வியாழன், 23 மார்ச், 2017

போகும் இடமெல்லாம்!


என்றைக்கும் இல்லாத வித்தியாசமான பறவையின் ஒலி கேட்டது. ஜன்னல் வழியே காடு மாதிரி முடக்கத்தான் கொடிகள் படர்ந்து கிடக்கும் பக்கத்து காலி மனையைப் பார்த்தேன். செம்போத்துப் பறவை, ஒடித்துப் போட்டு இருந்த ஒரு மரக்கிளையின் மீது அமர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு இருந்தது.

Image may contain: plant and sky





Image may contain: plant and outdoor




அப்புறம் என்ன! அதைக் கவனிக்கத் தொடங்கிவிட்டேன், என் காமிரா வழியாக அது போகும் இடம் எல்லாம் நானும் போனேன். இரட்டைவால் குருவி என்று சொல்லப்படும் கருங்குருவியும் அதன் பின்னேயே போய்க்கொண்டு இருந்தது.

இரட்டைவால் குருவி


        செம்போத்துப் பறவை  போகும் இடமெல்லாம் போய்  கொண்டே இருந்த கருங்குருவி.

                       காகம் குரல் கொடுக்கிறது ஏன் வந்தாய் என்று கேட்டு

                                                                         பெண் குயில்

பெண்குயில் , ஆண் குயில்,  (கீழ்க் கிளையில் இருக்கிறது ஆண் குயில்) இரண்டும்  செம்போத்து போவதை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

தவிட்டுக் குருவிகளும், அணில்களும் பெண், ஆண் குயில்களும், காகமும் சிறிது நேரம் பல்வேறு விதமாய் ஒலி எழுப்பி அதைப் பின் தொடர்ந்தன.
செம்போத்துப் பறவை யாரையும் சட்டை செய்யாமல் முடக்கத்தான் புதருக்குள் நுழைந்து தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து விட்டது.
அதன் உணவு என்ன என்ன தேடுகிறது என்று விக்கிப்பீடியா போய்ப் பார்த்தேன்:-
செம்போத்து, செம்பகம் அல்லது செங்காகம் என்று அழைக்கப்படுகிறது என்று அதில் போட்டிருந்தது.
// செம்பகம் பொதுவாகப் பூச்சிகள், புழுக்கள் மற்றும் சிறு பாம்புகள் போன்ற சிறு முண்ணாணிகள் என்பவற்றை உட்கொள்வதாகும்.[11] மேலும் அது முட்டைகள், பறவைகள் அமைக்கும் கூடுகள், பழங்கள், விதைகள் போன்றவற்றையும் உட்கொள்ளக் கூடியன. தமிழ் நாட்டில் அவை பொதுவாக நத்தையுண்ணிகளாகவே காணப்படுகின்றன. அத்துடன் அவை நச்சுப் பழங்களையும் உட்கொண்டு உயிர் வாழ்கின்றன.[12][13] அவை நன்கு பழுத்த தாளிப் பனையின் பழங்களை உண்பதால் தாளிப் பனைப் பயிர்ச் செய்கைக்குப் பெரிதும் கேடு செய்கின்றன.[14] மிகுந்து இருக்கும் கள்ளிப் புதர்களிலும், அடர்தென்னைத் தோப்பின் நிழல்களிலும் தத்திப் போகும் பறவை. இரண்டிரட்டாய் சற்றே தூரத்தில் தரையில் நடந்து புழுபூச்சிகளை தேடும் இணைப் பறவைகள் நம் காலடி அதிர்விலோ, பேச்சின் ஒலியிலோ எழுப்பிப் பறக்கும்போது வெகுதூரம் பறப்பதில்லை. தரையிலிருந்து அருகில் தாழ உள்ள மரக்கிளைகளுக்கோ அல்லது கிளைவிட்டு கிளைதாவியோ சிறு தூரங்களையே பறந்து கடக்கின்றன. மழை பெய்ந்து ஓய்ந்த மதிய நேரங்களில் குகுக் குகுக் எனக் கத்தி அழைக்கும் ஒலி எவராலும் எளிதில் இனம் காண முடியும்.//
நன்றி விக்கிப்பீடியா.
தத்திப் போகும் பறவையாம்



 'குகுக் குகுக்' என்று வித்தியாசமான ஒலியை எழுப்புது

புதருக்குள் சிறிது நேரம் உள்ளே போய்விட்டுச் சிறிது நேரம் கழித்து வந்தது



நச்சுப் பூண்டுகளும் அதற்கு உணவாம்
குப்பைமேனிச் செடியும், முடக்கத்தானும்  அதற்கு தேவைப்படுகிறது போலும்!

.
அழகான செம்பகப் பறவை எத்தனை வேலைகள் இருக்கும்போது பதிவிட அழைத்து வந்து விட்டது.


.சின்ன  சின்ன எருக்கம் செடிகளும், வேப்பமரங்களும் , குட்டையான நிலவேம்பு மாதிரி ஒரு மரமும், கீழே நிறைய காட்டுக் கொடிகளும், முடக்கத்தான் கொடிகளும் படர்ந்து சின்ன கானகம் போல் காட்சி தரும் அந்த காலி மனை நிறைய சந்தோஷங்களை அள்ளித் தந்தது. மழை பெய்தால் பச்சைப்பசேல் என்று கண்ணுக்குக் குளுமையாக க்காட்சி அளிக்கும். பறவைகளுக்குச் சரணாலயம் - எனக்கு  மகிழ்ச்சியைத் தரும் இடம். அணில்களின் விளையாட்டு, தவிட்டுக்குருவி, மைனாக்களின் குதுகல சண்டை, கிளிகளின் கீச்சிடும் ஓலி, குயில்களின் கீதம்  என்று காலை முதல் மாலை வரை ஒலிகள் கேட்டுக் கொண்டே இருக்கும். இவற்றைப் பிரிந்து போவது கஷ்டமாய் இருக்கிறது. 


வாழ்க வளமுடன்!
---------------------------

செவ்வாய், 21 மார்ச், 2017

தேடி வந்த குருவி !

நாங்கள்   புதிதாக  போகப் போகிற வீட்டு பால்கனியிலிருந்து  எடுத்த காணொளி.



எங்கள் குடியிருப்பில் அடைக்கலக் குருவி கூடு.



செல் கோபுரங்களால் குறைந்து வருவதாய் சொல்லப்படும் ஊர்க் குருவி .
தன் குஞ்சுகளுக்கு உணவு அளிக்க வந்த குருவி
புதிதாக வந்து இருக்கும் என்னைப் பார்த்து பயந்து குரல் கொடுத்த குருவி. அதனுடன் இனி தினம் பேசி அதன் பயத்தை போக்க வேண்டும்.

நீ எனக்கு ஆனந்தம் தரப்போகிறாய் !  நாம் நட்பாய் இருப்போம்.



Image may contain: bird and plant

கீழ் உள்ள படங்கள்  அயல் நாட்டில் மகன் வீட்டில் எடுத்தது.

Image may contain: bird

சின்னஞ் சிறிய குருவி -அது
'ஜிவ் ' வென்று விண்ணிடை யூசலிட்டேகும்.
மகாகவி பாரதியார்.

Image may contain: bird, plant, flower, outdoor and nature

Image may contain: bird, plant and outdoor

சிட்டுக்குருவியைத் தேடி தேடி  மார்ச் 20 , 2014

பதிவுக்கு மகன் ஊருக்கு சென்ற போது எடுத்த படங்கள். அந்த பதிவை படிக்காதவர்கள் படிக்கலாம்.

இன்று உலகச் சிட்டுக்குருவிகள் தினம்.
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி எங்கே போனாய் ? நீ வாழ உனக்கு கூடு கட்ட வசதியாக வீடுகள் இல்லை. உன் பசியாற தன் குடும்பத்திற்கு சமைக்க வைத்து இருந்த அரிசியை இறைத்து நீ உண்பதை கண்டு களிக்க முண்டாசு கவிஞன் இல்லை.
பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கு அடி பணிந்து தன் அன்னையை கொன்றதால் அடைக்கலக்குருவி என்று அழைக்கப்படும் நீ திருவனந்தபுரத்தில் இல்லை என்று என் தாத்தா சொல்வார்கள்.
உனக்கு ஏன் அடைக்கலக் குருவி என்று பெயர் வந்தது  என்றால் நீ அடைக்கலமாய் மனிதர் வாழும் வீடுகளில் கூடு கட்டி வசிப்பதால் அந்த பெயர் உனக்கு. ஊர்க்குருவி என்ற பெயரும் உண்டு உனக்கு.


உலகச் சிட்டுக்குருவிகள் தினம்  மார்ச் 20, 2012 படிக்கவில்லையென்றால் படிக்கலாம் .

 இந்த என்  பழைய பதிவில் சிறு பகுதியை எடுத்து போட்ட முகநூல் பதிவு  மேலே உள்ளது.  .
Image may contain: 1 person

மதியம் ஒரு தோழி  அனுப்பிய புது செய்தி. தோழிக்கு நன்றி. 
இயற்கை ஆர்வலர் ஏ. சாதனா ராஜ்குமார் அவர்களுக்கு  வாழ்த்துக்கள்.
                      


இனி போகப் போகிற வீட்டில்  இறைவன் அருளால்   நலமாக  இருக்க வேண்டும் . வாழ்த்துங்கள் நட்புகளே!  

பதிவுகளை படித்து கருத்துக்கள் பதிவு செய்ய கொஞ்சநாட்கள் ஆகலாம். விரைவில் வருவேன்.
                                                       வாழ்க வளமுடன்.
                                                     ------------------------------------

ஞாயிறு, 5 மார்ச், 2017

நார்த்தாமலை பகுதி- 4 (மாலை நேரக் காட்சிகள்)

மாலையில் வீடு திரும்பும் ஆடுகள் ( மலை மேல் இருந்து எடுத்த படம்)

மீன் கிடைக்குமா?  காத்து இருக்கும் கொக்கு
ஓய்வு எடுத்து மீனைப் பிடிக்க ஒரே பாய்ச்சல் நீர்  நோக்கி ( மகள் எடுத்த படம்)
மகள் எடுத்த படம்
எனது மகன் தனது   காமிராவில் எடுத்த படம்

மாலை நேரம் ஆனந்த  குளியல்   (மகன் எடுத்த படம்)

மலை மேல் உள்ள  சுனை நீர்- கிராமத்து குழந்தைகளுக்கு நீச்சல் குளம்.(மகன் எடுத்த படம்)
சகோதரிகளின் செல்லச் சண்டை.  ( மகன் எடுத்த படம்) அவர்களும் குளிக்க வந்து இருக்கிறார்கள்.

கரையோரமாக நாங்கள் நடந்து வந்த பாதை 

எங்களை மகள் எடுத்த படம். மலையிலிருந்து கீழ் இறங்கும் போது

மாலைச்சூரிய ஒளி மண்டபத்தைப் பொன் வண்ணம் ஆக்கியது

சுருக்குப்பையிலிருந்து வெற்றிலையைப் போட்டுக் கொண்டுகாலை நீட்டி  மாலைப் பொழுதை  ரசிக்கும் அம்மா
பூச்சி கிடைக்குமா? என்று பார்க்கும் பூச்சி பிடிப்பான் பறவை.


மாலை நேரம் தங்கள் வீடு வந்து ஓய்வு எடுக்கும் ஆடுகள்.

நார்த்தா மலைப்பயணம் இனிதாக  நிறைவு பெற்றது.  தொடர்ந்து படித்து கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.

============================


சனி, 4 மார்ச், 2017

நார்த்தாமலை-பகுதி-3 (குடைவரைக்கோயில்)

குடைவரைக்கோவில்


 நார்த்தாமலை -   பகுதி-  2    படிக்காதவர்கள் விருப்பப்பட்டால் படிக்கலாம்.

இந்த குடைவரைக் கோவில் கி.பி  ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்தது  என்றும்,  பின்பு இந்தப் பெரிய குகைக் கோவில் 'பதினெண்பூமி விண்ணகரம்'  என்ற விஷ்ணு கோவிலாக ஆனது என்றும் சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளார்கள்.


கருவறையில் சிவலிங்கம் போல் இருக்கிறது ஆவுடையார் மட்டும் தெரிகிறது நடுவில் சந்தன லிங்கம் மாதிரி வைக்கப்பட்டு இருக்கிறது, விபூதி ஒரு தட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அர்த்தமண்டபத்தில்  இருமருங்கிலும் ஆளுயர 12 விஷ்ணு சிலைகள்  அழகாய் இருக்கிறது.

சித்தன்னவாசலில்  இருக்கும் வழிகாட்டி (curator)  பாலசுப்பிரமணியம் அவர்களிடம்  இந்த நார்த்தாமலை பற்றிக் கேட்டபோது, அங்கு தன் தம்பிதான் பார்த்துக் கொள்வதாகவும் அவர் பெயர் பரமசிவம் என்றும் கூறினார்
நாங்கள் அங்கு போனபோது அவர்  இல்லை; இருந்து இருந்தால்  நிறைய விவரங்கள் சொல்லி இருப்பார்,  குகைக் கதவைத் திறந்து காட்டி இருப்பார்.
மூடிய கதவு வழியே பார்க்க முடிந்தது ஒரு ஆறுதல்.


சித்தன்னவாசல் போல் மலை மேல் ஏறப் படிகட்டுக்கள் அமைத்து டிக்கட் போட்டு வழிகாட்டியும் அங்கேயே இருந்தால் மக்கள் கூட்டம் வருவார்கள்.
ஆள் அரவம் இல்லாமல் இருப்பதால் வழிகாட்டியும் மாலை சீக்கிரம் இறங்கி விடுவார் போலும்!

விஷ்ணு சிலைகளின்  கீழே பிள்ளையார் மற்றும் யானைத் தலை இருக்கிறது , இன்னும் இரண்டு மூன்று சிலைகள்  உடைந்து இருக்கிறது.  
தாமரைப் பீடம் அழகாய் இருக்கிறது 
அய்யனார்


மூன்று பெண் தெய்வங்களின்  சிலை இருக்கிறது


கல்வெட்டுகள் காணப்படுகிறது, இந்த சிலைகளுக்கு அடியில்.

படிக்கட்டு அருகே ஒருபக்கம் யாளி, ஒருபக்கம் யானை.


யானையும் , யாளியும்

சிங்கமும்,  யாளியும்


யாளிகள் அணிவகுப்பு


பழியிலி ஈஸ்வர கோவில் , துவாரபாலகர்கள் இரண்டும் சமமாய் இல்லாமல் வித்தியாசமாய் இருக்கிறது.

                       
பூட்டிய கதவு வழியாக எடுத்த படம். இவருக்கும் விஜயாலய சோழீஸ்வருக்கு அலங்காரம் செய்து இருந்தது போல் அலங்காரம் செய்து இருந்தார்கள்.


இந்த குடைவரைச் சிவன், கி,பி ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது என்று சொல்லப்படுகிறது.


இந்தப் பீடத்தில் பார்க்க வந்தவர்கள் (இந்தக்கால மன்னர்கள் ! )தங்கள் பெயரை எழுதி வைத்து இருக்கிறார்கள்.

சிவன் இருக்கும் மண்டப மேடை வளைவில்  சிலைகளுக்கு அடியில் உள்ள பாகத்தில் கல்வெட்டு காணப்படுகிறது., சிலைகள் முற்றுப் பெறவில்லை,

   நந்தி மண்டபத்திற்குப் பின்புறம் இருப்பதுதான் பழியிலி ஈஸ்வரன் கோவில்

 பேரன் நன்கு விளையாடினான் நந்தியை சுற்றி. அவனுக்கு கீழே  இறங்க மனம் வரவில்லை. இருட்டி விட்டால் இறங்குவதற்குக் கஷ்டம் என்று  அழைத்துக் கொண்டு இறங்கினோம்.

இறங்கும் போது கண்ட காட்சிகள் அடுத்த பதிவில்.

                                                            வாழ்க வளமுடன்!
                                                   ==============================