழைத்து இருக்கிறாரே! என்று  சொல்லிக்கொண்டு இருந்த போது அதைக் கேட்ட குருக்கள் ,”ஆமாம் இந்த  முருகன் நினைத்தால் தான் இங்கு வர முடியும்” இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம்  என்றார்.   ”கோவில் வாசல் வரை வந்தாலும்  தண்ணீர் குடித்து வரலாம், சாமான்கள் வாங்கி வரலாம் என்று போய் விடுவார்கள்  அவர்கள் திரும்பி வரும் போது நடை சாத்திய நிகழ்வுகள் உண்டு” என்றார். உடனே நாங்கள் நம்மை  அன்றே அவரை வணங்க அனுமதித்ததற்கு நன்றி கூறி  மீண்டும் மனம் மகிழ்ந்து வணங்கினோம். மூன்று நாட்களாக ஊர் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தபோதும் இன்வெர்ட்டர் போட்டு நாங்கள் பார்க்கும்படி ஒளியேற்றினார்.

 பழனி மலை  முருகன் போல இவரும் நவபாஷணத்தால் செய்யப்பட்ட சிலை. போகரால் செய்யப்பட்டது என்றும் சொன்னார். தீர்த்தம் கொடுத்தார்கள் பால் என்று நினைத்து குடித்தால்  பஞ்சாமிர்த தீர்த்தம் மிக ருசியாக இருந்தது. இது தான் கோவில் சிறப்பாம்.   முருகனுக்குச் செய்திருந்த அந்த ராஜ அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்  போன்று இருந்தது. ”அலங்காரம் மாலை கலைக்கப்படும், மீண்டும் அபிஷேகம்” என்று அவர் கூறியபோது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது. மீண்டும் அழகாய் அலங்காரம் செய்வார்- இருந்தாலும் இந்த மனது இருக்கிறதே! அப்படியே இருக்கக்கூடாதா  என்று நினைக்கத்தான் செய்தது.
அருள்மிகு குழந்தை வேலப்பர் என்பது இத் தலத்தின் இறைவன் பெயர்அலங்கார வளைவு நேரே இருக்கும் வாசல்
குழந்தை வேலப்பர் சன்னதி முன் கொடி மரத்தோடு மற்றொரு வாயில் ,அதன் அருகில் பிள்ளையார் சன்னதி
வேலப்பர் சன்னதி விமானம்
இடும்பன் சன்னதி மற்றும் , சிவன் சன்னதி, அருணகிரி நாதர் சன்னதிகள் உள்ளன

அருணகிரிநாதர்  திருப்புகழ் பாடல்

வெகு சுத்தமாய் பராமரிக்கப்படுகிறது

சிவன் சன்னதி

இடும்பன், அருணகிரிநாதர், சிவன் சன்னதிகள் 
மரத்தடியில் நாகர் 
நுழைவு வாயில்
கோவிலின் முன்புறம் அழகிய சிறு தேர்
ஊரின் அழகிய தோற்றம்

கோவிலுக்கு கொடைக்கானலில் இருந்து பேரூந்து வசதி உண்டு. 

வாழ்க வளமுடன். 
------------------