வெள்ளி, 20 செப்டம்பர், 2013

நிலாவும் வாணவேடிக்கையும்

ஸ்விடிஸ் பரோவில் உள்ள ராஜகணபதி கோவில் போன போது  எடுத்த நிலா 
ஓரீஸ்  என்ற இடத்தில் உள்ள இந்து டெம்பிள்  என்ற   கோவில் வாசலில் எடுத்த நிலா


லாங்வுட் கார்டனன்லில் இரவு எட்டு மணிக்கு எடுத்த நிலா
நிலாவானில் நீந்தும் வெண்ணிலா


இரவு நடக்கும் வாணவேடிக்கை பார்க்க மடக்கு நாற்காலியைப் போட்டு இடம் பிடிக்கச் செல்லும் என் கணவர்

சேர் போட்டு இடம் பிடித்தபின் மலர்ப்பூங்கா பார்க்கப் போகும் சிறுவர்கள்

வெள்ளை சேர்கள் வாடகைக்கு கிடைப்பது.
கலர் கலராக உள்ளது அவரவர்கள் வீடுகளிலிருந்து கொண்டுவருவது.

நடக்க முடியாதவர்கள் பேட்டரி சேர் காரில் வந்து இடம் பிடித்துக் கொள்கிறார்கள்
இந்த மண்டபத்திற்கு பக்கத்திலிருந்து வாணம் விடுவார்கள்.




வெடிகளின் பின்னணியில் ஒளிரும் நிலா
பெரிய வட்டம்- நிலா

சின்ன மத்தாப்பூக்களுக்கு ஓரத்தில் நிலா
பெரிய புஸ்வாணங்களுக்கு மேலே நிலா


வானத்தில் சிதறும்  வெடிகளுக்குள் நிலா

ஒளிரும் வாணமும் நிலாவும்

நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா என்று நாம் சிறு வயதில் பாடி       இருப்போம்.குழந்தைகளுக்கு நிலா காட்டி உணவு கொடுத்து மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன். அன்று என் குழந்தைகளுக்கு, இன்று பேரக்குழந்தைகளுக்கு . அன்றும் அதே நிலா தான், இன்றும் இதே நிலா தான்.

நிலா பாட்டுமட்டும் மாறி விட்டது. 
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா 
மலை மேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா
நடுவீட்டில் வை 
நல்ல துதி செய் 

என்று பழைய பாடல்

இப்போது  கடைசி இரண்டு வரிகள் மாறி உள்ளது.

பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுத்தி வா

என்று இருக்கிறது.

சினிமாக்களில் முழுநிலா மிகவும் முக்கியம். அவர் அவர் மனநிலைக்கு ஏற்றவாறு நிலாவும் பாடலும் காட்சி அமைப்புகளும் மாறும்.  பாட்டு எழுதும் கவிஞர்களுக்கும், படம் எடுக்கும் காமிரமேன்களுக்கும் நிலவின் மீது அத்தனை காதல்.அவ்வளவு அழகாய் இருக்கும் பாடல்கள், காட்சி அமைப்புக்கள், அந்தக் காலம் முதல் இன்று வரை. நிறைய பாடல்கள் எல்லோர் நினைவுகளிலும் வந்துமோதும். யாருக்கு என்ன பாடல் நினைவுக்கு வந்தது என்று பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டால் எல்லோரும் ரசிப்பார்கள்.

புராணங்களில் நிலவு வழிபாடு, நிலவு தேய்வது ,வளர்வதற்கு  எல்லாம் என்ன காரணம் என்ற கதை உண்டு அதை எல்லாம் திருமதி இராஜராஜேஸ்வரி அழகாய் அந்த அந்த நாளில் விரிவாக விளக்கம் தந்து  அப்போது எந்த கோவில் வழிபாடு செய்ய வேண்டும்   என்பதை அழகாய் கண்ணை கவரும் படங்களுடன் நமக்கு தந்து இருக்கிறார். எல்லோரும் படித்து இருப்பீர்கள்.

வல்லி அக்கா நிலா ரசிகை. அவர்கள் தன் பதிவில் பெளர்ணமி சமயம் அவர்களே எடுத்த அழகான நிலாப்படங்கள் பகிர்வார்கள். பார்த்து இருப்பீர்கள்.

 நேற்று போட்ட பதிவு அமெரிக்கா நிலாப் பற்றி. பதிவுக்கு பின்னூட்டம் போடும் போது நானும் நிறைய  நிலா படமெடுத்தேன் என்று போட்டு இருந்தேன். உடனே எனக்கும் ஆசை வந்து விட்டது , நான் செல்லும் இடம் எல்லாம் எடுத்த நிலா படம்   போட . 

பென்சில்வேனியாவில் உள்ள ”லாங்வுட் கார்டன்” என்ற     என்ற இடத்திற்கு போன மாதம் போய் இருந்தோம்  அங்கு மலர்த் தோட்டம், அழகான புல்வெளிகள், நீர் ஊற்று நடனம், வாணவேடிக்கை எல்லாம் உண்டு ஒரு பதிவில் நீரூற்று நடனத்தை பகிர்ந்து கொண்டேன். 

இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை ஆரம்பம். அதற்கு கட்டணம்  38 டாலர் ஒருவருக்கு. கையில் திருப்பதிக்குபோகும் போது அடையாள் டோக்கன் கட்டுவதுபோல் சிவப்பாய் ஒரு அடையாள அட்டையைக் கட்டி விடுகிறார்கள். அரைமணி நேரம் வாணவேடிக்கை, பின்னணியில் இசை ஒலிக்க நடை பெறுகிறது. கடைசி நேரத்தில் மட்டும் டாம்டூம் என சத்தத்துடன் சட சட வென்று வெடி அதிர்கிறது. அதற்கு முன்பு எல்லாம் சிறிய சத்தத்துடன் பூவாண சிதறல்கள்தான். வட்டமாய், நட்சத்திரம்போல்,வால்நட்சத்திரம் மாதிரி.

  வெள்ளையாக தெரியும் அழகிய நீரூற்றுக்குள் வாணவேடிக்கையின் போது  கலர் கலராக தெரிகிறது.

நம் ஊரில்( மதுரையில் ) அழகர் எதிர் சேவையின் போது தல்லாகுளத்தில் இரவு வாணவேடிக்கை வைப்பார்கள். வித விதமாய் அதை எல்லாம் பார்த்து விட்டு   இதைப்பார்க்கும் போது ஆச்சரியமாய் இல்லை எனக்கு. ஆனால் பின்னணி இசையும் ஒவ்வொரு வெடி வெடித்தபின் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதும்  பார்க்க  கேட்க நன்றாகத் தான் இருக்கிறது. 

இங்கு அவர்களுக்கு  நம்மைப் போல் சுதந்திரமாய் வெடி வெடிக்கமுடியாதே!  குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் தான்  அவர்கள்  வாணவேடிக்கை செய்வார்கள் . அப்போது தான் ரசிக்க முடியும். இந்த கார்டனில் மாதம் இரண்டு தடவை உண்டு. மதியம் மூன்று மணிக்கே  வந்து வாணவேடிக்கை பார்க்க இடம் பிடிக்க சேர்களை போட்ட பின்  மக்கள் தோட்டத்தின் அழகை ரசிக்க போகிறார்கள். தோட்டத்தின் அழகை,   மலர்களின் அணி வகுப்பைக் கண்டு ரசித்து பார்க்கில் விளையாடி பின் ஆறு மணிக்கு நீர் நடனத்தை கண்டு மகிழ்கிறார்கள்.  வாணவேடிக்கையை நன்கு இருட்டியவுடன் தான் ஆரம்பிப்பார்கள்.

எட்டு மணி வரை போன மாதம் இருட்டவில்லை.  சின்னவர்கள், பெரியவர்கள் என்று எவ்வளவு கூட்டம் வருகிறது இந்த வாணவேடிக்கையை ரசிக்க.

வாணவேடிக்கை  சமயம் நிலா வானத்தில் சின்ன  வெளிச்ச பந்தாய் இருந்ததையும் காட்ட வாண வேடிக்கை வீடியோ எடுத்ததையும் போட்டு விட்டேன், எங்கள் சின்ன காமிராவில்  எடுத்தது ரொம்ப எதிர்பார்க்க முடியாது. 






மலர்த் தோட்டம் - எனது அடுத்த பதிவில் .

வாழ்க வளமுடன்.





திங்கள், 9 செப்டம்பர், 2013

வந்தார் விநாயகர் தந்தார் அருளை

                                                                           உ
                                                                            ==  
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் -- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

இன்று விநாயகர் சதுர்த்தி. எல்லோரும் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடிக் கொண்டு இருப்பீர்கள். நாங்கள் கொண்டாடி விட்டோம்.

பிள்ளையார் சுழி போட்டுத்தான் நாம்  எந்தச் செயலையும்  தொடங்குவோம்.
                                               
//எந்த ஒரு செயல் ஆரம்பிக்கும் போதும் விநாயகர் மந்திரமான ஸ்ரீ கணாதிபதயே நம: என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தால் விநாயகர் அருளால் எந்த வினைகளும் தடைகளும் வராமல் நாம் தொடங்கும் செயல் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.//    -தினமலர் செய்தி

எல்லோருக்கும்   தொடங்கும் செயல்கள் எல்லாம்  வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

//உருகும் அடியார் அள்ளூர உள்ளே ஊறும் தேன்வருக
உண்ணத் தெவிட்டாச் சிவானந்த ஒளியே வருக புலன்வழிபோய்த்
திருகும் உள்ளத்தார், நினைவினுக்கும் சேயாய் வருக எமை
ஆண்ட செல்வா வருக உமை ஈன்ற சிறுவா வருக இணைவிழியால்
பருகும் அமுதே வருக உயிர்ப்பைங்கூழ் தழைக்க கருணை
மழை பரப்பும் முகிலே வருக  நறும்பாகே வருக வரை கிழித்த
முருகவேட்கு முன் உதித்த முதல்வா வருக வருகவே
மூரிகலசைச் செங்கழுநீர் முனிவா வருக வருகவே.//

//கணபதிக் களிறே போற்றி !
ஐங்கரத்து அப்பா போற்றி !
சிவம் மகிழ் சிறுவா போற்றி !                                    
செந்நெறிகாட்டுவாய் போற்றி !
திருமறை உதவினாய் போற்றி !
திங்களணி திருவே போற்றி!
திரண்டநால் தோளாய் போற்றி !
ஆனைமா முகத்தாய் போற்றி!
அனைத்திடர் களைவாய் போற்றி !
திருவெலாந்தருவாய் போற்றி!
திருவடி இணைகள் போற்றி !//

என்று பாடி  பிள்ளையாரைப் போற்றுவோம்.

 இங்கு நியூஜெர்சியில், நம் ஊரில் விற்பது போல் களிமண் பிள்ளையார் கிடைக்க மாட்டார், ஆனால் களிமண் கிடைக்கிறது.  ஈரக்களிமண் 5 கிலோ வாங்கி வந்தான் மகன். ”போன முறை  மண்பிள்ளையார் சிலை  நான் செய்தேன் , இந்த முறை நீங்கள் இங்கு இருப்பதால் நீங்கள் செய்யுங்கள் அப்பா” என்றான்.  அவர்களும் மகிழ்ச்சியாக பிள்ளையார், மூஞ்சூறு வாகனம் எல்லாம் செய்தார்கள். அலங்காரக் குடை இருந்தது ,அதை மகனின்
பிள்ளையாருக்கு வைத்து விட்டு, தான் செய்த பிள்ளையாருக்கு அலங்கார திருவாச்சி வீட்டில் இருந்த தெர்மோகோலில் செய்தார்கள்.  மகன் போன முறை  செய்த  பிள்ளையாருக்கு ஸ்பிரே பெயிண்ட் அடிக்கப்பட்டது. அந்த பிள்ளையாரும் புதிதாக ஆனார்.

விநாயகரை உருவாக்கும் என் நாயகர்

வருகிறார் 

வந்துவிட்டார் நலங்கள் அருள
கொலு வீற்றிருக்கும் விநாயகர்கள்

என் மகன் செய்த விநாயகர்

என் கணவர் செய்த விநாயகர்

சூரியன் வணங்க வந்தார் விநாயகரை
அதுதான் ஒளி வெள்ளம் 





பிள்ளையாரை மூன்று நாள், ஐந்து நாள் என்று வீட்டில் வைத்து வணங்கிவிட்டுப் பின் கரைப்பது வழக்கம்.  இங்கு மகன் கரைக்க வில்லை. அழகாய்ச் செய்து விட்டு கரைக்க மனம் இல்லை என்பதால்  கரைக்க வில்லை.

முன்னோர்கள் பிள்ளையாரை கரைக்கச் சொல்லும் காரணம் தினமலரில் படித்தேன் .தெரிந்து இருக்கும் அனைவருக்கும். எதற்கும் படித்து பாருங்களேன்.
//மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.//

 பண்டிகை கொண்டாடும் போது எனக்கு நம் ஊரின் நினைவு வந்துவிடும். அங்கெல்லாம் ஊரே  கோலகலமாய் இருக்கும்,  பழங்கள், பூக்கள்,  தென்னை ஓலையில் செய்த அலங்கார தோரணங்கள், எருக்கம்பூமாலை,  என்று எங்கும் கூவிக் கூவி அழைக்கும் கூட்டம்,   எங்கள் வீட்டில் சுற்றிலும் நாலு பிள்ளையார் கோவில்கள். கோவில்களில்  பத்து நாள் முன்பே  விழா நடக்கும்.    பக்தி பாடல்கள் எல்லாக் கோவில்களிலிருந்து ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பிள்ளையார் திருவீதி உலா 10 நாளும் நடக்கும் . பிள்ளையார் சதுர்த்தி அன்று தேரில் வருவார்.

இங்கு,அமைதியான ஆரவாரம் இல்லாத  விழா நினைவு படுத்துகிறது ,அயல் நாட்டில் இருப்பதை. மற்றபடி குழந்தைகளுடன் கொண்டாடுவது  மகிழ்ச்சியே!
மகன், மருமகள் சேர்ந்து  விநாயகரை அழகாய்  அலங்கரித்தார்கள். பேரனும் நான் உதவிசெய்கிறேன் என்று அவர்களுடன் சேர்ந்து எல்லாம் எடுத்துக் கொடுத்தான் .  மருமகளின் அம்மாவும் வந்து இருந்தார்கள் அவர்களும் நானும் சேர்ந்து பிரசாதங்கள் செய்தோம்.இப்படி உறவுகள் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சிதான் இல்லையா!

இங்கு பிள்ளையாருக்குப் பிரசாதமாய்  கறுப்பு கொண்டைக்கடலை சுண்டல், தேங்காய் பூரணம் வைத்த மோதகம், எள்ளு உருண்டை., அவல், பொரி, கடலை  வெல்லம் வைத்து  வழிபட்டோம். வீட்டில் வளர்ந்து வரும் வாழை மரத்திலிருந்து சிறிய வாழை இலையில் பிரசாதம் வைத்து வணங்கியது மகிழ்ச்சி தந்தது.



                          வீட்டில் இருக்கும் பலவித பிள்ளையார்கள்





பிள்ளையார் பாடல்களுக்கு பேரன் நடனம் ஆடி எங்களை மகிழ்வித்தான்.

உங்கள் அனைவருக்கும் எங்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

                                                             வாழ்க வளமுடன்!

                                                                       ------------------
    என் மருமகள் தொகுத்து  தந்த விநாயகர்  செய்முறை தொகுப்பு படங்கள்