வியாழன், 30 செப்டம்பர், 2021

ஒலிம்பிக் பூங்கா


ஒலிம்பிக் பூங்கா

 ஜார்சியாவில்  அட்லாண்டா   நகரத்தில்  உள்ளது இந்த பூங்கா.
 1896 ஆம் ஆண்டில்  ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப் பெற்றது.  அதன் நினைவாக 1996  XXVI  ஒலிம்பியாட்  நூற்றாண்டு கால நினைவாக கட்டப்பட்டது.

ஒலிம்பிக்கில் 197 நாடுகளிலிருந்து 10,320 விளையாட்டு வீரர்கள் போட்டியில்  கலந்து கொண்டார்களாம்.

கொரொனா அச்சத்தால் 2020 ல்   இந்த பூங்கா மூடப்பட்டு இருந்தது, இப்போது மீண்டும் மக்கள் பார்வைக்கு திறந்து விட்டு இருக்கிறார்கள்.


இந்த ஊரின் அழகையும் , இந்த பூங்காவின் அழகையும்  பார்க்க  அழைத்துப்  போய் காட்டினாள் மகள்.

அங்குப் பார்த்த காட்சிகள் பகிர்வாய் இந்த பதிவில் இடம் பெறுகிறது.

சனி, 25 செப்டம்பர், 2021

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்


காளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று புரட்டாசி  இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது
103 வது திவ்ய தேசம்.  திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.


காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்கீரம் போனால் கூட்டம் இருக்காது என்று  சொல்வார்கள். 


வாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து  விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள்  இவ்வளவு உயரமா? நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)  

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.

சுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.
                               
                           காளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்
தாயார் மோகனவல்லி  சன்னதி  விமானம்

பெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .

 தாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில்   ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  

                                                   
                               சக்கரத்தாழ்வார் சன்னதி தங்கக்கோபுரம் 

நரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம்.  சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால்  எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
                                                         
                    சிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி                                          
சிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர்  உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி  நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர். 

அழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை  வர்ணம் பூசி இருக்கிறார்கள் .அதில் நடந்தால் சுடவில்லை.

கோடியில் இருக்கும் பெரிய கிணறு  இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.


சிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது. 

உள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால்  வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.


 அவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். வாதாம், தென்னை, மாமரம் இருந்தன.


தென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்

                      மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.

அதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த  கிணறு
குப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம்,  கீற்றுடன் தென்னைமரம்
                        
 அடுத்து சதுரக் கல்லில்  சுற்றிவர சின்ன சின்ன  உருவங்கள் நடுவில்  சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.



தரையிலும்  மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்
அந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும்   வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.


பிரகாரம் சுற்றி  கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல்  பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.


சன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.

அவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல்  உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன்  சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )

 /செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!//
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.

அடியவர்களின்  பாதம் அந்த உருவங்களின் மேல்

உள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.

 நாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு  திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து  பின்  உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.

இங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன்   திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.

சிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.



ஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்
  
அங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன்  குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.




ஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.
ஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு!



இப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.


                                           ஆலமரத்தடியில் நாகர்கள்.
இந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே!
இப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும்  தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.

குளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,
 புற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும்  அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.

கருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

----------

வியாழன், 23 செப்டம்பர், 2021

மஞ்சள் வெயில் மாலையிலே! வண்ணப்பூங்காவிலே!



மாலை நேரம்  இந்த பூங்காவிற்கு போனோம்,  நடைப்பயிற்சி செய்ய . ஊர் முழுவதும் மிக அழகிய பூங்காக்கள் இருக்கிறது.
வீட்டுக்கு அருகே இருக்கும் பூங்கா இது. (காரில் போனால் 10 நிமிடம்)

வெகு அழகான பூங்கா.  இரு பக்க மரங்களும் வசந்த காலத்தில்  வெள்ளைப்பூக்கள்  பூத்து குலுங்குவது பார்க்க அழகாய் இருக்குமாம், இப்போது மரம் இலைகளை உதிர்த்துவிட்டு குச்சி குச்சியாக நிற்கிறது.

நடைபாதை வெகு தூரம் போகிறது. ஒரு பாதியை ஒரு நாளும், மறுபாதியை இன்னொரு நாளும் நடந்து கடக்கும் போது பார்த்த காட்சிகள் இந்த பதிவில்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

ரூஸ்டர் காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை (ROOSTER GOGBURN OSTRIGN RANGH)



 ரூஸ்டர் காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை  

வாசலில் மிக அழகான கள்ளிகள் இருக்கிறது.
காக்பர்ன் தீக்கோழிப் பண்ணை  உள்ளே செல்லும் வழி.

தெற்கு அரிசோனாவில்  இருக்கிறது.   மகன் அழைத்து சென்ற இடம். மிகவும் அழகான இடம் . இது மூன்று தலைமுறையாக ஒரு குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கிறது. தீக்கோழிப் பண்ணை என்று பெயர் வைத்து இருந்தாலும் அங்கு வேறு விலங்கினங்களும் இருக்கிறது. 

1999ம் ஆண்டு முதல் பொது மக்கள் பார்த்து அவைகளுக்கு உணவு கொடுத்து மகிழ ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

நைஜீரியா குள்ள ஆடுகள், ஃ பாலோ மான், பெக்கிங் வாத்துக்கள்,  போயர் ஆடுகள் மற்றும்  பறவைகள், சேவல், கோழி, கழுதை ஆகியவையும் மேலும் முயல்,  வாத்தும்  இருக்கிறது.

சனி, 18 செப்டம்பர், 2021

அருள்மிகு வீரநாராயணப் பெருமாள்


புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
அப்படி முன்பு சென்று வந்து போட்ட பதிவுகளை மீண்டும் படித்தேன்.

இந்த பெருமாள்  கோயில் ஜனவரி 1ம் தேதி பார்க்கும் கோயில்.
திங்கள், 17 ஜனவரி , 2011ல் போட்ட பதிவு இது.


வியாழன், 16 செப்டம்பர், 2021

பிரவுன் த்ரஷர் பறவை ( Brown Thrasher Bird)


பிரவுன் த்ரஷர் ஜார்ஜியாவின் மாநிலப் பறவை.

மகள் வீட்டுத்தோட்டத்திற்கு இன்று  காலை வந்த பறவை. மழை சிறு தூறலாக பெய்து கொண்டு இருந்தது. அதை வேடிக்கைப்பார்க்க நின்று கொண்டு இருந்தேன். இந்த பறவை வந்தது. உடனே காமிராவை எடுத்து வந்து எடுத்து விட்டேன்.

 ஞாயிறு ஒரு இடத்திற்கு போய் இருந்தோம். அங்கு வரக்கூடிய பறவைகளைப் பற்றி போட்டு இருந்தார்கள். அதில் ஒன்று இந்த பறவை. அங்கும் இந்த  பறவையை  படம் எடுத்தேன் . அந்த இடத்தைப்பற்றி எழுதும் போது அங்கு பார்த்த பறவை படத்தை  போடலாம் என்று வைத்து இருக்கிறேன்.

மரத்திலிருந்து கீழே இறங்கி  புல்வெளியில் அமர்ந்து சிறிது நேரம் பார்வை
தேடல் ஆரம்பித்து விட்டது
ஒன்றும் கிடைக்கவில்லை
மீண்டும் அங்கும் இங்கும் பார்வை




சிறிய காணொளிதான் பாருங்கள். புல்லில் விழுந்து கிடக்கும் சிவப்பு இலைகளை கொத்தி கொத்திப் போட்டு தேடுகிறது உணவை. இங்கு உள்ள பறவைகள் எல்லாம் அதிகமாக சிவப்பு  வண்ணத்தில்  இருக்கிறது. 

1970  இல் ஜார்ஜியா சட்டமன்றத்தால் அதிகாரப்பூர்வ மாநிலப் பறவையாக அங்கீகரிக்கப்பட்ட பறவையாம்.  கூகுளில் தேடிய போது கிடைத்தது. நன்றி கூகுளுக்கு.


இதன் பாடும் குரலை நான் பதிவு செய்ய முடியவில்லை. நான் உணவு தேடும் போது காணொளி எடுத்தேன், பறவை அப்போது பாடவில்லை. இந்த காணொளி youtube ல் பார்த்து பகிர்ந்து இருக்கிறேன். சிறிய காணொளிதான் நேரம் இருந்தால் பார்க்கலாம். மேலே உள்ள காணொளியில் பார்க்க முடியவில்லை என்றால் 

https://www.youtube.com/watch?v=6-yTbJen4UQ&t=36s இந்த சுட்டி மூலம் பார்க்கலாம்.

மகன் ஊரில் இதே பறவை அந்த ஊருக்கு ஏற்ற வண்ணத்தில் இருந்தது. முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

----------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அந்தி வானம்!


ஆவணி மாதம்  ஞாயிறு சிறப்பு. அதனால்  சூரியன்   படங்கள், செய்திகள்    இடம்பெறுகிறது.



இதற்கு முன்பு போட்ட பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.

  இந்த பதிவில் மாலைச்சூரியன். 

மாலைச் சூரியன் மறையும் காட்சியைப்பார்க்க போய் இருந்தோம்.  மகன் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது இந்த இடம்.  அங்கு  எடுத்த சூரியன் படங்கள் பகிர்வாய் இந்த பதிவில். 

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாக்குண்டாம் நல்ல மன முண்டாம்


 பத்து நாட்களுக்கு முன்  பேரன் வரைந்த பிள்ளையார்.

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு
-ஒளவையார்

பிள்ளையார் சதுர்த்தி அன்று இந்த பதிவில்  நிறைய பிள்ளையார் பார்க்கலாம் வாங்க.

வியாழன், 9 செப்டம்பர், 2021

பறவைகள் பலவிதம்



மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டுக்கு  வந்து இருக்கிறேன்.  ஞாயிறு வந்தேன் . மகள் வீட்டில்   இருக்கும் மரங்களில்  புல்வெளிகளில் வந்து அமர்ந்த பறவைகள் படம் இந்த பதிவில்.


வீட்டைச்சுற்றி  பெரிய பெரிய மரங்கள், புல்வெளி என்று இருக்கிறது. பறவைகள் வித விதமாக வருகிறது. ஆனால் அவற்றை படம் எடுப்பதுதான் கஷ்டம் எல்லாபறவைகளும்  மரத்தில் மறைந்து கொள்கிறது. புல்வெளி, மற்றும் மரத்தின் கிளையில் அமரும் போதுதான் எடுக்க முடிகிறது. 

 சிவப்பு Cardinal  பறவை  என்று நினைக்கிறேன். இதில் ஆண்,  பெண்  வேறு பாடு இருக்கிறது.

இந்த சிவப்பு பறவை மரத்தில் இருந்த வண்ணத்து பூச்சியாக மாற வேண்டிய இளம் புழுவை  பிடித்து இருக்கிறது, தன் காலை உணவுக்கு.

சிட்டுக்குருவிகள்

வந்த இரண்டு நாளாக பறவைகளை படம் எடுக்க முயன்றேன். நிற்காமல் ஓடி கொண்டு இருந்தது, இன்று கொஞ்சம் பழகி விட்டது. குருவியின் கீச் கீச் ஒலி மனதுக்கு இதம்.
தூரத்திலிருந்து ஒரு பார்வை

அப்புறம் உணவு தேடல்






இதற்கு தலைமுடி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது

இதுவும் குருவிதான், மொட்டைத் தலை, குட்டி வாய்(அலகு)
சின்னதாக இருக்கிறது

இந்த பறவை பெரிய குருவி போல் இருக்கிறது

இதன் சத்தம் வேறு மாதிரி இருக்கிறது

பறவைகளுக்கு இது போன்ற ஊஞ்சலாடும்  மரக்கிளைகள் பிடித்தமானது


வீட்டுக்கு எதிர்புறம் உள்ள மின்சார கம்பியில்  அமர்ந்து இருந்தது சிவப்புக் கலர் புறா.  (சரியாக வரவில்லை, அடுத்த முறை பார்த்தால் சரியாக எடுத்து போடுகிறேன்)

சிவப்புக் கலர் குருவி அலகு நீட்டமாக இருக்கிறது. இதுவும் அவ்வளவு தெளிவு இல்லை. அவசரம் பறந்து விட போகிறதோ! என்று வேகமாய் எடுத்தேன்.

வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
---------------------------------------------------------------------------------------------