வியாழன், 23 அக்டோபர், 2025

திருப்பரங்குன்றம் திருப்புகழ்




கந்தசஷ்டி சிறப்பு பதிவாக  நேற்று கந்தசஷ்டி முதல் பதிவாக 

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி நீலிக்கோணாம்பாளையம் கோயில் வந்தது . படிக்காதவர்கள் படிக்கலாம்.  இன்று  கந்த சஷ்டி இரண்டாம் நாள்  இந்த பதிவில்  திருப்பரங்குன்றம் திருப்புகழ்  பாடல்கள் இடம்பெறுகிறது.


மலையே லிங்க வடிவமாக தோன்றும் 




திருப்பரங்குன்றம்  2022 ம் வருடம் போட்ட பதிவில் உள்ள படங்களை இப்போது பகிர்ந்து இருக்கிறேன். 


குன்றத்துக்குமரன்  கோயில் படங்கள் அங்கு நடந்த  பங்குனி பெருவிழா படங்கள் உள்ள பதிவு


குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

தெய்வானை முருகப்பெருமான் திருமணக் கோலம் பதிவு


.

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.




சந்ததம் பந்தத் ...... தொடராலே
     சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்
     கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
     சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா
     தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.



//கந்தசஷ்டிக்கொரு திருநாள் என்று பாடத்தோன்றுகிறது.  முருகன் நம் அனைவரையும் காக்கட்டும்.//


என்று நேற்று போட்ட பதிவில் ஸ்ரீராம் இந்த பாடல்  சொன்னார்

இன்று இந்த பாடல் பகிர்ந்து விட்டேன்



https://www.youtube.com/watch?v=x4r9n4ggxoQ


ஸ்ரீ கந்தபுராணம் படித்து வருகிறேன்  இன்று சம்பவ காண்டம் வரை படித்து இருக்கிறேன்.

மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி

ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி காஞ்சி

மாவடிவைகும் செவ்வேள் மலரடி போற்றி அன்னான் 

சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி!

- கந்தபுராணம்


மந்திரப் பொருளே போற்றி மாமயில் தலைவா போற்றி 

கொந்தளிர் கடம்பா போற்றி குன்றுறை குமரா போற்றி

எந்திரத் திருப்பாய் போற்றி எண்எழுத் தானாய் போற்றி

தந்தை தாய் ஆவாய் போற்றி சண்முகா போற்றி போற்றி!


திருப்பரங்குன்றம் முருகன் , தெய்வானை முத்தங்கி சேவையில்

நன்றி ஆன்மீகதகவல்.

கந்தவேள் முருகனுக்கு அரோகரா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கந்த சஷ்டி திருநாள் இரண்டாம் பதிவில் திருப்பரங்குன்றம் குமரனை இன்று காண வைத்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

    பாடல்கள் அனைத்தும் அருமை. குழந்தை சூரிய நாராயணன் அவர்களின் பல பாடல்களை தினமும் கேட்கிறேன். சிறுவயதிலேயே அருமையான குரல்வளம். அவரின் பாடல்களும், பாடலுக்கேற்ற முக பாவங்களும் நன்றாக இருக்கும். அவர் பல்லாண்டு சிறப்பாக வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    பிறகு பகிர்ந்த காணொளிகளை கேட்கிறேன். சுதா ரகுநாதன், சூலமங்கலம் சகோதரிகளின் பாடலகளும் நன்றாக இருக்கும். "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்" என்ற சினிமா பாடலும் என் மனதிற்குள் ஒலித்தது.

    அழகன் முருகனைப் பற்றிய பாடல்களும் என்றுமே இனிக்கும் தன்மை கொண்டவை. . நீங்கள் தினமும் கந்த புராணம் படிப்பதற்கு வாழ்த்துகள். உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் கந்தன் தர வேண்டிக் கொள்கிறேன். கந்த சஷ்டி பதிவுகளுக்கு தொடர்ந்து வருகிறேன் சகோதரி. காணொளிகளை யும் பிறகு கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. மலை லிங்க வடிவமாகத் தெரிவதை அருகில் உள்ள கட்டிடங்கள் மற்ற இடங்கள் மறைக்கின்றன.  சமீபத்தில் அங்கே முருகனுக்கு பெரும் சோதனை வந்தது.  நம்மை பக்தர்கள் எந்த அளவு மதிக்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார் போலும்!

    பதிலளிநீக்கு
  3. பாடல் கேட்டேன்.  நான் சொன்ன பாடலையும் இணைத்ததற்கு நன்றி.  திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் என்கிற  பாடல் இப்போது நினைவுக்கு வரும்போது மதுரையில் திருப்ப்பரங்குன்றம் அருகே இருந்த நாங்கள் திருத்தணியில் அண்ணன் மகனுக்கு பெண் எடுத்தோம் என்பது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. மதுரையில் இருந்தபோது நாங்கள் டேப்ரெக்கார்டர் வாங்கிய புதிதில் அப்பா முதலில் வாங்கிய கேசெட்டுகளில் ஒன்று கந்தசஷ்டி கவசமும், ஸ்கந்தகுரு கவசமும்.  செவ்வாய்க்கிழமைகளில் காலை அதை போட்டு விடுவார்.  கந்தசஷ்டி கவசம் முடிந்த உடன் திருப்பிப் போட்டால் ஸ்கந்தகுரு கவசம் ஒலிக்கும்.  எனவே இப்போதும் கந்த சஷ்டி கவசம் எங்காவது காதில் விழுந்தால், கேட்டால், அது  முடிந்த உடன் மனதில் "கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே" என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கும்! 

    பதிலளிநீக்கு