திங்கள், 11 மே, 2020

கூட்டைக் கட்டிப் பார்

இரண்டு நாட்களுக்கு முன் பெண் புறா ஜன்னல் ஜன்னலாக மாறி மாறி  உட்கார்ந்து கொண்டு இருந்தது. கொஞ்ச நேரம் ஒரு ஜன்னலில் புகுந்து உட்காரும். கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு ஜன்னலில் அமரும்.
நான் என் அலைபேசியில் அந்த படங்களை எடுத்து முகநூலில் போட்டேன். எந்த ஜன்னல் என் தனிமைச் சிறைக்கு வசதி ?  என்று கேள்வி கேட்பது போல் போட்டு இருந்தேன்.



இந்த ஜன்னல் வசதி  இல்லை
இன்று தான் தெரிந்தது அது முட்டையிட  கூடு கட்டஇடம் வசதி இருக்கா என்று  பார்க்கிறது என்று.
ஆண் புறா குச்சிகள் கொண்டு வந்து தருகிறது


பெண்புறா அதைச் சரியாக வைக்கிறது. இன்று காலை முதல் கொண்டு வந்து வைத்தது நாலு குச்சிதான். அதைத் திரும்பத் திரும்பப் பெண் புறா சதுரமாக வைப்பது, அப்புறம் எடுப்பது, அப்புறம் கொஞ்ச நேரம் அமைதி என்று இருக்கிறது.







குச்சியை எல்லாம் கீழே தள்ளி விட்டு உம் என்று இருக்கிறது பெண்புறா, மேலே ஏதோ யோசனையில் இருக்கிறது ஆண்புறா .

நாலுமணிக்கு எட்டிப்பார்த்தால் புறாக்களைக்  காணோம். அங்கு அண்டங் காக்கை நிற்கிறது. அண்டங்காக்கையைக் கண்டு பயந்து போய் எப்போதும் நிற்கும் இடத்தில் பறந்து போய்  நிற்கிறது பறவைகள்.


இது போட்ட சத்தம் கேட்டு நான் எட்டிப்பார்த்தேன்

கண்ணதசான் சொன்ன வரிகள் நினைவுக்கு வருது ;- ''அவர் அவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை
அறியாத மானிடருக்கு அக்கரையில் பச்சை."



 அவர் அவர் வாழ்க்கை அவன் போட்ட பிச்சை அறியாத மானிடருக்கோ அக்கரை  பச்சை

பறவைகளின்  வாழ்க்கையில் தான் எத்தனை இடையூறுகள்! நாம்
நினைக்கிறோம் பறவைகள்  போல சுதந்திரமாக வாழ வேண்டும் என்று.
அவைகளுக்கும் கஷ்டங்கள், மகிழ்ச்சிகள் போராட்டங்கள் உள்ளன என்று தெரிகிறது.


ஒவ்வொரு உயிரும் வாழ  இறைவனது கருணை வேண்டும் .


                                      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

=======================================================================

54 கருத்துகள்:

  1. புறாக்கள் படங்கள், கூடுகட்ட அவை படும் சிரமம் எல்லாம் நன்றாகச் சொல்லியிருக்கீங்க. படங்களும் எப்போதும்போல அருமை.

    தலைப்புதான் 'திடுக்' என நினைக்க வைக்கிறது. பாஸிடிவ் தலைப்பாக வைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      நான் தலைப்பை வைக்கும் போதே நினைத்தேன், சரியில்லை என்று மனது சொன்னது. நீங்களும் சொல்லி விட்டீர்கள்.
      தோசைக்கு கிரைண்டரில் மாவு ஓடிக் கொண்டு இருந்தது, அதை எடுத்து கரைத்து வைத்து விட்டு வந்து தலைப்பை மாற்றி விட்டேன். "வீட்டைக் கட்டிப்பார்" என்று சொல்வார்கள் இல்லையா அது போலதானே இதுவும் கூட்டைக்கட்டிப்பார் வைத்துவிட்டேன் நன்றாக இருக்கிறதா?


      நீக்கு
    2. கூட்டைக் கட்டிப் பார்... ஜோடியைத் தேடிப்பார்... ஆஹா வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் தலைப்பு வந்துவிட்டதே. அருமை..

      நீக்கு
    3. //கூட்டைக் கட்டிப் பார்... ஜோடியைத் தேடிப்பார்//

      இது என்ன புது மொழி ! முட்டையிட மட்டுமே கூடு கட்டும் பறவைகள்.

      //ஆஹா வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் தலைப்பு வந்துவிட்டதே. அருமை..//

      உங்களுக்கு தலைப்பு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  2. புறாக்கள் பார்க்க அழகா இருக்குங்க அக்கா.இவை இப்படித்தான் முதலில் இடம் பார்த்து சுற்றுப்புறம் பார்த்து பாதுகாப்பு உண்டான்னு உறுதி செய்தே கூடு கட்டுவாங்க .பறவைகள் போலும் பட்டாம்பூச்சியைப்போலும் வாழணும்னு நானும் ஆசைப்பட்டேன் .ஆனா அவற்றுக்கு பல்வேறு இடையூறுகள் இருக்கு அவரவர் இடத்தில இருந்துபார்த்தாதான் தெரியும் கஷ்டங்கள் .உண்மைதான் இறைவன் கருணையால்தான் ஒவ்வொரு ஜீவனும் பிழைக்குது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      உங்களையும், அதிராவையும் எல்லோரும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
      நீங்கள் வந்தது சந்தோஷம். வற்றல், வடகம் போட்டு முடித்து விட்டீர்களா?

      ஆமாம் ஏஞ்சல், அவற்றிற்கு பாதுகாப்பு உணர்வு கிடைத்தால்தான் அவை கூடு கட்டும்.
      பட்டாம்பூச்சி போல் பறந்து போக ஆசைதான் எல்லோருக்கும் நீங்கள் ஆசைபட்டது தவறு இல்லை. கூட்டுப்புழுவிலிருந்து வெளியே வரவே தவம் இருக்கும் என்பார்கள்.

      அவரவர் இடத்தில் இருந்துப் பார்த்தால் தெரியும் என்பது உண்மை. அதற்கு கதை கூட உண்டு, ஒரு மனிதன் இறைவனிடம் அவன் ஆசைப்பட்ட உயிர்களாய் மாற வரம் கேட்டு மாறி ஒவ்வொன்றின் கஷ்டங்களை உணர்ந்து கடைசியில் என்னை மனிதனாக மாற்றிவிடு என்று இறைவனிடம் கேட்கும் கதை படித்து இருப்பீர்கள்தானே ஏஞ்சல்?

      இறைவன் கருணையால்தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து இருக்கமுடியும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  3. நாங்க முன்பு இருந்த அடையார் வீட்டில், புறாக்கள் கூடு கட்டி முட்டைகள் இடும்.

    அரபிப் பழமொழி (அல்லது அவங்களோட நன்னெறி) ஒன்று உண்டு. விருந்தாளிகள்-கணவன்/மனைவி அவங்க வீட்டில் தங்கியிருக்கும்போது கருவுற்றால், அது அந்த வீடு அவங்களுக்கு நல்ல மனநிலையையும் நிம்மதியையும் கொடுத்திருக்கிறது, தங்களுக்கு அது கெளரவம் என்று நினைப்பார்களாம்.

    அதைத்தான் புறாக்கள் நினைவுபடுத்துகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறாக்கள் கூடு கட்டி முட்டைகள் இட்டு அதற்கு உணவு ஊட்டுவதைப் பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால் அந்த ஜன்னல் சரியில்லை என்று மனது சொல்லிக் கொண்டே இருந்தது. வேறு நல்ல வசதியான இடத்தில் கூடு கட்டி முட்டையிட்டு நல்லபடியாக வாழட்டும்.

      நீங்கள் சொன்ன அரபி பழமொழி அருமை. நம் நாட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் நல்லது என்பார்கள்.

      எல்லோருக்கும் நல்ல மனநிலை, நிம்மதி இருந்தால் நல்லதுதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. புறா அத்தனை சீக்கிரம் கூடு கட்டிவிடாது. இன்னும் 2 நாட்களாவது ஆகும். நல்ல பொறுமையாகப் படங்கள் எடுத்துள்ளீர்கள். இங்கே எதிர் குடியிருப்புக்காரங்களின் குளியலறையின் சின்ன ஓட்டைக்குள் தேன்சிட்டு குடித்தனம் வைக்கும். இந்த வருஷம் என்னமோ காணவில்லை. குளவிகள், வண்ணாத்திப் பூச்சிகள் என அவைதான் எங்கே பார்த்தாலும் கூடு கட்டிக்கொண்டு இருக்கின்றன. நல்ல பகிர்வுக்கு நன்றி.

    முதலில் என்ன தலைப்பு வைத்திருந்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணகம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம், நீங்கள் சொல்வது போல்தான் புறாக்கள் அவ்வளவு சீக்கீரம் கூடு கட்டி விடாதுதான். எதிர் வீட்டில் எங்கள் வீட்டில் எல்லாம் வந்து வந்து குச்சி வைத்துக் கொண்டு இருந்தது அப்புறம் வரவே இல்லை.
      தேன்சிட்டுக்கு வேறு நல்ல இடம் கிடைத்து விட்டது போலும்.
      இங்கு குளவிகள் வித விதமாய் எங்கள் வீட்டு ஜன்னலின் வெளிப்பக்கம் கூடு கட்டுது. சின்னது, பெரிது ஒல்லி, வட்டம் என்று வித விதமாய் .

      முதலில் "வாழ்வது கடினம்" என்று வைத்தேன்.
      கண் மருத்துவரை போய் பார்த்தீகளா?

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  5. ஆழ்ந்த அர்த்தமுள்ள பதிவு. வாசிப்பவர்களும் மேலோட்டமாக வாசிக்கக் கூடாது என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்

      நீங்கள் எல்லோரும் ஆழ்ந்து வாசிப்பவர்கள் தானே!

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. மிக அழகாக படம் எடுத்து அதை பதிவாக்கி இருக்கீங்க மா ..

    எத்தனை பொறுமையாக அவைகள் தம் கூடு கட்ட வேலை செய்கின்றன ...

    விரைவில் அவைகளுக்கு சிறப்பான இடம் அமையட்டும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      ஆமாம் அனு, அவைகளுக்கு பொறுமை அதிகம் தான்.
      உங்கள் எண்ணம் போல் விரைவில் சிறப்பான இடம் அமைய வேண்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. சிறப்பான தத்துவத்தை அழகான படங்கள் மூலம் விளக்கி விட்டீர்கள் அம்மா...

    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      படங்களும் பதிவு நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  8. பலம் வாய்ந்த கழுகு பற்றிய ஒரு தகவல் :

    ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள்... 40 வயதிற்கு பின் ஒரு சவால்... அதில் வென்றால் அதற்கு மறுபிறவி...

    40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும்... இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்களும் கூா்மை இழக்கும்... பறக்கும் இறகுகளும் பெரிதாகி பாரமாகி விடும்... கழுகின் பலம் குறைந்து முதுமையடையும்...

    இதனால், தனித்திருக்கத் தொடங்கி, காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும்... அங்கு, தனது அலகின் மூலம் சிறகுகளையும் நகங்களையும் பிடுங்கி விட்டு, அலகினை பாறையில் உரசி உதிா்த்து விடும்... உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும்... எவா் கண்ணிலும் படாமல், பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்று உயிா் வாழும்...

    மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல்...கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து வளா்ச்சி பெறுதல்... நான்காம் மாதத்தில் முன்பு போல் இறக்கைகள் நீண்டு, நகங்களும் அலகும் கூா்மையாகவும் வளா்ந்து, ஓா் இளம் பறவையாக மீண்டும்... அடுத்த முப்பது ஆண்டுகளும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும்... மீண்டும் வானில் சக்கரவா்த்தி...!

    மூன்று மாதம் தனித்திருத்தல் - 30 ஆண்டுகள் தனக்கான காலத்தினை தானே உருவாக்கிக் கொள்கிறது கழுகு... மீண்டும் புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம்...!

    இதுவும் நமக்கு ஒரு பாடமே... இன்றைய தனித்திருத்தலின் வலிகளை ஏற்றுக் கொண்டால், இயற்கையின் புதிய வழிகளை அனுபவிக்க உலக மக்களுக்கு ஒரு சாத்தியமே... சரித்திரமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று மாதம் தனித்திருத்தல் - 30 ஆண்டுகள் தனக்கான காலத்தினை தானே உருவாக்கிக் கொள்கிறது கழுகு... மீண்டும் புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம்...!

      இதுவும் நமக்கு ஒரு பாடமே... இன்றைய தனித்திருத்தலின் வலிகளை ஏற்றுக் கொண்டால், இயற்கையின் புதிய வழிகளை அனுபவிக்க உலக மக்களுக்கு ஒரு சாத்தியமே... சரித்திரமே...//

      அருமையான கழுகின் வாழ்க்கை முறை தகவல் மூலம் தனித்திருத்தலின் வலிகளை தாங்கி கொள்ளும் மன பலத்தை பெறலாம் என்று சொல்லிவிட்டீர்கள்.
      வலிகளை தாங்கி கொள்வோம்.

      தொலைக்காட்சியில் சாமானியர்கள் படும் துன்பம் மனதை கலங்க வைக்கிறது.

      இயற்கை புதிய வழிகளை காட்ட வேண்டும். மீண்டும் எழுவோம் உற்சாகத்தோடு.
      நன்றி தனபாலன் அருமையான கருத்து சொன்னதற்கு.

      நீக்கு
  9. மிக பொறுமையாகவும் அதே சமயத்தில் அழகாகவும் படம் எடுத்து அதை பதிவாக்கி தந்து இருப்பது அருமை அதிலும் கண்ணதசான் சொன்ன வரிகளளை நினைவு கூர்ந்து முடித்த விதம் அருமை.. சபாஷ் என்று மனதார பாரட்ட தோன்றுகிறது குட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்

      படங்கள் நன்றாக இருப்பதாய் சொன்னதற்கு நன்றி.
      கண்ணதாசனின் இந்த வரிகள் அடிக்கடி புதுயுக தொலைக்காட்சியில் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.

      அது மனதில் பதிந்து விட்டது. கண்ணதாசன் பாடல்களை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.


      எங்கள் ப்ளாக்கில் ஒரு முறை தலைப்பாக வைத்தார்கள் வெள்ளி அன்று என்று நினைக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு
  10. அன்பு கோமதி மா.
    எத்தனை அருமையான பதிவு.
    இந்தப் புறாக்கள் க்கொடு கட்டி இருக்க வேண்டும்.
    மனம் பதைக்கிறது அவர்களது பயத்தைக் கண்டு.
    மிக அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.

    அந்தக் கண்களில்தான் எத்தனை உணர்ச்சி.
    நன்றி மா.
    இனி வீடுகட்டினால் புறாக்களுக்கும் ,பறவைகளுக்கும் இடம்
    கொடுத்துக் கட்ட வேண்டும் என்ற சட்டம் வந்தால் என்ன.
    மும்பையில் இது போலப் பல இடங்களைப் பார்த்திருக்கிறேன்.
    நம்வீட்டு செடிகளுக்குள் முட்டை இட்டுவிடும்.
    காக்கை வந்தால் நானே போய் விரட்டிவிடும்.

    அன்பு தனபாலனின் கழு வரலாறு மிக அருமை.
    இந்த ஊரில் கழுகுகளுக்கு முக்கியத்துவம் அதிகம்.
    அவர்களது தேசியப் பறவை ஆயிற்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      ஐந்து மணிக்கு மறுபடியும் வந்து உட்கார்ந்தது ஜன்னலில்.
      மீண்டும் சிறிது நேரத்தில் பறந்து போய் விட்டது.
      பார்ப்போம் மீண்டும் வருகிறதா என்று .
      இந்த இரண்டும் வீட்டுக்கு பின்னால் மதிலில் உட்கார்ந்து இருக்கும் மாலை வரை.

      மகள் வீட்டில் மணிப்புறா பூத் தொட்டியில் முட்டை இட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன், அங்கு பூனை வரும் அதனிடமிருந்து அந்த முட்டையை குஞ்சு பொரிக்கும் வரை காவல் காத்து பாதுகாக்க வேண்டும்.
      தேசிய பறவை என்றால் கழுகிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தான்.
      தனபாலன் பகிர்ந்து கொண்டது அருமைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.








      நீக்கு
  11. //பறவைகளின்  வாழ்க்கையில் தான் எத்தனை இடையூறுகள்! நாம்
    நினைக்கிறோம் பறவைகள்  போல சுதந்திரமாக வாழ வேண்டும் என்று.
    அவைகளுக்கும் கஷ்டங்கள், மகிழ்ச்சிகள் போராட்டங்கள் உள்ளன என்று தெரிகிறது.//100% உண்மை. ஒரு கூடு கட்ட புறா எடுக்கும் முயற்சிகளை படங்களோடு அழகாக விளக்கியிருக்கிறீர்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      ஒவ்வொரு உயிரும் வாழ்க்கையை நடத்திச்செல்ல நிறைய முயற்சிகளும், உழைப்பும் கொடுக்கிறது. இயற்கை, மற்றும் பிற உயிர்களால் இன்னல்கள் என்று அத்தனையும் கடந்துதான் வாழ்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி பானு.

      நீக்கு
  12. //ஒவ்வொரு உயிரும் வாழ இறைவனது கருணை வேண்டும்//

    ஆம் சகோ அவனது கருணையின்றி எதுவும் நிகழாது.

    படங்களை பொருமையாக எடுத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //அவனது கருணையின்றி எதும் நிகழாது//
      ஆம், இறைவனின் கருணையால் தான் வாழ்கிறோம். அவனின்று ஒரு அணுவும் அசையாது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. ஆஆஆவ்வ் கோமதி அக்கா, அமடப்புறாவும் மணிப்புறாவும் அழகோ அழகு.. பாவமாக இருக்குது... எவ்ளோ கஸ்டப்படுகிறது முட்டையை இடுவதற்கு, அந்த இடத்தில் கூடு கட்டினாலும், சரிஞ்சு விழுந்துவிடுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      வற்றல், வ்டகம் போட்டு முடித்து விட்டீர்களா?
      எல்லோரும் உங்களையும், ஏஞ்சலையும் தேடினோம்.

      ஆமாம், அதிரா அந்த இடம் முட்டையிட ஏற்ற இடம் இல்லைதான்.
      அவைகள் படும் துன்பத்தைப் பார்க்கும் போது நம் துன்பம் சிறியது.

      நீக்கு
  14. ஆண்புறாப்பிள்ளைக்கு சோம்பேறித்தனம் போலும், நிறையக் குச்சுகள் எடுத்து வர ஹா ஹா ஹா அதனாலதான் மணிப்புறாப்பிள்ளைக்கு கோபம் வந்து உம்மென இருக்கிறா.. இனி இவர் ஏதும் கொண்டுவந்து குடுத்துச் சமாதானப் படுத்துவார் போலும்.. நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் ஹா ஹா ஹா... படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு இடமாக கூடு கட்டிப் பார்க்குது சரியான கூடு அமைக்க இடம் பார்க்கவில்லை என்று கோபம் போலும்.
      நமக்கு சரியான வீடு பார்த்து குடித்தனம் வைக்கவில்லை என்றால் கோபம் வரும் தானே!

      கூடு கட்ட நல்ல இடமாக அமையும் என்று நம்புவோம்.

      நீக்கு
  15. //அவர் அவர் வாழ்க்கை அவன் போட்ட பிச்சை அறியாத மானிடருக்கோ அக்கரை பச்சை//

    பூஸ் ரேடியோவில் அடிக்கடி போகும் இப்பாடல், என் பக்கம் பகிர நினைப்பேன், ஆனா அது கவலையான பாட்டு என்பதால் விட்டு விடுவேன்... அருமையான தத்துவப் பாடல்..

    இக்கரைக்கு அக்கரைப் பச்சை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டு நன்றாக இருக்கும் அதிரா. படமும் நன்றாக இருக்கும்
      பல வருடமாச்சு படம் பார்த்து. தூரத்தில் இருந்துப் பார்க்க அடுத்தவர் வாழ்க்கை நம்மைவிட மேலானது போல் தெரியும். அந்த வாழ்க்கையிலும் எவ்வளவு மேடு பள்ளங்கள், இடையூறுகள் பக்கத்தில் போய் பார்த்தால் தெரியும் என்று சொல்லும் கதை.
      வசனங்கள் நன்றாக இருக்கும்.
      அலுமினிய பாத்திரம் கீழே விழுந்தால் சத்தம் போடும் சங்கீதமா பாடும்?
      என்ற வசனம் அப்போது எல்லோரும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      ஸ்ரீராம் முன்பு பகிர்ந்து இருந்தார். நீங்களும் போடுங்கள் ஒரு நாள்.

      நீக்கு
    2. அதிரா , அந்த பாடலும், படமும் நன்றாக இருக்கும்.
      படிப்பினையை போதிக்கும் படம்.
      பல வருடங்கள் முன்பு பார்த்த படம்.

      ஸ்ரீராம் அந்த பாடலை வெள்ளிக்கிழமையில் போட்டு விட்டார்.
      நீங்களும் ஒரு நாள் போடுங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. "அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை" என்று இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //"அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை"//

      அப்படியும் சொல்லலாம்.


      நீக்கு
  17. பொறுமையாகக் காத்திருந்து படங்கள் எடுத்திருக்கிறீர்கள். பெண்புறா மனதில் நினைக்கும் வசதியில் கட்ட வரவில்லை போல.. இடம் போதவில்லோயோ... குச்சி சரியில்லையோ... பாவம். இதில் அண்டங்காக்கை வில்லன் வேறு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், பெண்புறா அதை எத்தனை தரம் குறுக்கும், நெடுக்கும் வைத்துப்பார்த்தது இடம் போதவில்லை என்று தான் நினைக்கிறேன்.
      அதனால்தான் குச்சிகளை தள்ளிவிட்டு விட்டது.

      பாவம் அண்டங்காக்கை எதற்கு வந்ததோ அவை பயந்து பறந்து விட்டது.

      நீக்கு
  18. நாங்கள் இப்போது குடியிருக்கும் பகுதியில் புறாக்கள் நிறைய இருக்கின்றன. ட்யூட்டிக்குப் போவதுபோல காலை கூட்டம் கூட்டமாய் பேட்ச் பேட்ச்சாய் ஒரு திசையில் பறப்பவை, மாலை வீடு திரும்புவதுபோல அதேபோல திரும்பும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ட்யூட்டிக்குப் போவதுபோல காலை கூட்டம் கூட்டமாய் பேட்ச் பேட்ச்சாய் ஒரு திசையில் பறப்பவை, மாலை வீடு திரும்புவதுபோல அதேபோல திரும்பும்.//

      உணவு தேடி உண்பதும், குஞ்சுகளுக்கு அளிப்பதும் அவைகளின் வேலைதானே!

      புறாக்கள் காலை இறைதேடி நம் குடியிருப்புகளுக்குதான் வருகிறது.

      கூட்டம் கூட்டாமாய் காலையும், மாலையும் நாறைகள் பறக்குமே அவை வரிசையாக பறப்பது பார்க்க அழகு.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.


      நீக்கு
  19. "ஜன்னல் புறாக்கள்" என்ற பெயர் இக்கட்டுரைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்

      "ஜன்னல் புறாக்கள்" என்ற பெயர் இக்கட்டுரைக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
      நீங்கள் சொல்வதும் நன்றாகத்தான் இருக்கிறது.

      நான் ஜன்னல்வழியே ! என்று இந்த பறவைகளைப் பற்றி பதிவுகள் போட்டு இருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  20. அழகா பொறுமையா படங்கள் எடுத்திருக்கிறீங்க அக்கா. தலையை திருப்பியும்,சாய்த்தும் பார்க்கையில் நீங்கள் படம் எடுப்பதை கண்டு போஸ் கொடுக்கிறதோ? உங்களுக்கு புறா கூடு கட்டுவது போல் எங்க வீட்டில் மேல் கூரையில் சிட்டுகள் கட்டி இருக்கிறாங்க. பாவங்கள் காகத்தினால் பயந்துபோய்விட்டினம். அருமையான, தத்துவ பாடல் வரிகள். பொருத்தமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மா, வாழ்க வளமுடன்
      ஆமாம், அம்மு நான் எடுக்கும் போது என்னை தலையை சாய்த்து பார்த்தது.
      இந்த இரண்டும் என்னைபார்த்து பயப்பாடது.
      கூரையில் சிட்டுகள் கூடு கட்டி இருப்பது மகிழ்ச்சி.
      காலை முதல் இரவு வரை குஞ்சுகள் சிலுங்க் சிலுங்க் என்று சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும். குஞ்சுகள் பறந்து போய்விட்டால் வெறிச் என்று போய்விடும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  21. பறவைகளுக்கும் பிரச்சனைகள். பிரச்சனைகள் இல்லாத உயிரினம் ஏது? ஏதோ ஒரு வகையில் சவால்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன எல்லா உயிரினங்களுக்கும். அவற்றிலிருந்து விடுபடும் வகைகளையும் ஆண்டவன் அவற்றுக்குக் கொடுத்தே இருக்கிறார்.

    படங்கள் அனைத்துமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான் வெங்கட் எல்லா உயிர்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. அவற்றிலிருந்து விடுபடும் வழி வகைகளை அவ்ற்றிற்கு இறைவன் கொடுத்து இருக்கிறார் என்பதும் உண்மை தான்.
      இன்று மறுபடியும் ஜன்னலில் உடகார்ந்து இருக்கிறது, மீண்டும் குச்சி கொண்டு வந்து கொடுக்குது ஆண் புறா. பார்க்க வேண்டும் கூடு கட்டி முடிக்குமா என்று.

      உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  22. அங்கே சுற்றிக் கொண்டிருக்கும் அண்டங்காக்கையினால் தங்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தே அந்தப் பெண்புறா கூடு கட்டவில்லை என்பது தெளிவு...

    கவியரசரின் பழமொழி.. மற்றும் அழகான படங்களுடன் பதிவு..
    ஆனாலும் மனம் என்ற ஒன்று இருக்கின்றதே.. புறாக்களுக்காக இரங்குகின்றது..

    அவன் பார்த்துக் கொள்வான்... பிரார்த்திப்போம்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      நீங்கள் சொல்வது சரிதான், இன்றும் காலை பெண்புறா ஜன்னலில் வந்து அமர்ந்தது ஆண்புறா குச்சி கொண்டு வந்து கொடுத்தது.
      அடுத்து கொஞ்ச நேரத்தில் அண்ட்ங்காக்கை வந்தது இரண்டு புறாக்களும் பறந்து சென்று விட்டது.
      நீங்கள் சொல்வது போல் அவன் பார்த்துக் கொள்வான் பிரார்த்திப்போம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  23. புறாக்கள் மிக அழகு. புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  24. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. புறா படங்களை அழகாக எடுத்துள்ளீர்கள்." எந்த ஜன்னல் என் தனிமை சிறைக்கு வசதி." நல்ல கற்பனையுடன் அதன் எண்ணங்களை சொல்லியுள்ளீர்கள். அதன் கர்ப்ப காலங்களில் அதுவும் ஒருவித பயத்துடன் தனிமைபடுத்திக் கொள்ளுமோ?

    காகம் தன் கர்ப்ப காலத்தில் ஒருவித எச்சில் திரவம் மாதிரி அதன் வாயில் சுரப்பதால், சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் அமையாக ஒரிடத்தில் இருக்குமென எங்கோ படித்த நினைவு. சரியீக நினைவில்லை. தங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

    பறவைகளையும் அந்தந்த நேரங்களில் காப்பவன் இறைவன்தான்! அவைகளுக்கும் அது புரிந்திருக்கும். அதனால்தான் உரிய காலங்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள யோசனைகள் செய்கிறது போலும்.!

    பெண் புறாவுக்கு மனதுக்குள் எத்தனை திட்டங்களோ? ஆண் புறாவுடன் கருத்து வேற்றுமை கொண்டு உம்மென்று தனியாக அமர்ந்துள்ளதோ ? படங்களை அழகாக எடுப்பது மட்டுமின்றி அதற்கு விளக்கங்களையும், அதன் எண்ணங்களையும் மிக அருமையாக தெளிவுபடுத்துகிறீர்கள். பாராட்டுக்கள். காக்கைக்கு பயந்து பறந்து சென்ற அப்பறவைகள் நல்லபடியாக கூடுகட்டி தன் குஞ்சுகளை நல்லபடியாக காக்கட்டும்.

    நான் இந்தப் பதிவுக்கு கொஞ்சம் தாமதமாக வர வேண்டியதாய் போனதற்கு மன்னிக்கவும். ஏதோ வேலைகள் என தொட்டு தொட்டு என்னால் வர இயலாமல் போய் விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

    //அதன் கர்ப்ப காலங்களில் அதுவும் ஒருவித பயத்துடன் தனிமைபடுத்திக் கொள்ளுமோ?//

    அப்படித்தான் போல் இருக்கிறது. அதன் இணை கொஞம் அருகில் உட்கார்ன்ஹ்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.

    காகம் பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்வது புதிய செய்தி எனக்கு.

    //பறவைகளையும் அந்தந்த நேரங்களில் காப்பவன் இறைவன்தான்! அவைகளுக்கும் அது புரிந்திருக்கும். அதனால்தான் உரிய காலங்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள யோசனைகள் செய்கிறது போலும்.!//

    ஆமாம், இன்றும் அது எங்கள் வீட்டுக்கு வந்து உணவு எடுத்துக் கொண்டு ஜன்னலில் அமர்வதும் பறப்பதுமாக
    இருக்கிறது .

    அந்த இடம் சரியில்லை போலும் குச்சிகளை வைத்துப் பார்ப்பதும் அப்புறம் கீழே தள்ளிவிடுவதுமாக இருக்கிறது பெண் புறா . அதனால் ஆண் புறா வேறு வழி யோசிக்கிறது போலும். கூடு அமைந்தால் தான் முட்டையிடும் போல.

    நல்லபடியாக முட்டையிட்டு குஞ்சு பொரித்து நலமாக இருக்கட்டும்.

    மன்னிப்பு வேண்டாம் கமலா , நேரம் கிடைக்கும் போது வாருங்கள். எல்லோரும் வீட்டில் இருக்கும் போது வீட்டு வேலைகள் எவ்வளவு இருக்கும் என்று தெரியும். நமக்கு எல்லாம் ஒய்வு நேரத்தில் தான் பதிவுகளை
    படிக்க முடிகிறது.
    உங்கள் வரவுக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. அட...டா குடிவந்துவிட்டார்கள் என்று மகிழ்ந்தால் அண்டங்காக்கா வடிவில் துரத்தல்.

    நலமே வீடு அமையட்டும். அச்சம் இன்றி வாழவேண்டும்.

    பதிலளிநீக்கு
  27. உண்மைதான். அவற்றுக்கும் வாழ்க்கை தொடர் போராட்டமே. தூக்கணாங்குருவிகள் பாதிவரை கூடு கட்டி பின் அதை முடிக்காமல் விட்டுச் செல்வதுண்டு. படங்களும் பகிர்வும் அருமை. வெண்புறா அழகு.சமீபத்தில் தோட்டத்தில் பயமின்றி சுற்றித் திரிந்த ஒரு வெண்புறாவை நானும் படமாக்கினேன். விரைவில் பகிர்ந்திடுகிறேன்.

    தலைப்புக்குத் தனியாக ஒரு பூங்கொத்து :)!

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
    பறவைக்கு இன்னும் கூடு அமையவில்லை முட்டையிடவில்லை. நேற்றும் வந்து பார்த்து போகிறது. தூக்காணாங்க்குருவி கூடு கட்டுவது எவ்வளவு கஷ்டம் அதை பாதியில் நிறுத்தி போவது என்றால் ஏதோ இடையூறு இருப்பதால்தான் பாதியில் விட்டு விடுகிறது.
    அன்று தொலைக்காட்சியில் பாப்பிடமிருந்து கூட்டில் இருக்கும் குஞ்சை காப்பாற்ற பாம்புடன் போராடும் தூக்கணாங்க்குருவியை தோலைக்காட்சியில் காட்டினார்கள். பற்வைகளின் வாழ்க்கை போராட்டமே.

    வெண்புறாவை அழகாய் படம் எடுத்து இருப்பீர்கள். போடுங்கள் பதிவு .
    தலைப்புக்கு பூங்கொத்தா நன்றி. முதலில் வைத்த தலைப்பு பாசிடிவாக இல்லை என்றார் நெல்லை அதனால் இப்படி மாறியது தலைப்பு. அவரால் எனக்கு உங்களிடமிருந்து பூங்கொத்து கிடைத்தது.

    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு