வியாழன், 27 ஜூன், 2024

திருமதி பக்கங்கள் வலைத்தளத்திற்கு ஜூன் மாதம் பிறந்த நாள்.

நான் 2009   ஜூன் மாதம் 1 ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்த நாள். இன்று எங்கள்பளாக்கில்  கீதா ரெங்கன் 

//ஹப்பா எபிக்கு வயசு 16!!! எண்ணிரண்டு பதினாறு வயது!

கீதா//

 அப்போதுதான் எனக்கும் நினைவு  வந்தது நான் ஆரம்பித்ததும்  2009 ஜூன் மாதம் தானே என்று.

மார்கழி மாதம்  என்பதால் கிளிக்கோலம் போட்டு பதிவை  ஆரம்பித்தேன்.  பூ பூக்கும் மாதம் தை மாதம் என்பது போல வலைத்தளத்தில் பூக்களும் கிளிக்கு பிடித்த கோவைகனிகளும்  கோலம் போட்டு இருக்கிறேன்.

கோவை என்றால் தொகுப்பு என்று சொல்வது போல வலைத்தளம் ஆரம்பித்த கதையை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

ஜனவரி மாதம் 2 ம் தேதி  2012 ம் வருடம்  வலைச்சரத்தில்  ஆசிரியர் பொறுப்பு ஏற்க கேட்டு கொண்டார்கள். அப்போது என்னைப்பற்றி எழுதியதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

வலைத்தளம் ஆரம்பித்த வரலாறு. வரலாறு முக்கியம் இல்லையா? 

----------------------------------------------------------------------------------------------------

வலைச்சர வாசகர்களுக்கு வணக்கம்,   புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த புது வருடம் எல்லோருக்கும், எல்லா வளங்களையும், எல்லா நலங்களையும் தரட்டும்.

என்னை வலைச்சர ஆசிரியராக இந்த வாரம் அழைத்து இருக்கும் திரு. சீனா அவர்களுக்கும், அவரிடம் என்னைப் பரிந்துரை செய்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றிகளும், வணக்கங்களும்.

என்னைப் பற்றி:

என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. நான் பிறந்தது திருவனந்தபுரம். என் அப்பாவுக்கு ஊர் ஊராக மாற்றல் ஆகும் உத்யோகம், அதனால் அப்பா, அம்மா செட்டில் ஆனது மதுரை. 

பள்ளிப் படிப்பு பல ஊர்களில். பாதியில் திருமணம். என் கணவர் கல்லூரிப் பேராசிரியாராக இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இப்போது வேறு ஒரு கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளாராய் இருக்கிறார்கள். நான் திருமணத்திற்குப் பின் பள்ளிப் படிப்பை முடித்து, B.A பொருளாதாரம் படித்தேன், அதுவும் ஒரு வருடப்படிப்புடன் நின்று விட்டது.

 காலையில் பிள்ளைகள் பள்ளிக்கும், கணவர் கல்லூரிக்கும் சென்றவுடன் ஆங்கிலத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சு, (ஆங்கில, தமிழ் தட்டச்சு ஒரே நேரத்தில் படித்தேன்) தையல், என்று போனேன். 

காலையில் நான் போகும்போது வழியில் பார்க்கும்  பள்ளி பிள்ளைகள் ’குட் மார்னிங் டீச்சர்’ என்பார்கள் . என்னைப் பார்த்தால் டீச்சர் போல் தோன்றி இருக்கிறது.(கையில் குடை, ஆர்கண்டி வாயில் சேலை, கண்ணாடி)

 குழந்தைகள் மனதில் பட்டது பலித்து விட்டது. நான் ஆசிரியர் ஆகிவிட்டேன். எப்படி என்று கேட்கிறீர்களா? உலக சமுதாய சேவா சங்கத்தில் சேர்ந்து யோகா , தியானம், முத்திரைகள் படித்து அதில் ஆசிரியர் பயிற்சி, பொறுப்பாசிரியர் பயிற்சி எல்லாம் எடுத்தேன்.

கடமைகள் முடிந்து விட்டன நினைத்த எனக்கு இப்போது தான் பொறுப்புகள் அதிகமாகிறது.  


விடுமுறைக்கு வந்த என் மகள் அம்மா நீங்களும் வலைத்தளத்தில் எழுதலாமே ஒன்றும் கஷ்டம் இல்லை என்று என்னை வலைத்தளம் ஆரம்பிக்க வைத்தாள்.

அவளும் வலையில் எழுதுபவள் தான் சிறுமுயற்சி வைத்து இருக்கும் முத்துலெட்சுமி.  

என் மருமகள் ”திருமதி பக்கங்கள்” என வலைத்தளத்திற்குப் பெயர் சூட்டினாள், என் கணவரது பெயரையும் என் பெயரையும் சேர்த்து. எனக்கு வலைக் கல்வியை மகள், மகன், மருமகள், பேத்தி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி. என்னை எழுத ஊக்கப் படுத்தும் என் கணவருக்கு நன்றி.

2009 ஜூன்  1 ம் தேதி ’கிளிக்கோலம்’ என்று கிளிக்கோலம் போட்டு, மகரிஷியின் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து கவிதையுடன் என் வலைத் தளத்தை ஆரம்பித்தேன்.

//எண்ணமே இயற்கையதன்  சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கி போகும்.//

இப்படி வலைச்சரத்தில் என்னைப்பற்றி சொல்லி இருப்பேன்.


வலைஉலகம் பெரிய கடல் அதில் துளிதான் நான் கற்றுக் கொண்டது. தினம் அதில் கற்க வேண்டியது நிறைய உள்ளது.”கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு” என்பது போல் நான் கற்றுக் கொண்ட வலைக் கல்வி ஒருகைப் பிடி அளவு கூட இல்லை. எத்தனை திறமைகள் ஒவ்வொருவரிடமும்! எல்லோரும் நன்கு எழுதுகிறார்கள்.

அந்த காலத்தில் தாங்கள் எழுதிய கதை, கட்டுரை கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் ! இப்போது அப்படியில்லை. நமக்கு என்று ஒரு தளம் நம் எண்ணங்களை ,அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது. உடனுக்கு உடன் அதற்கு விமர்சனமும் கிடைக்கிறது. 

பத்திரிக்கையில் எழுதினால் அடுத்தவாரம் தான் வாசகர் கடித்தில் காணமுடியும். வாழ்க்கையில் நம்மாலும் எழுத முடியும் என்ற நினைப்பே மனதுக்கு உற்சாகத்தையும், தெம்பையும் தருகிறது. பத்திரிக்கைகளும் நம்மை வரவேற்கின்றன. 

என்னுடைய மார்கழிக் கோலங்கள் லேடீஸ் ஸ்பெஷலில் இடம் பெற்றது, போன மார்கழியில். தேவதையில் ’குருந்தமலை குமரன்’ என்ற என் ஆன்மிகப் பதிவும், ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்’ 

என்ற பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும், ’எண்ணம் முழுதும் கண்ணன் தானே’ என்று என் பேரனைப் ப்ற்றி எழுதிய பதிவிலிருந்து ஒரு சிறு பகுதியும் வெளி வந்தன. நம் எழுத்தை பத்திரிக்கையில் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சீனா சாரிடம், வை .கோ சாரிடம் என் மகளை பற்றி அப்போது சொல்லவில்லை.  கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டம் பார்த்து தெரிந்து கொண்டு  பின்னூட்டத்தில் கேள்வி கேட்டார்.

//வருக வருக கோமதி அரசு - அருமையான அறிமுகம். முத்து லெட்சுமி தங்கள் மகளா .... அவர் வலைச்சர நிர்வாகத்தில் இருக்கிறார் ... தெரியுமா தெரியாதா .... மகளின் நிர்வாகத்தில் இருக்கும் வலைச்சரத்தில் தாயார் ஆசிரியப் பொறுப்பேற்பது இருவருக்கும் பெருமை தான்.//


சீனா சாரை மகளுடன் மதுரையில் பதிவர் சந்திப்பின் போது சொன்னோம். வலைச்சரத்தில் எழுதிய போது சொல்லவே இல்லை நீங்கள் என்று கோபித்து கொண்டார் செல்லமாக. 

சீனா சாருக்கு முன் வலைச்சர பொறுப்பாசிரியராக இருந்தாள். 

முந்தைய பொறுப்பாசிரியர்கள் கயல்விழிமுத்துலெட்சுமி, பொன்ஸ் என்று போட்டு இருக்கும் வலைச்சரத்தில் பார்த்து இருப்பீர்கள். 

மூன்றோ, அல்லது நான்கு முறையோ ஆசிரியர் பொறுப்பு ஏற்று இருக்கிறேன். நிறைய பதிவர்களின் பதிவை படித்து அதை அறிமுக படுத்தினேன். மனதுக்கு மகிழ்ச்சி அளித்த பணி.

வலைச்சரத்தில் ஜூன் மாதம் மறந்து போய் மே 31 என்று எழுதி இருப்பேன். 

பின்னூட்டங்களை படித்து பாருங்கள் நன்றாக இருக்கும்.
எழுதுவதற்கு மனது அலுப்பு பட்டால் இந்த பதிவை படிப்பேன்,நட்புகள் தந்த பின்னூட்டங்களால் மீண்டும் புத்துணர்வு கிடைக்கும் .  நம்மாலும் எழுத முடிகிறது, நம் எழுத்தை படித்து பார்த்து , கருத்து சொல்லி நட்பு பாராட்டும் உள்ளங்கள் இருப்பது மகிழ்ச்சி தரும் தானே! பின்னூட்டம் இட்டவர்களை விட  ஒவ்வொரு பதிவையும் படித்தவர்கள் எண்ணிக்கையை பார்க்கும் போது மனது மகிழ்ச்சியில் துள்ளும்.


அந்த காலம் மிகவும் இனிமையானது, நிறைய படித்தோம், நிறைய எழுதினோம், நட்புகள் நிறைய கிடைத்தது.  இப்போது  ஒரு சில பதிவர்கள் பதிவுகள் தான் படிக்க முடிகிறது, பின் தொடர முடிகிறது. மற்ற வலைபதிவுகளை  காட்டவும் மாட்டேன் என்கிறது.  நம் நட்புகள் பின் தொடரும் பதிவுகள் என்று தங்கள் வலைத்தளத்தில் வைத்து இருப்பதை வைத்து   ஒரு சிலரை படிக்க முடிகிறது.

நான்  தொடர்ந்து எழுத  உங்கள் பின்னூட்டங்கள் தான் காரணம்.  உற்சாக பின்னூட்டங்கள் ஊக்கம் தருகிறது எழுத.   என்றும் உங்கள் பின்னூட்டகளை விரும்பும் கோமதி அரசு.

கிளி பறவையை போட்டு பதிவு ஆரம்பித்தவள் , பறவைகளை விரும்புகிறவள்  இந்த   வலைத்தள பிரந்த நாளில்   பறவை போடாவிட்டால் எப்படி அதனால் கோடையில் தண்ணீர் உணவை தேடி குடும்பத்தோடு வந்த காடை பறவைகள் படம்  இதில் இடம்பெறுகிறது.



தண்ணீரை குடித்து தண்ணீரில்   அமர்ந்து இருக்கிறது

சிட்டுக் குருவி

காடை குடும்பத்தோடு ஒரு மணிப்புறாவும் நட்போடு அமர்ந்து இருக்கிறது.

நாங்கள்  போனதை பார்த்தவுடன் மீண்டும் கீழே படையெடுப்பு


கண்ணாடி கதவு வழியாக அவைகளுக்கு தெரியாமல் எடுக்க வேண்டும் படம். சிறு அசைவு தெரிந்தாலும் பறந்து போய் மதில் மேல் அமர்ந்து கொள்ளும்.


 
மேலே தொங்க விட்டு இருக்கும் உணவு பாத்திரத்திலிருந்து புறா, குருவி கொத்தி சிதறி கிடக்கும் தானியங்களை  இந்த காடை குஞ்சுகள்  தின்ன வருகிறது. கோடை வந்து விட்டது என்று தொட்டிகளில் கீழே எல்லாம் விதைகள் போட்டார்கள்.


அத்தனை விதைகளையும் கொத்தி தின்று விட்டு அதில் பள்ளம் பறித்து குழுமைக்கு அமர்ந்து கொள்கிறது. 




பள்ளத்தில் படுத்து குளிர்ச்சியில்   சுகமாய்   கண்  மூடி தூக்கம்

மாதுளைச்செடி, முருங்கை மரம்  கீழே பள்ளமாக இருக்கும் நிறைய தண்ணீர் மாலையில் விட்டது இருக்கும், அதில் மதிய நேரம் வந்து அமர்ந்து கொள்கிறது.



காடை பறவைகள் குடும்பமாக  சாலையை கடந்து செல்லும் போது பார்க்கவே அழகாய் இருக்கும்,  வரிசையாக நடந்து போகும்.

தொட்டியில் போட்ட டேபிள் ரோஸ் செடி விதைகளையும் தின்று விட்டது, தப்பி பிழைத்தவை வருகிறது . தொட்டி மேல் ஏறி விதைகள் இருக்கா என்று நோட்டம் இடுகிறது காடை குஞ்சு.



சிறிய காணொளிதான் பாருங்கள்.

15 , 16 பறவைகள் இருக்கும் . பதினாறும்  பெற்று பெருவாழ்வு வாழுங்கள் என்பது காடை பறவைகளுக்கு பொருந்தும்.
அப்பா, அம்மா, குஞ்சுகளுடன் அவை நடைபயின்று வரும் போது "பதினாறும்  பெற்று பெருவாழ்வு  வாழ்க!" இப்படி தான் வாழ்த்த தோன்றுகிறது. வேற்று உயிர்களிடமிருந்து  தப்பி பிழைத்து வாழ வேண்டும் என்று வாழ்த்துவேன்  காடை குஞ்சுகளைப்பார்த்து.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.
------------------------------------------------------------------------------------------

26 கருத்துகள்:

  1. திருமதி பக்கங்களுக்கு பதினாறாவது பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் மேலும் எழுதுவோம், சேர்ந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //திருமதி பக்கங்களுக்கு பதினாறாவது பிறந்தநாள் வாழ்த்துகள். மேலும் மேலும் எழுதுவோம், சேர்ந்திருப்போம்.//

      வாழ்த்துகளுக்கு நன்றி, எழுதுவோம் , சேர்ந்து இருப்போம், நன்றி.

      நீக்கு
  2. வலைச்சரம் என்பது ஒரு உற்சாகக் கடல்.  ஊக்குவிக்கும் திடல்.  நாங்களும் வலைச்சர ஆசிரியராய் இருந்திருக்கிறோம்.  அது ஒரு சுகமான காலம்தான்.  ஏன், இப்போது நாம் கடப்பதும் ஒரு சுகமான நேரமாய் பின்நாட்களில் நம்மாலே அறியப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வலைச்சரம் என்பது ஒரு உற்சாகக் கடல். ஊக்குவிக்கும் திடல். நாங்களும் வலைச்சர ஆசிரியராய் இருந்திருக்கிறோம். அது ஒரு சுகமான காலம்தான். ஏன், இப்போது நாம் கடப்பதும் ஒரு சுகமான நேரமாய் பின்நாட்களில் நம்மாலே அறியப்படும்.//

      நீங்கள் சொல்வது உண்மை.

      துளசி கோபாலும் வலை இல்லாமல் வாழ்வது இனி வரும் காலங்களில் கஷ்டமே !
      என்று பதிவு போட்டு இருக்கிறார்.

      அப்படி நம்மை வலை உலகம் பிணைத்து கொண்டு உள்ளது.
      நாம் கடப்பது சுகமான காலங்கள் தான்.

      நீக்கு
  3. காடைகள் அணிவகுப்பு படங்களும், காணொளிகளும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது தினம் காடைகளின் அணி வகுப்பை பார்த்து கொண்டு இருக்கிறேன். நேற்று பலமான காற்று வீசிய போது அவை எங்கு பதுங்கி கொண்டதோ தெரியவில்லை. இன்று மீண்டும் வந்தன.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. கோமதிக்கா! எனக்கு எபி யின் வயதெல்லாம் தெரியாது!!!!!!! நினைவில் இல்லை!!!!!! அது புதன் பக்கம் எபியில் நேற்று போல் படங்கள் வெளிவந்து ரொம்ப நாளாயிற்று என்பதால் ஹப்பா திரும்ப 16 என்று சொல்லியிருந்தேன் !!!!

    அப்படியே உங்க வலைத்தளமும் எப்போதும் 16 ஆக மார்கண்டேயராக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்!

    மீண்டும் வரேன் பறவைகளையும் உங்கள் நினைவுகளையும் வாசிக்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //கோமதிக்கா! எனக்கு எபி யின் வயதெல்லாம் தெரியாது!!!!!!! நினைவில் இல்லை!!!!!! அது புதன் பக்கம் எபியில் நேற்று போல் படங்கள் வெளிவந்து ரொம்ப நாளாயிற்று என்பதால் ஹப்பா திரும்ப 16 என்று சொல்லியிருந்தேன் !!!!//

      ஓ! அப்படியா நாங்கள் வலைத்தளம் ஆரம்பித்து 15 முடிந்து 16 ஆரம்பிக்கிறது. பொருத்தமாய் தான் சொல்லி இருக்கிறீர்கள்.
      இளமை நினைவுகளை மீட்டி விட்டது.

      நீங்கள் தமன்னாவின் படத்தை பார்த்து சொன்னீர்களா?
      அதுவும் சரிதான்.

      //அப்படியே உங்க வலைத்தளமும் எப்போதும் 16 ஆக மார்கண்டேயராக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள்!//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      //மீண்டும் வரேன் பறவைகளையும் உங்கள் நினைவுகளையும் வாசிக்க.//

      வாங்க வாங்க மெதுவா.

      நீக்கு
    2. ஓ! அப்படியா நாங்கள் வலைத்தளம் ஆரம்பித்து 15 முடிந்து 16 ஆரம்பிக்கிறது//

      ஓ! அப்படியுமா அட!!! பொருத்தமாகிடுச்சே!!!

      கீதா

      நீக்கு

    3. //ஓ! அப்படியுமா அட!!! பொருத்தமாகிடுச்சே!!!//

      ஆமாம் கீதா , நினைவூட்டியது போல பொருத்தம். நன்றி.

      நீக்கு
    4. காடை குடும்பம், மணிப்புறாவோடு இருப்பதும், புறா நீர் குடித்துவிட்டு அங்கு அமர்ந்திருப்பதும்

      பொதுவாகப் பறவைகள் சில விலங்குகள் அப்படித்தான் இல்லையாக்கா நாம் எடுப்பது அசைவு தெரிந்தால் உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விடும்

      பள்ளம் குழித்து அதில் அமரும் காணொளி எல்லாமே மிகவும் ரசித்துப்பார்த்தேன் கோமதிக்கா

      கீதா

      நீக்கு
    5. //காடை குடும்பம், மணிப்புறாவோடு இருப்பதும், புறா நீர் குடித்துவிட்டு அங்கு அமர்ந்திருப்பதும்

      பொதுவாகப் பறவைகள் சில விலங்குகள் அப்படித்தான் இல்லையாக்கா நாம் எடுப்பது அசைவு தெரிந்தால் உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விடும்//

      ஆமாம், அவற்றுக்கு பய உணர்வு இருக்கும் தானே!

      //பள்ளம் குழித்து அதில் அமரும் காணொளி எல்லாமே மிகவும் ரசித்துப்பார்த்தேன் கோமதிக்கா//

      ரசித்து பார்த்தற்கு நன்றி கீதா.

      நீக்கு
    6. மிக அருமையான பதிவு. கடந்த 16 ஆண்டுகளுக்கு எல்லோரையும் கொண்டு சென்று கடந்த காலங்களை நினைக்கும் போது எப்போதுமே இனிமைதான். உங்கள் ஆரம்பமும் அதற்கு உதவிய உங்கள் மகன் மகள் மருமகள், பேத்தி உட்பட அனைவரையும் குறிப்பிட்டு உங்கள் மகளின் எழுத்தையும் சொல்லி வலைச்சரத்தில் நீங்கள் இருவரும் ஆசிரியர்களாக இருந்தது பற்றியும் சொல்லியிருப்பதும் சிறப்பு.

      இத்தோடு கூடவே புறா காடை பறவைகளின் படங்களும் காணொளிகளும் அருமை.

      வாழ்த்துகள் இன்னும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

      துளசிதரன்

      நீக்கு
    7. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      மிக அருமையான பதிவு.//

      நன்றி.

      //கடந்த 16 ஆண்டுகளுக்கு எல்லோரையும் கொண்டு சென்று கடந்த காலங்களை நினைக்கும் போது எப்போதுமே இனிமைதான்.//

      ஆமாம்.


      //உங்கள் ஆரம்பமும் அதற்கு உதவிய உங்கள் மகன் மகள் மருமகள், பேத்தி உட்பட அனைவரையும் குறிப்பிட்டு உங்கள் மகளின் எழுத்தையும் சொல்லி வலைச்சரத்தில் நீங்கள் இருவரும் ஆசிரியர்களாக இருந்தது பற்றியும் சொல்லியிருப்பதும் சிறப்பு.//

      மகள் வலைச்சர பொறுப்பாசிரியராக இருந்தாள்.
      நான் ஆசிரியராக மட்டும் இருந்தேன்.

      //இத்தோடு கூடவே புறா காடை பறவைகளின் படங்களும் காணொளிகளும் அருமை.

      வாழ்த்துகள் இன்னும் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.//

      பதிவில் அனைத்தையும் ரசித்து படித்து கருத்து சொன்னதற்கும் உங்கள் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  5. பள்ளி கல்லூரி படிப்பு தொடர முடியாமல் போனால் என்ன பரவாயில்லை அதைவிட மிக நல்ல கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கீங்க அதை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்திருக்கீங்க கோமதிக்கா அதுவே உங்கள் வாழ்க்கையை முன்னே எடுத்துச் சென்றுள்ளது... உங்கள் குழந்தைகளுக்கும் பேரன் பேத்தி வரை அது தொடருது பாருங்க. நல்லதொரு குடும்பம் நீங்களும் மாமாவும் குடும்பத்திற்கு முன்னுதாரணம்.

    உங்கள் குழந்தைகள் (மருமகளையும் சேர்த்துதான்!!) உங்களை ஊக்கப்படுத்தி வலைப்பக்கம் தொடங்கச் சொல்லி எழுத வைத்தது மிக மிக மகிழ்வான விஷயம். பாருங்க நீங்க அவங்க சின்னவங்களா இருக்கறப்ப உங்கள் செயல்களால் கொடுத்த முன்னுதாரணம்தான். அவங்க இன்று உங்களை ஊக்கப்படுத்தி அன்போடு இருக்காங்க. அந்த சக்தி இன்னும் வழி நடத்தும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. //பள்ளி கல்லூரி படிப்பு தொடர முடியாமல் போனால் என்ன பரவாயில்லை அதைவிட மிக நல்ல கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கீங்க அதை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்திருக்கீங்க கோமதிக்கா அதுவே உங்கள் வாழ்க்கையை முன்னே எடுத்துச் சென்றுள்ளது... உங்கள் குழந்தைகளுக்கும் பேரன் பேத்தி வரை அது தொடருது பாருங்க. நல்லதொரு குடும்பம் நீங்களும் மாமாவும் குடும்பத்திற்கு முன்னுதாரணம்.//

    கற்றுக் கொண்டு கற்பித்தாலும் சில நேரம் கவலை , சினம் வராமல் இருக்காது அல்லவா? அங்கு கற்றுக் கொண்டதை என் வாழ்வில் பயன்படுத்த அடிக்கடி நினைவூட்டுவார்கள், கணவர், பிள்ளைகள். நான் கவலை பட்டால், கோபபட்டால் சொல்லி காட்டுவார்கள்.

    என்ன சொல்லி இருக்கிறார் மகரிஷி கவலை ஒழிக்கனும், சினம் தவிர்கனும், என்று. உடல் நலத்தை பாதிக்கும் என்று.

    //உங்கள் குழந்தைகள் (மருமகளையும் சேர்த்துதான்!!) உங்களை ஊக்கப்படுத்தி வலைப்பக்கம் தொடங்கச் சொல்லி எழுத வைத்தது மிக மிக மகிழ்வான விஷயம். பாருங்க நீங்க அவங்க சின்னவங்களா இருக்கறப்ப உங்கள் செயல்களால் கொடுத்த முன்னுதாரணம்தான். அவங்க இன்று உங்களை ஊக்கப்படுத்தி அன்போடு இருக்காங்க. அந்த சக்தி இன்னும் வழி நடத்தும்!//

    இன்றும் நிறைய பேசினான் மகன். சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும் என்று.
    சிறு வயதில் நம் பேச்சை அவர்கள் கேட்டு நடந்தார்கள். இப்போது அவர்கள் பேச்சை நாம் கேட்டு நடக்க வேண்டும். நல்லதை சொன்னால் ஏற்று கொள்ள வேண்டும் தானே!
    அவர்கள் கொடுக்கும் உந்து சக்திதான் வழி நடத்தி செல்கிறது.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  7. வலைச்சரம், தமிழ்மணம், இன்ட்லி போன்ற எத்தனை தளங்கள் காணாமல் போய்விட்டன.இன்றைய பதிவு நீண்ட பதிவானாலும், கொஞ்சம் பழைய நினைவு, படங்கள் என்று கலந்து நன்றாக இருக்கிறது.
    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்
      //வலைச்சரம், தமிழ்மணம், இன்ட்லி போன்ற எத்தனை தளங்கள் காணாமல் போய்விட்டன.//
      ஆமாம். தமிழ்மணம் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு கட்டுரைகள் அனுப்பினேன். ஆசிரியர் பொறுப்புக்கு அங்கும் அழைத்தார்கள். அவர்கள் தினம் ஒரு புது பதுவு நம்மை எழுத சொன்னார்கள், அந்த சமயம் அப்படி எழுத முடியாத சூழ்நிலை. கலந்து கொள்ள முடியவில்லை என்று மன்னிப்பு கேட்டு அடுத்த முறை கலந்து கொள்வதாக சொன்னேன், ஆனால் அதற்கு அப்புறம் தமிழ்மணம் இல்லை.

      //இன்றைய பதிவு நீண்ட பதிவானாலும், கொஞ்சம் பழைய நினைவு, படங்கள் என்று கலந்து நன்றாக இருக்கிறது.
      பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க.//

      நானும் நினைத்தேன் பதிவு நீண்டு விட்டதே என்று. இருந்தாலும் படித்து நன்றாக இருப்பதாக சொன்னது மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  8. 15லிருந்து 16... மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா. எனது வலைப்பூவும் 2009-இல் ஆரம்பித்தது தான்! நீங்கள் ஜூன், நான் செப்டம்பர்! தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது நல்ல விஷயம் தான்.

    வலைச்சர நாட்கள் - ஆஹா... எத்தனை மகிழ்ச்சியான நாட்கள். தேடித்தேடி பதிவுகளை படித்ததும், அறிமுகம் செய்ததும் நினைவில் பசுமையாக! நானும் சில முறை வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்திருக்கிறேன். இல்லத்தரசியும் இருந்திருக்கிறார். பசுமையான நினைவுகள் அவை.

    வலைத்தளம் தந்த நட்புகள்/தொடர்புகள் என அனைத்தும் சிறப்பு. அன்றைக்கு எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இன்றைக்கு எழுதுவதில்லை என்பதும் வருத்தமான விஷயம். அன்றைக்கு எழுதிக் கொண்டிருந்தவர்களில் சிலர் நம்மிடையே இல்லை என்பதும் வேதனை.

    தொடரட்டும் எழுத்தும் பதிவுகளும்.

    இன்றைக்கு வெளியிட்டு இருக்கும் படங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //15லிருந்து 16... மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா. எனது வலைப்பூவும் 2009-இல் ஆரம்பித்தது தான்! நீங்கள் ஜூன், நான் செப்டம்பர்! தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது நல்ல விஷயம் தான்.//


      உங்களுக்கும் வாழ்த்துகள் வெங்கட்.
      கணவர் மறைந்த போது விட்டு விடலாம் என்று நினைத்தேன், ஆனால் வலைத்தள நட்புகள்.மற்றும் என் குடும்பம் தந்த ஊக்கத்தால் மீண்டும் எழுத வந்தேன்.

      //வலைச்சர நாட்கள் - ஆஹா... எத்தனை மகிழ்ச்சியான நாட்கள். தேடித்தேடி பதிவுகளை படித்ததும், அறிமுகம் செய்ததும் நினைவில் பசுமையாக! நானும் சில முறை வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்திருக்கிறேன். இல்லத்தரசியும் இருந்திருக்கிறார். பசுமையான நினைவுகள் அவை.//

      ஆமாம், நிறைய படித்தோம் , பசுமையான நினைவுகள்.

      //வலைத்தளம் தந்த நட்புகள்/தொடர்புகள் என அனைத்தும் சிறப்பு. அன்றைக்கு எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இன்றைக்கு எழுதுவதில்லை என்பதும் வருத்தமான விஷயம்.//

      ஆமாம், எழுத பிடிக்கவில்லை என்பவர்களும், நேரம் இல்லை என்பவர்களும், மற்றும் வேறு வேறு தளங்களில் எழுதி கொண்டு இருப்பவரக்ளாக இருக்கிறார்கள்.


      // அன்றைக்கு எழுதிக் கொண்டிருந்தவர்களில் சிலர் நம்மிடையே இல்லை என்பதும் வேதனை.//

      வயது மூப்பு , மற்றும் உடல் நலக் குறைவால் நம்மிடையே இல்லை அவர்கள்.

      சில நாட்கள் முன் கார்த்தி( ஸ்கூல் பையன் ) நாஞ்சில் மனோ மறைந்து விட்டார் என்று போட்டு இருந்தார்.

      கேட்கும் போது வருத்தமாய் இருக்கிறது.

      //தொடரட்டும் எழுத்தும் பதிவுகளும்.

      இன்றைக்கு வெளியிட்டு இருக்கும் படங்களும் நன்று.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பிறந்த நாள் காணும் உங்கள் வலைப்பூவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 16 வருடங்களை கடந்த தங்களது வலைத்தளம் இனி என்றும் பதினாறாக சீரஞ்சீவியாக தொடர்ந்து பயணித்து வெற்றிநடை போட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    தாங்கள் வலைத்தனத்தில் கால் பதித்து வெற்றி பெற உதவியவர் தங்கள் மகள் என்பதையறிந்து பெருமகிழ்ச்சி கொண்டேன்.

    பதிவை படித்தவுடன் இதில் நிஜமாகவே ஒரு ஆச்சரியம்...! என் வலைத்தளத்தில் நான் எழுத ஆரம்பிக்க காரணமாக இருந்தவளும் என் மகள்தான். அவளின் ஊக்குவிப்பால் அவள் ஆரம்பித்த தளத்தில் இரண்டு மூன்று பதிவுகளை இட்டு என் எழுத்தார்வத்திற்கு விதை போட்டாள். அதன் பின் வேலை கிடைத்து விட்ட காரணத்தால் அவள் எழுதவில்லை. எனக்கென தனி தளம் அமைத்து தந்து உதவினார். இன்றுவரை அவளின் ஆதரவும், இளைய மகனின் கணினி அனுபவ கல்வியறிவும் சேர்ந்து என்னை இதுவரை ஏதோ எழுத வைத்துக் கொண்டுள்ளது.

    அப்போது தாங்கள் வலைச்சர ஆசிரியராக பதவியேற்றது மிக்க மகிழ்வை தருகிறது. எத்தனை கற்றவர்களின் அனுபவ பதிவுகள் அப்போது. இன்னமும் அந்த பசுமையான நினைவுகள் மனதில் தங்கி உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. பிறந்த நாள் காணும் உங்கள் வலைப்பூவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 16 வருடங்களை கடந்த தங்களது வலைத்தளம் இனி என்றும் பதினாறாக சீரஞ்சீவியாக தொடர்ந்து பயணித்து வெற்றிநடை போட என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.//

      உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி.

      //தாங்கள் வலைத்தனத்தில் கால் பதித்து வெற்றி பெற உதவியவர் தங்கள் மகள் என்பதையறிந்து பெருமகிழ்ச்சி கொண்டேன்.

      பதிவை படித்தவுடன் இதில் நிஜமாகவே ஒரு ஆச்சரியம்...! என் வலைத்தளத்தில் நான் எழுத ஆரம்பிக்க காரணமாக இருந்தவளும் என் மகள்தான். அவளின் ஊக்குவிப்பால் அவள் ஆரம்பித்த தளத்தில் இரண்டு மூன்று பதிவுகளை இட்டு என் எழுத்தார்வத்திற்கு விதை போட்டாள். அதன் பின் வேலை கிடைத்து விட்ட காரணத்தால் அவள் எழுதவில்லை. எனக்கென தனி தளம் அமைத்து தந்து உதவினார். இன்றுவரை அவளின் ஆதரவும், இளைய மகனின் கணினி அனுபவ கல்வியறிவும் சேர்ந்து என்னை இதுவரை ஏதோ எழுத வைத்துக் கொண்டுள்ளது.//

      நம்மில் நிறைய ஒற்றுமைகள் இருப்பது உண்மைதான் கமலா.
      குடும்பம் ஆதரவு இல்லாமல் பெண்களால் எதையும் சாதிக்கமுடியாது.
      குடும்பம் ஒத்துழைப்பும், ஊக்கமும் ஆதரவும் எப்போதும் வேண்டும்.
      அன்பை கொடுப்பாள், அன்பை நாடுவாள்.

      உங்களின் மகன், மகள் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது , நீங்கள் கைபேசி மூலமே அனைத்து பதிவுகளையும் படித்தும், எழுதியும் வருவது சாதனைதான்.

      ஒரு மடிகணினி வாங்கி கொள்ளுங்கள் எளிதாக இருக்கும் உங்களுக்கு.

      //அப்போது தாங்கள் வலைச்சர ஆசிரியராக பதவியேற்றது மிக்க மகிழ்வை தருகிறது. எத்தனை கற்றவர்களின் அனுபவ பதிவுகள் அப்போது. இன்னமும் அந்த பசுமையான நினைவுகள் மனதில் தங்கி உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      ஆமாம், மிகவும் திறமையானவர்களின் பதிவுகளை படித்தோம், இப்போது நேரம் குறைகிறது, எல்லோராலும் எல்லா தளங்களுக்கும் செல்ல முடியவில்லை. குறிப்பிட்ட நண்பர்கள் தளத்திற்கு மட்டுமே போய் படித்து பின்னூட்டம் இடுகிறோம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி கமலா.




      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    நான் கருத்துரைக்க ஆரம்பித்து விட்டால் அதுவே ஒரு பதிவாகி விடுமென நடுவில் நிறுத்தினேன்.

    தாங்கள் பதவியேற்ற வலைச்சத்தைப் படித்து வந்தேன். அதில் வந்த கருத்துக்களையும் ஒன்று விடாமல் படித்தேன். என்னையும் அப்போது நிறைய பேர் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது நான் ஏதோ பெரிய எழுத்தாளினி ஆகி விட்ட சந்தோஷத்தை பெற்றிருக்கிறேன். இராஜராஜேஸ்வரி அம்மா உட்பட மற்ற பதிவர்களும் வந்து என் தளத்தில் "இன்று நீங்கள் வலைச்சர அறிமுகத்தில் உள்ளீர்கள்" எனும் போது மனது பட்ட மகிழ்வை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

    இன்று உங்கள் எழுத்துகளின் ஆழத்தில் என் மனதில் இருப்பதையும் வெளிப்படுத்தி விட்டேன். மன்னிக்கவும்.

    பறவைகளின் நேசரான தாங்கள் இன்றைய பதிவையும் அழகான காடை பறவைகளை படங்கள் எடுத்து அதை பதிவாக்கி தந்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் மிக அழகு.

    தங்கள் எழுத்தை எப்போதும் (எனக்கு நீங்கள் அறிமுகமானதிலிருந்து) விரும்பி படிப்பவள் நான். உங்கள் மகளும் பதிவர் என இப்போது அறிந்து கொண்டேன். உங்கள் மகளின் பெயர் வலைச்சரத்தில் இருப்பதையும் முன்பே படித்துள்ளேன். இப்போதுதான் அவர் தங்கள் மகள் என்பதை அறிந்து கொண்டேன். உங்கள் மகளுக்கு என் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள். இன்றைய தங்களின் இனிய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் கருத்துரைக்க ஆரம்பித்து விட்டால் அதுவே ஒரு பதிவாகி விடுமென நடுவில் நிறுத்தினேன்.//

      உங்கள் கருத்துரை படிக்க ஆவலாக இருப்பேன் கமலா . விரிவான கருத்தை தருவீர்கள்.

      //தாங்கள் பதவியேற்ற வலைச்சத்தைப் படித்து வந்தேன். அதில் வந்த கருத்துக்களையும் ஒன்று விடாமல் படித்தேன். என்னையும் அப்போது நிறைய பேர் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய போது நான் ஏதோ பெரிய எழுத்தாளினி ஆகி விட்ட சந்தோஷத்தை பெற்றிருக்கிறேன். இராஜராஜேஸ்வரி அம்மா உட்பட மற்ற பதிவர்களும் வந்து என் தளத்தில் "இன்று நீங்கள் வலைச்சர அறிமுகத்தில் உள்ளீர்கள்" எனும் போது மனது பட்ட மகிழ்வை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.//

      ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை. நம் பதிவை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியதும் அடையும் மகிழ்ச்சி அளவில்லா மகிழ்ச்சிதான்.
      திண்டுக்கல் தனபாலன், ரூபன் அவர்கள் வந்து முதலில் உங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகபடுத்த பட்டு இருக்கிறது என்று சொல்லும் போது மட்டற்ற மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

      இராஜராஜேஸ்வரி அவர்கள் மறைவு மனதை மிகவும் சங்கடபடுத்தியது வெகு காலம். எல்லோர் பதிவுகளுக்கும் வந்து கருத்து சொல்லி ஊக்கப்படுத்துவார்கள்.

      //இன்று உங்கள் எழுத்துகளின் ஆழத்தில் என் மனதில் இருப்பதையும் வெளிப்படுத்தி விட்டேன். மன்னிக்கவும்.//

      இதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். மன்னிப்பு எதற்கு?

      உங்களுக்கு நேரமின்னையால் எழுத முடியவில்லை.
      நேரம் இருந்தால் அழகான கவிதைகள், கட்டுரைகள், கதைகள், சமையல் குறிப்புகள் என்று எழுதி அசத்துவீர்கள். பன்முக திறமைகள் படைத்தவர் நீங்கள்.

      //பறவைகளின் நேசரான தாங்கள் இன்றைய பதிவையும் அழகான காடை பறவைகளை படங்கள் எடுத்து அதை பதிவாக்கி தந்துள்ளீர்கள். படங்கள் அனைத்தும் மிக அழகு.//

      நன்றி நன்றி.

      //தங்கள் எழுத்தை எப்போதும் (எனக்கு நீங்கள் அறிமுகமானதிலிருந்து) விரும்பி படிப்பவள் நான். உங்கள் மகளும் பதிவர் என இப்போது அறிந்து கொண்டேன். உங்கள் மகளின் பெயர் வலைச்சரத்தில் இருப்பதையும் முன்பே படித்துள்ளேன். இப்போதுதான் அவர் தங்கள் மகள் என்பதை அறிந்து கொண்டேன். உங்கள் மகளுக்கு என் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள். இன்றைய தங்களின் இனிய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      என் எழுத்தை விரும்பி படிப்பவர் நீங்கள் என்பது மகிழ்ச்சி எப்போதும் எனக்கு.

      மகள் கவிதை, கட்டுரைகள் தன் குழந்தைகளை பற்றி என்று நிறைய எழுதி கொண்டு இருந்தாள் . கால சூழ்நிலை இப்போது அவள் எழுதுவது இல்லை. இறைவன் அவள் வாழ்வில் நிறைய மாற்றங்களை செய்து விட்டார். உங்கள் வாழ்த்துகளை சொல்கிறேன்.

      மீண்டும் வந்து அன்பான விரிவான கருத்து தந்தமைக்கு நன்றி கமலா.






      நீக்கு
  11. தங்களது வலைத்தளத்திற்கு எமது வாழ்த்துகளும்கூடி....

    வலைச்சரம் இருந்தபோது எல்லா பதிவர்களும் சேரும் ஆலமரம் போல இருந்தது. மீண்டும் வலைச்சரம் இயங்கினால் பழையநிலை வரலாம்.

    உங்கள் மகள் 2006-லேயே வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //தங்களது வலைத்தளத்திற்கு எமது வாழ்த்துகளும்கூடி....

      வலைச்சரம் இருந்தபோது எல்லா பதிவர்களும் சேரும் ஆலமரம் போல இருந்தது. மீண்டும் வலைச்சரம் இயங்கினால் பழையநிலை வரலாம்.

      உங்கள் மகள் 2006-லேயே வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறார்களே..//

      உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.மீண்டும் வலைச்சரம் இயங்கினால் மகிழ்ச்சிதான்.. நீங்கள் சொல்வது உண்மை ஆலமரம் போல இருந்தது, பல பறவைகள் அதில் மகிழ்ச்சியாக இருந்தது.

      மகள் முன்பே எழுதினாள், இப்போது எழுதுவது இல்லை.
      அவள் மூலம் தான் நிறைய வலைத்தள நட்புகள் கிடைத்தது.
      மகனும் வலைத்தளம் வைத்து இருந்தான் , அவனும் எழுதுவது இல்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு