கார்த்திகை முதல் நாள் முதல் அந்த மாதம் முழுவதும் மாலையில் வீடுகளில் வாசலில் இரண்டு விளக்கு வைப்பார்கள்.மார்கழி மாதம் முழுதும் காலையில் கோலத்தில் வைப்பார்கள் தை மாதம் முதல் தேதி வரை.
விளக்கு வழிபாடு மிகவும் சிறந்ததாகும்.வீட்டில் விளக்கு ஏற்ற பெண் வந்தாளா என்று மருமகள் வந்த விபரம் கேட்க வருபவர்கள் மாமியாரிடம் கேட்பார்கள்.
மாலை நேரம் விளக்கு ஏற்றும் போது எங்கெல்லாம் விளக்கேற்றுவார்கள்? ஒருபாடல் மூலம் பெரியவர்கள் சொல்கிறார்கள்.
விளக்கேற்றம்மா விளக்கேற்று
வினயத்துடனே விளக்கேற்று
உள்ளக்கோயிலுக்கு விளக்கேற்று
திண்ணை புரையில் விளக்கேற்று
திருகூடத்தில் விளக்கேற்று
மண்ணில் துளிர்த்து வரும் துளசி
மாடத்தடியில் விளக்கேற்று
கிழக்கு பார்த்து விளக்கேற்று
முகத்தைப் பார்த்து விளக்கேற்று
முழுக்கப் பார்த்து விளக்கேற்று
கிணற்றங் கரையில் விளக்கேற்று
முற்றமெங்கும் விளக்கேற்று
ஆனை முகனின் திருமுன்னே
ஆலிலைக் கண்ணன் திருமுன்னே
சேனாபதியின் திருமுன்னே
சேவித்திருக்க விளக்கேற்று
செல்வப்பெண்ணே நீமுன்னே
விடியும் அளவும் விளக்கேற்று
உள்ளக் கோவிலில் விளக்கேற்று
ஊருக்கு முன்னே விளக்கேற்று
தொட்டிலுக்குப் பிள்ளையும், தொழுவுக்கு பால் பசுவும்,பட்டறைக்கு நெல்லும் பதிந்த மரக்காலும் உனக்கெரிக்க எண்ணெயும் எனக்குண்ணசோறும் தட்டாமல் தந்தருள்வாய் தகவுறவே என்றும் கூறி விளக்கேற்றுவார்கள்.
ஒளிவழிபாட்டின் சிறப்பைப் பெரியோர்கள் பாடியுள்ளனர்:
மாணிக்கவாசகர்: சோதியே சுடரேசூழொளி விளக்கே
சுரிகுழற் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீரற்றாய்
பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறை மலர்க் குருந்தமேவியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்ற ருளாயே
திருமூலர்: உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணி விளக்கே.
திருநாவுக்கரசர்: உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படு உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கி
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே
திருமாளிகைத் தேவர்: ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே
உணர்வு சூழ் கடந்த தோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவள ருள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருமூலர்: விளக்கைப் பிளந்து விளக்கினையேற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத்தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே.
சேக்கிழார்: கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பரவி யோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
பொய்கையாழ்வார்: வையம்தகளியா வார்கடலேநெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக-செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.
பூதத்தாழ்வார்: அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.
திருக்கார்த்திகை விழா:
ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவை ஏன் கொண்டாடுகிறோம்? திருவண்ணாமலை தீபம்,சர்வாலய தீபம், விஷ்ணு தீபம்,கார்த்திகை விரதம் - இவற்றை ஏன் கடைப்பிடிக்கிறோம்?
திருவண்ணாமலை தீபம்:
பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தான்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.
சர்வாலய தீபம்:
சிவபெருமானின் சன்னதியில் இருந்த ஒரு விளக்கின் ஒளி குறைந்த போது,எண்ணெய் உண்ண வந்த ஒரு எலி தன்னை அறியாமல் திரியை தூண்டி,விளக்கை பிரகாசப் படுத்தியது.
இந்த சிவ புண்ணியத்தால் அந்த எலி மறு பிறவியில் மாவலி (மகாபலி)சக்கரவர்த்தியாக, அந்த மாபலி சக்கரவர்த்தி சிவலாயத்தில் ஒரு சமயம் செருக்குடன் வலம் வந்த போது அவன் மீது தீபம் விழுந்து உடம்பு புண்ணாகி வருந்தினான்.சிவபெருமான் அசரீரியாகி “நீ செருக்குற்றதால் இப்படி செய்தோம் இன்று முதல் எல்லா சிவலாயங்களிலும், இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் நீ தீபம் ஏற்றினால் சாயுச்சய பதவி அடைவாய்” என்று கூறினார். அவ்வாறு ஏற்றி வரும் போது, கார்த்திகை மாதம் வளர் பிறை கிருத்திகை நட்சத்திரத்தில் உக்கிர வடிவத்தில் சிவன் பேரொளியாக தோன்றினான். அஞ்சிய திருமால் முதலியோர் உக்கிரம் தணிய, பொரி, அவல் முதலியவற்றை நிவேதனம் செய்து வழிபட்டனர் என்று அபிதான சிந்தாமணி கூறுகிறது.
இந்த நிகழ்வை நினைவுகூரும் படியாக எப்போதும் திருக்கார்த்திகை விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.பொரி அவல் முதலியவற்றைப் படைத்து வழிபடுகின்றனர்.இந்த கார்த்திகைத் திருவிழாவை 1000 ஆண்டுக்கு முன்பே கொண்டாடி இருக்கின்றனர்.திருஞானசம்பந்தர் எலும்பிலிருந்து பூம்பாவையை மீண்டும் பெண்ணாக்கிய போது ’விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’ என்று பாடினார்.அந்தக் காலத்தில் கார்த்திகை தீப விழாவை விளக்கீடு என்று வழங்கினார்கள்.
விஷ்ணுதீபம்
விஷ்ணு ஆலயங்களில் இவ் விழா நடப்பதற்கு காரணம் விரதமகாத்மியத்தில் பின் வருமாறு கூறப்படுகிறது: திருமகள் ஒரு அசுரனுக்கு பயந்து ஒரு காட்டில் ஒளிந்து இருக்க அவ் அசுரன் அக் காட்டை கொளுத்தினானாம் அப்போது திருமகள் அந்தரத்தில் சென்று மறைந்தாளாம் அதனை நினவுபடுத்தும் வகையில் தீ ஏற்றுவார்கள்.
ஒளி படும் இடங்களிலெல்லாம் மகாலட்சுமி தேடி வந்து நின்று அருள் புரிவாள்.அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கார்த்திகை விரதம்:
முருகனைக் குறித்து மேற்கொள்கின்ற விரதங்களில் கார்த்திகை விரதமும் ஒன்றாகும்.
பரணி நாளில் முருகனின் பெருமையை கேட்டுக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்து, மறுநாள் முருகனை வழிபடுவது இந்த விரதமாகும்.கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகக் கடவுளுக்குப் பாலுட்டி விரத பலத்தை அடைந்ததை இவ் விரதம் குறிக்கும்.
விளக்கு வழிபாட்டின் பயன்:
கள்ளன் அறிவூடுமே மெள்ள மெ(ள்)ள வெளியாய்க்
கலக்க வரு நல்ல உறவே.
-தாயுமானவர்
விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை.
கார்த்திகை விளக்கேற்றி இறையருள் பெறுவோம்.
எல்லோருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
*********************************************************************************
----------