திங்கள், 28 நவம்பர், 2016

நான் எடுத்த படங்களும் , பத்திரிக்கையில் வந்த செய்திகளும்


நான் எடுத்த சில படங்களுக்குப் பொருத்தமாய் இன்றைய தினமலரில் செய்திகள் வந்தன.  என் பழைய பதிவுகளும்  தினமலர் செய்தியையும் இணைத்துக்   கொடுத்து இருக்கிறேன்.  நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.


கங்கை கொண்ட சோழபுரத்தில் நான் எடுத்த  பூச்சிபிடிப்பான்
பூச்சிபிடிப்பான் படம் கண்ணில் தோன்றும் காட்சி எல்லாம் பதிவில்


தினமலர் பட்டத்தில் இந்த பறவையை கதிர்க் குருவி, என்றும்,, பூச்சிகளை உண்டு வாழும் பறவை என்றும், தாவரங்களை சேதப்படுத்தும் சிறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, இவை உணவுச் சங்கிலியில்ட் சூழலுக்கு உதவி புரிகிறது   சாந்தாகிரிதரன் சொல்லி இருந்தார்கள். 
                                                           *         *         *



சோழவந்தான் பேரூராட்சியில் மக்கா குப்பைகளைத் தரம்பிரித்து பிளாஸ்டிக்கைச் சுழற்சி முறையில் பொடியாக்கி தார் ரோடு பணிக்கும், கண்ணாடி, பீங்கான், தகரம், ஈயம் ஆகிய பொருட்களை விற்பனை செய்து பல்வேறு நலத் திட்டப்பணிகளுக்குப் பயன்படுத்துவதாய்ப்  பேரூராட்சி நிர்வாக அதிகாரி கூறியதாக செய்தி.. சோழவந்தான் பேரூராட்சிக்குப் பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
    
குங்குமம் ஸ்டார்  தோழிக்காக மறுசுழற்சி பற்றி கேட்டதற்கு என் பதில்

என் கணவர் மறு சுழற்சிக்கு வரைந்து தந்த படம்

//மனிதன் தனக்குச் சாதகமாக தான் துய்க்கும் பொருள்களை மாற்றி அமைத்துக் கொள்கிறான்.  பின்விளைவுகள் ஏற்படாத மாதிரி மறுசுழற்சி செய்வதில் தவறு இல்லை. நாட்டுக்கு, வீட்டுக்கு சமுதாயத்துக்கு இப்போது  மறுசுழற்சி அவசியம். 

பிளாஸ்டிக் பைகளை கூழாக்கித் தார்ச் சாலை அமைக்கிறார்கள். அது மழையால் 
பாதிப்படையாது. பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பைகள் மூலம் டீசலுக்கு சமமான எரிபொருள் தயாரிக்கிறார்கள். இந்த எரிபொருளால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள்.

 காலி தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானக் குடுவைகளில் மணல் அடைத்து சுற்றுச்சுவர் எடுக்கிறார்கள். குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். குப்பைகளைக் கொண்டு விவசாயத்துக்கு வேண்டிய உரங்கள் கிடைக்கின்றன. 

மனிதக்கழிவை  விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். சாக்கடை நீரில் இருந்து மின்சாரம், எரிவாயு தயாரிக்கப்படுகின்றன. வீட்டுக்காய்கறி குப்பைகளைச் சேகரித்து மண்புழு உரம் தயாரித்து அதை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி குப்பைகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயனுள்ளதாகச் செய்வது அதிகமாக நடைபெற வேண்டும். 

மரம் செடிகளின் குப்பைகள் மீண்டும் அந்த மரம் செடிகளுக்கே உரமாகின்றன. அதுபோல் உலோகங்களையும் உருக்கி மறுசுழற்சி செய்கிறார்கள். அலுமினியம், தாமிரம்,இரும்பு போன்றவற்றையும் மறுசுழற்சி செய்து புதுவகை கருவிகள் படைக்கிறார்கள்.//

                                                                       *             *            *


திருமலைநாய்க்கர்  மகால் போய் இருந்த போது இப்படி புதர் மண்டி கிடக்கிறதே என்று நினைத்தேன் , இப்போது மலையாளி சமாஜ சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது அறிந்து மகிழ்ச்சியாய் இருக்கிறது. மலையாளி சமாஜம் அமைப்பாளர்களுக்கு நன்றி.

இது போன்ற வரலாற்றுச் சிறப்பு பெற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க வருபவர்கள் முதலில் அந்த இடத்தின் தூய்மையை விரும்புவார்கள், தூய்மையாக இருக்க சுற்றிப்பார்க்க வருபவர்களும்,  இது போன்ற இடங்களின் பாதுகாவலர்களும் (இருதரப்பினரும்) இணையும் போது எப்போதும் சுத்தமாக இருக்கும்.
                                                          *********************
மக்கள் இயக்க சார்புக்குப் பாராட்டுக்கள் நன்றிகள்.




ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியாகொல்கத்தாவிற்கு வருகை தரும்போது இதை கொண்டுவந்து ஊக்ளிநதியில் விட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வூக்ளி நதியானது லண்டனில் உள்ள தேம்சு நதிப்போல் காட்சியளிக்க வேண்டுமென்பதற்காக இடப்பட்டது.
 ஊதாநிறப்பூக்களையும் பூக்கின்றன. இவையே இதன் கவர்ச்சிக்கும் உலகை ஆட்கொண்டதிற்கும் காரணம்.


அண்ணன் கோவில் (திருவெள்ளக்குளம்)   கருட சேவைக்கு போய் இருந்த போது   எடுத்த படம். கோவில் அருகில் உள்ள ஒரு குளத்தில் இப்படி ஆகாயத் தாமரை   குளத்தின் தண்ணீர் தெரியாத அளவு படர்ந்து இருந்தது. அங்கு எடுத்த படம்.

ஆகாயத்தாமரையால்  ஏற்படும் தீமைகள் 

  • குடிநீர் மற்றும் பாசனக் குழாய்களுக்குச் செல்லும் நீரின் அளவை இவற்றின் வேர்கள் மட்டுப்படுத்துவதால் நீர் இறைக்கும் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.
  • கோடையில் இலைகளின் வழியான நீராவிப் போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகுவிரைவில் குறையும்.
  • அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் இச்செடிகள் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால் அந்நீரில் வாழும் மற்ற தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  • இறந்து மட்கும் இத்தாவரத்தால் நீரிலுள்ள ஆக்ஸிசன் போய் நீர் மாசடைவதுடன் தேங்கவும் செய்கிறது.
  • நீர் மற்றும் நீர்-நிலவாழ் உயிர்களின் நடமாட்டம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு இச்செடிகள் பெரிய இடையூறுதான்.
  • இச்செடிகளினூடே நீர் அருந்துவது கால்நடைகளுக்கு பெரிய பிரச்சனை; சிலசமயம் அவை அவற்றில் மாட்டிக்கொண்டு மூழ்கிவிடும் அபாயமும் இருக்கிறது.
  • கொசுக்கள் உற்பத்தி மற்றும் அதன் இனப்பெருக்கத்திற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கின்றது.
  • வெள்ளக் காலங்களில் இவற்றால் சேதம் அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.
  • பெரும் பரப்பில் வியாபித்திருக்கும் இச்செடிகள் படகுப் போக்குவரத்து, மீன் பிடிப்பு போன்றவற்றைப் பெரிதும் பாதிக்கிறது.
மேலும், நீர்வெளியின் இயற்கையான அழகை மாற்றுவதுடன் அப்பகுதிவாழ் தாவரங்கள்விலங்குகள் மற்றும் பறவைகளை வேற்றிடம் தேடிச்செல்லச் செய்கிறது.

தடுப்புமுறை[மூலத்தைத் தொகு]

இது உலகெங்கும் உள்ள பெரிய பிரச்சனையாக இருப்பதால் பல்வேறு வகையான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முயற்சிக்கப்பட்டும் நடைமுறையிலும் உள்ளன. வேதிக் களைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதின் மூலம் இவைகளை அகற்றமுடியும். ஆனால் இவை நீரில் வளரக்கூடிய தாவரமாகையால் இவை நீர்நிலைகளில் பாதிப்பு மிகுதியாகும் வாய்ப்பு உள்ளது.

மாற்றுமுறை[மூலத்தைத் தொகு]

சாண எரிவாயுவைப் போல இயற்கை எரிவாயுகாகிதம் தயாரித்தல், கயிறுநூல் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மண்புழு உரம் மற்றும் ஆகாயத்தாமரையின் மக்கிய பகுதிகளை உரமாகவும் பயன்படுத்தலாம்.


நன்றி - விக்கிப்பீடியா.
***  **** ****

தினமலரில் இன்று வந்த செய்தி , நான் எடுத்த  சங்காபிஷேகப் படம்


******************


சாலையிலே புளியமரம் 

”சாலையிலே புளியமரம் ஜாமீந்தார்  வைத்த மரம் ஏழைகளை காக்கும் மரம்”  இப்படி ஒரு பாட்டு சினிமாவில் வரும் இப்போது சாலைகளில் உள்ள புளியமரங்களில் உள்ள மரங்களில் உள்ள புளியம்பழங்களை எடுக்க முடிகிறதா?

கடைசி இந்த செய்தி ஒரு மாறுதலுக்காக . 

வாழ்க வளமுடன்



புதன், 23 நவம்பர், 2016

வண்டியூர்த் தெப்பக்குளம் -பகுதி- 2

மையமண்டபத்தில்  மேல்தளம் போக ஏறும் முதல் படிக்கட்டு


படிகளில் இறங்கி வந்தவர்கள் மேல் தளத்திற்கு போகப் படிகள் குறுகிய படிகளாய் இருக்கிறது, உங்களால் ஏறமுடியாது என்றும் சொன்னார்கள், 

அதற்குள் கீழே இறங்குங்கள் எல்லோரும், பேச்சு ஆரம்பிக்கப் போகிறது. அப்புறம் பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது. நாங்கள் மேலே போய் பார்த்தோமா? அங்கு என்ன இருந்தது என்பது அடுத்த பதிவில்.  என்று  சொல்லி இருந்தேன். முந்திய பதிவைப் படிக்க வில்லை என்றால் படித்து விட்டு வந்து இந்தப் பதிவைப் படிக்கலாம்.

நாங்கள் பசுமை நடை அமைப்பாளர் அவர்களிடம் மீண்டும் நாங்கள்  கீழ் தளத்திற்கு இறங்கி பின் மேல் தளத்திற்கு வர மறுபடியும் ஏற வேண்டும் . அதனால் நாங்கள் எல்லோரும் கீழே போய் அமர்ந்து பேச்சு  ஆரம்பிப்பதற்குள் வந்து விடுகிறோம், மேலே போய் விட்டு என்று அனுமதி பெற்றோம். அவர் துணைவியார் எங்கள் அனுமதி அளித்து பாதுகாப்புக்கு இன்னும் இருவரையும் உடன் அனுப்பி உதவி செய்தார். கவனமாய்ப் போய்ப் பார்த்து வாருங்கள் என்றும் கனிவுடன் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி  மேலே போய் பார்த்து விட்டுக் கீழே இறங்கி வந்தவுடன் யாரும் இருக்கிறார்களா மேலே என்று மறுபடியும்  போய்ப் பார்த்து உறுதி செய்து கொண்ட பின்  வந்தார் நீராழிமண்டபத்தை பார்த்துக் கொள்பவர்.  

மேலே ஒரே சமயத்தில் எல்லோரும் ஏறக்கூடாது என்று சொன்னார்கள்,   பத்துப்பத்து பேராய்ப் போய் வாருங்கள் என்றார்கள்.

இங்கிருந்து  குளத்தைப் பார்க்கலாம். வேப்பமரக் காற்று அருமையாக  வீசுகிறது.

மேலே கொஞ்சம் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. சுதை வேலைப்பாடுகள் வர்ணம் பூசப்பட்டு இருந்தது.
                                 
கோபுரம் தாங்கும் பொம்மை
பூக்களைக் கொட்டும்  தேவமகள், 

மேல் விதானத்தில் அழகிய கோலம்
சுழலும் சக்கரம் போல்
இங்கிருந்து சாளரங்கள் வழியாக வண்டியூர் மாரியம்மன் கோவில்
 மரப்படியில்  ஏறிச் சென்ற பின்  மீண்டும்  இன்னொரு  தளம்   செல்ல  காங்கிரீட் படிகள்.
மிகவும் குறுகிய படிகள்.
அங்கிருந்த ஜன்னல் வழியாக  - குளம், முக்தீஸ்வரர் கோவில்

 மூன்றாம் தளம் செல்ல இது தான் கடைசிப் படிக்கட்டு அதற்கு மேல்   குனிந்து போய் முட்டிக்கால் போட்டுத்தான் குளத்தையும், குளத்திற்கு அப்பாலும் பார்க்கலாம்.
சுற்றிவர மரச் சட்டம் இதில் நிறையபேர் ஏறி நின்றால் மரச்சட்டம் உடைய வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவராக ஏறிச்சென்று பார்த்து இறங்கி வர வேண்டும்.
குளத்தின் மைய கோபுரத்தின் மேல்விதானம் - அழகிய வேலைப்பாடு

கீழே இறங்கும் படிகள்

மேல்தளத்தைப்பார்த்து விட்டு வரும் போது  பேராசிரியர் சுந்தர்காளி  நீராழிமண்டபங்களைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்.  அவர்களைத் தாண்டி முன் பக்கம் போக வேண்டும். அதனால் பின் புற மண்டபத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டோம்.  நீராழி மண்டபத்தை எப்படிப் பாதுகாப்பது, நீர் வரும் பாதைகளை மீட்டெடுப்பது போன்றவை பற்றிப் பேசினார்.


காலை 6.30க்கு   குளத்தின் படிக்கட்டுகளைச் சுத்தம் செய்யும் அம்மா

பசுமை நடை அமைப்பாளர் பேசும் போது இந்த குளக்கரையில் மாலை நேரம்  உணவுக் கடைகள்  நிறைய இருக்கும். இங்கு காற்று வாங்கிப் போக வருபவர்கள் அந்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு விட்டு அந்த கவர், தட்டு, டம்ளர்களை போட்டு விட்டு போய் விடுகிறார்கள். எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும்  மீண்டும்  வருகிறது. விற்பவர்கள் தங்கள் பொறுப்பில் குப்பைகளை அகற்றும் பணியைச் செய்யலாம் என்றார்கள்.

குளத்தின் படிகளில் அமர்ந்து சாப்பிட்டவர்கள் சிதறிய  உணவு, படிக்கட்டில் வளை அமைத்து இருக்கும் எலியாருக்கு  விருந்தாகிறது.


இன்னொரு அன்பர் ’வெளி’ பற்றிப் பேசினார். இது போன்ற வெளி நகருக்குள் இல்லை, அதனால் தெப்பக் குளத்தைச் சுற்றி உள்ள வெளியைப் பாதுகாப்பது நம் கடமை என்றார்.

தெப்பக்குளத்தைத் தங்கள் ஆடுகளமாய்ப்  பயன்படுத்துபவர்களால் இப்போது புல், புதர் மண்டி இருக்கவில்லை. அதுவரை சந்தோஷம். 


கல்யானை மேல் அமர்ந்து பேச்சைக் கவனிக்கும்   சிறுவன். நாளை அவனுக்கும் பொறுப்பு உள்ளதே ! நீராழிமண்டபங்களை ப்பாதுகாப்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் தான்.

அங்கிருந்து கிளம்பும் போது  மீண்டும் ஒரு முறை மண்டபத்தின் உள்புறம் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் எங்களைத் தனியாக விட்டு போகிறீர்களா? என்று கேட்பது போல் இருந்தது கல் தூணில் இருக்கும்  சிற்பங்கள்..

--------------------------------------------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

சனி, 19 நவம்பர், 2016

வண்டியூர்த் தெப்பக்குளம்


வண்டியூர்த் தெப்பக்குளத்தில் உள்ள நீராழிமண்டபம்


பசுமை நடை அமைப்பாளர்களுடன் சென்ற ஞாயிறு வண்டியூர்த் தெப்பக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்திற்குப் போய் வந்தோம்.
காலை 6.30 க்கு  முக்தீஸ்வரர்  கோவில் வாசலுக்கு எல்லோரையும் வரச் சொல்லி இருந்தார்கள். எல்லோரும் வந்தவுடன் நடை ஆரம்பிக்கும் என்றார்கள். எல்லோரும் வருவதற்குள் கோவில் சென்று வர அனுமதி பெற்று முக்தீஸ்வரர் கோவிலை வலம் வந்து வணங்கி  வந்து விட்டோம்.



பசுமைநடையில் இணைந்து கொள்ள அவர்கள் முகவரி.

முகதீஸ்வரர் கோவில் பற்றிய குறிப்பும் பசுமைநடை வெளியீடு பற்றிய குறிப்பும்
வண்டியூர்த் தெப்பக்குளம் பற்றிய வரலாறு  படிக்க  அவர்கள் கொடுத்த கையேடு

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தைபூசத்திற்கு தெப்பத்திருவிழா பார்த்தோம் , இப்போது தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்க்க வருத்தமாய் இருக்கிறது. வரும் தைமாதம்  தெப்பத்திருவிழா நடக்க தண்ணீர் இருக்குமா? என்று தெரியவில்லை மழை பெய்தால் நல்லது. ஐப்பசிமாத அடைமழை இல்லை , குளத்திற்குத் தண்ணீர் வரும் வழிகளை கண்டுபிடித்து தண்ணீர் வரவழைத்தால் சமுத்திரம் போலவே இருக்கும். ஒரு காலத்தில் நடுமண்டபத்திற்குப் போக படகுகள்  வசதி இருந்தது.
முக்திஸ்வரர் கோவிலும் வண்டியூர்த் தெப்பக்குளமும்

இன்று இந்த தெப்பக்குளம் கிரிக்கெட் விளையாடும்  களமாய் உள்ளது, இதனால் ஒரு நன்மையும் அவர்கள் விளையாடுவதால் குளத்தைச் சுத்தமாய் வைத்து இருக்கிறார்கள் இல்லையென்றால் குப்பைகூளங்களைப் போட்டுக்  குளத்தை மூடியே விடுவார்கள் மக்கள்.

மைய மண்டபத்திலிருந்து எடுத்த படம்  வண்டியூர்  மாரியம்மன் கோவில் 
குளம் முழுவதும் கிரிக்கெட்குழுக்களைப் பார்க்க முடிந்தது காலை நேரம் அவர்கள் உற்சாகக்குரல் குளம் முழுவதும் ஒலித்துக் கொண்டு இருந்தது.
இரட்டைக்குழந்தைகள்  (அழகு செல்லங்கள்)


பசுமைநடை ஆரம்பித்து விட்டது மைய மண்டபம் நோக்கி
இரண்டு பக்கமும் அழகான கருங்கல் படிகள்


இருபக்கம் படி இருப்பதால்  கடைசியாக  ஏறும் குழந்தை கேட்டது  தன் அம்மாவைப் பார்த்து ”அம்மாநீ எங்கிட்டுகூடிஏறுவே?” என்று  கேட்டது எல்லோரையும் சிரிக்க வைத்தது.
முதலில் மைய மண்டபத்தை ஒரு வலம் வந்தோம்.

நாலு பக்கமும் இது போல் மண்டபம் அதில் சிலர் படுத்து இருந்தார்கள், சிலர் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்கள், சிலர் அலைபேசியைப்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பசுமைநடை அமைப்பாளர்
மைய மண்டபத்தின் வாசல்



நாலு பக்கமும் இது போல் வளைவுடன் வாசல்
மேல் விதானத்தில்  12 ராசிகள் உள்புறம் ஒரே இருட்டு 

மண்டபத்தில் கலைநயத்தோடு சிலைகள்- தூண்களுக்கு இடையில் சிலைகள்
ஜடைஅலங்காரம் காணீரோ

ஜடை அலங்காரத்தில் குஞ்சலங்கள், புடவை மடிப்புகள், இடையில் மேகலை

நடன மாது

பச்சைகிளியும்,  கிளிபோல பெண்ணும்  இருந்து இருக்கும் முகத்தை உடைத்து விட்டார்கள்

நடுமையத்தில் உள்ள கோபுரத்தின் மேல் தளம் போகப் படிகள்

கூட்டம் நிறைய இருந்ததால்  கொஞ்சம் ஒதுங்கி நின்றோம் மெள்ள ஏறலாம் என்று,  கூட்டம் குறைந்தவுடன் மேலே போனோம், அங்கு மேல் கூரை அலங்காரங்கள் அங்கிருந்து மாரியம்மன் கோவில் முக்தீஸ்வரர் கோவில் எல்லாம் படம் எடுத்துக் கொண்டு இருந்தோம்.  அதுக்கு மேல் போக மரப்படிகள் நெட்டுக்குத்தாக இருந்தது.

மேலே ஒரே சமயத்தில் எல்லோரும் ஏறக்கூடாது என்று சொன்னார்கள்,   பத்துப் பத்து பேராய்ப் போய் வாருங்கள் என்றார்கள்.
படிகளில் இறங்கி வந்தவர்கள் மேல் தளத்திற்கு போகப் படிகள் குறுகிய படிகளாய் இருக்கிறது, உங்களால் ஏறமுடியாது என்றும் சொன்னார்கள், 

அதற்குள் கீழே இறங்குங்கள் எல்லோரும், பேச்சு ஆரம்பிக்க போகிறது அப்புறம் பார்க்கலாம் என்று அழைப்பு வந்தது.
நாங்கள் மேலே போய் பார்த்தோமா? அங்கு என்ன இருந்தது என்பது அடுத்த பதிவில்.
                                                               வாழ்க வளமுடன்
                                                                  =================