காலையில் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் கல்லூரிக்கும் சென்றவுடன் ஆங்கிலத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சு, (ஆங்கில, தமிழ் தட்டச்சு ஒரே நேரத்தில் படித்தேன்) தையல், என்று போனேன்.
காலையில் நான் போகும்போது வழியில் பார்க்கும் பள்ளி பிள்ளைகள் ’குட் மார்னிங் டீச்சர்’ என்பார்கள் . என்னைப் பார்த்தால் டீச்சர் போல் தோன்றி இருக்கிறது.(கையில் குடை, ஆர்கண்டி வாயில் சேலை, கண்ணாடி)
குழந்தைகள் மனதில் பட்டது பலித்து விட்டது. நான் ஆசிரியர் ஆகிவிட்டேன். எப்படி என்று கேட்கிறீர்களா? உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா , தியானம், முத்திரைகள் படித்து அதில் ஆசிரியர் பயிற்சி, பொறுப்பாசிரியர் பயிற்சி எல்லாம் எடுத்தேன்.
கடமைகள் முடிந்து விட்டன நினைத்த எனக்கு இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது.
விடுமுறைக்கு வந்த என் மகள் அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.
அவளும் வலையில் எழுதுபவள் தான் சிறுமுயற்சி வைத்து இருக்கும் முத்துலெட்சுமி. என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.2009 ஜூன் 1 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்று கிளிக்கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.//எண்ணமே இயற்கையதன் சிகரமாகும்இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//
இப்படி வலைச்சரத்தில் என்னைப்பற்றி சொல்லி இருப்பேன்.
வலைஉலகம் பெரிய கடல் அதில் துளிதான் நான் கற்றுக் கொண்டது. தினம் அதில் கற்க வேண்டியது நிறைய உள்ளது.”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்! எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள்.
அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை ,அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது.
பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். வாழ்க்கையில் நம்மாலும் எழுத முடியும் என்ற நினைப்பே மனதுக்கு உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பத்திரிக்கைகளும் நம்மை வரவேற்கின்றன.
என்ற பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும், ’எண்ணம் முழுதும் கண்ணன் தானே’ என்று என் பேரனைப் ப்ற்றி எழுதிய பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும் வெளி வந்தன. நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சீனா சாரிடம், வை .கோ சாரிடம் என் மகளை பற்றி அப்போது சொல்லவில்லை. கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டம் பார்த்து தெரிந்து கொண்டு பின்னூட்டத்தில் கேள்வி கேட்டார்.
//வருக வருக கோமதி அரசு - அருமையான அறிமுகம். முத்து லெட்சுமி தங்கள் மகளா .... அவர் வலைச்சர நிர்வாகத்தில் இருக்கிறார் ... தெரியுமா தெரியாதா .... மகளின் நிர்வாகத்தில் இருக்கும் வலைச்சரத்தில் தாயார் ஆசிரியப் பொறுப்பேற்பது இருவருக்கும் பெருமை தான்.//
சீனா சாரை மகளுடன் மதுரையில் பதிவர் சந்திப்பின் போது சொன்னோம். வலைச்சரத்தில் எழுதிய போது சொல்லவே இல்லை நீங்கள் என்று கோபித்து கொண்டார் செல்லமாக.
சீனா சாருக்கு முன் வலைச்சர பொறுப்பாசிரியராக இருந்தாள்.
முந்தைய பொறுப்பாசிரியர்கள் கயல்விழிமுத்துலெட்சுமி, பொன்ஸ் என்று போட்டு இருக்கும் வலைச்சரத்தில் பார்த்து இருப்பீர்கள்.
மூன்றோ, அல்லது நான்கு முறையோ ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நிறைய பதிவர்களின் பதிவை படித்து அதை அறிமுக படுத்தினேன். மனதுக்கு மகிழ்ச்சி அளித்த பணி.
வலைச்சரத்தில் ஜூன் மாதம் மறந்து போய் மே 31 என்று எழுதி இருப்பேன்.
பின்னூட்டங்களை படித்து பாருங்கள் நன்றாக இருக்கும்.
எழுதுவதற்கு மனது அலுப்பு பட்டால் இந்த பதிவை படிப்பேன்,நட்புகள் தந்த பின்னூட்டங்களால் மீண்டும் புத்துணர்வு கிடைக்கும் . நம்மாலும் எழுத முடிகிறது, நம் எழுத்தை படித்து பார்த்து , கருத்து சொல்லி நட்பு பாராட்டும் உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சி தரும் தானே! பின்னூட்டம் இட்டவர்களை விட ஒவ்வொரு பதிவையும் படித்தவர்கள் எண்ணிக்கையை பார்க்கும் போது மனது மகிழ்ச்சியில் துள்ளும்.
அந்த காலம் மிகவும் இனிமையானது, நிறைய படித்தோம், நிறைய எழுதினோம், நட்புகள் நிறைய கிடைத்தது. இப்போது ஒரு சில பதிவர்கள் பதிவுகள் தான் படிக்க முடிகிறது, பின் தொடர முடிகிறது. மற்ற வலைபதிவுகளை காட்டவும் மாட்டேன் என்கிறது. நம் நட்புகள் பின் தொடரும் பதிவுகள் என்று தங்கள் வலைத்தளத்தில் வைத்து இருப்பதை வைத்து ஒரு சிலரை படிக்க முடிகிறது.
நான் தொடர்ந்து எழுத உங்கள் பின்னூட்டங்கள் தான் காரணம். உற்சாக பின்னூட்டங்கள் ஊக்கம் தருகிறது எழுத. என்றும் உங்கள் பின்னூட்டகளை விரும்பும் கோமதி அரசு.
கிளி பறவையை போட்டு பதிவு ஆரம்பித்தவள் , பறவைகளை விரும்புகிறவள் இந்த வலைத்தள பிரந்த நாளில் பறவை போடாவிட்டால் எப்படி அதனால் கோடையில் தண்ணீர் உணவை தேடி குடும்பத்தோடு வந்த காடை பறவைகள் படம் இதில் இடம்பெறுகிறது.
தண்ணீரை குடித்து தண்ணீரில் அமர்ந்து இருக்கிறது
சிட்டுக் குருவி
காடை குடும்பத்தோடு ஒரு மணிப்புறாவும் நட்போடு அமர்ந்து இருக்கிறது.
நாங்கள் போனதை பார்த்தவுடன் மீண்டும் கீழே படையெடுப்பு
கண்ணாடி கதவு வழியாக அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும் படம். சிறு அசைவு தெரிந்தாலும் பறந்து போய் மதில் மேல் அமர்ந்து கொள்ளும்.
மேலே தொங்க விட்டு இருக்கும் உணவு பாத்திரத்திலிருந்து புறா, குருவி கொத்தி சிதறி கிடக்கும் தானியங்களை இந்த காடை குஞ்சுகள் தின்ன வருகிறது. கோடை வந்து விட்டது என்று தொட்டிகளில் கீழே எல்லாம் விதைகள் போட்டார்கள்.
அத்தனை விதைகளையும் கொத்தி தின்று விட்டு அதில் பள்ளம் பறித்து குழுமைக்கு அமர்ந்து கொள்கிறது.
பள்ளத்தில் படுத்து குளிர்ச்சியில் சுகமாய் கண் மூடி தூக்கம்
மாதுளைச்செடி, முருங்கை மரம் கீழே பள்ளமாக இருக்கும் நிறைய தண்ணீர் மாலையில் விட்டது இருக்கும், அதில் மதிய நேரம் வந்து அமர்ந்து கொள்கிறது.
காடை பறவைகள் குடும்பமாக சாலையை கடந்து செல்லும் போது பார்க்கவே அழகாய் இருக்கும், வரிசையாக நடந்து போகும்.
தொட்டியில் போட்ட டேபிள் ரோஸ் செடி விதைகளையும் தின்று விட்டது, தப்பி பிழைத்தவை வருகிறது . தொட்டி மேல் ஏறி விதைகள் இருக்கா என்று நோட்டம் இடுகிறது காடை குஞ்சு.
சிறிய காணொளிதான் பாருங்கள்.
15 , 16 பறவைகள் இருக்கும் . பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்பது காடை பறவைகளுக்கு பொருந்தும்.
அப்பா, அம்மா, குஞ்சுகளுடன் அவை நடைபயின்று வரும் போது "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!" இப்படி தான் வாழ்த்த தோன்றுகிறது. வேற்று உயிர்களிடமிருந்து தப்பி பிழைத்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவேன் காடை குஞ்சுகளைப்பார்த்து.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
------------------------------------------------------------------------------------------