செவ்வாய், 23 டிசம்பர், 2014

மார்கழி மாத நிகழ்வுகள்




படம் கூகுள்

படம் கூகுள்

மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் 
எடுத்து வருவேன். அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் போன மாதிரி  இல்லை.

மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.

இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் , மனதில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

                                                                          படம் கூகுள்
மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும்.  சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” என்று  ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளைச் சொல்லிப் பாடுவார்கள்.  இந்தப் பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா ? என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.
                                             
பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

                                       
                                                               படம் கூகுள்
கிறிஸ்துமஸ் கீதங்கள்  அலங்கரிக்கப்பட்ட   வண்டிகளில் இரவு  பாட ஆரம்பித்து  காலை வரை பனியில் .பாடிவருவார்கள்.

                                   
                                               நான் வரைந்த கோலம்
எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது.
                               
                                                                              படம் கூகுள்
ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைத்தண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள்.

                              
                                                              படம் கூகுள்
 எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

                
                                                               படம் கூகுள்
                           
                                                               படம் கூகுள்
மார்கழியில் இசை , நாட்டிய  விழா சிறப்பாய் நடைபெறும்.  தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை , நாட்டிய விருந்துகள் அளிக்கிறது.

கோலங்கள்:-

நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட* வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன்மேல்*
உள்ள மோடி யுருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோங் கண்டாய்*
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தன கண்க ளல்லவே

’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//
 
                                        
                                                               படம் கூகுள் (நன்றி கூகுளுக்கு)
விடியல்காலையில் கோலம் போட்டு முடித்தபின் அவளுக்கு பரிசு அளிப்பது போல்  சூரியன் தன் பொன்னொளியை தருகிறார் என்று தன் பாடலில் சொல்கிறார்.

ஆனால் இன்று விடியல் காலையில் போட முடிவதில்லை சிலரால், இரவே போட்டு விடுகிறார்கள். சிலர் வீட்டு வாசல் தெருப்பக்கம் இருந்தால் வாசலில் அதிகாலையில்  திருடர் பயத்தால் கோலம் போடுவது   முடிவதில்லை. நன்கு விடிந்தபோது போடுகிறார்கள்.

  மார்கழி மாதம் கோலம் போட  ஒரு மாதம் முன்பே   மண்தரையை  , கல் நீக்கி வாசலை சீர்  செய்து சமப்படுத்தி வைப்பேன் .  பசுஞ் சாணம் தெளித்து கோலம் போடுவேன். ஆனால்  இன்று  அப்படி சீர் செய்யும் வேலை இல்லை. வாசலில்   சிமெண்ட் போட்டு விட்டார்கள்  எல்லோர் வீடுகளும் அப்படித்தான். அடுக்கு மாடி குடியிருப்பாக வேறு ஆகி விட்டது..

கோவிலில் அதிகாலையில் 4.30 லிருந்து 5 மணிக்குள்  பூஜை ஆகி கொண்டு இருந்தது. எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் இப்போது 7 மணிக்கு நடக்கிறது.  பல கோவிலுக்கு ஒரே அர்ச்சகர் .  மக்களுக்கும் இப்போது வசதியாக இருக்கிறது.

நான் கோவிலுக்கு போகும் வழியில் இரு வீடுகளுக்கு முன் போட்டு இருக்கும் கோலத்தையும் ,  நான் போகும் கோவில் படங்களையும் பகிர்ந்து இருக்கிறேன்.
 மண் தரை சிமெண்ட் தரை ஆனது, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து பூ வைப்பது இப்போது இல்லை பூ மட்டும் வைக்கப்பட்டு இருக்கிறது.
                                       
              

நடுவில் பிள்ளையார் 
பிள்ளையாரின் வலது புறம் அனுமன்
இடது புறம் முருகன் - வள்ளிதெய்வானையுடன்

பால் அபிஷேகம் ஆகிறது துர்க்கைக்கு
அலங்காரத்தில் துர்க்கை

நவகிரகங்கள்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.
                                                     வாழ்க வளமுடன்!
                                                      --------------------------

29 கருத்துகள்:

  1. மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும்' பாடல் கேட்டிருக்கிறீர்களா!

    சிவானந்த விஜயலக்ஷ்மியின் அந்தப் பாடல் நானும் ரொம்ப நாளாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. இதுவும் 'அம்ப லலிதே... மாம்பாலய பரம் சிவம் லலிதே' பாடலும்!

    கோலம் போலத் தெரியாமல் படம் போலத் தெரிகிறது.

    கோலங்களும், புகைப்படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. மார்கழி மாதச் சிறப்பு மனம் நிறைத்தது அக்கா!

    பதிவும் பகிர்ந்த படங்களும் மிக மிக அருமை!
    கோலப்படங்களைப் பார்க்கும்போது
    உண்மையிலேயே மனதிற்கு உற்சாகமாக இருக்கின்றது! இறை தரிசனமும் மனநிறைவு! பகிர்ந்த
    அத்தனைக்கும் நன்றியுடன் இனிய வாழ்த்துக்கள் அக்கா!

    த ம.2

    பதிலளிநீக்கு
  3. // உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் // 100% உண்மை...

    "மாதங்களில் அவள் மார்கழி" என்னே அனுபவம்...

    பதிலளிநீக்கு
  4. மங்கலகரமான மார்கழிப் பதிவு கண்டு மனம் மகிழ்கின்றது..

    ஹரி பரந்தாமன் சொன்னதும் சரிதானே - மாதங்களில் நான் மார்கழி!..

    மார்கழியைச் சிறப்பிக்கும் அனைவரும் சிறப்புற்று வாழ வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

    மார்கழியில் குளிச்சுப்பாரு குளிரு பழகிப்போகும்' கேட்டு இருக்கிறேன் ஸ்ரீராம்.

    நீங்களும் சிவானந்த விஜயலக்ஷ்மி பாடல் தேடினீர்களா?

    1969 ல் என் அக்கா திருமணத்திற்கு என் அப்பா சிவானந்த விஜயலக்ஷ்மி அவர்கள் பாடல்கள்தான் வைத்தார்கள்.

    என் அப்பா நன்றாக இந்த பாட்டை பாடுவார்கள். அது இசை தட்டில் தான் இருக்கிறது போலும்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
    மார்கழி பதிவை படித்து அழகான கருத்துகளையும், வாழ்த்துக்களையும் அளித்தமைக்கு நன்றி.
    தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , ஒவ்வொரு மாததிற்கும் ஒரு சிறப்பு என்றால் மார்கழி மாதவனுக்கு மடுமல்ல மாதருக்கும் சிறப்புதான்.
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் , ஒவ்வொரு மாததிற்கும் ஒரு சிறப்பு என்றால் மார்கழி மாதவனுக்கு மடுமல்ல மாதருக்கும் சிறப்புதான்.
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    மாதவனுக்கு பிடித்தமாதம் மார்கழிதான். மக்கள் இந்த மாதம் முழுவதும் அவர் நினைவாய் இருக்கிறார்களே!

    இறைவன் அருளால் அனைவரும் நலமாக இருப்பார்கள் சார். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும்
    நன்றி..


    பதிலளிநீக்கு
  11. ஒரு பக்கம் மார்கழி பஜனைப் பாடல்கள், இன்னொரு பக்கம் கிறிஸ்துமஸ் கரோல்ஸ் எனப்படும் இறை கீதங்கள். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. மார்கழித் திங்கள் பற்றி இறைவுணர்வோடு படங்களையும் பாடல்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  12. மார்கழி பதிவை அழகான கருத்துகளைப் பார்த்தேன்.
    இனிய வாழ்த்தும்.
    இனிய கிறிஸதுமஸ் புத்தாண்டு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. மார்கழி மாதச் சிறப்புகளை எல்லாம் அருமையாக பட்டியலிட்டு விட்டீர்கள். துர்கைக்கு நடக்கும் பாலாபிஷேகமும், அலங்காரமும் நல்ல தரிசனம் கிடைத்த மனநிறைவைக் கொடுத்தன.

    பதிலளிநீக்கு
  14. சிறு வயது நினைவுகளுக்கு அழைத்துச்சென்றது தங்கள் பகிர்வு. கோலம் அழகு.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

    மார்கழி மாதமும் என் அம்மாவும் என் நினைவுகளுடன் பதிந்த ஒன்று. சிறிய வகுப்புகள் கிறிஸ்துவ பள்ளியில். கிறிஸ்துவ பாடல்களும் பிடிக்கும். முன்பு இருந்த வீட்டின் அருகே பள்ளிவாசல் அங்கிருந்து வரும் அதிகாலை பிராத்தனையின் ஒலியும் தினம் கேட்கும். வெள்ளிக்கிழமை நடக்கும் சொற்பொழிவுகளும் கேட்கும்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வேதா இலங்கா திலகம், வாழ்க வளமுடன்.

    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.
    உங்கள் கருத்து எனக்கும் மனநிறைவு.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
    சிறுவயது நினைவுகள் மார்கழி மாதம் ஏராளம் இல்லையா?
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கோலங்களும் படமும் அருமை. இங்கே இருக்கும் வேலை மும்முரத்தில் கோலம் எல்லாம் கவனிச்சுப் போட முடியலை. அந்தக் காலத்திலேயே ஆண்டாள் வெள்ளைக்கல்மாவில் கோலம் போட்டிருக்கிறாள். நான் இன்னமும் அரிசி மாவு தான். :)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் கீதா சாம்பசிவம்,வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் கில்லர்ஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  22. அந்தக் காலத்திலேயே ஆண்டாள் வெள்ளைக்கல்மாவில் கோலம் போட்டிருக்கிறாள் என்று திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தங்களது கருத்து வெண்சாமரம் வீசி வரவேற்கக்கூடிய அருங்கருத்து! அதே வேளையில் ஆண்டாள் தந்த திருப் பாவை என்னும் வெண்பா மாலையைபார்க்கும்போது வசீகரமிக்க வண்ணமாலைக்குமுன்பு எதுவும் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது!
    மேலும்,
    இதுபோன்ற பதிவுகளுக்குள் வரும்போது மனதின் வாட்டங்கள் ஓட்டம் பிடித்து ஓடி விடுகின்றன!

    நன்றியுடன்,
    புதுவைவேலு
    www.kuzhalinnisai.blogspots.fr

    பதிலளிநீக்கு
  23. மார்கழி நிகழ்வுகள் குறித்து படங்களுடன் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் யாதவன் நம்பி, வாழ்க வளமுடன்.
    மார்கழி பதிவு மகிழ்ச்சியை தருவது அறிந்து மகிழ்ச்சி.

    உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. மார்கழி மாதத்துக்கு ஏற்ற மிகவும் குளிர்ச்சியான பதிவு.

    படத் தேர்வுகளெல்லாம் அழகோ அழகு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், பாராட்டுகள், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு