வெள்ளி, 30 ஜூலை, 2010

எண்ணம் முழுதும் கண்ணன்

நியூஜெர்சியிலிருந்து வந்து ஒரு மாதம் ஓடிவிட்டது.அங்கு இருந்த 75 நாட்களும் சிட்டாய் பறந்தன.சின்ன கண்ணனுடன் விளையாட்டு,இடங்களை சுற்றிப் பார்த்தல் என்று நாட்கள் இறக்கைக்கட்டிப் பறந்தன்.

சின்னகண்ணனை பிரிந்து வந்து இருந்தால் மிகவும் வருத்தப் பட்டு இருப்போம். அவன் எங்களுடன் வந்ததால் மகிழ்ச்சி இரண்டு பங்கு ஆனது.

இங்கு கோவையில் சின்னகண்ணனின் பிறந்தநாள்,பழனியில் முடி இறக்குதல்,காது குத்து எல்லாம் நல்லபடியாக இறைவன் அருளால் நன்றாக நடந்தது.

உறவினர் வருகை, நண்பர்கள் வருகை,அக்கம் பக்கத்தில் பேரனை பார்க்க வருதல் ,கோவில் பிரத்தனைகள் என்று நாட்கள் நிமிஷமாய் கரைந்து விட்டது. மகனின் விடுமுறை முடிந்து விட்டது.மகனை பிரியமுடியாமல் பிரிந்து ஊருக்கு சென்றான்.

மருமகளும்,பேரனும் எங்களுடன் சிறிது நாட்கள் இருந்து, இப்போது அம்மாபாட்டியிடம் தன் குறும்புகளை காட்ட போயிருக்கிறான்.அவனுடைய சிரிப்பு, பேச்சு,குறும்புகள் மனதை ஆக்கிரமித்து உள்ளது.

விளையாட்டு சாமான்களை தூக்கி பின் பக்கம் வீசும் விளையாட்டு பிடிக்கும் அவனுக்கு.
கீகொடுத்து பொம்மைகளை விட்டால் வேகமாய் வந்து அதை எடுத்து பின் பக்கமாய் தூக்கி போடுவார்.அதனால் நன்மையும் ஏற்பட்டது பின்பக்கம் தூக்கி போடும் பழக்கம் இருந்ததால்
கண்ணாடி கிண்ணத்தை பின் பக்கம் தூக்கி போட்டதால் கையில் குத்தவில்லை.முன் பக்கம் வைத்து தட்டி இருந்தால் கையில் குத்தி இருக்கும்.

துணி மடித்து வைத்து இருந்தால் அதை இழுத்து போட்டு விட்டு சிரிப்பான்.புத்தகங்கள் அடிக்கி வைத்து இருந்தால் கலைத்து விடுவான்.கலைவாணர் மாதிரி விதவிதமாய் சிரிப்பான்.
முடி இறக்கும் போது யாராவது என்னை காப்பற்றுங்களேன் என்பது போல் எல்லோரையும் பார்த்து அழுததும்,காது குத்தும் போதும் எப்படி அழுவோனோ என்று நினைத்தேன்.ஆனால் காது குத்துபவர் நல்ல திறமைசாலி.காது குத்தும் போது அழசந்தர்ப்பம் கொடுக்காமல் நிமிஷமாய் நேர்த்தியாய் காது குத்தி விட்டார்.

மொட்டை அடித்தபின் எங்கேயும் இடித்துக் கொள்ளாமல் பார்த்து கொள்வதே பெரியவிஷயமாய்
இருந்தது.முடி எங்கே போச்சு என்றால் தலையை தொட்டுப் பார்த்து சிரித்துக் கொள்வான்.
ஒட்டலில் சாப்பிடப் போனபோது பரிமாறுபவர் முடி எங்ககண்ணு சாமிக்கு கொடுத்தீர்களா என்று கேட்டபோது எதோ புரிந்த மாதிரி சிரிப்பு. அவர் குழந்தைக்கு வேற்று முகமே இல்லை
என்று திருஷ்டி முறித்தார்.

அத்தையின் நிச்சியத்தார்த்த விழாவில் இவர்தான்(குட்டி கண்ணன் தான்) திருமண பட்டோலை வாசித்தார். என் மகளின் மாமனார் நல்ல குரல்வளம் உள்ளவர் அவரை மூகூர்த்த பட்டோலை வாசிக்க சொன்னர்கள் அவர்களுடன் இவனும் சேர்ந்து வாசித்தான் அமைதியாய் இருக்கும் போது இவன் பேசியதால் அரங்கம் முழுதும் மகிழ்ச்சி ஆரவாரம்.
நீயும் உன் அத்தை திருமண பட்டோலை வாசிக்கிறாயா என்று எல்லோரும் அவனிடம் கேட்டு ஒரே சிரிப்பு.எல்லா திருமண உறுதி செய்யும் வீட்டிலும் என் கணவர்தான் வாசிப்பார். விடுமுறை இல்லாத காரணத்தால் அவர்கள் வரவில்லை, அதை பேரன் வாசித்து நிறைவு செய்து விட்டான்.
தாத்தாவிடம் உங்களுக்கு பதிலாய் உங்கள் பேரன் வாசித்தான் என்று சொன்னவுடன் அவர்களுக்கும் எல்லை இல்லா மகிழ்ச்சி.

இடமாற்றங்களாலும்,நடப்பதற்கு ஏற்றவாறு உடல் மெலிய ஏற்படும் வயிற்றுப் போக்குக்கு கோவையில் எங்கள் குடும்ப வைத்தியரிடம் போனபோது அவர் தொட்டவுடன் ஊசிதான் போடபோகிறார் என்று ஒரே அழுகை.ஊரில் தடுப்பு ஊசிக்கு மட்டும் தான் டாகடரிட்ம் போய் ஒரே சமயத்தில் இரண்டு ஊசிகள் போட்டு வருவதால் அவர் தொட்டவுடனேயே அழுகை.அங்கு காத்திருந்தபோது அங்கு மாட்டியிருந்த ’மருத்துவ பிரத்தனை’
என்ற சாட் பார்த்தேன். அது நன்றாக இருந்த்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மருத்துவபிரார்த்தனை
-------------------
//ஆண்டவனே என்னுடைய நோயாளிக்ளிடம் உனது நோய் தீர்க்கும் சக்தியை செலுத்துவாய்.
எல்லாம் வல்ல இறைவனே பொறுக்கமுடியாத வலியினால் வருவோரைச் சந்திப்பதே எனது வாழ்க்கை பணியாக உள்ளது.சொல்ல போனால் சோகமான சூழலே இந்த சோதனையைய்
எதிர் கொள்ள செய்திருக்கிறது.

ஆனால் இந்த சோகத்திலும் ஒரு சுகம் என்ன வென்றால் அவர்களது துயரத்தை துடைப்பதற்கு எனக்கு அருமையானதொரு வாய்ப்பை நீ அளித்திருப்பதுதான்.

இந்த பெரும் பொறுப்பை எனது தோள்கள் மீது சுமத்தியிருக்கும் நீ அதை நிறைவேற்றுவதற்கான துணிவை தந்துருக்கிறாய்.

அந்த பணியை செவ்வனே செய்து முடிக்கும் சக்தியை இறைவா நீ எனக்கு அருள்வாய்.
ஆனால் எப்போதும் உன்னிடத்தில் நான் அசையாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
உண்மையிலேயே நீதான் நோய் தீர்க்கும் மருத்துவர் என்பதையும் நலவாழ்வுக்கு ஆதாரம் என்பதையும் உன்னுடைய அபார கருணை பாயும் வழியாகத் தான் நான் இருக்கிறேன் என்பதையும் நான் மறவாமல் இருக்க வேண்டும்.//

அந்த டாக்டரிடம் என் மாமனாருக்கு நல்ல நம்பிக்கை. மாமனாரின் நூற்றாண்டு விழாவில் அவருக்கு பொன்னாடை போற்றி கவுரவப் படுத்தினார்கள்.அவரைப் பற்றி அன்று வெளியிட்ட விழாமலரில் குறிப்பிட்டார்கள் .


இப்படி எண்ணம் எல்லாம் செல்லகுட்டியின் நினைவுதான். இங்கேயே இருக்க ஆசை தான்
அந்த பாட்டி வீட்டிலும் போய் இருக்க வேண்டாமா? அவர்களும் அவர்கள் பிள்ளை குறும்புகளை ரசிக்க வேண்டாமா? அங்கும் ஒரு பெரிய தாத்தா இருக்கிறார்கள். அவனின் வருகையால் தன் உடல் துன்பத்தை மறந்து சிரித்து வருகிறார்கள். கோவை பெரிய தாத்தாவின் கைத்தடியை பிடித்து எழுந்து நின்று அவர்களைப் பார்த்து சிரிப்பான் இரண்டு குழந்தைகள் சிரிப்பது போல இருக்கும்.அவர்களிடமும் ஒளிந்து விளையாடினான்.

அந்த பாட்டி வீட்டில் போய் சமையல் அறையில் அரிசி டப்பாவை திறந்து அதை அள்ளி கீழே போட்டு விளையாடுகிறானாம். தண்ணீர் டிரம்மை திறந்து விடுகிறானாம். வாசல் திறந்து இருந்தால் வெளியே போய் விடுகிறானாம்.வாகக்ரில் வேகமாய் நடக்கிறானாம். தன் குறும்புகளால் எல்லோரையும் குதுகலப் படுத்திக் கொண்டு இருக்கிறான்.அவன் பிறந்த நாள் சமயம் எல்லோரிடமும் சொல்லி ஆசிபெற்றுக் கொள்ள முடியவில்லை.(ஜீலை5ம் தேதி பிறந்தநாள்) இப்போது எல்லோரும் அவனை வாழ்த்துங்களேன். செல்ல கண்ணனின் பெயர் கவின் திருநாவுக்கரசு.

அன்பு உள்ளங்களே வாழ்த்துங்கள். நோய் நொடி இல்லாமல் பேரன் நூறாண்டு வாழட்டும்.
வாழ்க வளமுடன்.

இன்னும் இரண்டு வாரத்தில் நியூஜெர்சி சென்று விடுவான். மீண்டும் அவன் வரும் வரை நினைவுகளை பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.