எங்கள் பிளாக் ஸ்ரீராம் கதை கேட்ட போது என்ன எழுதுவது என்று மிகவும் யோசித்தேன். ஒரே ஒரு கதைதான் எழுதி இருந்தேன்., அதுவும் குட்டிக் கதை.
அதுவும் எங்கள் ப்ளாக்கில் இடம்பெற்று இருக்கிறது.
அவர் தளத்தில் எனக்கு முன்பு கதை எழுதியவர்கள் கதை எல்லாம் மிக அருமையாக இருந்தது. என்ன கதையை எழுதுவது என்ன எழுதுவது என்று யோசித்தபோது என் அன்பு மதினியின் நினைவு வந்தது அவர்களைப் பற்றிய கதையை எழுதி அனுப்பினேன், முடிவை மாற்றி.
ஸ்ரீராம் அப்பா கேட்டுக் கொண்டபடி சீதை ராமனை மன்னித்தாள் என்று முடித்து மகிழ்ச்சியாக வலம் வந்தாள் என் அன்பு மதினி.
'எங்கள் ப்ளாக்' தளத்தில் கடந்த முப்பது நாட்களில் அதிகம் படித்ததாக இடம்பெற்ற பதிவுகளில் என் கதையும் இடம் பெற்றது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
தமிழ்மண வாக்கும் அதிகம் கிடைத்தது மகிழ்ச்சி.
வாக்கு எங்கள் ப்ளாக்கில் எழுதியதால் கிடைத்தது.
என் கதை 24 வது கதையாக இடம்பெற்றது.
என் எழுத்தைப் படித்து ஆதரவு அளித்து வரும் அனைத்து வலை நட்புகளுக்கும் நன்றி.
கேட்டு வாங்கிப் போட்ட ஸ்ரீராமுக்கும் நன்றி.
எங்கள் ப்ளாக் தளத்தில் படித்து இருப்பீர்கள். இங்கு பகிர்ந்த கதையில் சின்ன மாற்றம் கதை முடிவில் - படித்துப் பாருங்கள்.
ஸ்ரீராம்! உங்கள் தளத்தில் கதை வந்ததால் நீங்கள் கருத்து சொல்லவில்லை.
படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.
பத்மா, பழனி இருவரும் மிக மகிழ்ச்சியாக தங்கள் மணநாளைக் கொண்டாடினர். பத்மாவின் மாமியார் ஆசிர்வாதம் செய்யும் போது சீக்கிரமாய்ப் பேரனைப் பெற்றுக் கொடு பத்மா என்று ஆசீர்வாதம் செய்தார்கள்.
பழனிக்கும் பத்மாவிற்கும் அந்த ஆசை இருந்தது . திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
ஒரு பெண் குழந்தை பிறந்து வளரும் போதே, எதிர்பார்ப்புகளும் சேர்ந்தே வளர்கின்றன. குழந்தைப் பருவம் மாறி, கன்னியாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அப்புறம் அவளை நல்ல வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. தன் குலம் தழைக்க அவர்களின் அன்பின் அடையாளமாய் ஒரு புது மலரை எதிர்ப்பார்ப்பது என்று தொடரும் எதிர்பா ர்ப்புகள் மனித இயல்பு.
இப்படித்தான் பத்மாவிடம் எல்லோரும் எதிர்பார்த்தனர்.
பத்மாவின் பெற்றோர் அவள் குழந்தையாக இருக்கும் போதே இறந்து விட்டார்கள். பத்மா தாத்தா, பாட்டி, சித்தப்பா, அத்தையின் அன்பான வளர்ப்பில் வளர்ந்தாள். அத்தை வீட்டு மாமாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும். விடுமுறைக்கு அத்தை வீடு போவாள், மாமா அந்த ஊரில் உள்ள சிறப்பான இடங்களை அவளுக்குச் சுற்றிக் காட்டுவார். விடுமுறை நாட்களை அத்தை குழந்தைகளுடன் கழித்து வந்த அனுபவங்களைத் தாத்தா, பாட்டி, சித்தப்பாவிடம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து, அடுத்த விடுமுறையை எதிர்பார்த்துக் காத்து இருப்பாள் , அத்தை குழந்தைகளும் பத்மா மதினி வரும் நாளை எதிர்பார்த்து இருப்பர்.
தாத்தாவும், பாட்டியும் இறைவனிடம் சென்றுவிட்டார்கள், பத்மா பள்ளிப் படிப்பை முடித்த சமயம். அதன் பின் அத்தை வீட்டிலேயே இருந்து தட்டச்சு கற்றுக் கொண்டு அத்தைக்கு உதவியாக இருந்தாள்.
அத்தை வீட்டு மாமாவும் பத்மாவைத் தன் மூத்த மகளாகப் பாசத்தைக் காட்டி வளர்த்தார்.
அத்தையும், மாமாவும் நல்ல வரன் பார்த்து திருமணம் முடித்து வைத்தார்கள். பத்மாவின் சித்தப்பாவிற்கும், பத்மாவிற்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது. சித்தி கருவுற்றாள் பத்மா மாமியாரின் எதிர்பார்ப்பும் வளர்ந்தது . இரண்டு பேருக்கும் ஒண்ணா திருமணம் ஆனது -உன் சித்திக்குக் குழந்தை பிறக்கப் போகிறது, உனக்கு ஒன்றும் காணோம் என்று பேசினார்கள். , வீட்டுக்கு வரும் உறவினர்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
பத்மா தன் அத்தையிடம் சொல்லி வருந்தினாள் . அத்தை, "உனக்கு குழந்தை பிறக்கும்... மகிழ்ச்சியாக இரு, மனதில் கவலையுடன் இருக்கக் கூடாது, இறைவனுக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று தெரியும் அப்போது கொடுப்பார்" என்று ஆறுதல் படுத்தினார்.
அவள் அத்தைக்கு அடுத்து அடுத்து குழந்தைகளைக் கொடுத்த ஆண்டவன் அவளுக்கு ஒன்றைத் தர மறுப்பது ஏன் என்றே தெரியவில்லை பத்மாவிற்கு. வேண்டும் வேண்டும் என்பார்க்குக் கொடுக்காமல், வேண்டாம் என்பவர்களுக்குக் கொடுப்பது இறைவனின் விளையாட்டு தானே!
ஆண்டுகள் சென்றது, யார் என்ன பிரார்த்தனை செய்யச் சொன்னாலும், செய்தாள். பக்கத்துவீட்டு அனுபவம் மிக்க பெண்மணி வாழைப்பழத்தில் பிள்ளைப் பூச்சியைப் பிடித்து உள்ளே விட்டு அது வெளி வந்தவுடன் அந்த பழத்தை உண்ணச் சொன்னார், முகம் சுளிக்காமல் அதையும் செய்தாள் பத்மா. சஷ்டி விரதம் இருந்தாள் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் " -இது பழமொழி ." சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பதை அப்படி முன்னோர் சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
வேண்டுதல்களும், பிரார்த்தனைகளும், பலித்துக் கருவுற்றாள் பத்மா உற்றார், உறவினர் அக்கம் பக்கம் எல்லோரும் மகிழ்ந்தனர் .
பதமாவிற்கும், பழனிக்கும் ஒரு சினிமாப் பாடல் பிடித்துப் போனது. அது;-
'அழகு ரதம் பொறக்கும், அது அசைந்து அசைந்து நடக்கும் '
கற்பனையில், திளைத்தனர், ஆனந்தக் களிப்பில் மிதந்தனர்.
தகுந்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தது, தனக்குச் சாந்தி அளிக்கப் பெண் பிறந்தாள் என்று 'சாந்தி' என்று பெயர் சூட்டினாள். குடும்பவழக்கப்படி மாமியார் பேர் வைத்தாள். அவள் பெரியவர்கள் பேர் சொல்லி அழைக்க முடியாதே(மரியாதைக் குறைவு ஆகிவிடும்) அதனால் சாந்தி என்று அழைத்து மகிழ்ந்தாள்.
மலடி என்ற பேரை கொடுக்காமல் குழந்தையைக் கொடுத்துப் பின் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சலையும் கொடுத்து அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தன் பக்கம் எடுத்துக் கொண்டார் இறைவன். பத்மா, துடித்தாள்! துவண்டாள்! 'குழிப் பிள்ளை மடியில்' என்று வந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள்.
அத்தை குழந்தைகளைத் தன் குழந்தைகளாக நினைந்து ஆறுதல் அடைந்தாள். இரண்டு மூன்று வருடங்களில் மீண்டும் கருவுற்றாள். அவள் கணவர் பிரவசத்திற்குப் பத்மாவை அத்தை வீட்டுக்கு அனுப்பும் போது, "பத்மா! இந்த முறை மகன் பிறப்பான்.நான் பட்டுப்புடவையுடன் வருகிறேன்" என்று வழி அனுப்பினான்.
அத்தை , மாமா, அவர்கள் குழந்தையிடம் தன் அத்தானின் எதிர்பார்ப்பைச்
சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.
பிரசவ அறைக்குப் போகும்முன் "குழந்தை பிறந்தவுடன் அத்தானுக்குப் போன் செய்து விடுங்கள்" என்று அத்தை மாமாவிடம் சொல்லி மலர்ந்த முகத்துடன் சென்றாள்.
குழந்தை பிறந்தான் பழனியின் எதிர்பார்ப்புப்படி, ஆனந்த வெள்ளத்தில் அத்தை, மாமா, பத்மா அகம் மகிழ்ந்தனர். பழனிக்குச் செய்தியைச் சொல்லி விட்டு அனைவருக்கும் தனக்குப் பேரன் பிறந்து இருக்கிறான் என்று இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். பத்மாவை தன் மூத்த குழந்தையாக நினைத்த மாமா.
பழனி பத்மாவையும் குழந்தையையும் பார்க்கத் துடித்துக் கொண்டு இருந்ததில் பத்மாவிற்கு கொடுத்த வாக்கை மறந்தான் , பட்டுப்புடவை வாங்கவில்லை. வெறுங்கையுடன் வந்தான்.
ஆனால் பத்மா வருத்தப் படவில்லை, கோபப்படவில்லை, அவளுக்கு மகன் பிறந்த பூரிப்பில் முகம் மலர்ந்து இருந்தது. தனக்குக் குழந்தை பிறந்த மகிழ்ச்சியைவிட பட்டுப்புடவை ஒன்றும் பெரிதல்ல என்ற மன நிலையில் இருந்தாள். " சீதை ராமனை மன்னித்து விட்டாள்" .
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்ரீராம் கேட்ட கதைக்கு மகிழ்ச்சியான முடிவாய் முடித்து கொடுத்து விட்டேன்.
இந்த கதையின் உண்மை கதாநாயகி பிரசவ அறையில் ஜன்னி கண்டு இறந்து விட்டாள்.
அந்த விஷயம் கேட்டதும் தான் பத்மாவின் கணவர் பட்டுபுடவை வாங்காமல் ஓடி வந்தார்.
//அப்பாவி அதிரா:-
ஹா ஹா ஹா ரொம்ப சீரியஸ் ஆக்கிக்கொண்டு போய் முடிவில் ஒரு சேலையை வத்து டுவிஸ்ட் வைத்து ... ராமனை மன்னிக்கப் பண்ணிட்டீங்களே....
எனக்கு படிக்கப் படிக்க நெஞ்சு பக்குப் பக்கென்றது... பத்மாவுக்கு ஏதும் ஆகியிருக்குமோ என... நல்லவேளை நல்ல முடிவு...
இருப்பினும் கோமதி அக்கா, பேச்சுப் பேச்சா இருக்கோணும்:) எனக்கு வாக்குக் கொடுத்திட்டால் அதை மீறுவது பிடிக்காது:)... அதனால பட்டுச்சேலையை வாங்கி வந்துவிட்டுக் குழந்தையைத் தூக்கச் சொல்லுங்கோ:).. அல்லது சேலை வாங்காததுக்கு நியாயமான காரணம் சொல்லும்படி கேட்கச் சொல்லிப் பத்மாவிடம் சொல்லி விடுங்கோ..:).//
என்று பின்னூட்டம் போட்ட அதிராவிற்கு நான் அளித்த பின்னூட்டம் கீழே :-
வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
கதையைப் படித்து அதன் முடிவையும் கண்டு பிடித்துவிட்டீர்கள் . அதி புத்திசாலி. குழந்தை மனம் கொண்ட அதிராவிற்குள் நடந்து இருப்பதை உணரும் தன்மையும் இருக்கிறது.
ஶ்ரீராம் கேட்ட கதைக்கு இந்த முடிவு. ஶ்ரீராம் தளத்தில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் பத்மா.
கருத்துக்கு நன்றி அதிரா.
என் தளத்தில் மீதியைப் போடுகிறேன் என்றேன். அந்த மீதி சோகக் கதை:-
அதிரா பத்மாவிற்கு ஏதும் ஆகி இருக்குமோ என்று பயந்துவிட்டேன் நல்லவேளை நல்ல முடிவு என்றார். அப்படி நல்ல முடிவாய் இருந்து இருக்கலாம்.அப்படி இல்லாமல் போய் விட்டது.
தன் குழந்தையைப் பார்த்து முகம் மலர்ந்து சிரித்த சிரிப்புடன் அவள் கதையை முடித்து விட்டார் இறைவன் குழந்தையைக் கொஞ்சக்கூட விடவில்லை.
எங்களை எல்லாம் சோகக் கடலில் மூழ்க வைத்து விட்டார் அன்பு மதினி பத்மா .
பத்து நாட்களில் பத்மா மதினி குழந்தையும் தன் தாயைத் தேடி போய்விட்டது. அங்கு தாயும் மகனும் மகிழ்ந்து இருப்பார்களோ!
வாழ்க வளமுடன்!