ஞாயிறு, 3 அக்டோபர், 2021

வரலாற்று சிறப்பு மிக்க வீடு



அரிசோனாவில் உள்ள "டோம்ப்ஸ்டோன்"  என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். அதற்கு மகன் ஆகஸ்ட்  மாதம்  வார விடுமுறையில் அழைத்து சென்றான். வெள்ளி, சனி, ஞாயிறு  போய் இருந்தோம். இரண்டு இரவுகள் இந்த பழமையான வீட்டில் தங்கி இருந்தோம்.

மகனுக்கு இது போன்ற இடங்களுக்கு போய் பார்ப்பது பிடிக்கும், முன்பு குடும்பத்துடன்  போய் இருக்கிறான், மறுமுறை எனக்கு காட்ட அழைத்து சென்றான். போனமுறை வந்து இருந்த போது எங்களை அழைத்து செல்ல திட்டமிட்டு இருந்தான், அது முடியாமல் போய் விட்டது. இப்போது எனக்கு மட்டும் காட்டும்படி ஆகி விட்டது. என் கணவருக்கு இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்க்க பிடிக்கும்.

1880 ம் வருடம் இந்த வீடு கட்டபட்டதாம். பழைய பொருட்கள் அழகாய் காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.

சாப்பாட்டு மேஜையில் இந்த ஊரில் பார்க்க வேண்டிய இடங்கள் , போகும் வழி வரைபடம் வைத்து இருந்தார்கள்.


காலை நேர சூரிய ஓளியில் வீடு 

1877ம் ஆண்டு பிஸ்மா கவுண்டியில் இருந்த எஸ்ப்ட் எட் ஷிஃபெலின் என்பவரால் உருவக்கப்பட்ட ஊர்.

வெள்ளி சுரங்கங்கள் நிறைய இருந்தன. முதலில் 100 பேர் இருந்தார்கள் . 7 வருடங்களில் மக்கள் தொகை 14,000 .

இந்த ஊர் ஓ.கேயில் துப்பாக்கிச் சண்டையின் தளம் என்று  சொல்கிறார்கள். ஒகே கோரலில் நடந்த துப்பாக்கி சண்டை அமெரிக்க வரலாற்றில் இன்னும் மறக்கப்படவில்லை.

சண்டை நடந்த இடம் . வைல்ட் வெஸ்டில் போலீசார் மற்றும் கொள்ளையர்களின்  கதை சொல்லும் இடம். 

நாம் நிறைய முத்து காமிக்ஸ் கதைகளில் இந்த கவ்பாய்ஸ் (கால் நடைகளை திருடும் கொள்ளையர்) கதைகள் படித்து இருப்போம். சினிமாக்களில் பார்த்து இருப்போம்.

ஆனால் திரைப்படங்களில் சில வரலாற்று நூல்களும் ஒகே கோரலில்  30 விநாடி நடந்த தூப்பாக்கி சண்டையை ரொமாண்டிக்  கதையாக மாற்றி அமைத்து இருப்பார்கள். உண்மையில் நடந்தவை காட்டபடபடவில்லை என்கிறார்கள்.  

இன்றும் துப்பாக்கி சூடு நடத்தி காட்டப்படுகிறது. அதையும் பார்த்தோம். அந்த ஊரை பழமை மாறாமல் வைத்து இருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் அந்தக்கால உடைகள் அணிந்து இருக்கிறார்கள். கவ்பாய்ஸ் உடையில் ஒவ்வொரு இடங்களில் நின்று நம்மை அழைப்பார்கள்  அவர்கள் போடும்   நாடகம் பார்க்க. வேறு வேறு குழுக்கள் இருக்கிறது. நாங்கள்கீழே உள்ள   படத்தில் நிற்பவர்கள் நடித்த நாடகம் பார்த்தோம்.


வில்லியம்ஸ் என்ற இடத்திற்கும் அழைத்து போனான் . அங்கு அவர்கள்  வீதி நாடகமாய் போட்டார்கள்,  பார்த்தோம் கடைசியில் பணம் போட ஒரு பெட்டி வைப்பார்கள். அதில்  விருப்பப்பட்ட பணத்தை  போடலாம்.

முதலில் இந்த பதிவில் தங்கி இருந்த வீட்டைப்பார்க்கலாம். பழைய வீடு இப்போது நவீன வசதிகளுடன் இருக்கிறது. பழைய பொருட்களும்  இங்கு வைக்கப்பட்டு இருக்கிறது.


 

வீட்டின் முன் புறத்தில் பழைய கால வண்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. யாரும் எடுத்து போய் விடாமல் இருக்க கனத்த இரும்பு சங்கிலி வைத்து கட்டி வைத்து இருந்தார்கள்.

மரப்பீப்பாய்கள் வைத்து இருந்தார்கள்.



                                          வரவேற்பு அறை

டீபாய் மேல் பின்னல் வேலை விரிப்பு

விளக்கு மேஜைக்கு கீழ்  கோர்ஸா பின்னலால் ஆன அழகான மலர்கள். கிடார் வாசிக்க தெரிந்து இருந்தால் வாசிக்கலாம். மகன் கொஞ்ச நாட்கள் படித்து இருந்தான். அதை வாசித்தான்.

பழைய காலத்து கண்ணாடி  அலமாரி  அதில் பழங்குடியினரின் போர்கள் பற்றிய புத்தகங்கள்.


மரச்சுவற்றில் அலங்கரிந்த செவ்விந்தியர் படம்
குளிருக்கு கனப்பு , அதன் மேல் இரும்பில் செய்த ஜக் , பழைய கால மருந்து பாட்டிலில் மலர் கொத்து அலங்காரம்.




சிறிய அலமாரி ரேடியோ வைத்து இருந்து இருக்கிறார்கள் முன்பு. அதற்கு அலங்காரப் பின்னல் வேலை திரை.




கிளிக் கூண்டு இருக்கும் மேஜை போல் இருப்பது தையல்மிஷின்.

மூன்று படுக்கை அறைகள் இருந்தன. 



இந்த ஷோபாவை இரவு படுக்கையாக மாற்றிக் கொள்ளலாம்.
இங்கும் கனப்பு  பழைய மாடல் வைத்து இருக்கிறார்கள் காட்சிக்கு.  அலமாரிக்குள் தொலைக்காட்சி பெட்டி  இருக்கிறது.
படுக்கை எதிரில் தொலைக்காட்சி பெட்டி அதற்கும் அழகிய பின்னல் வேலை போர்வை.
"நவரசம்" என்ற சினிமா பார்த்தோம் நெட்பிளிக்ஸில் இரண்டு மூன்று கதை பார்த்தோம் பிடிக்கவில்லை, பிறகு பேரனுடன் டிஸ்னி மூவி பார்த்தோம்.



படுக்கை அறையில் அழகிய கண்ணாடி அலமாரி . கண்ணாடியை மூடி வைத்துக் கொள்ள அழகிய கதவு.

அலமாரியில் விரித்து இருந்த பின்னல் வேலை விரிப்பு

சமையல் அறை, மற்றும் பழங்காலப்பொருட்களும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.



வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------

45 கருத்துகள்:

  1. அன்பின் கோமதிமா,

    வாழ்க வளமுடன்.
    அப்பாடி எத்தனை படங்கள் !! எத்தனை பின்னல் வேலைப்பாடுகள்.
    அதிசயிக்க வைக்கும் இடம். ஓகே காரல்ஸ்.
    டிப்பிகல் வெஸ்டர்ன் கலாசாரம்.

    கௌபாய்ஸ் மாடு மேய்த்து, மாடுகள் போட்டியில்
    பங்கு கொண்டு, Rodiyoக்களில்

    வலிமையான கன்றுகளையும் எருமைகளையும்
    Lasso செய்யும் கண்காட்சி ஒன்று நடந்தது.
    மிக அருமையாக இருந்தது.
    பழைய கதைகளில் இவர்கள் காடு மேடுகளில் அலைந்து
    மாடுகளை மேய்த்து, மழை வெய்யில் ,குளிர் பாராமல்
    உழைப்பதைப் பார்க்க அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      அந்த ஊரில் பார்க்க முடிந்த இடங்களைப் பார்த்தோம், அனைத்திலும் இந்த பின்னல் வேலைகள் நிறைய அழகாய் காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.

      மாறுபட்ட இடமாக இருப்பதால் இதை அப்படியே வைத்து இருக்கிறார்கள். அந்த ஊருக்கு சுற்றுலா துறையால் வருமானத்தை ஈட்டி தருகிறது.

      நீங்கள் பார்த்த கண்காட்சியை பார்த்ததை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  2. நீங்கள் தங்கி இருந்த வீடு பிரமாதமாக
    இருந்தது.
    கணப்புகளும், அலமாரிகளும், கண்ணாடியும் அதை மூடும்
    ஜன்னல் கதவுகளும்
    மரவேலைப்பாடுகளுடன் அருமையாக இருந்தது.

    நல்ல உழைப்பு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் தங்கி இருந்த வீடு பிரமாதமாக
      இருந்தது.//

      ஆமாம் அக்கா, அந்த வீட்டை கட்டியவரிளின் வழி வந்தவர்கள் அதை பராமரித்து இப்போதும் நல்ல நிலையில் வைத்து இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
      இப்போது அவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கிறது.

      நல்ல உழைப்பு தெரிகிறது//

      ஆமாம் அக்கா.

      பழைய பொருட்களை விற்கும் கடைகளும் உண்டு. வாங்க நிறைய பணம் கொடுக்க வேண்டும் ரசித்து வந்தோம்

      கை விசுறி, தலைக்கு மாட்டும் கிளிப் போன்றவை வாங்கினாள் மருமகள்.

      நீக்கு
  3. கட்டை வண்டியும், தண்ணீர் பிடிக்கும் தொட்டிகளும்
    இன்னும் இருக்கும் அத்தனை படங்களையும் அனுபவித்துப் பார்க்கிறேன்.
    மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கட்டை வண்டியும் மரப்பீப்பாய்களும், மரத்தொட்டிகளும் நிறைய இடங்களில் காட்சிக்கு வைத்து இருந்தார்கள்.
      படங்களை அனுபவித்துப் பார்த்தது மகிழ்ச்சி.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. எனக்கும் இது மாதிரி இடங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும்.  அந்த ஊரில் வசிக்கும் மக்கள் இன்னும் பழமையான உடைகளையே அணிந்து காட்சியளிப்பதும் சுவாரஸ்யம்.  சூழல் கச்சிதமாகப் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //எனக்கும் இது மாதிரி இடங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். //

      மகிழ்ச்சி.

      //அந்த ஊரில் வசிக்கும் மக்கள் இன்னும் பழமையான உடைகளையே அணிந்து காட்சியளிப்பதும் சுவாரஸ்யம். சூழல் கச்சிதமாகப் பொருந்தும்.//

      அந்தக்கால உடைகள் வாடகைக்கு கிடைக்கும் அதை அணிந்து படங்கள் எடுத்து கொள்ளலாம். மகன் அது போல முன்பு இரண்டு தடவை போன போது எடுத்து இருக்கிறான்.

      பெண்கள் நீண்ட கவுன் அணிந்து தலை அலங்காரம் முன்பு போல் செய்து இருந்தார்கள்.

      முடிந்தவரை பழங்கால சூழலை அப்படியே வைத்து இருக்கிறார்கள்.


      நீக்கு
  5. நம்மூர் மாட்டுவண்டி மாதிரி இருக்கிறது. என்ன, அவர்கள் அதில் குதிரையைக் கட்டி இழுப்பார்கள்!  அங்கு கூட தூக்கிச் சென்று விடுவார்களோ என்கிற பயம் இருப்பதும், சங்கிலியால் கட்டி வைத்திருப்பபதும் சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்மூர் மாட்டுவண்டி மாதிரி இருக்கிறது. என்ன, அவர்கள் அதில் குதிரையைக் கட்டி இழுப்பார்கள்!//

      ஆமாம், குதிரைகள் தான் வண்டிகளை இழுக்க .

      இப்போதும் அந்த கோச் வண்டிகள் இருக்கிறது. அதில் நாலு தெருவை சுற்றி காட்டுகிறார்கள். நவீன பஸ் வசதியும் உண்டு.

      நீக்கு
  6. வீட்டினுள்ளும் நவீனத்தைப் புகுத்தாமல், அந்தக் கால நடைமுறையில் வாழவேண்டும் என்று வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும்.  இரண்டு நாட்கள் தங்கி இருந்தீர்களா?  சுவாரஸ்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டினுள்ளும் நவீனத்தைப் புகுத்தாமல், அந்தக் கால நடைமுறையில் வாழவேண்டும் என்று வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடி இருக்கும்.//

      சுவாரஸ்யமாக இருக்கும் தான்.
      நவீனத்திற்கு பழகி விட்ட நாம் இருப்பது கஷ்டம்.
      ஊட்டி போன்று இருக்கிறது ஊர்.

      இரண்டு இரவுகள் தங்கி இருந்தோம்.
      பழமையை தேடி என்று முகநூலில் பகிர்ந்தேன்.
      அழைத்து போன போதே ஒவ்வொன்றையும் பகிர்ந்து இருக்க வேண்டும்.
      நான் பதிவு போடுவது காலதாமதமாகிறது, மறந்து போய் விடும் என்பதாலேயே பதிவில் சேமிக்கிறேன்.சார் அழைத்து போன இடங்கள் இன்னும் பகிர படாமல் இருக்கிறது.காலமும், மனமும் ஒத்துழைக்கும் போது எல்லாம் பதிவுகள் தொடரும்.
      இறை அருள் உதவி புரிய வேண்டும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    புதிதான தகவல்களுடன் பதிவு நன்றாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வீட்டின் படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது. அங்குள்ளவைகள் பழமையான பொருட்கள் என்றாலும், என்றும் புதிதாக பேணப்பட்டு வருகிறது என்பதற்கு படங்களே சாட்சி. அந்த வீட்டில் ஒரு நாள் தங்குவதற்கு வாடகை எவ்வளவோ? வழக்கம் போல் எல்லாவற்றையும் விபரமாக கூறி பகிர்ந்துள்ளீர்கள். எனக்குத்தான் இது அறிந்திராத புது செய்திகள். பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. படங்கள் அனைத்தையும் பெரிதாக்கி பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கம்லா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //புதிதான தகவல்களுடன் பதிவு நன்றாக உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வீட்டின் படங்கள் அனைத்தும் வழக்கம் போல அருமையாக உள்ளது.//

      நீங்கள் எல்லாம் தரும் ஆதராவால்தான் படங்கல் எடுத்து பதிவு செய்கிறேன்.
      நன்றி.

      //பழமையான பொருட்கள் என்றாலும், என்றும் புதிதாக பேணப்பட்டு வருகிறது என்பதற்கு படங்களே சாட்சி. அந்த வீட்டில் ஒரு நாள் தங்குவதற்கு வாடகை எவ்வளவோ?//

      ஆமாம், பழைய பொருட்களை வேறு இடங்களுக்கு நகர்த்தாதீர்கள், அப்படியே அந்த அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று போட்டு இருக்கிறார்கள்.

      வாடகை மகனை கேட்க வேண்டும், தெரியவில்லை எனக்கு.

      கவ்பாய்ஸ் சினிமாக்கள், கதைகள் படித்து இருக்கிறேன், அவர்கள் வாழ்ந்த பகுதி மற்றும் அவர்களின் வாழ்க்கை முறைபற்றி இங்கு பதிவு எழுத படித்துதான் பகிர்றேன்.

      நிங்கள் படங்களை, பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      வீட்டை, படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. பழைய காலத்து விடயங்கள் எனக்கு எப்பொழுதுமே பிடித்தமானது.

    படங்களை அழகாக எடுத்து இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //பழைய காலத்து விடயங்கள் எனக்கு எப்பொழுதுமே பிடித்தமானது.//

      ஓ! மகிழ்ச்சி, தொடர போகிறது பழைய காலத்து பொருட்கள் காட்சிகள், வாங்க பார்க்க.

      //படங்களை அழகாக எடுத்து இருக்கிறீர்கள்./

      நன்றி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.




      நீக்கு
  11. நானும் இந்த கிராமத்திற்குச் சென்று பார்த்திருக்கிறேன். அடுத்த நாளே லாஸ் வேகாஸ் போகும் வழியில் ஹூவர் டாம். வேகாஸில் நான்கு நாட்கள் தங்கல். உலகின் முக்கிய நகரங்களின் பாணியில் கட்டப்பட்ட பிர்மாண்ட ஹோட்டல்கள், மதியம் ஆறு மணிக்கு மேல் தேவலோகப் பட்டணமாகக் களைக்கட்டும் வேகாஸின் மறக்க முடியாத நினைவுகள் இப்பொழுதும் மனசில் மேலெழுந்து வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்க்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      நீங்களும் இந்த கிராமத்தை பார்த்து இருப்பது மகிழ்ச்சி.

      லாஸ்வேகாஸ் நகரத்தின் அழகு பற்றியும், உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  12. கோமதிக்கா படங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கின்றன.

    எனக்கும் இது மாதிரி இடங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும்.

    மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். அந்த அலமாரிகள் மர வேலைப்பாடுகள் எல்லாமே அப்போதையதுதான் இல்லையா? அப்போது எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் வைத்திருக்கலாமோ? என்றாலும் நன்றாகப் பராமரித்திருக்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //எனக்கும் இது மாதிரி இடங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும்.//

      மகிழ்ச்சி, அதனால்தான் இந்த பகிர்வு.

      //மிக நன்றாகப் பராமரிக்கிறார்கள். அந்த அலமாரிகள் மர வேலைப்பாடுகள் எல்லாமே அப்போதையதுதான் இல்லையா? அப்போது எப்படி இருந்ததோ அப்படியே இன்னும் வைத்திருக்கலாமோ? என்றாலும் நன்றாகப் பராமரித்திருக்கிறார்கள்.//

      ஆமாம், பத்திரமாக பராமரிக்கிறார்கள், நம்மையும் கவனமாக பார்த்து கொள்ள சொல்கிறார்கள்.


      நீக்கு
  13. கவ்பாய்ஸ் உடையில் ஒவ்வொரு இடங்களில் நின்று நம்மை அழைப்பார்கள் மாலை அவர்கள் போடும் வீதி நாடகம் பார்க்க. வேறு வேறு குழுக்கள் இருக்கிறது. நாங்கள்கீழே உள்ள படத்தில் நிற்பவர்கள் நடித்த நாடகம் பார்த்தோம்.//

    இப்போதும் கௌபாய் உடையில் இருப்பது வீதிநாடகங்கள் போடுவது எல்லாமே சுவாரசியமான தகவல்கள். அந்த இடமே பழைய காட்சி போலத்தான் இருக்கிறது. என்ன ஒரு ஆர்வம் அவர்களுக்கு!

    அழகான இடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவ்பாய்ஸ் உடையில் குதிரை வண்டி ஓட்டி செல்வார்கள், கடை முன் நிற்பார்கள்.

      காலை முதல் மாலை வரை நடாகங்கள் நடத்தும் குழுக்கள் இருக்கிறது, நம் நேரத்தைப்பொறுத்து பார்க்கலாம். திகில் ஊட்டும் நாடகங்களும் உண்டு.

      நீக்கு
  14. நம் மாட்டு வண்டி போல இருக்கிறது. ஆமாம் அங்கு பழைய பொருட்கள் என்றாலும் மதிப்பு உண்டு என்பதால் திருடல் நடக்கும்.

    மரப்பீப்பாய்கள் இப்போது பூத்தொட்டியோ?

    வரவேற்பரை, பூவெலைப்பாடு க்ரோஷியோ எல்லாமே அழகாக இருக்கு ஆனால் இவை எல்லாம் நவீனமயமாக்கல் இல்லையா?

    ஓ உங்கள் மகன் கிட்டார் வாசிப்பது நல்ல விஷயம்.

    கிளிக் கூண்டு இருக்கும் மேஜை போல் இருப்பது தையல்மிஷின்.//

    அட! பார்த்தால் அப்படிச் சொல்ல முடியவில்லை இல்லையா? எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் போல இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம் மாட்டு வண்டி போல இருக்கிறது. ஆமாம் அங்கு பழைய பொருட்கள் என்றாலும் மதிப்பு உண்டு என்பதால் திருடல் நடக்கும்.//

      திருடலுக்கு என்று இல்லாமல் அவை காற்று , புயலால் சேதம் ஏற்படாமல் இருக்கவும் இருக்கலாம்.

      //மரப்பீப்பாய்கள் இப்போது பூத்தொட்டியோ?//

      அந்த வீட்டை வைத்து இருப்பவர் வேறு ஊரில் இருக்கிறார். அவர் இங்கு வசிதால் அதில் மலர்கள் வைத்து இருப்பார். வீட்டு சாவியே அவர் வைத்து இருக்கும் இடத்தை போனில் சொன்னார். அதை அவர் சொல்லும் பாஸ்வேர்ட் நம்பர் வைத்து திறந்து உள்ளே போனோம். அந்த தொட்டியில் புற்கள் வளர்ந்து இருக்கிறது.

      //ஓ உங்கள் மகன் கிட்டார் வாசிப்பது நல்ல விஷயம்.//
      கொரோனா காலத்தால் அவன் தொடர்ந்து கற்க போகமுடியவில்லை. பாதியில் வகுப்பு தடைபெற்று நிற்கிறது.


      கிளிக் கூண்டு இருக்கும் மேஜை போல் இருப்பது தையல்மிஷின்.//

      //அட! பார்த்தால் அப்படிச் சொல்ல முடியவில்லை இல்லையா? எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும் போல இருக்கிறது.//
      காமிராவிலும், அலைபேசியிலும் மாறி மாறி எடுத்தேன் தேடி போடுகிறேன். மெஷின் சக்கரம் மிகவும் சின்னதாக இருக்கும். பாபின், மற்றும் நூல் கண்டு வைக்கும் இழுப்பறைகள் நான்கு இருக்கிறது.







      நீக்கு
  15. மரவேலைப்பாடுகள் உள்ள மேசை கண்ணாடி அதன் கதவு எல்லாமே ரசிக்கலாம் பார்த்து பார்த்து.

    அத்தனையும் அருமை அடுத்த பதிவிற்குக் காத்திருக்கிறோம் கோமதிக்கா. அடுக்களை பழைய பொருட்கள் இல்லையா ஆர்வம் கூடுகிறது!
    '
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரவேலைப்பாடுகள் உள்ள மேசை கண்ணாடி அதன் கதவு எல்லாமே ரசிக்கலாம் பார்த்து பார்த்து.//
      அந்த காலத்து பொருட்கள் நம் தாத்தா , பாட்டி காலத்து மர சாமாங்களை இன்னும் தேவகோட்டை, காரைக்குடி மக்கள் பராமரித்து வருகிறார்கள். கேரளாவில் , மற்றும் மாநிலங்களில் நாம் பார்த்து இருப்போம்.

      திருநெல்வேலி பக்கம் பெரிய குத்துவிளக்கு வைக்கும் மாடத்திற்கு இப்படி கதவுகள் வைத்து இருப்பார்கள். பழைமையை பாதுகாப்பதுதான் இந்த வீட்டின் சிறப்பு.

      அடுக்களைப்பொருட்கள் வருகிறது அடுத்த பதிவில்.

      உங்கள் கருத்துக்களுக்கும், ஆர்வத்திற்கும் நன்றிகள்.

      நீக்கு
  16. 1879 ல் கட்டப்பட்ட வீடா இது! ஆச்சரியமாக இருக்கிறது.

    அந்த் அமேசையின் மீதிருக்கும் மேப்பை பெரிதாக்கிப் பார்த்தால் பாயின்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட் என்று பார்த்தால் அதில் இன்னும் முன்னர் கட்டப்பட்டவை இருப்பது போல் இருக்கிறது. அப்படி என்றால் அந்த ஊரே இன்னும் பழமையான கட்டிடங்களைக் கொண்டுள்ளதோ.

    படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நல்ல பராமரிப்பும். வீதி நாடகங்கள் நன்றாக இருந்தனவா? பழைய வரலாற்றை நடித்துக் காட்டுகிறார்களோ? துப்பாக்கிச் சூடு போன்றவற்றை?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      //1879 ல் கட்டப்பட்ட வீடா இது! ஆச்சரியமாக இருக்கிறது.//

      ஆமாம்.

      //அந்த் அமேசையின் மீதிருக்கும் மேப்பை பெரிதாக்கிப் பார்த்தால் பாயின்ட் ஆஃப் இன்ட்ரெஸ்ட் என்று பார்த்தால் அதில் இன்னும் முன்னர் கட்டப்பட்டவை இருப்பது போல் இருக்கிறது. அப்படி என்றால் அந்த ஊரே இன்னும் பழமையான கட்டிடங்களைக் கொண்டுள்ளதோ.//

      ஆமாம், இன்னும் பழைமையான இடங்கள் இருக்கிறது.

      //படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நல்ல பராமரிப்பும். வீதி நாடகங்கள் நன்றாக இருந்தனவா? பழைய வரலாற்றை நடித்துக் காட்டுகிறார்களோ? துப்பாக்கிச் சூடு போன்றவற்றை?//

      வில்லியம்ஸ் என்ற இடத்தில் தான் வீதி நாடகம். இங்கு ஒரு இடத்தில் காலரி அமைத்து நம்மை அமர வைத்து தான் நடக்கிறது. இங்கு நாம் கட்டணம் கொடுத்து பார்க்க வேண்டும். துப்பாக்கி சூடுதான் முக்கியமானது. தரையில் சுருண்டு விழுவது , மதுபான கடைகளில் சண்டையிடுவது. பணத்தை கொள்ளை யடிப்பது என்று காட்டுகிறார்கள்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.







      நீக்கு
  17. அக்கா நானும் அந்த மேப்பை பெரிதாக்கிப் பார்த்தால் பல பழைய இடங்கள். எல்லா இடத்திற்கும் சென்றீர்களா? பல சுவாரசியமான இடங்கள் இருக்கின்றனவெ இரு நாட்கள் தங்கியிருந்ததால் போனீர்களா என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்கன் நிறைய இடங்கள் பார்த்து இருக்கிறான். இரண்டு, மூன்று முறை வந்து இருப்பதால். இந்த முறையும் முடிந்தவரை பார்த்தோம். பார்த்தவை பகிர எண்ணம் இருக்கிறது. இரு நாடக்ள் தங்கினோம்.

      மறு வருகைக்கு நன்றி.

      நீக்கு
  18. வரலாற்றின் பக்கங்கள்..
    நீங்கள் பார்த்த கண்காட்சிகளை பகிர்ந்து கொண்ட விதம் அருமை.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செலவராஜூ, வாழ்க வளமுடன்

      வரலாற்றின் பக்கங்கள் நல்லா இருக்கா!

      //நீங்கள் பார்த்த கண்காட்சிகளை பகிர்ந்து கொண்ட விதம் அருமை.. மகிழ்ச்சி..//

      நன்றி.

      நீக்கு
  19. இப்படியெல்லாம் நம் ஊரில் ஒற்றை வீடாவது பாதுகாக்கப் படுகின்றதா?.

    மிச்சமிருக்கும் பழங்கால நினைவுச் சின்னங்களில் ஆணியைக் கொண்டு கீறி - சேதப்படுத்தி வைப்பதே நம்மவர்களுக்கு விருப்பமானது..

    என்றைக்குப் புத்தி வருமோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரைக்குடி, தேவகோட்டை பக்கம் எல்லாம் பாதுகாக்கப்படுகிறது பழைய வீடுகள்.
      கேரளாவில் அரண்மனைகள் பார்வைக்கு இருக்கிறது. ஆனால் இப்படி வாடகைக்கு விட்டால் அதை சேதப்படுத்தாமல் இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது. பழமை பேணி காத்துவருவது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //பழமை பேணி காத்துவருவது சிறப்பு.//


      ஆமாம், அதுதான் சிறப்பு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. அழகான பின்னல் வேலைப்பாடுகள். பழங்குடியினரின் ஓவியம் அருமை. வீட்டை மிக அருமையாகவும் பழமை மாற்றாமலும் பாதுகாத்து வருகின்றனர். எல்லாப் படங்களும் அருமை! புதுமை! கண்ணாடி அலமாரியும் அழகாக இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருக்கும் விதம் நன்றாய் இருக்கிறது. துப்பாக்கிச் சண்டை பற்றி அதிகம் கேள்விப் பட்டதில்லை. ஆனால் செவ்விந்தியர்களுக்கும்/வந்தவர்களுக்கும் நடந்த சண்டை பற்றிய கதைகள்/திரைப்படங்கள் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்ப சிவம், வாழ்க வளமுடன்

      //அழகான பின்னல் வேலைப்பாடுகள். பழங்குடியினரின் ஓவியம் அருமை. வீட்டை மிக அருமையாகவும் பழமை மாற்றாமலும் பாதுகாத்து வருகின்றனர்.//

      ஒவ்வொரு வீடும் இப்படி பழம் பொருட்களை வைத்த காட்சியகமாக மாறி விட்டது.
      அவர்கள் கைவேலைகள் வியக்க வைக்கிறது. துப்பாக்கி சண்டை வில்லியம்ஸ் என்ற ஊரிலும் பார்த்தோம். வம்புக்கு இழுப்பது, சண்டையிடுவது, திருடுவது என்று நிரைய இருக்கிறது. நாம் காமிக்ஸ் , மற்றும் திரைப்படங்களில் பார்த்து இருக்கிறோம்.
      இங்கு நேரில் நடித்து காட்டுகிறார்கள்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு