வெள்ளி, 29 அக்டோபர், 2010

விரதங்களும் உடல் நலமும்

நம் முன்னோர்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள்.உடல் நலமாக இருந்தால் தான் நாம் இந்த பூமியில் மகிழ்ச்சியாய் வாழமுடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டார்கள்.

உடலையும் அதன் இயக்கத்தையும் காக்க ஆகாரம். ரத்தஓட்டத்தையும்,ஜீரணத்தையும் சரியானபடி வைத்திருக்க மிதமான உழைப்பு.

ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் நல்ல சத்தான ஆகாரம் உண்டு,மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள வேண்டும்.அப்போது தான் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.நாளைய சமுதாயம் மன வளம்,உடல் நலம் மிக்கதாய் இருக்கும்.


“நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னை சீரணிக்கும்”
--வேதாத்திரி மகரிஷி

எனவே சுத்தமானதும்,எளிமையானதும்,சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம்  நம்  உடலுக்கு தேவை.  காரம், புளிப்பு, உப்பு, சர்க்கரை  இவற்றையும்  மிதமாக  உட்கொள்ள வேண்டும்.


சமசீரான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஊட்டசத்துக்கள் அளவிலும், தரத்திலும், சமவிகிதத்தில் இருக்குமாறு  உண்பதே சரிவிகித உணவு. சரிவிகித  உணவு  சாப்பிட்டால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

திருவள்ளுவரும் இதை அழகாய் சொல்கிறார்.

”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”

உணவு அளவுக்கு மேல் கூடினாலும் குறைந்தாலும் மருத்துவ நூலோர் வகுத்த வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்று நோயை வரசெய்யும்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.”

முன்பு உண்ட உணவு செரித்த்தை அறிந்து பின்பு உண்டால் உடலுக்கு மருந்து என்று வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.

“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.”

உடலுக்கு தேவையான உணவை அளவோடு உண்டால்,உடம்பை நீண்ட காலம் வாழ வைக்க முடியும்.


இதற்கு தான் உபவாசம்,விரதம்,நோன்பு,போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.அதிலும்கூட தங்கள்
இஷ்ட தெய்வத்திற்கு தகுந்தாற் போல் விரதம் கடைப்பிடித்தார்கள்.

விரதம்,நோன்பு ஆகியவற்றை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர்.

நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம்,ஆகியவை நமது உடல்நலத்தைப் பெரிய அளவில் தீர்மானிக்கின்றன. தட்பவெப்பத்திற்கேற்ப உணவுப் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.

அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற அந்தந்த உணவு வகையை எடுத்துக் கொள்வது நல்லது. நமது பாரம்பரிய உணவு வகைகளை உண்ணவேண்டும். நார்ச்சத்துக்கு பீன்ஸ் போன்ற பச்சைக் காய்கறிகளை உண்ணலாம். இரும்புச் சத்துக்கு வெல்லம் நல்லது.நொறுக்கு தீனிக்கு மாறாகப்பழங்கள் ! குழந்தைகளுக்கு நாமே தயாரித்த சத்துமா கஞ்சி கொடுக்கலாம். பூச்சி கொல்லிகள் தெளிக்காத பச்சைக் காய்கறிகள் நல்லவை. கீரைகள்,கேழ்வரகு இதில் எல்லாம் சுண்ணாம்புச்சத்து உள்ளது. சிறு வயது முதல் இளநீர்,மோர் பருகப் பழகுவது நல்லது.அவரவர்களுக்கு என்ன ஒவ்வாதிருக்கிறதோ, அதை விட்டு விட்டு, எது உடம்புக்கு ஒத்துக் கொள்கிறதோ அதை உண்டால் உடல் நலமாக இருக்கும்.

காலையில் இஞ்சி,நடுப்பகல் சுக்கு,மாலையில் கடுக்காய் இப்படி எப்போது எதைச் சாப்பிடவேண்டும் என்று முன்னோர்கள் வகுத்துத் தந்த முறையில் உணவை உண்டால் நாளும் நலமாக இருக்கலாம்.

உடல் உழைப்பாளிக்கும்,மூளை உழைப்பாளிக்கும், உண்ண வேண்டிய உணவு மாறுபடும்.உடல் உழைப்பு இல்லாதவர்கள் அதிக உணவு உண்டால் ஆற்றல் இழப்பு தான் ஏற்படும்.உண்ணும் உணவு எளிதில் ஜீரணித்து கழிவுகள் நன்கு வெளியேறினால்தான் உடல் பலம் பெறும்.சத்து குறைந்தாலும் நோய்; சத்து மிகுந்தாலும் நோய்.பசிக்கும் மட்டும் உணவல்ல, உடலின் செயல் பாட்டுக்கும் உணவு அவ்சியம்.அவசர உணவு,அதிக உணவு,அகால உணவு,நல்லதல்ல.

விரத நாட்களில் உணவைத் தவிர்ப்பதும்,பண்டிகை நாட்களில் விருந்தை ஏற்பதும் வழக்கம்.

நாள்தோறும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டு இருக்கும் வயிறாகிய இயந்திரத்திற்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுக்கலாம்.

“விரதமகாத்மியம்” என்னும் நூல் 159 விரதங்கள் இருப்பதாய்ச் சொல்கிறது. நாம் கடைப்பிடிக்கும் விரதங்கள் கொஞ்சம் தான்.

உபவாசம் என்பது ஒர் நோய் தடுப்பு முறையே:

சிலர் விரத காலங்களில் வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டு இருப்பார்கள்,இது மலக் குடலை சுத்தம் செய்யுமாம்.
சிலர் இளநீர், ஆரஞ்சுஜீஸ், எலுமிச்சை ஜீஸ், பழச்சாறுகள், குடிப்பார்கள்.

சிலர் நீர்மோர்,பானகம், மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
சிலர் பழம்,பால் எடுத்துக் கொள்வார்கள்.பழ ஆகாரம் என்பது தான் பலகாரம் ஆனது என்று சொல்கிறார்கள். விரத  காலங்களில் பலகாரத்திற்கு பதில் பழ ஆகாரம் நல்லது.

உபவாசத்தால் ஏற்படும் நன்மைகள்:

கழிவுகள் சீராக வெளியேறும்;  எடை குறையும்:  உடல் சமநிலை பெறும்; ஜீரண உறுப்புகள்ஓய்வு பெறும்;  நற்சுவாசம் பெறலாம்; ரத்தம் சுத்தமாகும்; நரம்புகள் ஓய்வு பெறும்; நோய் தரும் திசுக்கள் அழியும்;கழிவுகள் நன்கு நீங்கும்; மனம் சமநிலை அடையும்; நற்சிந்தனை உண்டாகும்.

சில விரதங்களும் பலனும்:

1.திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவனின் பரிபூரண அன்பைப் பெறலாம்.
2.செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
3.வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
4.வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
6.ஞாயிற்றுக் கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயிலிருந்து விடுதலை பெறலாம்,நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக் கிழமையன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

மார்கழி ஏகாதசி விரதம் :-

கிருஷ்ணபக்ஷ ஏகாதசியில் அநுஷ்டிப்பது இந்நாள் தேவர்களுக்கு இடுக்கண் புரிந்த முராசுரனை விஷ்ணு கொன்று தேவரை களிபித்த நாள். இதில் உதயம் ஏகாதசி , மத்யம்  த்வாதசி , அந்தியம் திரயோதசி
உத்தமம்.  இந்நாளில் ஒரு நாள் விரதமிருக்கின்   ஆயிரம்  ஏகாதசி பலம் உண்டு  என்று சொல்லப்படுகிறது.


என் அம்மாவும் விரதங்களும்:

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)வீட்டில் என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைபிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு.

பள்ளி சென்று வந்தபின் குளித்து பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை.அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று இருக்கும்.பூஜை முடிந்தபின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின் தான் எங்களுக்கு உணவு. அப்பாதான் ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’ என்பார்கள். 


இந்த விரதத்தை சிறு  வயதில் கடை பிடிக்க கஷ்டமாய் உணர்ந்தாலும், இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பிறகு வெள்ளிக் கிழமை பூஜை. சர்க்கரைப் பொங்கல் செய்து தருவார்கள் அதை விளக்கு முன் வைத்து விட்டு அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் சொல்லி,’விளக்கு போற்றி’ சொல்லி விட்டு பூஜை முடிந்தபின் தான் காலை உணவு. அந்தப் பழக்கம்தான் மனவைராக்கியம்,எல்லாம் இறைவன் அருளால் நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை இப்போது கொடுத்து இருக்கிறது.இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

சஷ்டி விரதம் மாதத்தில் இரண்டு வரும். அந்த இரண்டு நாளும் நானும் என் கணவரும் விரதம் இருக்கிறோம் தீபாவளியை ஒட்டி வரும் சஷ்டி விரதநாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு.6 ஆம் நாள் சூரசம்ஹாரம் முடிந்தபின் உணவு.நானும் கணவரும் சேர்ந்து கடைப்பிடிப்பதால் கஷ்டம் இல்லை.இந்த விரதம் என் கணவர் வீட்டில் அப்பா,அம்மா,அண்ணன்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் திருசெந்தூரில் போய் ஆறு நாளும் இருந்து விரதம் கடைப் பிடிப்பார்கள்.இப்போது வயது ஆகிவிட்டதால் அத்தை,மாமா கடைப்பிடிப்பது இல்லை.

என் கணவருக்கும்,என் மகனுக்கும் காய்ச்சல் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது அப்போது அம்மாவிடம் கேட்ட போது ’ஞாயிறு விரதம் இரு , நோய் நொடி இல்லாமல் இருக்கும்’ என்றார்கள் 19 வருடமாய் நானும் என் கணவரும் இருந்து வருகிறோம்,குழந்தைகளும்’ நாங்களும் இருக்கிறோம்’ என்று இருந்தார்கள் மகள் கல்யாணம் ஆகும் வரை,மகன் வேலை கிடைக்கும் வரை இருந்தார்கள்.

மகனுக்கு விதிமுறைகள் விரதத்தில் தளர்த்தப்படும்.பொரி விற்கும் பாட்டி பொரிஉருண்டை,தேன் மிட்டாய் கொண்டு வருவார்கள், அது மட்டும் வாங்கிச் சாப்பிடுகிறேன் என்பான் சரி என்று ஒத்துக் கொள்வேன்.காலை மட்டும் டிபன் கிடையாது. மதியம் உணவு உண்டு.இரவு உணவு சப்பாத்தி.காலை உணவை தவிர்க்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்வதால் சத்துமாவு கஞ்சி கொடுத்து விடுவேன் குழந்தைகளுக்கு.

விரதங்களைக் கடைப் பிடிக்க முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி,தான தர்மங்கள் செய்து,மனதாலும் வாக்கினாலும் செயலாலும் ஒழுக்கமான காரியங்களைச் செய்து,பிறர் துன்பங்களைத் தன்னுடையது போல் நினைத்து உதவிகள் செய்பவன் தான் ’சத்புருஷ்விரதம்’ செய்த பலனை அடைவதாய் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஒழுக்கசீலனாக,தர்மசாஸ்திரப்படி சத்புருஷவிரதம் அனுஷ்டித்து இறைஉணர்வோடு வாழ்பவர்கள், நோயினால் அவதிப்படுவதில்லை அப்படியே நோய் வந்தாலும் அதைத் தாங்கும் சக்தியையும் எதிர்த்துப் போராடும் உள்ளத்தையும் இறைவன் அவர்களுக்கு அளிக்கிறார்.என்பது ஆயுர்வேதத்தின் ஆசான் சரகரின் வாக்கு.

வேதங்கள் நமக்கு உணர்த்துவது எல்லா உயிர்களும் துன்பமில்லாமல் இருக்க வேண்டும் என்பதே .இதைத்தான் தாயுமானவர்’ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றியேன் பாராபரமே ’என்கிறார்.

எல்லோருடைய இன்பத்துக்கும் ஆசைப்பட்டால் நாமும் இன்பமாக இருப்போம். இதைத்தான் ஆயுர்வேதமும் கூறுகிறது.

சமஸ்கிருத்தில் “சர்வ ஜன சுகினோ பவந்து” என்பார்கள்.

வாழ்க நலமுடன்!
வாழ்க வளமுடன்!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

முதியோர் நாள்

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.
முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு.

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!