வெள்ளி, 4 நவம்பர், 2016

கதிர்காமக் கந்தன் கோயில்


                                                     கதிர்காம  முகப்பு வாசல்.

நாங்கள் போகும் போது இருட்ட ஆரம்பித்து விட்டது.



வள்ளி தெய்வானையோடு  மயில் மீது உள்ள கந்தன் படம் உள்ள  திரைக்கு பின்னால் தான்  கந்தன் இருக்கிறார்.

                             நிறைய பழங்கள் உள்ள அர்ச்சனை தட்டு

                                    மதிலில் யானை அணி வகுப்பு
                                                 கந்தனை சுற்றி வரும் வாசல்.


நாங்கள் 09.03 2011 முதல் 15.03.2011 வரை கயிலை புகழ் ’மனோகர் டிராவல்ஸ்’ மூலம் இலங்கைக்கு ஆன்மிகப்பயணம் மேற்கொண்டோம். பாடல் பெற்ற ஸ்தலங்களாகிய திருக்கேதீச்சுரம், திருகோணமலை ஆகிய கோயில்களுக்கும், அருணகிரிநாதரால் பாடப்பட்ட கதிர்காமத்திற்கும் சென்று வந்தோம்.

முருக பக்தர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கதிர்காமம் சென்றுவர விரும்புவார்கள். சிறு வயதில் முருகன் பக்திப் பாடல்களில்

’ கதிர்காம வேலவனே, வேலையா!,
கதிர்காம வேலவனே, கந்தையா!
வேலனுக்கு அரோகரா!
கந்தனுக்கு அரோகரா! ’

என்று பாடுவதுண்டு. அப்படிப் புகழ்பெற்ற கதிர்காமத்தை என் கணவரும் நானும் தரிசித்து வந்தோம். மட்டில்லாத மகிழ்ச்சி அடைந்தோம். அங்கு திரையைத்தான் தரிசிக்கமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். நம் மனதில் வீற்றிருக்கும் இறைவன் பிறர் கண்ணுக்கு எப்படி தெரியவில்லையோ அது போல் திரை என்பது மறைத்திருந்தாலும் நம் அகக் கண்ணால் முருகனை அங்குக் காணலாம். அந்தத்திரையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயிலில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காணலாம்.

//செந்தில் கடல் அலை  ஓசை கேட்கும்  கதிர்காமத்தில்
கதிர்காம மணியோசை  கேட்கும்  செந்தூரில்
திரைமறைவில் இருந்தாலும், திருச்செந்தூரில் இருந்தாலும்
கதிர்வேலன், வடிவேலன்
செந்தூரில்  தென்றல் அடித்தால், கதிர்காமத்தில் கொடிஅசையும்//

சூலமங்கலம் சகோதரிகள்  பாடும் பாடல் வானொலியில் அடிக்கடி வைப்பார்கள்.

இலங்கைத் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது கதிர்காமம். கொழும்புவிலிருந்து 284 கி.மீ தூரத்தில் இவ்வூர்
இருக்கிறது. ஹம்பந்தோட்டா,பதுளை ஆகிய ஊர்களில் இருந்து இவ்வூருக்குச் செல்லலாம். இத்தலத்தைச் சிங்களத்தில் ’கதரகம’ என்று கூறுகிறார்கள். இது மாணிக்கக் கங்கை என்னும் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடிப் பின் கோயிலுக்கு வருகிறார்கள்.

இக்கோயில் கால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதாம். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஓர் அரசனால் இது கட்டப்பட்டதாம்.. பூசை, பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு இக்கோயிலுக்கென 550 பணியாளர்களை நியமித்தாராம். ஆரத்திமாதர்கள் 18 பேரும்
இத்னுள் அடங்குவர். சனிக்கிழமைகளில் ஆரத்தி மாதர்கள் போதிமரத்துக்கு வாச நன்னீரைக் கொண்டுவருவார்களாம்.

பத்து அடி உயரமான மதில்களில் யானைகள், மயில்கள் ஆகியவற்றின் உருவங்கள் வரிசையாக இருக்கின்றன. கோயிலைச் சுற்றி வர ’வட்டாரம்’ எனப்படும் சிறு பிரகாரம் உள்ளது. பக்தர்கள் இதனுள் செல்ல அனுமதிக்கப் படுவது இல்லை. ஆரத்திமாதர் மட்டுமே செல்லலாம்.

                                   காய்ந்த இலைப் பந்தல் தெரிகிறதா?

 இக்கோயிலின் வாசலில் பரண் போல் ஒரு பந்தல் உள்ளது. அதன்மேல் காய்ந்த இலைகள் இருந்தன. ஆண்டுக்கொரு தடவை யானை பசுமையான இலை, கொம்புகளைக் கொடுக்க ,அதனை வாங்கிப் பந்தல் போடுவார்களாம். இதற்குப் ’பசுமைப்பந்தல்’ என்று பெயராம்.

கோயிலின் மேற்கூரை செப்புத்தகடுகளால் ஆனது. வாயிற்கதவுகள் பித்தளையால் செய்யப்பட்டு வேலைப்பாடுகளுடன் அரண்மனைக் கதவு போல் உள்ளன. அதனுள் நுழைய சந்திரவட்டக்கற்களால் ஆகிய இரண்டு படிகள் உள்ளன. உள்ளே மரவேலைப்பாடு கொண்ட அழகிய தூண்கள் உள்ளன. வெண்கல மணிகள் பல இரண்டு பக்கமும் உள்ளன. மேற்பகுதிகளில் திரைகள் உள்ளன. தாமரைப்பூவேலைப்பாட்டோடு அவை காணப்படுகின்றன. வெண்கலத்தால் ஆன பெரிய சேவல் விளக்குகள் இரண்டு புறமும் நிற்கின்றன. முருகனைப் பற்றிய புராணக் காட்சிகள் படங்களாகச் சுற்றிலும் காணப்படுகின்றன. ஒரு மேடையின் மீது சந்நிதியுள்ளது. பூசைசெய்யும் குருமார்கள் ஏறுவதற்குச் சில படிகள் உள்ளன. மேலே உள்ளது லதாமண்டபம் எனப்படும். .ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படும் யானைத் தந்தங்கள் அங்குள்ளன .மேடையில் ஒரு பள்ளம் உள்ளது. அதில் பாதம் நனைத்த பின்னர் அவர்கள் பூசை செய்யத் திரைக்குள் போகிறார்கள். திரைக்குள் என்ன இருக்கிறது என்பது ரகசியமாகவே உள்ளது. விழாக்காலங்களில் யானைமீது முருகன்உலாவரும் போது கூட அலங்கரிக்கப்பட்டு, துணியால் மூடப்பட்டே இருப்பதால் முருகனின் உருவத்தை யாராலும் பார்க்க முடியாதாம். முருகனுக்கு நைவேத்தியம் துணியால் மூடப்பட்டுக் காவடிபோல் குருமார்களால் தோளில் கொண்டுவரப்படுகிறது. பக்தர்கள் இறைவனுக்குப் பலவிதமான பழங்கள், சிவப்பு செயற்கை மாலை, சிவப்புத்துணி இவற்றைத் தட்டில் வைத்துப் பட்டுத்துணியால் மூடிப் பயபக்தியுடன் கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து மீண்டும் அதனைப் பெற்றுச் செல்கிறார்கள். மூடிய திரைக்குள் பூசை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் மணிகள் ஒலிக்கப்படுகின்றன.

பூசை முடிந்ததும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக
வழங்கப்பட்டது. விபூதி, தீர்த்தம் வழங்கப்பட்டன. தேங்காயில் சூடம்  ஏற்றி அவருக்குக் காட்டிவிட்டு தங்கள் தலையையும் சுற்றித் தேங்காயை உடைக்கிறார்கள். அங்கிருக்கும் ஒரு பெரிய அரச்மரம், ஒரு சிறிய அரச மரம் (போதி மரங்கள்) ஆகியவற்றையும் வணங்குகிறார்கள். இங்குள்ள போதிமரம் சங்கமித்திரை கொண்டுவந்த கிளையிலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது. புத்தர் கோயிலும் அங்கு உள்ளது. பெளத்தர்களுக்குரிய 16 முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாம்.
                                                           தெய்வானை  சந்நிதி

கோயிலுக்கு அருகில் பைரவர் சந்நிதி, தேவானை சந்நிதி, ஆகியவை திரைகளுடன் உள்ளன. பைரவர் சந்நிதிக்கு எதிரில் சிறிய விஷ்ணு உருவம் உள்ள சந்நிதி உள்ளது. அது திறந்து உள்ளது. திரை இல்லை.

தண்டபாணிக்குச் சந்நிதி உள்ளது. இத்னைப் பழனிக்கோயில் என்கின்றனர். இங்கு திரைக்கு முதலில் பூசை நடை பெறுகிறது. திரையில் தண்டபாணிக் கடவுளின் ஓவியம் உள்ளது. பின்னர் திரையைத் திறந்த பின்னர் உள்ளே உள்ள பிள்ளையார்க்குரிய கற்சிலையும், முருகனுக்கு பஞ்சலோகத்தில் ஆன சிலையும் உள்ளன. அங்கு தண்டபாணிக்கு எதிரில் வேல் பீடம் உள்ளது. 1936-ல் மலையாள, தமிழ் மக்களால் கார்த்திகை தீபத்திற்கென திருவிளக்கு ஒன்று செய்து வைக்கப்பட்டுள்ளது.

குருக்கள் தன் வாயைத் துணியால் கட்டிக்கொண்டு முதுகில் ஒரு பட்டுத் துண்டைத் தொங்க விட்டுக்கொண்டு பூசை செய்கிறார். தூப தீபங்கள் காட்டுகிறார். பூசை நேரத்தில் சந்நிதியின் இரண்டு புறமும் இருக்கும் மணிவரிசைகளைப் பக்தர்கள் ஒலிக்கச் செய்கிறார்கள். வலது பக்கத்தில் ஒரு சிறிய சிவலிங்கமுள்ள சந்நிதி உள்ளது. அதற்கும் பூசை நடைபெறுகிறது. பூசை முடிந்ததும் சுண்டல் பிரசாதமாக வழ்ங்கப்பட்டது.


கதிர்காம முருகப்பெருமானுக்கு நேர் எதிரில் வள்ளி திருக்கோயில் அமைந்துள்ளது. அங்கு திரையில் தாமரைப்பூவைக் கையில் ஏந்தி ஒயிலான தோற்றத்தில் இருக்கிறாள் வள்ளி. அருகில் ஒரு அம்மன்கோயிலும் ஒரு மசூதியும் உள்ளன.

ஏப்ரல் மாதத்தில் புத்தரிசிப் பொங்கல் நிகழ்வு நடைபெறுமாம். மாணிக்கக் கங்கையிலிருந்து நீரைக் கொண்டு வந்து அடுப்புகளைக் கட்டிப் புதுப்பானைகளில் பொங்கலிடுவார்களாம். வள்ளியம்மை தேவாலயத்திலும் இது நடைபெறுமாம். ஆண்கள் தான் பொங்கலை இடுவார்களாம்.

விழாக்காலங்களில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்களாம். கரகாட்டம், மயிலாட்டம், தீப்பந்த ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கோலாட்டம், தீமிதி, தீச்சட்டி ஏந்தல், உருள்வலம் ஆகியனவும் நடைபெறுமாம்.

கதிர்காமத்திற்குச் சற்று வடக்கில் செல்லக்கதிர்காமம் என்னும் ஊர் உள்ளது. இதனை முன்னர் ’வள்ளித்தீவு ’என்று அழைத்தார்களாம். இந்த இடத்தில் தான் முற்காலத்தில் வள்ளி பிறந்து வளர்ந்தாள் என்று கூறுகின்றனர்.


 இங்கு மாணிக்கக் கங்கையாற்றின் கரையில் மாணிக்கவிநாயகர் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள காட்டில்தான் முருகனுக்கு உதவியாக விநாயகர் யானைவடிவில் வந்து வள்ளியைத் துரத்தியதாகவும் பின்னர் இங்கு தான் வள்ளி திருமணம் நடந்ததாகவும்  கூறுகிறார்கள்.

                                                                                                                                                                   இந்த காட்சிகள் எல்லாம் மனத்திரையில் விரிகிறது. இயற்கை அள்ளி தந்த வளங்கள் எல்லாம் நிறைந்த இடம். //குறிஞ்சியிலே பூமலர்ந்து குலுங்குதடி-தேன் இருக்குது தினை இருக்குது ,// என்ற பாடல் நினைவுக்கு வரும். வள்ளி பரண்மேலிருந்து ஆலோலம் பாடி கிளிகளை ஓட்டிய காட்சி கண்ணில் நிறைகிறது.



நீர் வளம் நிலவளம் எல்லாம் நிறைந்த இடம். அன்று மழை பெய்து சிவப்பு கலராய் வெள்ள பெருக்காய் தண்ணீர் ஓடி வந்துகொண்டு இருந்தது. திருக் கோயிலில் பஞ்சமுக விநாயகர் உற்சவர் சிலையும் உள்ளது. ஐந்து தலை நாக உருவம் சிமெண்டினால் செய்யப்பட்டுள்ளது.


 கார் வாங்க வேண்டிக்கொண்டு வேண்டுதல் நிறைவேறிய பின் காரின் நம்பர் பிளேட் ஒன்றை இங்குள்ள ஒரு மரத்தின் மீது அடித்து வைக்கின்றனர். இப்படி அடிக்கப்பட்டுள்ள பல நம்பர் பிளேட்டுக்களை அங்கு காணலாம். அருகில் ஒரு புத்தர் கோயிலும் உள்ளது.



இக்கோயிலுக்கருகில் வள்ளி விளையாடிய குகை ஒன்று உள்ளது. வள்ளியின் சிலை ஒன்று இதனுள் உள்ளது. ஒரு துவாரத்தின் வாயிலாக இதனைப் பார்க்கலாம். வள்ளி இங்கு தயிர் கடைந்ததாகக் கூறுகிறார்கள். ஒரு பாறையின் மீது வள்ளியின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன.



கதிர்காமத்திற்கு அருகில் 4 கி.மீ தூரத்தில் கதிரைமலை உள்ளது.படிகள் மேலேறிச் சென்றால் முருகனுக்கு சந்நிதி உள்ளதாம்.அங்கு வேலாயுதம் இருக்கிறதாம்.முருகனால் ஸ்தாபிக்கப்பட்டதாம்.இந்த இடத்திற்கு எங்களை அவர்கள் அழைத்துச்செல்லவில்லை இரவு நேரம் ஆனதால் அழைத்து
செல்லவில்லையோ என்னவோ தெரியவில்லை.

நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
//கதிரை மலைகாணாத கண் என்ன கண்ணே
கற்பூர ஒளி காணாக் கண் என்ன கண்ணே//
என்று பாடியுள்ளார்

அருணகிரிநாதர் கதிர்காம முருகனைத் தம் திருப்புகழில் 13 பாடல்களில் பாடியுள்ளார்.அவற்றுள் ஒன்று:

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் பெருமாள்காண்
அரவுபிறைவாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் பெருமாள்காண்
இருவினையிலாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி னோதப் பெருமாளே.

திருக்கோணமாமலை வைத்தியர் திரு.சி.ஆறுமுகம் பிள்ளைஅவர்கள் கதிர்காம முருகன் மீது,கதிரைமலைப் பதிகம்,கதிர்காமமாலை ஆகியநூலகளை இயற்றியுள்ளார்கள்.1904ல் இவை வெளிவந்துள்ளன.

கதிரைமலைப்பதிகத்தில் ஒரு பாடல்:

அற்புதஞ் செய்கின்ற ஆறுமுகவேலவனே யடியனேன்
மீதிலன்பாய் அமரர் தன் இடர்தனை யகற்றியது
போலவே யைய வென்னிடர்களெல்லாம்
பொற்புடன் கரிமீது வந்தே தொலைத்து நற்
புனிதனாக்கிட வேண்டியே போற்றினேன்
பாதமலர் புண்ணியாசமயம் புறங்காட்டி யகலாமலே
சிற்சபையில் மாதர்கள் சிறந்த வாலாத்திகள்
சீராயெடுத்து நிற்கச் சிறியனேன் தீவினைகள்
சீக்கிர மகற்றிடச் சித்ர வடிவேலேந்தியே
கற்பகன் பூசைகள் கருத்தாய் நடத்திடக்
கதிரமலைதன்னில் வாழுங் கந்தனே வந்திதோ
காட்சியது தந்தெனைக் கடைத்தேற்றியருள் புரிவையே

கதிர்காமம் சென்று வந்தது எங்களுக்கு மிகுந்த மனமகிழ்வைத்
தந்தது.  கதிர்காம கந்தன் அனைவருக்கும் அருள்  வழங்கட்டும்.

                                                                  -------------------
                                                               வாழ்க வளமுடன்.

23 கருத்துகள்:

  1. கதிர் காம முருகன் கோயில் தகவல்கள் அனைத்தும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தேவகோட்டைஜி , வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இலங்கை வந்தீர்கள்
    எமக்குத் தெரிந்திருந்தால்
    நேரில் சந்திக்க வந்திருப்போம்

    அருமையான பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம், ஜீவலிங்கம் , வாழ்க வளமுடன்.

    ஐந்து நாட்கள் இருந்தோம். 2011ல் வந்து இருந்தோம்.
    உங்கள் ஊர் அழகான ஊர். ஐந்து நாட்கள் போதாது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வழக்கம்போல அழகழகான படங்களுடன் அற்புதமான பதிவு.

    தங்கள் பதிவின் மூலம் கதிர்காமக் கந்தனை தரிஸிக்கும் பாக்யம் இன்று கிடைத்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. அழகான கோவில் பற்றி சுவாரஸ்யமான விவரங்கள். இலங்கை சென்று வர எவ்வளவு செலவானது? ஒரு தலைக்கு எவ்வளவு மற்றும் இதர செலவினங்கள்? அங்கு கருவறையில் இருக்கும் முருகனைக் காணவே முடியாதா? ஏக்கம் வராதோ..

    கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்
    குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்..

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பதிவு... நன்றி...

    தங்களின் தளத்தில் ஒரு பகுதி தான், எனது அடுத்த பதிவாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்... ஆச்சரியப்பட்டதும் உண்மை...!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நான்கு வருடம் ஆகி விட்டது. குடும்பத்தினர் 11 மட்டும் மனோகர் டிராவல்ஸ் மூலம் போனோம். 5 நாட்கள் அங்கு தங்கி பல இடங்கள் பார்த்தோம்.
    பார்த்து சொல்கிறேன் மற்ற விபரங்கள்.

    கருவறையில் இருக்கும் முருகனை பார்க்க முடியாது. நம் உள்ளத்தில் உறைந்து இருப்பவன் என்பதை காட்டும் தத்துவம் போலும்.

    //கந்தன் திருநீறணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும்
    குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்//

    நல்ல பாடல் பகிர்வு, நன்றி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

    தங்களின் தளத்தில் ஒரு பகுதி தான், எனது அடுத்த பதிவாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்... ஆச்சரியப்பட்டதும் உண்மை...!//

    ஓ ! அப்படியா?
    படிக்க ஆவலாக உள்ளேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. 2011-ம் ஆண்டு சென்று வந்த கதிர்காம முருகன் கோவில் பற்றிய தகவல் களஞ்சியம் இத்தனை விஷயங்களும் நினைவில் இருப்பது ஆச்சரியம் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    இந்த பதிவு மீள் பதிவு சார்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கதிர்க்காம கோயில் முகப்பே அசத்தல்!

    விவரங்களின் சேகரிப்பும் உங்கள் பயண அனுபவமும் வியக்க வைத்தது.

    இலங்கைக்குச் சென்று தரிசிக்க முடியாதோருக்கு தங்களின் அன்பு பக்திப் பரிசு இக்கட்டுரை! அந்த முருகன் அருளில் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    விவரங்களின் சேகரிப்பும் உங்கள் பயண அனுபவமும் வியக்க வைத்தது.//
    கதிர்காமம் பற்றிய வீடியோ வாங்கி வந்து இருந்தோம், கோவில் எடுத்த குறிப்புகள், வீடியோவில் கிடைத்த விபரங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறேன் சார்.
    உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும் நன்றி சார்.


    பதிலளிநீக்கு
  15. அழகான திருக்கோவில்....அருமை

    பதிலளிநீக்கு
  16. கதிர்காமக் கோவிலைப்பற்றிப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. மூலவர் இல்லை என்பது புதிய செய்தி எனக்கு. சிதம்பரம் நடராஜர் கோவிலை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அனுராதா பிரேம், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் நெல்லை தமிழன், வாழ்க வளமுடன்.

    //திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
    கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
    மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்//

    சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய பாட்டு போல்
    கதிர்காமம் திரைக்குபின் உள்ள முருகனை அங்கு பூஜை செய்வோர் மட்டும் பார்க்கலாம்.
    நம் மனதில் குடி கொண்டு இருக்கும் முருகனை அங்கு மனகண்ணில் கொண்டு வந்து வணங்க வேண்டும்.

    சிதம்பரம் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கதிர்காமக்கந்தனே நீ வாவாவா என்று பாடுவது நினைவுக்குவந்தது. அழகான தரிசனம் பார்க்கக் கொடுத்ததற்கு நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
    உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஆவ்வ்வ்வ் இன்று அனைத்துப் பதிவும் பார்த்துவிட்டேன் கோமதி அக்கா, இலங்கைக்குப் போய் வந்ததைப்போல இருக்குது.

    பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு நேர்த்தி வச்சு, முதல் மொட்டை கதிர்காமத்தில் போய்த்தான் போடுவோம்...

    அருமையாக சுற்றிப் பார்த்திருக்கிறீங்கள்.. செல்லக் கதிர்காம கோயிலை சுற்றி கங்கை ஓடும்... அது சூப்பராக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
    இன்னும் பதிவுகள் இருக்கும் தேடிப் பார்க்க வேண்டும்.

    //பெரும்பாலும் நாம் குழந்தைகளுக்கு நேர்த்தி வச்சு, முதல் மொட்டை கதிர்காமத்தில் போய்த்தான் போடுவோம்...//

    ஆமாம் , கேள்வி பட்டேன்.

    செல்லக் கதிர்காம கோயிலும் கங்கையும் மிக அருமையான இடம்.
    இயற்கை அழகை அள்ளி தந்து இருக்கும் இடம்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு