வியாழன், 9 மே, 2024

ஞாயிறு உலாக்கள்



 

இந்த மாதம்  அரிசோனா ஊர் முழுவதும்  மஞ்சள் பூ பூத்த மரங்களை பார்க்க முடிந்தது.  வானத்தின் நீலமும், வெண்மேகமும் மஞ்சள் பூக்களும் பார்க்கவே அழகு.

இந்த மரம் அரிசோனாவின் மாநில மரம். இதன் பேர் "பாலோ வெர்டே"  மார்ச்  பிற்பகுதியில்  பூக்கள் பூக்க ஆரம்பிக்கும் , மே வரை அழகாய் பூத்து குலுங்கும். 

மருமகளுடன் காரில் பயணிக்கும் போது எடுத்த படங்கள்.

பேரனை பாட்டு வகுப்புக்கு கொண்டு விட போகும் போது  வீதியின் இரண்டு பக்கமும் இந்த மரங்கள் இருந்தன, பார்க்கவே அழகாய் இருந்தது.


எங்கும் மஞ்சள் வண்ணம்
குறைந்த தண்ணீர் போதுமாம் இந்த மரம் வளர. நிலத்தடி நீரை உறிஞ்சு   சேமித்து தண்டுகளில் வைத்துக் கொள்ளுமாம். திடீர் வெள்ளம் வந்தால் தாக்குபிடிக்குமாம் இந்த  மரம். 

பாட்டு டீச்சர் வீட்டு முன் அழகாய்   நிழல் தந்து கொண்டு இருந்தது. அந்த கல்லில் அமர்ந்து இருப்போருக்கு பூ சொரிதலும் செய்து மகிழ வைக்கும் மரம். ஆனால் சிலருக்கு இந்த பூ  ஒவ்வாமையை உண்டு செய்யுமாம். இந்த மரத்தின் அடியில் எல்லாம் மஞ்சள் கம்பளம் விரித்தார் போல காணப்பட்டது.

வறட்சி காலங்களில்  இலைகளை உதிர்த்து விடுகிறது. தண்டு பகுதி, கிளைகள் பச்சையாக இருக்கும் அவை ஒளிசேர்க்கை செய்ய உதவுகிறதாம். 


நண்பர் வீட்டில் பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்கள்

ஞாயிறு மகனின் நண்பர் வீட்டுக்கு போய் இருந்தோம். அவர்கள் எங்களை மதிய உணவு  சாப்பிட அழைத்து இருந்தார்கள். இங்கு எல்லோரும்  நண்பர்களின் பெற்றோர்கள் வந்தால் அழைத்து  உபசரித்து மகிழ்வார்கள்.








நிறைய பறவைகள் அவர்கள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்தது . காமிரா கொண்டு போகவில்லை அதனால் எடுக்க முடியவில்லை பறவைகளை. இந்த தங்கபுஷ்ப மரத்தில் ஒரு கருப்பு குருவி வந்து அமர்ந்தது, அலைபேசியில் எடுத்தேன்.
கொஞ்சம் தெரிகிறது உற்றுப்பார்த்தால். உங்களுக்கு தெரிகிறதா என்று சொல்லுங்கள்.

விருந்துக்கு தயாராக இருக்கும் உணவுகள்

அவர்கள் வீட்டில் சுவையான  உணவு தந்தார்கள். சவ்சவ் கூட்டு, பீன்ஸ் காரட் பொரியல், உருளை கறி, வடை, அப்பளம், இரண்டு விதமான ஊறுகாய் இனிப்பும், காரமும்  இருந்தது. சேமியா பால் பாயாசம்.  சாம்பார், மோர் குழம்பு, ரசம். என்று செய்து இருந்தார்கள் வத்தல் குழம்பு செய்யவில்லை என்று வேறு வருத்தப்பட்டார்கள். 

உங்களுக்கு என்று காரம் இல்லாமல் சமைத்து இருக்கிறோம் என்றார்கள். அன்பாய்   உரையாடி மகிழ்ந்து மாலை வீட்டுக்கு வந்தோம்.
சென்ற மாதம் ஒரு ஞாயிறு நண்பரின் மகள் நடன அரங்கேற்றம் செய்தார். அதற்கு போய் இருந்தோம். நடன அரங்கம் மிக அழகாய் இருந்தது.



நன்றாக ஆடினார்.

நடனம் சொல்லி கொடுத்தவர் பத்மஸ்ரீ  சுதா ராணி ரகுபதி அவர்களிடம் படித்தவராம்.


வாசலில் வரவேற்பு அலங்காரம். வருபவர்களுக்கு முல்லைச்சரம் கொடுத்தார்கள்.

நடன நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும் அம்மாவுடன்

நடன நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்று நடன அரங்கத்திற்கு  போக சொல்ல வாசலில் ஒரு வெள்ளைக்கார  அம்மா அழகாய் புடவை கட்டி வரவேற்றார். அவர் அரங்கத்தின் பாதுகாவலர் பொறுப்பிலும் இருந்தார்.அவரை நான் புகழ்ந்தேன்,  அவர் கட்டியிருந்த புடவை கலர் எனக்கு பிடிக்கும்.

 பிஸ்கட் கலர் என்று என்  அம்மா சொல்வார்கள். அம்மாவின் நினைவு வந்தது.   

அவர் என் புடவை நன்றாக இருப்பதாய் சொன்னார். அவரை மட்டும் நான் படம்  எடுத்தேன், அவர் என்னையும் நிற்க சொன்னார், பேரன்  இருவரையும்  எடுத்தான். அவர் புன்னகை அழகு. தலையில் முல்லை சரம் சூடி இருந்தார்.

நடன அரங்கேற்றம் பார்க்க வந்தவர்களுக்கு சுவையான  உணவும் கொடுத்தார்கள் இனிப்புடன்.

 ஞாயிறு உலா  மகிழ்வாய் போனது.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

  1. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    மகிழ்ச்சியான தருணங்கள் என்றும் நினைவில் நிற்கட்டும்.

    ஆங்கிலேய பெண்கள் கூட அழகாக புடவை உடுத்து கின்றார்கள் தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு புடவை கட்டத் தெரியவில்லை.

    திருமணத்திற்கு கூட ஆண் ஒப்பனையாளர்கள் வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.//

      நன்றி.

      //மகிழ்ச்சியான தருணங்கள் என்றும் நினைவில் நிற்கட்டும்.//

      ஆமாம், அதற்குதான் என் சேமிப்பாய் இந்த பதிவு.

      //ஆங்கிலேய பெண்கள் கூட அழகாக புடவை உடுத்து கின்றார்கள் தமிழ்நாட்டில் பல பெண்களுக்கு புடவை கட்டத் தெரியவில்லை.//

      இப்போது புடவை கட்ட சொல்லி தருகிறார்கள், மடிசார் கட்டு, முன் கொசுவம், பின் கொசுவம், வடநாட்டுபாணி புடவை கட்டுவது புடவையை சிக் என்று கட்டுவது என்று ஏகபட்ட வீடியோக்கள் உள்ளது.

      //திருமணத்திற்கு கூட ஆண் ஒப்பனையாளர்கள் வருகிறார்கள்//

      புடவை கடையில் ஆண்கள் தான் புடவையை கட்டி கொண்டு போஸ் கொடுக்கிறார், நன்றாக இருந்தால் பெண்கள் வாங்குவார்கள் என்று.

      மாற்றங்கள் நிறைய வந்து விட்டது ஜி.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. பட்ங்கள் எல்லாம் மிக அழகு கோமதிக்கா.

    இந்த palo verde இங்கும் இருக்கோ என்று தோன்றுகிறது. மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும். இங்கு ஜனவரி ஃபெப்ருவரியிலிருந்து பிங்க் நிறப் பூக்கள் ஏப்ரல் வரை பெங்களூர் முழுவதும் பூத்துக் குலுங்கும். பிங்க் நிறப் பூக்கள் கொஞ்சம் வெள்ளை கலந்த பிங்க்..என்றும்...வெள்ளை நிறத்திலும் வயலட் நிறத்திலும் என்று இந்த சீசனில் பூக்கும். கீழே உதிர்ந்து கார்ப்பெட் போலவும் இருக்கும்.

    அப்படி அங்கு மஞ்சள் போலும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      //பட்ங்கள் எல்லாம் மிக அழகு கோமதிக்கா.//

      நன்றி.

      //இந்த palo verde இங்கும் இருக்கோ என்று தோன்றுகிறது. மஞ்சள் நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும். இங்கு ஜனவரி ஃபெப்ருவரியிலிருந்து பிங்க் நிறப் பூக்கள் ஏப்ரல் வரை பெங்களூர் முழுவதும் பூத்துக் குலுங்கும். பிங்க் நிறப் பூக்கள் கொஞ்சம் வெள்ளை கலந்த பிங்க்..என்றும்...வெள்ளை நிறத்திலும் வயலட் நிறத்திலும் என்று இந்த சீசனில் பூக்கும். கீழே உதிர்ந்து கார்ப்பெட் போலவும் இருக்கும்.

      அப்படி அங்கு மஞ்சள் போலும்!//

      ஆமாம். அங்கும் இப்படி மஞ்சள் பூக்கள் பூக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன். நம்மூரில் இலைகளும் தெரியும். இங்கு இலையே தெரியாமல் பூக்கள் மட்டுமே இருக்கிறது.

      நீக்கு
  3. ரோஜா பூக்களின் படங்கள் அழகு அதிலும் அந்த வெள்ளையின் நடுவே மகரந்தம்!!! தெளிவாக அழகா இருக்கு. அடுத்து காகிதப் பூக்கள்? பார்த்தால் அப்படித்தான் இருக்கு.

    தங்கபுஷ்ப மரத்தில் குருவி தெரிகிறது. உற்றுப் பார்த்தால்.

    கல்யாணச் சாப்பாடு போல!!!! பார்க்கவே நாவூறுது!

    நடன அரங்கம் அலங்காரம் வெகு அழகு. ஆஹா நடன மணி சுதாராணி ரகுபதி அவர்களின் மாணவியா!!

    அரங்கத்தில் வரவேற்கும் பெண்மணி கட்டியிருக்கும் புடவையின் கலர் டிசைன் எல்லாமே அழகாக இருக்கு.

    எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரோஜா பூக்களின் படங்கள் அழகு அதிலும் அந்த வெள்ளையின் நடுவே மகரந்தம்!!! தெளிவாக அழகா இருக்கு. //

      வெள்ளை ரோஜா நிறைய பூத்து நிறமாறி காய்ந்து விட்டது இந்த பூ மட்டும் தனித்து நின்றது எடுத்தேன்.


      //அடுத்து காகிதப் பூக்கள்? பார்த்தால் அப்படித்தான் இருக்கு.//
      ஆமாம், காகித பூ தான் எழுத விட்டு போயிற்று.

      //தங்கபுஷ்ப மரத்தில் குருவி தெரிகிறது. உற்றுப் பார்த்தால்.//

      ஓ! தெரிவது மகிழ்ச்சி. நண்பரின் பின் பக்க வீட்டில் இலந்தை மரம் இருக்கிறது அதில் பல வித குருவிகள் வருகிறது.
      நண்பர் வீட்டில் பறவைகள் தண்ணீர் அருந்த , வைத்த சாதம் சாப்பிட வந்தன. ஆனால் காமிரா கொண்டு போகாத காரணத்தால் எடுக்க முடியவில்லை.

      //கல்யாணச் சாப்பாடு போல!!!! பார்க்கவே நாவூறுது!//

      ஆமாம், அவர்கள் நன்றாக பார்த்து பார்த்து செய்து இருந்தார்கள் நம்மால் தான் சாப்பிட முடியவில்லை, வீட்டுக்கு போகும் போது வடை, பாயாசம், சாம்பார் கொடுத்தார்கள்.
      இங்கு எல்லோரும் உணவுகளை கொடுத்தும், வாங்கியும் கொள்வார்கள்.

      //நடன அரங்கம் அலங்காரம் வெகு அழகு. ஆஹா நடன மணி சுதாராணி ரகுபதி அவர்களின் மாணவியா!!//

      ஆமாம்.

      //அரங்கத்தில் வரவேற்கும் பெண்மணி கட்டியிருக்கும் புடவையின் கலர் டிசைன் எல்லாமே அழகாக இருக்கு.//

      ஆமாம். அவர்கள் உங்கள் சில்க் சேலை அழகு என்றார்கள், நான் பட்டு கட்டுவது இல்லை பட்டு போல தெரியும் செயற்கை பட்டு.

      எல்லாமே ரசித்தேன் கோமதிக்கா//

      அனைத்தையும் ரசித்து பார்த்து , படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல நன்றாக உள்ளது.

    மஞ்சள் பூக்களும், நீல வானத்தில் வெண்ணிற மேகங்களும், ஜோடி போட்டுக் கொண்டு தங்கள் அழகை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பூ மர வகைகள் இங்கும் ஒரு சில இடங்களில் பார்த்துள்ளேன். இங்கு முக்கால்வாசி பிங்க் கலரில் ஏப்ரல் மாதம் வரை ஆங்காங்கே இந்த மாதிரியான அடர்த்தியாக பூக்கள் மரங்கள் ஆகியவற்றைப் பார்த்துள்ளேன்.

    நம்மூர்களில் கூட இதே மாதிரியே மஞ்சள் கலரில் பூக்கள் பூக்கும். அதன் பெயர் சொல்ல தொண்டை வரை வருகிறது. உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். எனக்கு நன்றாக யோசிக்க வேண்டும்.

    தங்கள் மகன் நண்பர் வீட்டு ரோஜா மலர் கூட்டங்களும் வெகு அழகாக இருக்கிறது.
    அங்குதான் விருந்தா? நண்பர் வீட்டு விருந்தின் மெனு தடபுடலாக உள்ளது. தாங்கள் பகிர்ந்த படத்திலேயே அதன் சுவைகள் கண்களுக்குத் தெரிகின்றது. அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவியுங்கள்.

    மற்றொரு நண்பர் மகளின் நடன அரங்கேற்றமும் நன்றாக உள்ளது. கற்று தந்தவரும் நல்ல நடன கலைஞரிடம் பயின்றவர். அங்கு வரவேற்ற அந்த ஊர் பெண்மணியும், அவரின் புடவை கட்டிய பாங்கும் கண்களை கவர்கிறது. தாங்கள் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் நன்றாக உள்ளது. இருவரின் புடவைகளும், இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்பட போஸும் நன்றாக வந்திருக்கிறது. படங்கள் எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கலமா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      பதிவு அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் வழக்கம் போல நன்றாக உள்ளது.

      //மஞ்சள் பூக்களும், நீல வானத்தில் வெண்ணிற மேகங்களும், ஜோடி போட்டுக் கொண்டு தங்கள் அழகை வெளிப்படுத்துகின்றன//

      ஆமாம்.

      .// இந்தப் பூ மர வகைகள் இங்கும் ஒரு சில இடங்களில் பார்த்துள்ளேன். இங்கு முக்கால்வாசி பிங்க் கலரில் ஏப்ரல் மாதம் வரை ஆங்காங்கே இந்த மாதிரியான அடர்த்தியாக பூக்கள் மரங்கள் ஆகியவற்றைப் பார்த்துள்ளேன்.//

      இங்கும் சில இடங்களில் பிங்க் பூ பூக்கும்.

      //நம்மூர்களில் கூட இதே மாதிரியே மஞ்சள் கலரில் பூக்கள் பூக்கும். அதன் பெயர் சொல்ல தொண்டை வரை வருகிறது. உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். எனக்கு நன்றாக யோசிக்க வேண்டும்.//

      வாதநாராயணன் வகை சேர்ந்த மரம் இப்படி மஞ்சள், சிவப்பு என்று பூக்கும் ஆனால் இலைகள் தெரியும். இங்கு இந்த மரத்தில் இலைகளை பார்க்க முடியாது மஞ்சள் பூக்கள் தான் மரம் முழுவதும்.

      //தங்கள் மகன் நண்பர் வீட்டு ரோஜா மலர் கூட்டங்களும் வெகு அழகாக இருக்கிறது.
      அங்குதான் விருந்தா? //
      ஆமாம் அவர்கள் வீட்டில் தான்.

      //நண்பர் வீட்டு விருந்தின் மெனு தடபுடலாக உள்ளது. தாங்கள் பகிர்ந்த படத்திலேயே அதன் சுவைகள் கண்களுக்குத் தெரிகின்றது. அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவியுங்கள்.//

      கண்டிப்பாய் அவர்கள் சமைத்த உணவுகளை மேஜை மேல் எடுத்து வைத்து இருந்ததை மருமகள் எடுத்து இருந்தாள் இப்போது தந்தாள் பதிவில் போட்டு இருக்கிறேன்.

      அந்த நினைவுகளை சொல்வது போல ஆரஞ்சு வில்லை மிட்டாய் வைத்து இருந்தார்கள் (பப்ர்மெண்ட் மிட்டாய்)
      உணவுக்கு பின் அதுவும் கொடுத்து உபசரித்தார்கள்.

      /மற்றொரு நண்பர் மகளின் நடன அரங்கேற்றமும் நன்றாக உள்ளது. கற்று தந்தவரும் நல்ல நடன கலைஞரிடம் பயின்றவர்//
      ஆமாம், பாரம்பரிய நடனம். நவரசங்களும் நன்றாக வருகிறது அந்த பெண்ணுக்கு.


      .// அங்கு வரவேற்ற அந்த ஊர் பெண்மணியும், அவரின் புடவை கட்டிய பாங்கும் கண்களை கவர்கிறது.//

      ஆமாம். எல்லோரும் அவர் புடவை கட்டை பாராட்டினோம்.

      //தாங்கள் அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் நன்றாக உள்ளது. இருவரின் புடவைகளும், இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்பட போஸும் நன்றாக வந்திருக்கிறது.//

      நன்றி.

      //படங்கள் எல்லாவற்றையும் ரசித்துப் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      படங்களை ரசித்துப்பார்த்து விரிவான கருத்து சொன்னதற்கு நன்றி.


      நீக்கு
  5. கோடைப்பூ....   மஞ்சளும் வெப்பத்தைத்தான் குறிக்கிறதோ!!  சாலையும், இரண்டு பக்கமும் மரங்களும், மேகமும் அழகு.  ஆனால் குளிர்ச்சிக்கு பதில் ஒரு வெறுமையை, வெப்பதைத்தான் அவை காட்டுகின்றன என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //கோடைப்பூ.... மஞ்சளும் வெப்பத்தைத்தான் குறிக்கிறதோ!! //
      மஞ்சள் கோடையில் கிருமி நாசினி என்போம். இந்த மஞ்சள் பூ அலர்ஜியை உருவாக்குமாம்.

      //சாலையும், இரண்டு பக்கமும் மரங்களும், மேகமும் அழகு. ஆனால் குளிர்ச்சிக்கு பதில் ஒரு வெறுமையை, வெப்பதைத்தான் அவை காட்டுகின்றன என்று தோன்றுகிறது!//

      அன்று கொஞ்சம் குளிர்ந்த காற்று இருந்தது, விடுமுறை நாள் என்பாதல் சாலையில் வெறுமை. வெப்பம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.

      நீக்கு
  6. மரங்களுக்கு மேகப்பின்னணி அழகா, மேகப்பின்னணியை எடுத்துக் கொடுப்பது மரங்களா...   விடை தெரியாத கேள்வி!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மரங்களுக்கு மேகப்பின்னணி அழகா, மேகப்பின்னணியை எடுத்துக் கொடுப்பது மரங்களா... விடை தெரியாத கேள்வி!!!!//

      ஆமாம். எப்போதும் இங்கு நீல வானமும், வெண்மேகமும் அழகாய் இருக்கும் அதனுடன் மஞ்சளும் சேர்ந்து அழகை கொடுக்கிறது.

      நீக்கு
  7. சட்டென ரோஜா வந்து மனதை குளிர்விக்கிறது!  மரத்தில் கருப்புக்குருவி நன்றாய் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சட்டென ரோஜா வந்து மனதை குளிர்விக்கிறது! மரத்தில் கருப்புக்குருவி நன்றாய் தெரிகிறது.//

      ரோஜா மலர்கள் நிறைய வீடுகளில் கொத்து கொத்தாக மலர்ந்து மனதை மகிழ்விக்கிறது.
      கருப்புக் குருவி தெரிவது மகிழ்ச்சி.

      நீக்கு
  8. ஒரு ஞாயிறு நிறைவாய், சந்தோஷமாய் சென்றதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒரு ஞாயிறு நிறைவாய், சந்தோஷமாய் சென்றதில் மகிழ்ச்சி.//

      ஆமாம். இங்கு வந்து ஒரு மாதம் ஓடி விட்டது. நாட்கள் நகர்ந்தது ஊரில், இங்கு பறக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  9. நண்பர் வீட்டு ரோஜா மலர்கள் நன்றாக இருக்கின்றன. அவர்களுடைய விருந்தும் அமோகம்.

    நடன அரங்கேற்றம் நன்றாக இருக்கிறது.

    வெள்ளைக்கார அம்மா சாறியில் அழகாக இருக்கிறார்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //நண்பர் வீட்டு ரோஜா மலர்கள் நன்றாக இருக்கின்றன. அவர்களுடைய விருந்தும் அமோகம்.//

      ஆமாம். மலரும் அழகு, நண்பர் விருந்தும் அருமைதான் மாதேவி.


      //நடன அரங்கேற்றம் நன்றாக இருக்கிறது.

      வெள்ளைக்கார அம்மா சாறியில் அழகாக இருக்கிறார்.//

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  10. முதலில் இருக்கும் மஞ்சள் பூக்களுடன் உள்ள மரம் ஒரு அழகிய ஓவியம் போல இருக்கிறது! மஞ்சள் பூக்களும் ரோஜாக்களும் மனதை குளிர்விக்கின்றன என்பது உண்மை தான்!
    அந்த ஆங்கிலேய பெண்மணி எத்தனை அழகாக புடவையை உடுத்தியிருக்கிறார்! வியந்து பாராட்டும்போதே மனதில் ஏக்கம் உருவவதை தடுக்க முடியவில்லை! நம் ஊரில் புடவை என்பதையே மறந்த பெண்கள் எத்தனை பேர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்

      //முதலில் இருக்கும் மஞ்சள் பூக்களுடன் உள்ள மரம் ஒரு அழகிய ஓவியம் போல இருக்கிறது!//

      கார் கண்ணாடி ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.

      //மஞ்சள் பூக்களும் ரோஜாக்களும் மனதை குளிர்விக்கின்றன என்பது உண்மை தான்!//

      ஆமாம். மனதை வருடி குளிர்விப்பது உண்மை.

      //அந்த ஆங்கிலேய பெண்மணி எத்தனை அழகாக புடவையை உடுத்தியிருக்கிறார்! வியந்து பாராட்டும்போதே மனதில் ஏக்கம் உருவவதை தடுக்க முடியவில்லை! நம் ஊரில் புடவை என்பதையே மறந்த பெண்கள் எத்தனை பேர்!//

      அவர்கள் நம் உடையை விரும்புவதும், நம் மக்கள் அவர்கள் உடையை விரும்பி அணிவதும் நடக்கிறது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு