வெள்ளி, 22 மார்ச், 2019

உலக தண்ணீர் தினம்







இன்று உலக தண்ணீர் தினம்!

மனிதர்களுக்கும் தண்ணீரின் தேவை அதிகமாகி இருக்கிறது. இருப்பு குறைவு.

வெயில் காலத்தில் தாகம்  தீர்க்க பதனி, குளிர் பானங்களை தேடுகிறார்கள்.

பறவைகள் தண்ணீர் தேடிக் குடிக்க வருகிறது.








 கால்நடைகளும் தண்ணீர் தேடி ஏரிகளுக்கு வருகிறது.



குரங்கார் தண்ணீர் தேடிவந்து தண்ணீர் குடிக்கும் காட்சி


.


குழாயில் தண்ணீர் வீணாகிக் கொண்டு இருக்கே என்று அழகர் கோவிலுக்கு உள்ளே போகும் போது நினைத்தேன். இறைவன் காரண காரியத்துடன்தான் இப்படி செய்து இருக்கிறான் என்பது இந்த குரங்கார்கள் தண்ணீர் தாகத்தைத் தீர்த்துக் கொண்ட போது
தெரிந்து கொண்டேன்.



போக்கு வரத்து அதிகமாகி விட்டது, மக்கள் ஓடும் ஓட்டத்திற்கு ஏற்ப தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து பாதைகள் விரிவடைந்து கொண்டே போகிறது.



பாதை விரிவடைய மரங்கள்  வேரோடு சாய்க்கப்படுகிறது.

மரங்களை வெட்டிக்கொண்டே போனால் மழை எப்படி வரும்? மழை வேண்டும் என்றால் மரம் வேண்டும். ”மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!” என்று சிலப்பதிகாரத்தில் வரும். அந்த மாமழை எப்படி வரும் ?மரங்கள் நிறைய இருந்தால் தான் மாமழை வரும்.


வயல்களும் வரப்புகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

இன்னும் இரண்டு நாளில் இந்த மரங்களும் வெட்டப்படும் மழையும் வராது, தண்ணீர் வரும் வழியும் இல்லை

இயற்கையின் சீற்றத்தாலும் மரங்கள் அழிந்து போயின.

உலக தண்ணீர் தினத்திற்கு நான் எழுதிய பதிவிலிருந்து  சிலவற்றையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும்  கொடுத்து இருக்கிறேன்.
பச்சை கலர் நான் எழுதிய பகுதி.மஞ்சள் கலர் அன்பர்கள் கொடுத்த பின்னூட்டங்கள்.



நல்ல மண் இருந்தால் தான் மரம் வளர்க்க முடியும்,மரங்கள் இருந்தால் தான் மழை பொழியும்.மழை பொழிந்தால் தான் மனிதன் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியும்.  இப்படி பதிவில் நான் பதிவு செய்தமைக்கு 


//வாழ்க்கை ஒரு வட்டம் போல, வாழும் உயிரினங்களுக்கு தேவையான நீரும் சுழற்சி முறையிலேயே உற்பத்தியாகிக்கொண்டிருக்கிறது! தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் அதே வேளையில் நம்மால் முடிந்த அளவு மரங்கள் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுதல் வேண்டும்! உபயோகப்படுத்துவதை பற்றி யோசிப்பதை விட, உற்பத்தி பற்றி யோசிப்பதுவும் இப்பொழுது முக்கியம்! //

ஆயில்யன் என்ற  பதிவர்  போட்ட பின்னூட்டம்.

indhira

நல்ல விளைநிலங்களையும் செங்கல்சூளைகளாக வீட்டுமனைகளாக மாறிவிட்டன.எங்கள் நிலத்தை மட்டும் என் தந்தை போராடி விவசாயம் செய்து வருகிறார். வயதானவர்கள் கஷ்டப்பட வேண்டாம் என்றாலும் கேட்க மாட்டார் ஆனால் எவ்வளவுதான் பாடு பட்டாலும் பலன் என்னவோ பூஜ்யம்தான். நீர்வளத்தையும் நில வளத்தையும் இழந்து எதிர்கால சந்ததியினர் என்ன செய்ய போகிறோம் தெரியவில்லையே.

இப்படி  சொல்பவர் இந்திரா என்பவர் அவர் வலைத்தளம் வைத்து எழுதவில்லை, என் பதிவுகளுக்கு வந்து பின்னூட்டம் கொடுப்பார். அவரை இப்போது பார்க்க முடியவில்லை.


இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்.
 நான் பதிவில் குறிப்பிட்டதற்கு 
ஹுஸைனம்மா
பயமாத்தான் இருக்கு, நம்ம பிள்ளைங்க எப்படி சமாளிக்கப் போறாங்களோன்னு!!


"7 தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்துப் பயன் இல்லை.இயற்கை வளத்தைக் காப்பாற்றி அவர்களிடம் கொடுக்க வேண்டும்".


இன்றைய தலைமுறையின் மனநிலையை கூறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.


வெயில் காலத்தில் மொட்டை மாடிகளில் தண்ணீரைக் கொட்டி, காலி செய்கிறார்கள். தங்கள் வீடு குளிர்ச்சியாக இருக்க! வேறு வழிகளில் வெயிலைப் போக்கிக் கொள்ளலாம். வெயில் காலத்திற்கு மட்டும் தென்னம்கீற்றுப் பந்தல் போட்டுக் கொள்ளலாம்.


/ வெயில் காலத்திற்கு மட்டும் தென்னம்கீற்றுப் பந்தல் போட்டுக் கொள்ளலாம்./

கவனிக்க வேண்டிய ஒன்று.

தேவதை பத்திரிக்கையில் வந்த என் பதிவு 'தண்ணீர்  சிக்கனம் வேண்டும் இக்கணம்' பதிவிலிருந்து.

தேவதையில் வந்த என் கருத்துக்கள். தண்ணீர் சிக்கனப்பதிவில் பெரியாரின் கருத்தைப் பகிர்ந்து  இருந்தேன், அதை எடுத்துப் போட்டு இருந்தார்கள்.

  அடுத்து என் பேரனை அழைத்துக் கொண்டு கோவையில் குடும்ப வைத்தியரிடம் போன போது  அங்கு பார்த்த  மருத்துவர் பிரார்த்தனை  சார்ட் பகிர்வு.





கோவையிலிருந்து வரும் வழியில்  சாய் கோவில் வாசலில் தண்ணீர் வைத்து இருக்கிறார்கள். இப்படி வழி எங்கும் இனி தண்ணீர் பந்தல் வைக்கும் காலம்.

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் தண்ணீரை சிக்கனமாய் பயன் படுத்த சொல்லி அறிக்கை அனுப்புகிறார்கள் வீட்டுக்கு வீடு.

கோடைக்காலத்தில் குழந்தைகளை தண்ணீரில் விளையாட விடாதீர்கள், விலைக்கு வாங்கித் தருகிறோம் ,அதை அளவாகப் பயன்படுத்துங்கள்.
கிணற்றில் உள்ள தண்ணீர் போதுமானதாக இல்லை.  நான்கு, இரண்டு சக்கர வாகனங்களை  தண்ணீர் வைத்து துடைத்து எடுங்கள், நிறைய தண்ணீர் விட்டு கழுவாதீர்கள் என்பது  போல் அந்த அறிக்கையில் சொல்கிறார்கள்.

எல்லோரும் தண்ணீரை சிக்கனமாய் கோடை காலத்தில் பயன்படுத்துவோம்.

தண்ணீர் லாரிகள் இப்போது குடியிருப்புகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. எவ்வளவு காலம்  இது  பூர்த்தி செய்யும்? கேள்வி நெஞ்சில் அலை மோதுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

நிலத்தடி நீர் இருந்தால் தானே தண்ணீர் கிடைக்கும். இன்னும் இன்னும் என்று பூமியை ஆழ ஆழ தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். அங்கு இருந்தால் தானே தண்ணீர் வரும்.


மழை பொழிந்து நாடு வளமாக இருக்க வேண்டும், தண்ணீர் கஷ்டம் தீர வேண்டும்.

ஆறு, குளம், ஏரி, ,கிணறு எல்லாம் நிறைந்து  வழிய வேண்டும். மக்கள் வளமாக வாழ வேண்டும். பிரார்த்தனை செய்வோம்.



                                        வாழ்க வையகம் !     வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------------------------------

53 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    இன்றைய தினத்திற்கு ஏற்ற பதிவு. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்.. என்ற சொல் எக்காலத்துக்கும் பொருந்தும். மரங்களை வெட்டினால் மழை எப்படி பெய்யும்.. என்பவை உண்மையான கருத்துக்கள்.. கோடை ஆரம்பித்து விட்டது. இனி வறட்சியில் தண்ணீர் கஸ்டம் தலை விரித்தாடும். இப்போது மக்கள் மட்டுமின்றி விலங்குகளும், பறவைகளும் தண்ணீர் வேண்டி மழைக்காக தவமிருக்கும் நேரம். தாங்கள் கூறியபடி இருக்கும் நீரை அனாவசியமாக செலவழிக்காமல் சிக்கனமாக உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

    குரங்காரின் தாகம் தீர்க்க அழகன் தண்ணீர் கொடுத்தருளிய படங்கள் அருமை.

    நல்ல பதிவு. தாங்கள் எழுதிய பதிவுக்கு பதிலளித்தவர்களின் கருத்துரைகளும், நன்று. இந்த வருடமாவது பருவ மழை தப்பாமல் பெய்து நீர் நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் எந்நாளும் மட்டுமின்றி கோடையிலும் குறையாமல் இருக்க வேண்டுமென இந்த தினத்தில் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      நான் பதிவு போட்டு விட்டு திரும்பினால் உங்கள் பின்னூட்டம்.

      பதிவை நன்கு படித்து அழகான கருத்து சொன்னது மனது மகிழ்ச்சியாக இருக்கிறது.
      இரவு உறவினர் வருகை. நாளை அவர்களுடன் குலதெய்வம் கோவில் பயணம்.
      அவசர அவசரமாய் ஒரு பதிவு.

      அதனால் பதிவுகளுக்கு வந்த அழகான கருத்துக்களை தொகுத்து கொடுத்து விட்டேன்.
      உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

      மனிதர்களை விட காலநடைகளும் , பறவைகளும் தண்ணீருக்கு கஷ்ட படுகிறதுகள்.

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ ஜஸ்ட்டூ மிஸ்ட்டூஊஊஊ:)

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      இன்று கொஞ்சம் அரிதாக நேரம் கிடைத்தது. அதனால் காலையிலிருந்து கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை உடனடியாக படித்து கருத்துச் சொல்லி வருகிறேன். இங்கு நான்தான் முதல் என்பதறிந்து மகிழ்கிறேன். மற்றபடி நான் எப்போதும் கடைசி பெஞ்சுதான்.

      தங்கள் குலதெய்வ வழிபாடு சிறப்பாக அமைந்து நன்றாக வழிபட்டு வருவதற்கு எல்லாம் வல்ல இறைவனை அன்புடன் பிரார்த்திக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலா, முதல், கடைசி என்ற இதுவே வேண்டாம், நேரம் கிடைக்கும் போது படிக்கலாம், கருத்து சொல்லலாம். நீங்கள் முதலில் வந்து கருத்து சொன்னது மகிழ்ச்சிதான் எனக்கும்.
      வீட்டுவேலைகளை பார்த்துக் கொண்டு இடை இடையே இங்கு வருகிறோம்.
      நமக்கு ஒய்வு நேரம் நல்ல பொழுதாக போகிறது பதிவுகளை படிப்பதில்.
      ஆமாம் , உறவினர் மாலை வருவதாய் சொன்னவர்கள் (கணவரின் தம்பி குடும்பம்) இப்போது இரவுதான் வருகிறார்கள். அவர்களுடன் தான் கோவில் வழிபாடு.
      உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி கமலா.

      நீக்கு
  2. Digital India வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது...?

    பலவற்றிற்கும் நம் தமிழ்நாடு பலியாடு... பனை மரம் அழித்து கொண்டு வந்தால், விரைவில் மனித இனம் அழியப் போகிறது...

    அடுத்த எனது பதிவிற்கும் இதை ஒட்டியே தலைப்பு...நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

      Digital India வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வது...?//
      ஆமாம், என்ன செய்வது?

      பனை மரங்களை வளர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லி மாணவர்கள் நிறைய விதைகளை ஆற்று படுகை, மற்றும் நீர்நிலை அருகில் விதைத்தார்கள். அவை வளரும் என்று நம்புவோம்.

      உங்கள் பதிவை படிக்க ஆவல்.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  3. முன்பு எவ்வகையிலும் இல்லாத தண்ணீர்ப் பஞ்சம் இப்போது.
    அருந்தும் ஒவ்வொரு டம்ப்ளர் தண்ணீருக்கும்
    குளிக்கும் போது செலவழிக்கும் ஒவ்வொரு குவளைக்கும்

    கவனம் செலுத்த வேண்டும். படங்கள் அனைத்தும் சிறப்பு.
    கோவில் தரிசனத்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
      ஆமாம் அக்கா.
      முன்பு ஒரு காலத்தில் 12 வருடம் பஞ்சம் இருந்தது என்றும் வரலாறு சொல்லுது.
      வகை வறண்டுகிடக்கிறது, ஒரு காலத்தில் கரையை உடைத்துக் கொண்டு ஓடியது.
      மக்கள் எண்ணம் போல் வறண்டும், ஈரமாகவும் (பொங்கி பெருகும் அன்பு) இருக்கும் என்பார்கள்.
      மாதா மாதம் எங்கள் குடியிருப்பு பகுதியில் பார்த்து செலவழிக்க சொல்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


      நீக்கு
  4. ///உலக தண்ணீர் தினம்///
    ஆஆஆஆ எந்த தண்ணீர் எனச் சொல்லலியே கோமதி அக்கா:) ஐ மீன் சுடுதண்ணி? பச்சைத்தண்ணி.. சுட்டாறிய தண்ணி??? ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      தீர்க்கதரிசிக்கு எந்த தண்ணீர் தினம் என்று தெரியாதா என்ன?
      சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா? என்று முருகன் ஒளவையிடம் கேட்பது போல் இருக்கு!


      நீக்கு
  5. எல்லாத்துக்கும் தினமிருக்கு... அதிராதினம் தான் இன்னும் வரல்ல:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவர்கள் எல்லோருக்கும் அதிராவின் வரவு அதிரா தினம் தான்.
      அதிராவின் பின்னூட்டம் இல்லா பதிவு அதிரா தினம் இல்லை.

      நீக்கு
  6. பதில்கள்
    1. என்னிடம் உங்கள் கிரேட் குரு படங்கள் நிறைய இருக்கிறது.
      பழமுதிர்ச்சோலை, அழகர் மலை போகும் போதெல்லாம் எடுத்த படங்கள்.
      பதிவுக்கு பொருத்தமாய் அமைந்த படங்கள் மட்டுமே இங்கு .

      நீக்கு
  7. ஓ மரங்கள் வெட்டி... மண் அள்ளி... கொடுமைதான்... இருப்பினும் இப்போ இந்தியா வில் நிறைய மரங்கள் வந்திருக்காமே.. பச்சை அதிகமாக தெரியுதாம் என கேள்விப்பட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. தண்ணீர்த் தட்டுப்பாடோ... திரும்படியுமோ அவ்வ்வ்வ்வ்வ்... ஆனா காவேரி எல்லாம் வற்றாமல் ஓடுதே இன்னும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர்த் தட்டுப்பாடு மதுரை முழுவதும் தண்ணீர் லாரிகள்தான்.
      நாங்கள் மாயவரத்தில் இருக்கும் போது கொள்ளிடத்தில் போர் போட்டு தண்ணீர் தருவார்கள். தட்டு பாடு கிடையாது.
      காவேரி எல்லாம் ஓடவில்லை அங்கு.

      இங்கு நல்ல தண்ணீர் நாலு நாளை ஒரு முறை வரும் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்ற உபயோகங்களுக்கு போர்வெல் தண்ணீர், அது இல்லாதவர்கள் வெளியில் வாங்கி மேல் தொட்டியில் ஏற்றிக் கொண்டு மோட்டார் போட்டு வீட்டு குழாய்களில் வரவழைத்துக் கொள்வார்கள்.

      எங்களுக்கு வைகை தண்ணீர். ஒரு நாள் எங்கள் ஊர் வைகை நதியை படம் போடுகிறேன்.

      நீக்கு
  9. ///
    தேவதை பத்திரிக்கையில் வந்த என் பதிவு 'தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம்' பதிவிலிருந்து.///

    ஓ வாழ்த்துக்கள் கோமதி அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடம் ஆச்சு அதிரா, அந்த பத்திரிக்கையே இப்போது இல்லை.

      அதில் என் குருந்தமலை குமரன் பதிவும் இடம்பெற்றது.
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. தண்ணீர் தேவையின் அவசியத்தை பலரும் உணர்ந்து பார்ப்பதில்லை.

    அடுத்த சந்ததிகளுக்கு பணத்தை சேமிப்பதில் நமக்கு இருக்கும் ஆர்வம் வாழ்வாதாரத்தின் அவசியத்தை உணர மறுக்கிறோம்.

    பொதுநலமான நல்ல பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      ஆமாம், ஜி நீங்கள் சொல்வது சரிதான். பணம் சேமிப்பதில் காட்டும் கவனம் வாழ்வாதாரத்திற்கு வேண்டியதில் கவனம் செலுத்தலாம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. சென்னையிலும் இப்போதே தண்ணீர்ப்பஞ்சம் தொடங்கி விட்டது. தென் மாநிலங்களில் பெய்த மழை கூட சென்னையில் இந்த சீஸனில் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
      சென்னையில் மழை குறைவு , தண்ணீர்ப்பஞ்சம் தொடங்கி விட்டது என்று படித்தேன்.
      இங்கும் இந்த தடவை நன்றாக மழை பெய்யவில்லை.
      குடிக்க மினரல் வாட்டர் வாங்கி பழகி விட்டார்கள். சமைக்கவும் மினி லாரிகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று கொண்டு வருகிறார்கள் அழகர் கோவில் பக்கம் இருந்து.

      நீக்கு
  12. //இறைவன் காரண காரியத்துடன்தான் இப்படி செய்து இருக்கிறான் என்பது//

    உண்மை. சில நேரங்களில் இறைவனின் செயல்களை நாம் புரிந்து கொள்வதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உண்மை. சில நேரங்களில் இறைவனின் செயல்களை நாம் புரிந்து கொள்வதே இல்லை.//

      ஆமாம் ஸ்ரீராம், சில நேரம் புரிந்து கொள்ளமுடியாமல் போகிறொம்.
      இந்த கஷ்டம் ஏன் வந்தது விளைவறியாத செய்த செயல்களால் தான்.

      காரணம் இல்லாமல் காரியம் இல்லைதானே!
      இறைவன் செயல்களுக்கு காரணம் இருக்கிறது.

      நீக்கு
  13. சாலைகளின் விரிவாக்கத்துக்கு மரங்கள் வெட்டப் படுவது வருத்தம் தரும் செயல். மரம் வளர்க்கா மனிதன் மழை வேண்டி யாகம் செய்வது கொடுமை. போதாக்குறைக்கு ஆற்றோரங்களிலும் மணல்கொள்ளை நடத்துவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், நீங்கள் சொல்வது சரிதான்.

      //மரம் வளர்க்கா மனிதன் மழை வேண்டி யாகம் செய்வது கொடுமை. போதாக்குறைக்கு ஆற்றோரங்களிலும் மணல்கொள்ளை நடத்துவான்.//

      தப்பாக கணக்கு போட்டு இறைவனிடம் கேட்டால் கொடுப்பானா?

      தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்ப்பார்த்தால்
      ஒப்புமோ இயற்கை விதி ஓழுங்கமைபிற்கொத்தபடி
      அப்போதைக் கப்போது அளிக்கும் சரிவிளைவு
      எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதை யுணரார்.

      -வேதாத்திரி மகரிஷி.


      நீக்கு
  14. தென் மாநிலங்களில் தமிழ் நாட்டில்தான் அதிக அளவு மழைபொழிவு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரைச் சேமிக்கும் பழக்கம் குறைவாக இருப்பதும் இதே தமிழகத்தில்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், மழை நீரை சேமிக்கும் பழக்கம் குறைவாகி விட்டது.
      முன்பு (அந்த காலத்தில்) மழை நீரை பிடித்து பத்திர படுத்தும் பழக்கம் வீடுகளில் இருந்தது. அண்டா, குண்டாக்களில் பிடுத்து வைப்பார்கள்.

      நாங்கள் பாரதி நகர் வீட்டில் மழை நீரை தொட்டியில் சேமிப்போம்.

      இப்போதும் பஞ்ச காலங்களிலும் தன் வீட்டில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்று ஒருவர் மழை நீரை சேமிப்பதை அழகாய் காட்டினார்கள் பொதிகையில். அவர் மாதிரி ஒவ்வொரு வீட்டிலும் சேமித்தால் (சொந்த வீடு உள்ளவர்கள் எல்லாம்) தண்ணீர் பஞ்சம் நாட்டில் இருக்காது.

      எங்கள் குடியிருப்பின் மழைதண்ணீரை சேமித்தாலே தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று சொல்லிக் கொண்டு இருப்பேன் சாரிடம்.

      உங்கள் அருமையான கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு
  15. தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்....

    சரியான நாளில் சரியான பகிர்வு. தண்ணீருக்காக போராடும் நிலை வரும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் எத்தனை வீண் செய்கிறார்கள்....

    நல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      தன்ணீருக்காக போராடும் நிலை வரும் என்றாலும் யாரும் கேட்பது இல்லைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. இக்காலகட்டத்திற்குத் தேவையான அருமையான பதிவு.1980களில் கோவையில் பணியாற்றியபோது நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து மூன்று பேர் தங்கியிருந்தோம். நள்ளிரவு 12.00 மணிக்கு எழுந்து தேவையான குடிநீரைப் பிடித்துவைத்துக்கொள்வோம். எங்கு பார்த்தாலும் பேரலில் தண்ணீர் பிடித்து, சேர்த்துக்கொண்டிருப்பர். அடுத்தடுத்து வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காது. அப்போது முதல் தண்ணீரில் மிகவும் கவனமாக இருந்துவருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
      1980 களில் மட்டும் இல்லை, இப்போதும் தன்ணீரை பிடித்து வைத்து சேமித்து கொண்டு இருக்கிறார்கள் கோவை மக்கள், நான்கு நாளைக்கு ஒருமுறை, 10 நாளுக்கு ஒரு முறை என்று தான் தண்ணீர் வரும்.

      வசதி படைத்தவர்கள் ஒரு லாரி தண்ணீரை வாங்கி தொட்டிகளில் நிறைத்துக் கொள்வார்கள்.

      கோவை போய் தான் உப்புதண்ணீர், நல்லதண்ணீர் என்ற வார்த்தைகளை கற்றுக் கொண்டேன்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. கோமதிக்கா அருமையான பதிவு படங்கள் எல்லாம்!

    வாழ்த்துகள் முதலில் உங்கள் தளம் குறிப்பிடப்பட்டு பத்திரிகையில் வந்ததும், மருத்துவர் பிரார்த்தனை சார்ட் வந்ததும் எல்லாவற்றிற்குமாக!!!!

    தண்ணீர் தண்ணீர் படம் நினைவுக்கு வந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      தண்ணீர் தண்ணீர் படம் மாதிரிதான் இருக்கிறது நிலை.
      நாங்கள் சிவகாசியில் இருந்த போது சிவகாசியில் மக்கள் நல்ல தன்ணீருக்காக பல மையில் நடந்து ஊர் பொது கிணற்றிலிருந்து தன்ணீர் எடுத்து வருவார்கள்.
      எங்கள் வீட்டுக்கு 7 குடம் வைப்பது போல் உள்ள கட்டை வண்டியை தள்ளிக் கொண்டு வருவார் அவர் தண்ணீர் தருவார் காசுக்கு எவ்வளவு என்று மறந்து விட்டது. கோவில்பட்டி முழுவதும் இது போன்ற வண்டிகள் தான் ஓடிக் கொண்டு இருக்கும். மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய.

      நீக்கு
  18. மரங்கள் வெட்டப்பட்டால் எப்படி மழை வரும் மரங்களை வெட்டி விட்டு, மழை வர வேண்டும் என்று யாகம் செய்வதில் அர்த்தம் உள்ளது போல் இல்லை. நாம் செய்யும் தவறுக்கு இறைவனை வேண்டுவது எந்தவிதத்தில் நியாயம்?

    தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் மிக மிக அவசியம். பல வருடங்களாகக் கிட்டத்தட்ட 25 வருடங்களாகவே எங்கள் வீட்டில் துணி தோய்க்கும் தண்ணீரை டாய்லெட்டிற்குப் பயன்படுத்துதல், பாத்ரூம், டைல்ஸ் கழுவிடுதல் அதுவும் தினமும் என்றில்லை...அப்புறம் கடைசி துணி அலசல் தண்ணீரை வீடு துடைக்க என்று....வண்டி எல்லாம் துடைத்தல்தான்...கழுவுதல் இல்லை.

    அப்புறம் அக்வா கார்ட் அல்லது ஆர் ஓ வாட்டர் ஃபில்டர் மூலம் வெளியேறும் தண்ணீரைக் கூட நாம் தண்ணீரைப் பயன்படுத்தப் படுத்த தண்ணீர் ஃபில் ஆகும் போது வேஸ்ட் தண்ணீர் வெளியேறுமே அதை நாங்கள் பாத்திரங்களில் பிடித்துக் கொள்வோம்...அதில் காய் அலசுதல், குளிக்க பக்கெட்டில் நிறைத்தல் என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செலழிப்பது...குடித்துவிட்டு டம்ளரில் மீத்தும் தண்ணீரைக் கூடக் கொட்ட மாட்டோம்...செடிகளில் அல்லது பாத்ரூம் பக்கெட்டுகளில் கொட்டி வைப்பது...என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் தான் நாங்களும் முன்பு கடைபிடித்து வந்தோம்.
      கைகளில் துவைக்கும் போது அந்த தண்ணீரை கூட வீணாக்காமல்.
      ஆர் ஓ பில்டர் தண்ணீரை வெளியேறும் பிடித்து வீடு துடைக்க வைத்துக் கொள்வோம்.
      சாமிக்கு வைக்கும் பஞ்சபாத்திரம் தண்ணீரும் மறுநாள் செடிக்கு ஊற்றப்படும்.
      சாப்பிட்ட பாத்திரங்களை உடனே கழுவி விட்டால் த்ண்ணீர் குறைந்த அளவே செலவாகும்.

      நீக்கு
  19. எந்த ஒரு நாடு விவசாயி, விவசாயம், நீர்வளம் மற்றும் கால்நடைகளைப் பாதுகாக்கவில்லையோ, அந்த நாடு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது நிதர்சனம். நம் நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
      நேற்று குலதெய்வம் கோவில் போனோம், திருநெல்வேலி அருகில் உள்ள கோவில் .
      எங்கள் கோவில் ஏரிக்க்ரையோரம், வயல்கள் சூழ்ந்த இடத்தில் ரம்மியமாய் இருக்கும்.

      போன வருடம் ஏரியில் சொட்டு நீர் இல்லை, இந்த முறை கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி வந்தவர் மாடுகளை அங்கு தண்ணீர் குடிக்க வைத்த் அழகு கண் கொள்ளா காட்சி.

      அத்தனை மாடுகளும் வேக வேகமாய் தண்ணீர் அருந்திய காட்சி கண்ணை விட்டு அகலாது. அவற்றில் மூழ்கி அக்கரை கடந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது.
      பலவித நாரைகள் வரும் இடம்.

      அனைத்து உயிரனங்களும் வாழ நீர்வளம் காக்கபட வேண்டும்.

      நீக்கு
  20. தண்ணீர் கஷ்டம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்தில் தண்ணீரை சிக்கனமாகத்தான் செலவழித்தார்கள். அதிகம் தண்ணீர் செலவழித்தால், அதிகம் காசு செலவழியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்போதெல்லாம் மோட்டார் கிடையாது. கிணற்றிலிருந்து நீர் இறைக்க வேண்டும். ஒரு வேளை அதற்காகவே இப்படி கூறினார்களோ என்று தோன்றும். இப்போது குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டுகிறது. அதனால் உடம்பு நோவதில்லை, தண்ணீரை சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்றும் யாருக்கும் தோன்றுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான் , அந்தக் காலத்தில் பெரியவர்கள் தண்ணீரை வீணாக செலவழிக்க கூடாது, எவ்வளவுக் எவ்வளவு தன்ணீரை செல்வு செய்கிறானோ அவ்வள்வுக்கு அவ்வளவு பணம் செலவாகும் என்று சொன்னார்கள்.
      மக்கள் தொகை அதிகமாகி விட்டது.
      நீங்கள் சொல்வது போல் குழாயை திறந்தால் தண்ணீர் கொட்டுவதும், கொட்டா காலமும் உண்டு.
      சர்வர் சுந்தரம் படத்தில் குழாயை திரந்தால் காத்து தான் வருது த்ண்ணீர் வரவில்லை என்று சொல்லும் சிரிப்பு உண்டு.
      நகரத்திற்கு வந்த விவசாயி குழாயை திரந்தால் தண்ணீர் வரவில்லையே! நம்ம ஊரில் கிணற்றில் எவ்வளவு த்ண்ணீர் இருக்கும்! என்று ஆச்சிரியபட்டு சொல்வார் ஜனத்தொக்கை அதிகமாச்சு தண்ணீர் பஞ்சம் வந்து விட்டது என்று.

      நீக்கு
  21. சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் மரங்களை பார்க்கும்பொழுது மனம் கணக்கிறது. ஆனால் கட்டுமான வசதிகளும் அவசியம், இரண்டையும் சரியாக கையாளுவது அரசாங்கத்தின் வேலை. மக்களுக்கு நீர் மேலாண்மையை சொல்லித்தர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது போல் சாலை விரிவாக்கத்தில் வெட்டபடும் மரங்களைப் பார்த்தால் மனம் கனத்து போகுது. அதில் வாழ்ந்த பற்வைகள் என்ன செய்யும். அவைகள் கூடு இழந்து போனதே! என்று வருத்தமாய் இருக்கும்.
      நீர் மேலாண்மையை சொல்லிதர வேண்டியது கட்டாய தேவைதான். வெயில்காலத்தில் மட்டும் சொல்லி புலம்புவதால் என்ன் லாபம், வரும் முன் காக்க வேண்டும்.

      மரங்களுக்கு பதிலாக புதிய மரங்கள் நட வேண்டும்.
      மக்களும், அரசாங்கமும் நீர் மேலாண்மையை கடைபிடித்தல் அவசிய தேவை.
      உங்கள் அருமையான் பின்னுட்டங்களுக்கு நன்றி.
      நீர் மேலாண்மை பதிவும் ஒரு தண்ணீர் தினத்தில் போட்டேன், அதை தேட முடியவில்லை.

      நீக்கு
  22. எதையும் உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை.... எதிர்காலத்தில் என்னவாகுமோ தெரியவில்லை....

    சமீப காலமாக எவ்வளவோ சொல்லி விட்டார்கள்.... நூறு நூறு லாரிகளில் ஆயிரம் ஆயிரம் லிட்டர்கள் தண்ணீரை பூமிக்கு அடியில் இருந்து உறிஞ்சுவது மட்டும் என்ன நியாயம் என்று தெரியவில்லை...

    இயற்கை என்ன செய்யக் காத்திருக்கிறதோ புரியவில்லை...

    எல்லாருக்கும் நல்லபுத்தியை இறைவன் தான் தந்தருள வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையாகத்தான் இருக்கிறது.]

      பூமியின் தாகத்தை தணிக்க நாம் கொடுத்தால் அது நமக்கு திருப்பிதரும் , அதற்கே தாகம் அடங்கவில்லை. அது சேமித்து வைத்து இருக்கும் சேமிப்பையும் மொத்தமாய் சூரையாடுகிறோம். விளைவு?

      இயற்கைதாய் தகுந்த நேரத்தில் புத்தி சொல்லிக் கொண்டு இருக்கிறாள், கேட்க மறுக்கும் செவிகளுடன் இருக்கும் போது என்ன செய்ய முடியும் அவளால்.

      இறைவன்மட்டுமே நல்ல தீர்வை தர வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      நேற்று காலை குலதெய்வம் கோவில் போய் விட்டு, இரவு வீடு திரும்பினோம் அதனால் கால தாமதம் பின்னுட்டங்களுக்கு பதில் அளிக்க.

      நீக்கு
  23. குல தெய்வ தரிசனம்...
    மிக்க மகிழ்ச்சி...

    தெய்வம் எல்லாரையும் நல்லபடியாக வாழ வைக்கட்டும்.. ..

    நமது தளத்தில் அருஞ்சுனை காத்த ஐயனார் தரிசனம்....

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருஞ்சுனை ஐயனாரை தரிசிக்க வருகிறேன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  24. நாங்கள் இருந்த வடமாநிலப் ப்ரதேசங்கள் எல்லாம் பாலைவனம் தான்! ராஜஸ்தானிலும், குஜராத்திலும்! எனினும் மக்கள் அங்கு தண்ணீருக்காகச் சண்டை போட்டுக் கொண்டெல்லாம் பார்த்ததே இல்லை. மழைப்பொழிவும் குறைவு! அவற்றையும் சிக்கனமாகச் சேமித்து வைப்பார்கள். நம் தமிழ்நாட்டில் நல்ல மழைப்பொழிவு இருந்தும் ஏரிகள், குளங்கள் தூர்க்கப் ப்ட்டுக் குடியிருப்புக்களாக மாறி வருகையில் என்ன செய்ய முடியும்? இது வேரோடிப் போன ஒன்று. இதைச் சரி செய்யாமல் மற்றவர்களைக் குறை சொல்லுவதும், தண்ணீருக்காக வெளி மாநிலங்களில் வெட்கமில்லாமல் கையேந்துவதும் நமக்கு வழக்கமாகிப் போய்விட்டது!

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    பாலைவனபகுதிகளை தண்ணீர் மேலான்மையை பயன்படுத்தி சோலைவனம் ஆக்கிய ஊர்கள் எல்லாம் உண்டு.
    இங்கு நீர் பங்கீட்டு முறை, சேமித்து வைக்க வசதிகள் செய்யபடவில்லை.
    பெய்யும் மழை கடலில் போய் வீணாக சேர்கிறது.
    ஏரிகள், குளங்களில் தண்ணீர் சேகரிக்க முடியாமல் அதை அரசாங்க அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், கோர்ட் என்றும், அடுக்குமாடி குடியிருப்புகள் என்று கட்டிய பின் என்ன செய்வது?
    தண்ணீர் சேமிப்பு வேண்டும் என்பதே பதிவின் நோக்கம்.
    உங்கள் விரிவான அருமையான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துகள் மா ...தங்கள் தளம் குறிப்பிடப்பட்டு பத்திரிகையில் வந்ததுக்கு..

    மேலும் இந்த வாரம் ஒரு பயணமாக HASSAN நோக்கி சென்ற போது வழியில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி கொண்டிருந்தார்கள் ...


    பார்க்க பார்க்க ரொம்ப வருத்தமாக இருந்தது ,...எல்லாம் ரொம்ப பெரிய பெரிய மரங்கள் ...இனி அப்படி வளர்க்க எத்தனை வருடங்கள் ஆகும் அப்படி நம்மால் வளர்க்க முடியுமா என பல விடையில்ல கேள்விகள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
      வாழ்த்துக்களுக்கு நன்றி அனு.
      ஆமாம் மெட்ரோ விற்கு நிறைய மரங்களை வெட்டி கொண்டு தானே இருக்கிறார்கள்.
      மரங்களை வளர்க்க எவ்வளவு நாட்கள், வருடங்கள் ஆகுது ? யார் நினைக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு