ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அழகரும், கண்ணனும்



அழகர் வந்தார், மூன்றுமாவடி என்ற இடத்தில் அவரைத் தரிசனம் செய்தோம்.

என் கணவர் இன்று காலை 7மணிக்கு அழகரைப் பார்த்து வரலாம் என்றார்கள்.  அழகர் மலையிலிருந்து காலை மூன்று மணிக்கு புறப்பட்டு வருகிறார், எதிர்சேவை செய்வோம் என்றார்கள்.  என் மனம் மகிழ்ச்சியில் திளைத்து விட்டது.

புதன், 25 ஏப்ரல், 2018

மதுரை விளக்குத்தூண், பத்துத்தூண்

பசுமை நடை இயக்கத்துடன் இந்த மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை  அன்று (8/4/2018) மதுரையில் உள்ள விளக்குத்தூண், பத்துத்தூண், திருமலைநாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களுக்குப்போய் இருந்தோம்.

திருமலைநாயக்கர் அரண்மனைக்குப் போய் வந்ததைப் பற்றி இரண்டு பதிவு முன்பு எழுதி இருக்கிறேன். அதனால் இந்த முறை பசுமை நடை இயக்கத்தின் கைஏட்டில் உள்ளதைப் படித்து பாருங்கள்

காலை 6மணிக்கு விளக்குத்தூண் அருகில் காத்து இருக்கச் சொன்னார்கள்.  200 பேர்  வந்து இருப்பார்கள் நல்ல கூட்டம்.

தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள் சென்னையிலிருந்து வர காலதாமதம் ஆனதால் 
விளக்குத்தூண் வரலாற்றை விளக்குத்தூண் அருகிலிருந்து பசுமைநடை இயக்கத்தின்   ஒரு அன்பர் சொன்னார்.


காலையில் என்ன கூட்டம் இங்கு என்று பார்த்த காகம்

விளக்குத்தூண் அருகே நம் கர்மவீரர்  காமராஜ் அவர்களுக்குச் சிலை

விளக்குத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து  பத்துத்தூண் நோக்கி எங்கள் நடை  ஆரம்பம் ஆனது.
பத்துத்தூண் பற்றிய விவரங்கள் அடங்கிய கல்வெட்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் . பாதுகாப்புக்குக் கம்பித் தடுப்பு வேலி போட்டுக் காணப்படுகிறது.

தூண்களுக்கு இடையே வீடுகள், கடைகள்.
பத்தாவது தூண்

ஒரு தூணில் மணி கட்டி இருந்தது

பத்துத்தூண் பற்றி   தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள்  பேசுகிறார்
ஞாயிறு என்பதால் கடைகள் அடைத்து இருந்தது,

ஒரு தூணில் விளக்குமாடம் . பத்துத்தூண் பார்த்து முடித்தவுடன் அங்கிருந்து  எங்கள் நடைப் பயணம் தொடர்ந்தது.

குதிரைலாயத் தெருவழியாக எங்கள் நடைப் பயணம் போகும் வழியில் பழைய சத்திரம் ஒன்று இருந்தது. இப்போது வாசல்படி கூட இல்லை மூடப்பட்டு இருக்கிறது.


கடைத்தெருவிலிருந்து அரண்மணை மேல் மாடக் காட்சி
காலை 8மணிக்கு இடியாப்பம், புட்டு விற்றுச் செல்கிறார்.
அடுத்த பதிவில்  திருமலை நாயக்கர் அரண்மனை .
                                                                 வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பும் அனுபவங்களும்


என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விடும் போல் இருந்தது. அதில் வந்த விளம்பரம் என்னைக் கவர்ந்தது.அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அன்றும் உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று.


//மோதிரம் வாங்குங்கள்! மோதிரம்!// 2010 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி எழுதிய பதிவு.


இதோ அந்த விளம்பரத்தைப் பாருங்களேன்:

// விளம்பரம்

சீர்மையிலிருந்து வரவழைக்கப்பட்ட

எங்களுடைய

ரோஜாப்பு மொட்டை

பரிட்சித்துப் பாருங்கள் 

ரோஜாப்பு மொட்டு என்பது

ஒரு ஷோக் மோதிரம்

இந்த மோதிரமானது அன்று அரும்பி இதழ்மலர்ந்த மொட்டை நடுவில் உடையதுபோல
பிரகாசிக்கும். பார்வைக்கு மிக்க பகட்டாயும் சோபிதமாயுமிருக்கப்பட்ட 9-போலி ரவைகள் வைத்து இழைத்தது .இது இங்கலாண்டு கெமிகல்கோள்டு யென்னும் ஒருவித லோகத்தாற் செய்து விராகனிடை 8 ரூபா விலையுடைய 
சுயத்தங்கத்தினால் மேற் பூசலும் பூசப்பட்டது.
இந்த மோதிரத்தில் எண்ணைபட்டாலும் ஜலம்பட்டாலும் பளபளப்பு மங்குகிறதில்லை. கொஞ்சம் காந்தி குறைந்த போதிலும் சீமைசுண்ணாம்பு பூசிவைத்து புருஷினால் துடைத்து விட்டால் மறுபடியும் பிரகாசிக்கும் இந்த மோதிரத்திற்கும் ஜெனங்கள் 2,000 ரூபாய் விலையிருக்குமேயென்று மதிப்பிடுவதற்கு அஞ்சமாட்டார்கள்.--இதன் விலை 2-ரூபாய்தான் வி.பி. தபாற்கூலி பிரத்தியேகம்.

8-மோதிரத்திற்கு மல்பீஸ் இனாம்
8--எட்டு மோதிரங்கள் ஒரேதடவையில் வாங்குவோருக்கு நாணயமானதாய்
(ஒரு பீஸ் சலவைமல்) அதாவது 20-கெஜமுடைய தான் இனாமாய் அனுப்படும்.

4.மோதிரத்திற்கு இனாம்

4--நாலு மோதிரம் ஒரேதடவையில் வாங்குவோருக்கு சரட்பட்டன் ஒரு செட்டு இனாமாய் அனுப்பபடும்.

என்னுடைய முழுகேட்லாக் வேண்டுமானால் அரையணா ஸ்டாம்பு அனுப்பினால் அனுப்பப்படும்.

வித்தியாரத்திநாகர அச்சுக்கூடத்தலைவர்

பி.நா.சிதம்பரமுதலியார்
பெரம்பூர் பாரெக்ஸ்போஸ்டு மதராஸ். //



வாங்குங்கள் ஷோக்மோதிரம் விரைந்து.

வைகுந்த அம்மானை என்ற இந்த புத்தகமும் நன்றாக இருக்கிறது.மகாபாரதக் கதையைப் பாடுகிறது.விநாயகர் துதி,சுப்பிரமணியர் துதி,சரஸ்வதி துதி,ஈஸ்வரர் துதி,மகாவிஷ்ணு துதி, எல்லாத் துதியும் முடித்து பின் கதைக்குப் போகிறது.

வல்லி அக்கா பின்னூட்டத்தில்  //எனக்கு முப்பது மோதிரம் வேணுமே தங்கச்சி.:)// வேண்டும் என்றார் பழைய பதிவில்.


அத்தை பெயர் அத்தையின் கையெழுத்து.

No automatic alt text available.
என் அம்மா சேகரித்து வைத்து இருக்கும் பழைய கதை புத்தகத்தில் இடையில் வரும் ரேடியோ விளம்பரம்.


                       குழந்தைகளைக் கவரும் விளம்பரங்கள்.

No automatic alt text available.
ஒரு கதை இரு ஓவியர் அன்று, இன்று என்ற கதை களத்திற்கு அன்றுக்கு "ம.செ," இன்று நடைபெறும் கதைக்கு "ஜெ"
தொடர்கதைகளை சேகரித்து பைண்ட் செய்வதில் சில கஷ்டங்கள்   முடிவு  அடுத்த இதழில் இருக்கிறது முடிவுப் பக்கத்தைக் காணோம்.
மீண்டும் படிக்கும் ஆவல் போச்சு.

No automatic alt text available.
பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் பொன்னியின் செல்வன் வாங்க ஆரம்பித்தோம். (87ம் வருடம்.) அதற்கு முன் சர்குலேஷன் புத்தகம் வாங்கி படித்து கொண்டு இருந்தேன் மாதா மாதம் பணம்  கொடுத்து விட்டு  எல்லா மாதா, வார இதழ்கள் படித்துக் கொண்டு இருந்த காலம். பொன்னியின் செல்வன் புத்தகம் சேகரிக்க எண்ணி வாங்க ஆரம்பித்த போது பதின்மூன்று அத்தியாயம் ஓடி விட்டது. பழைய புத்தகக் கடையிலும் கிடைக்கவில்லை.



அப்புறம் 2014ம் ஆண்டு மீண்டும் கல்கியில் வந்தது பொன்னியின் செல்வன் ஆனால் படம் மணியம் இல்லை, வேதா என்ற ஓவியர். ( பொன்னியின் சித்திர கதைக்கு வேதா அவர்கள்தான் வரைந்து வருகிறார்.)

12 அத்தியாயம் மட்டும் வாங்கித் தொகுத்து தனியாக வைத்து இருக்கிறேன். கல்கி புத்தகம்  அகலமாக  வித்தியாசமாய் வந்தது பழைய புத்தகம் போல் இல்லை.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு இந்த புத்தகங்கள் 10 ரூபாய் தான்.   இந்த புத்தகங்களை முன்பு ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது வாங்கி வந்தவை, தினம் ஒரு பக்கம் படிப்பேன்.

Image may contain: 3 people, people smiling

திருக்குறள், பாரதியார் கவிதைகள் என் கணவர் எனக்குப் பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் "வாழ்க்கை மலர் " புத்தகம்  வருடம் முழுவதும் படிக்க  (நாள் ஒரு நற்சிந்தனை)

'அன்னையின் அருள்மலர்கள்'  புத்தகம் அன்னையின் பொன்மொழிகள் தொகுப்பு .

தினசரி தியானம் புத்தகம் கைலாயம் போன போது எங்களுடம் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த மூன்று சாமியார்களும் வந்து இருந்தார்கள் அவர்களில்  ஒரு சுவாமி  பக்தானந்தா அவர்கள் கொடுத்த புத்தகம்.

ஒரு கல்யாண வீட்டில் கொடுத்த புத்தகம்   'மன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கை  பாதை ' சுவாமி சிவானந்தா ' அவர்கள் அருளுரை நர்மதா வெளியீடு.

இதுதவிர சிவானந்தலஹரி பாஷ்யம் ஸ்ரீ ராமகிருஷ்ணமடம் வெளியீடு புத்தகம் எல்லாம்  படிப்பேன்.

அம்மா கொடுத்த 'ஸெளந்தர்ய லஹ்ரி"  (சகுந்தலை நிலையம் வெளியீடு)
 மாமா கொடுத்த "ஸ்ரீ மஹா பக்த விஜயம்" (லிப்கோ பதிப்பகம் வெளியீடு)

எல்லாம் தினம் கொஞ்ச நேரம் படிப்பேன்.

முக நூலில் புத்தகப் பகிர்வு  நடந்து வருகிறது. படித்தபுத்தகம் அட்டைப் படம் மட்டும் போட்டால் போதும். விளக்க வேண்டாம். படிப்பதில் கொஞ்சம் சோர்வு ஏற்பட்டு இருந்தது , இப்போது மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன்.
வீட்டு வேலைகள், வலைத்தளங்களை படித்தல் என்பதுடன்  புத்தகங்கள் படிக்க எண்ணம் வந்து இருக்கிறது.

 அப்பாவின் ஆன்மீக புத்தக  சேகரிப்புகள் (உபநிஷத்துக்கள்)
அனைத்தும் ஆங்கிலம்  அவை எல்லாம் என் கணவர் படிக்கிறார்கள். 
நான் தமிழாக்கங்களைத்தான் படிக்கிறேன்.

வல்லி அக்கா, ஆதிவெங்கட் இருவரும் புத்தக்ப் பகிர்வுக்கு அழைத்தார்கள் இருவர் அழைப்பையும் ஏற்று இரண்டு வாரங்கள் புத்தகம் பகிர்ந்து கொண்டு விட்டேன். நாள்தோறும் படித்துக் கொண்டு இருப்போம்.

 நான் யாரையும் அழைக்கவில்லை. நம் வலை அன்பர்கள் பலர் நல்ல நல்ல புத்தகப் பகிர்வை முன்பே செய்து விட்டார்கள்.


                                                          வாழ்க வளமுடன்.











செவ்வாய், 3 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பு - 2

No automatic alt text available.

No automatic alt text available.

புத்தக வாசிப்பு -ஒரு வாரத் தொடரில் இன்று வாசிப்புப் புத்தகமாய்
எஸ். ரா அவகள் தொகுத்த பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள்.

ஒரு தொகுப்பில் 100 கதைகள் உள்ளது இப்படி  இரண்டு பாகம் உள்ள தொகுப்பு .

மகனுடைய ஊருக்குப் போய் இருந்த போது  மகனின் நண்பர் வீட்டுக்கு அழைத்துப் போனான். நண்பருக்கு பிறந்த நாள் விழா. எல்லோரும் பேசிக் கொண்டு இருந்தபோது நானும், என் கணவரும் வரவேற்பு அறையில் இருந்த சிறு அலமாரியில் இருந்த புத்தகங்களைப்  பார்வையிட்டோம்.  அதில் இந்த சிறுகதைத் தொகுப்புகள் இருந்தன. நண்பரிடம் கேட்டு எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தோம், நண்பர் எடுத்து சென்று படித்து விட்டுத் தாருங்கள் என்றார்.  மகிழ்ச்சியுடன் வாங்கி வந்து   படித்துக்கொண்டு இருந்தோம்.

முழுவதும் படிக்கவில்லை அது மனக்குறைதான் . திடீர் என்று நாங்கள் ஊர் திரும்ப நேர்ந்து விட்டதால் (அத்தை அவர்களுக்கு உடல் நலமின்மையால் அவர்களைப் பார்க்க ஊர் திரும்பி விட்டோம்) கதை வாசிப்புக்குத் தடங்கல் ஏற்பட்டு விட்டது. மருமகள் தான் படித்து விட்டு திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்.

பழைய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அதில் இடம் பெற்று இருக்கிறது. வார இதழ்களில் வந்த கதைகள். முத்திரைக் கதைகள் என்று விகடன் வெளியிட்ட கதைகளும் இடம் பெற்று இருக்கிறது.




"ராஜா வந்திருக்கிறார்" என்ற சிறுகதை என் மனதை மிகவும் தொட்டது.

இந்த கதையை எழுதியவர் கு.அழகிரிசாமி அவர்கள்.

இந்த கதை "அழியாச்சுடரில்" இடம் பெற்று இருக்கிறது படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

//தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. "எதை மூடிக்கிறது? ஊம்? என்று ஒரு கணம் யோசித்தால். அப்புறம், "என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய், மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த - உண்மையில் 'பீத்தல்' இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வந்து ராஜா உட்பட உல்லோருக்கும் சேர்த்துப் போர்த்தினாள்.//

தன் இரண்டு குழந்தைகளுக்கும், வீட்டுக்கு வந்த பையனுக்கும் சேர்த்து போர்த்தும் அன்பு.

'//யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."//

தன் கணவருக்கு வாங்கிய துண்டை தீபாவளி புதுத்துணியாகக் கொடுக்கும் பண்பு எல்லாம் வியக்க வைக்கும்.

வறுமையிலும் பிறருக்கு உதவும் தாய் உள்ளம், குழந்தையின் அன்பு உணர்ச்சி, குழந்தைகளிடத்தில் படிக்கும் காலத்தில் உள்ள போட்டா போட்டி எல்லாம் இருக்கும் .

"காலத்தை வென்ற கதைகள்" என்று குங்குமம் சிநேகிதியில்  வந்து கொண்டு இருந்தது பெண் எழுத்தாளர்களின் கதைகள். இப்போது உள்ள இளம் தலைமுறையினருக்குப் படிக்க நல்ல வாய்ப்பு.

அரிசோனாவில் பேரன் படிக்கும்  பள்ளியில்  வாசிப்பை ஊக்குவிக்க மாணவர்களுக்கு ஒரு ஆப் (app)டவுண்லோட் செய்து கொள்ள சொல்கிறார்கள் அதில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள வேண்டும் தினம் மாணவன் 20 நிமிடம் வாசிப்பது ஆசிரியருக்கு தெரியும் ஆசிரியர்  500 நிமிடம் படித்தவுடன் ஓட்டலில் சாப்பிட கூப்பன், (பீட்ஸா கூப்பன்)தருகிறார்.

நூலகத்தில் உறுப்பினராகச் சேர்ந்து புத்தகம் வாசித்தால் 1000 நிமிடம் வாசித்தால் புத்தகம் அன்பளிப்பு உண்டு. புத்தகம் படிக்க பாயிண்ட் தருகிறார்கள்,  நூலகபேட்ஜ் குத்தி  போட்டோ எடுத்துக் கொண்டால் அதற்கு புத்தகம் எடுப்பதில் சலுகை தருகிறார்கள் குழந்தைகளுக்கு.
இப்படி குழந்தைகளின் வாசிப்பு அனுபவத்தை வளர்க்கிறார்கள்.

வாசிப்பு தொடரும்.

                                                         வாழ்க வளமுடன். 

திங்கள், 2 ஏப்ரல், 2018

புத்தக வாசிப்பு

முன்பு எல்லாம் பொழுதுபோக்கு என்றால் கதைப் புத்தகம் வாசித்தல், வானொலி
கேட்டல் என்று இருக்கும்.
நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்து வருவோம்.
வீட்டில் வாங்கும் வாரஇதழ்களில் வரும் கதைகளை ஆர்வமுடன் படித்து அடுத்த வார இதழை எதிர்பார்த்த காலம் உண்டு.

மழை நேரம்  வானொலி கேட்க முடியாது கரண்ட் கட், டிரான்ஸிஸ்டருக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு விடும் அதை வெயிலில் காய வைக்க வேண்டும்.
அப்போது எல்லாம் நாம் நாடுவது கதைப் புத்தகம் தான்.

படுத்துக் கொண்டு கடலையைக் கொறித்துக் கொண்டு கதை படிப்பது ஒரு சுகமான அனுபவம். அப்போது கதையில் ஆழ்ந்து விட்டால் (கதை திகில் நிறைந்த காட்சி அல்லது மர்மம் வெளிப்படும் சமயம் என்றால் ) அம்மா கூப்பிட்டாலும் கேட்காது.
இப்போது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி என்று நேரத்தைப் போக்கும் காலத்திலும் புத்தக வாசிப்பு இருப்பதும் படித்த படித்துக் கொண்டு இருக்கும் புத்தகங்களை ஒரு வாரம் பகிர நண்பர்களை அழைப்பதும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. (முக நூலில்)
என்னை இரண்டு பேர் அழைத்து இருக்கிறார்கள். வாசிப்பைச் சுவாசிப்பாய்
நேசிப்பவர்கள்.
ரேவதி நரசிம்மன் ( வல்லி அக்கா)
ஆதி வெங்கட்

இன்று முதல் நாள் பதிவாய் "ராஜாளி மடம்" கதைப் புத்தகம்.

என்னை அறியாமலே முதல் பகிர்வாய் கி.ரா. கோபாலன் அவர்கள் கதையைப் பகிர்ந்து இருக்கிறேன்.

வாசிப்பை ஊக்கப்படுத்தியவர்.
அவரைப் பற்றிப் படித்துத்  தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து இருக்கிறேன்.


எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ள புத்தகம்.  வாசித்த புத்தகப் பகிர்வு என்ற போது இதைப் பகிர எண்ணம் வந்தது. 1952 ம் வருடம்  கல்கியில் எழுதப்பட்ட கதை. தொடர்நாவல்.

நான் பிறக்கும் முன்பே வந்த கதை!

இந்த புத்தகம் எனக்கு ஒரு மாமி கொடுத்தார்கள். அவர்கள் வேறு ஊருக்குப் போவதால் ஒரு சில கதைப் புத்தகங்கள் கொடுத்தார்கள் வைத்துக் கொள்ள. அவர்கள் நினைவைச் சொல்லிக் கொண்டு. அது இப்போது எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியில் இருக்கிறது.

முன்பு பல காலங்களுக்கு முன் படித்த  கதை. அதை எழுதியவரைப் பற்றி நீங்கள் கேட்டால் சொல்ல வேண்டுமே என்று இணையத்தில் தேடினால்  "தி.இந்து" பத்திரிக்கையில்  எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் இவரைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.


//1945-ல், கும்பகோணம் சாரங்க பாணி கீழச் சன்னதித் தெருக் கோடியில் ஆராவமுதுக்குச் (பெருமாளைச் சொல்கிறேன்) சொந்தமான ஒரு மண்டபம் இருந்தது. கோயிலுக்குச் சொந்தமான பல மண்டபங்கள் அந்தக் காலத்திலேயே தனியார்வசம் போய்விட்ட காரணத்தால், ‘பெருமாளுக்கு இன்னும் சொந்தமாக இருந்த மண்டபம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது இருந்த கோயில் நிர்வாகி படித்தவராக இருந்திருக்க வேண்டும். அந்த மண்டபத்தில் ஒரு வாசக சாலை நடத்த அனுமதித்திருந்தார்.
அந்தக் காலத்து தினசரிகள், வார, மாதப் பத்திரிகைகள் அனைத்தும் வரும். நிறையப் பேர் படிக்க வருவார்கள். சுதந்திரப் போராட்டக் காலம் அது. அந்த வாசக சாலையை நடத்துவதில் கி.ரா.கோபாலன் என்பவர் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
கி.ரா.கோபாலன் இளம்வயதிலேயே மறைந்த ஒரு நல்ல எழுத்தாளர். ‘கல்கி’ இதழ் ஆரம்பித்த புதிதில் நடத்திய சிறுகதைப் போட்டியில் (அது தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முதல் போட்டியாகக்கூட இருக்கலாம்) முதல் பரிசு பெற்றவர். அந்தக் காலத்துப் பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்ட போட்டி அது.
க.நா.சுப்ரமணியம் கதை அனுப்பலா மென்று நினைத்தாராம். ‘‘அதுக்குள்ளே ரா.கி. (கல்கி) என்னைக் கூப்பிட்டு ஜூரியா இருக்கச் சொல்லிட்டார். ஒருவேளை நானும் கதை அனுப்பிச்சுடுவேன்னு பயந்துட்டாரோ என்னவோ’’ என்று க.நா.சு. பிற்காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
பரிசு பெற்ற கதையின் பெயர் ‘ஏழ்மை யில் இன்பம்’என்று நினைக்கிறேன். லேசான அங்கதச் சுவையுடன் வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் கதை. புதுமைப்பித்தன் பாதிப்பாக இருக்கலாம்.
வாசக சாலையின் பெயர் ‘ஜெய மாருதி வாசக சாலை’. வாசக சாலையின் லோகோ அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டு விண்ணில் பறப்பது போல் இருக்கும். அந்தப் படத்தை வரைந்தவரும் கோபாலன்தான்!
கி.ரா.கோபாலன் எழுத்தாளர் மட்டும் இல்லை; நல்ல ஓவியர். தமிழ் சாகித்தியங்களும் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி ஒரு முக்கிய செய்தியைப் பதிவு செய்தாக வேண்டும்.
அவர் ‘நித்திரையில் வந்து என் நெஞ் சில் இடங்கொண்ட’என்ற ஓர் இசைப் பாடலை இயற்றி அக்காலகட்டத்தில் மிகப் பிரபலப் பாடகராக இருந்த என்.சி. வசந்த கோகிலத்திடம் கொடுத்திருக் கிறார். பாட்டு நன்றாக இருந்ததால் இசைத் தட்டாக வெளியிட ஒப்புக் கொண் டார். ஆனால், இசைத்தட்டு வெளிவந்த போது, இயற்றியவர் பெயராக ‘சுத்தானந்த பாரதி’ பெயர் இருந்தது.
கோபாலன் கோபத்துடன் வசந்த கோகிலத்தைப் பார்க்கப் போயிருக்கிறார். வசந்த கோகிலம் கணவர் ‘சாச்சி’ (சதாசிவம்) சொல்லியிருக்கிறார்: ‘ ‘உன் பேரை யாருக்குத் தெரியும்? அதுக்காக ரெக் கார்ட் கம்பெனி சுத்தானந்த பாரதியார் பெயரைப் போட்டிருக்கான். நல்லா விற்கணுமில்லையா? உனக்குப் பணம் வந்தாச்சு இல்லையா, பேசாமெ இரு. கேசு, கீஸுன்னு அலையாதே. டேய்… யார்றா அங்கே, இவருக்கு நூறு ரூபா கொடு. நானும் பணம் தர்றேன், போறுமா?’’
கோபாலன் இதைச் சொன்னது என் மனத்திரையில் இன்னும் அப்படியே நிழலாடுகிறது.//

இதைப் படித்தபோது மனம் கஷ்ட பட்டது. 

மேலும்    நம் நம்பிக்கைதான் நம் வரலாறு என்ற இன்னொரு கட்டுரையிலும் இவரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

//அவர் ஓர் எழுத்தாளர். ஓவியம் வரையவும் தெரியும். முப்பது வயது இருக்கும். ஒட்டிய கன்னங்கள். கூர்மயான கண்கள். நீண்ட மூக்கு. கதர் குர்த்தா, வேட்டி,, மேல்துண்டு. வாயில் எப்பொழுதும் வெற்றிலை, சீவல், புகையிலை. மெலிதான தோற்றம். பெயர் கி.ரா.கோபாலன்.

கி.ரா. கோபாலன் ஒரு நல்ல எழுத்தாளர். தமிழின் நல்ல எழுத்தாளர்களில் பலர், கோஷ்டிச் சண்டை விளம்பரத்தில் அகப்பட்டுக் கொள்ளாத காரணத்தினால், இக்காலச் சந்ததியினருக்கு அறிமுகம் ஆகாமலேயே போய்விட்டார்கள். ‘கல்கி’ யில் முதல் பரிசு வாங்கிய அவர் கதை ( ‘ஏழ்மையில் இன்பம்’’ ) ஒரு நல்ல கதை. அவர் பிறகு ‘கல்கி’யில் துணை ஆசிரியராகச் சேர்ந்து சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இளமையிலிருந்தே வறுமையில் உழன்ற காரணத்தினாலோ என்னவோ காசநோய்க்குப் பலியானார்.//
நான் இன்று முக நூலில் பகிர்ந்த கதை ராஜாளி மடம் என்ற கதையில் ஓவியர் பெயர் 'ரா" என்று  கையெழுத்துப் பார்த்தேன். தன் கதைக்கு அவரே ஓவியம் வரைந்ததை அறிந்து கொண்டேன்.
இக் கட்டுரையால்.

அபலை அஞ்சுகம் நாவல் எழுதிய கி. ரா. கோபாலன்,

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு கி.ரா. கோபாலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல; நல்ல கவிஞருமாவார். சித்திரக் கலையிலும் மிகுந்த அனுபவம் உள்ளவர். "காட்டூர் கண்ணன்" "கோணல்" "துதிக்கையார்" முதலிய புனைபெயர்களில் நீண்ட காலமாகக் கல்கி பத்திரிகையில் எத்தனையோ கவிதைகளையும், ஹாஸ்யக் கட்டுரைகளையும், அரசியல் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவருடைய எண்ணற்ற சிறுகதைகளையும் ராணி மாதவி, ராஜாளி மடம், அபலை அஞ்சுகம் முதலிய அருமையான பெரிய நாவல்களையும் வாசகர்கள் படித்து மகிழ்ந்திருப்பார்கள். "மாலவல்லியின் தியாகம்" என்ற சரித்திரத் தொடர்கதை கல்கியில் வெளிவந்த போது படித்துப் பாராட்டாதவர்கள் இல்லை. பின்னால் இந்தக் கதையில் அவர் எழுதி வைத்திருக்கும் திடுக்கிடும் சம்பவத்தைப் போலவே திரு. கி.ரா. கோபாலன் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அனைவரையும் திடுக்கிடும்படி செய்துவிட்டு மறைந்துவிட்டார். அவருடைய இளம் மனைவியையும் எட்டு வயதிலிருந்து மூன்று மாதக் குழந்தை வரையில் இருக்கும் உலகம் தெரியாத ஐந்து குழந்தைகளையும் தனியே விட்டு விட்டு சென்ற அவரின் மறைவு வேதனை அளிப்பதாகும். அவருடைய மறைவு தமிழ் நாட்டுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் மிகப் பெரிய நஷ்டமாகும். ” http://www.chennailibrary.com/gopalan/gopalan.html

 சிறந்த  எழுத்தாளர் வறுமையில் வாடி   நோய்வாய்ப்பட்டு மறைந்ததைப் படிக்கும் போது மனது கஷ்டப்படுகிறது.

பழைய எழுத்தாளர்களைப் பற்றி ஜீவி சார் "பூவனம்" வலைத்தளத்தில்,  "அழியாசுடர் "வலைத்தளத்தில் எல்லாம் படித்து இருக்கிறேன். ஆனால் இவரைப் படித்த நினைவு இல்லை.
ஜீவி சாருக்கு இந்த எழுத்தாளரைத் தெரிந்து இருக்கலாம், கும்பகோணத்தில் இருந்து இருப்பதால்.


இக் கதையில் வரும் பொன்னி, மருதப்பன்.

 கதாநாயகி வேதாவையும், கதாநாயகன் டாக்டர் பரசுராமனையும் சேர்த்து வைப்பவர்கள் இந்த  பொன்னி, மருதப்பன் தான்.

கதாநாயகி வேதா, பொன்னி, கதாநாயகன் டாகடர் பரசுராமன்

படத்தில் வேலைக்காரி செங்கம்மா, கதாநாயகி வேதா, படுக்கையில் படுத்து இருப்பது சாரதா என்ற பெண்மணி, கவலையுடன் இருப்பது சாரதாவின் சகோதரி  மரகதம், டாகடர் பரசுராமன்.

நல்ல விறுவிறுப்பான கதை. இந்தக் கட்டிடத்தில் (ராஜாளி மடத்தில்) இருக்கும் மூன்று பெண்கள், மற்றும் அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண்பற்றிய கதை. அன்பு, பாசம், மர்மம் நிறைந்த திருப்பங்கள் நிறைந்த கதை.

                                  வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------