செவ்வாய், 18 செப்டம்பர், 2018

கூடல் அழகர் தரிசனம்

அஷ்டாங்க விமானம்

மங்களா சாஸனம் :-
திருமங்கை யாழ்வார்
திருமழிசையாழ்வார்

//கோழியும் கூடலும்கோயில்கொண்டகோவலரேஒப்பர், குன்றமன்ன
பாழியந்தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம்  எண்ணில் மாகடல் போன்றுளர்,கையில்வெய்ய
ஆழியொன்றேந்தி ஓர் சங்குபற்றி அச்சோ ஒரு வரழகியவா!//
--திருமங்கையாழ்வார்.

அழைப்பான் திருவேங்கடத்தானைக்காண
இழைப்பான் திருக்கூடல்கூட- மழைப்பே
ரகுவிமணி வரன்றிவந்திழிய யானை
வெருவியரவொடுங்கும்வெற்பு.
-- திருமழிசையாழ்வார்.


பெருமாள்  தரிசனம்  என்ற போன பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு.

கூடலழகர்  கோவிலில் எடுத்த புகைப்படங்கள் . மற்றும் கோவில் இருப்பிடம் 
மற்றும் விவரங்கள் மற்றும் சில செய்திகள் அடங்கியது.

மதுரை பஸ் ஸ்டாண்டு அருகாமையில் இந்தக் கோவில் இருக்கிறது.
மூலவர் - கூடலழகர் 
உற்சவர் - வியூகசுந்தரராஜர்
அம்மன்- மதுரவல்லி, வகுளவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி
தீர்த்தம்- ஹேமபுஷ்கரிணி, சகரதீர்த்தம், க்ருதமாலா நதி, வைகை நதி.
விமானம்- அஷ்டாங்க விமானம்.

கோவிலின் சிறப்பு:- 
பெரியாழ்வார் பல்லாண்டு பாடிய இடம்.

அஷ்டாங்க விமானத்தை மேல் தளம் சென்றால் தரிசிக்கலாம்.
விமானம் எட்டு எழுத்து மந்திரத்தின் வடிவம் . விமானம் 125 அடி, கலசம் 10 அடி உயரம் உள்ளது. இதன் நிழல் தரையில் விழுவது  இல்லை.
பூவராகவர் இருக்கிறார் 

ஒரு தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்,  அடுத்த தளத்தில் சூரிய நாராயணன் என்ற திருக்கோலத்தில் தேவியருடன் மூலிகை வர்ணம் பூசப்பட்டு இருக்கிறார்கள். 

வைணவ ஆலயத்தில் இங்கு மட்டுமே நவக்கிரகங்கள் உள்ளன.
மழை அதிகமாய்ப் பெய்த போது பக்தர்களின் பிரார்த்தனைக்குக் கட்டுப்பட்டு பகவான் நான்கு மேகங்களை அனுப்ப அவைகள் இத் தலத்தில்  மாடங்கள் போல் ஒன்று கூடி மழையை தடுத்து விட்டன. மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலத்திற்கு "திருக்கூடல் " என்று பெயர்.

இக்கோவிலின் பிரகாரங்களில் இருக்கும் சுவர்களில் 108 திவ்யதேசத்துப் பெருமாள்களின் சித்திரங்கள் வரைந்து இருப்பது  சிறப்பு.

கோபுரத்தின் கோஷ்டத்தில் உள்ள ஓவியங்கள்

 
வேலைப்பாடு மிகுந்த கல் சாளரங்கள்


வாகனங்கள்
கோபுரத்தின் மேல் அழகிய சிற்பங்கள்.

ஆண்டாள் கோவில் பின்புறம் உள்ள நந்தவனத்தில் உள்ள நந்தகுமார்
தாயார் சன்னதியில்  விளக்குப் போடும் இடம். கண்ட இடங்களில் வைக்க அனுமதி இல்லை. கொண்டு வந்த நெய் எண்ணெயை இந்த  அமைப்பில் ஊற்றினால் போதும். அகண்ட விளக்கிற்குப் போக மிகுதியான எண்ணெய் கீழே இருக்கும் பாத்திரத்திற்கு வந்துவிடும். தேவைப்படும்போது எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும். இதுபோல் ஆண்டாள் சன்னதியிலும் இருக்கிறது.
மேல்தளத்தில் அஷ்டாங்க விமானத்தின் கீழ்ப் புறம் உள்ள சுதைச் சிற்பம் நம்மாழ்வார்

அஷ்டாங்க விமானம் மேல் உள்ள கருட சேவை சிற்பம்

பெரியாழ்வார் யானை மேல்  நகர் வலம்  வரும் காட்சி

அப்பத்திற்கு அந்தப் பக்கம் பாதியாக இருப்பதுதான் அழகர் தோசை. இந்தக் கடையில் அடை தோசை என்றார்கள். வலுவாக இருந்ததால் எங்களால் கால்வாசி கூடச் சாப்பிடமுடியவில்லை என்று முந்திய பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். அன்று படம் எடுப்பதற்குள் சாப்பிடத் துண்டு செய்து தட்டில் வைத்த பின் நினைவு வந்து எடுத்த படம்.


கூடல் அழகர் கோவில் தோசை இது. உள்ளே வெள்ளையாகக் கொஞ்சம் மெதுவாய்

அழகர் கோவில் தோசை வேண்டும் என்றால் கிடைக்கும் (மதுரையில்) இருக்கும்  இடம் பற்றி திரு.  சுவாமிநாதன் என்பவர்  பதிவு போட்டு இருக்கிறார்.  அழகர் கோவிலில் வேலை பார்த்தவர் தனியாக கடை வைத்து இருப்பதாகவும்   கடை இடத்தின் விவரம் , மற்றும் செய்முறை படங்களுடன்.


சிங்கபெருமாள் கோயிலும் தோசை கிடைக்குமாம் (காஞ்சிபுரம்)
இந்தப் பதிவு எழுதியவர் சொல்வது:-

//நரசிம்மப் பெருமாளைத் தரிசித்துவிட்டு கோவிலை வலம் வரும்போதுசூடான தோசைப் பிரசாதம் கிடைக்கும். விலை பத்து ரூபாய்புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் விற்கிறார்கள். எங்கள் மதுரை அழகர் கோவில் அடை அளவுக்கு ருசி இல்லாவிடினும்,பசிக்கு உதவும் அருமருந்து இது.//

நாங்களும் மதுரை அழகர் கோவில் அடை தோசை வாங்கிச் சாப்பிட்டு இருக்கிறோம்.


கோவிலுக்கு வெளியே  அருமையாகப் புல்லாங்குழல் ஊதிக் கொண்டு போனார்  பீப்பி , புல்லாங்குழல் விற்பவர்.

கீழே வருபவை நாலாயிர திவ்ய பிரபந்த புத்தகத்தை இந்த பதிவுக்கு பாடல் எடுக்கலாம் என்று எடுத்த போது கிடைத்த  சில குறிப்புகள். என் கணவர் எழுதி வைத்தது.

வருடம், 98, 99, 2004 ல் வைகுண்டஏகாதசி அன்று தரிசனம்செய்த கோவில்கள் பற்றிய குறிப்புகள் எழுதி வைத்த குறிப்புத் தாள். இது  நாலாயிரதிவ்யபிரபந்தப் புத்தகத்துக்குள் இருந்தது.

பழைய நினைவுகளை மீட்டிச் சென்றது.

இந்தக் கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்று கண்டிப்பாய்த் திறந்து இருக்கும். மற்ற நேரங்களில் எல்லாவற்றையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது கஷ்டம். இரண்டு மூன்று கோவில்களை ஒரே பட்டர் கவனித்துக் கொள்வார்.  ஒரு கோவிலுக்குப் போனால் அவர் வேறு கோவிலுக்குப் போய் இருப்பார், இந்தக் கோவிலைப் பூட்டி விட்டு. அவர் வீடு தெரிந்தால் அவரை அழைத்துக் கொண்டு போனால் அவர் பார்த்துக் கொள்ளும் கோவிலை நமக்குக் காட்டி விடுவார்.

அதனால் நாங்கள் 11 கோவில்களையும் வைகுண்ட ஏகாதசி அன்று  ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போய் விடுவோம்., காரிலும் போய் இருக்கோம்.
தை அமாவாசை அன்று கருட சேவை நடக்கும்.
கருடசேவை பதிவுகள் முன்பு போட்டு இருக்கிறேன்.


ஆழ்வார்களின் பாசுரங்கள் அடங்கி இருக்கும் பக்கங்களின் குறிப்பை எழுதி வைத்து இருக்கிறார்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் , திவ்ய தேசப்பெருமாளின் போட்டோக்கள், திருமண்கட்டி, ஸ்ரீசூர்ணம், மஞ்சள், செந்தூரம் பவுடராகவும், கட்டியாகவும் கிடைக்கும் என்று சொல்லும் நோட்டீஸ் எல்லாம் நாலாயிர திவ்ய பிரபந்த புத்தகத்தில் வைத்து இருந்தார்கள்.
                                                              வாழ்க வளமுடன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

53 கருத்துகள்:

  1. ஓவியங்களும் சிற்பங்களும் அழகு. அருமையாகப் படமாக்கியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      யானையை எதிர்பார்த்தீர்கள் பார்க்கவில்லை அதனால் போடவில்லை.

      நீக்கு
  2. கோவிலில் வளைத்து வளைத்து படம் எடுத்திருக்கிறீர்களே... ரசனை. அதனால் நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் எடுக்கலாம் அவ்வளவு இருக்கிறது கோவிலில்

      நீக்கு
  3. இந்த எண்ணெய் சேமிக்கும் வழக்கம் இப்போது நிறைய கோவில்களில் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். நான் முன்பு இந்தக் கோவிலுக்கு வந்தபோது இப்படி இல்லை என்று நினைக்கிறேன். குறிப்பாக நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சேமிக்கிறார்கள். ஆனால் வேறு விதமாக பெரிய பாத்திரத்திலிருந்துக்கே எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த எண்ணெய் சேமிக்கும் முறையை முதன் முதலில் மேல் மருவத்தூரில் பார்த்தேன்.
      இப்போது நிறைய கோவில்களில் வந்து விட்டது, ஆண்டாள் கோவிலில் பெரிய விளக்கு, அடியில் பெரிய பாத்திரம் இருக்கிறது.

      நீக்கு
  4. ஸார் கையெழுத்து அழகாய் இருக்கிறது. பொறாமையாய் இருக்கிறது!!! என் கையெழுத்தை சில நாட்கள் கழித்து நானே படிக்க முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் கையெழுத்து படிக்கும் காலத்தில் இன்னும் அழகாய் இருக்கும்.பழைய நோட்டில் இருக்கிறது ஒரு நாள் பதிவில் போடுகிறேன்.
      என் கையெழுத்து நன்றாக இருக்காது.

      நீக்கு
  5. அப்பம். தோசை படத்திலேயே கடினம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பம் தோசை கடினமாய் தெரிகிறதா?
      சிங்கபெருமாள் கோவில் தோசையை பாருங்கள் மெத்து மெத்தாக இருக்கிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. ஓவியங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை பராமரிப்பதுதான் சிறப்பம்சம்.
    பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      நீங்கள் சொல்வது சரிதான்.
      ஓவியங்களை பராமரிப்பதுதான் சிறப்பம்சம்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  7. இப்ப்டி நிதானமாய்க் கோயில்கள் தரிசானம் செய்தது ரொம்ப அபூர்வம்! :) நம்மவருக்கு ஒரே அவசரம்! நின்று நிதானமாய்ப் பார்த்ததெல்லாம் மிகக் குறைவு. இம்முறை பரவாக்கரை போனப்போக் கொஞ்சம் நிதானமாய்ப் பார்க்க முடிந்தது! இந்த ஓவியங்களைப் பார்க்கையில் எல்லாம் படம் எடுக்க நினைப்பேன். ஆனால் அப்போதெல்லாம் காமிரா இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
      சாரும் அப்படித்தான் என்னை அவசரபடுத்திக் கொண்டே இருந்தார்கள்.
      தரையைப்பார்த்து நட , மேலே பார்த்து கொண்டே வராதே என்ற விரட்டல் உண்டு.
      ஒரு ஓவியம் விட்டு போய் விட்டது அப்புறம் போனால் எடுக்க வேண்டும்.

      நீக்கு
  8. பொதுவாகவேப் பெருமாள் கோயில்களின் பிரசாத வகைகள் எல்லாமே நன்றாக இருந்தாலும் அழகர் கோயில் தோசை ரொம்பப் பிரபலம். ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் கூட அந்தச் செய்முறை பற்றி எழுதி இருப்பதாக நினைவு. அப்பா அழகர் கோயில் மடப்பள்ளியிலேயே போய் வாங்கி வந்திருக்கார். இப்போ சமீபத்தில் நாங்க போனப்போக் கேட்டதுக்கு பட்டாசாரியார் பெருமாளுக்குத் தளிகை ஏற்பாடு செய்தால் மட்டுமே தோசை போடுவோம். இப்போல்லாம் விற்பதில்லை. வெளியே ஸ்டாலில் வாங்கிக்கோங்க என்று சொன்னார். வேண்டாம்னு வந்துட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமாள் கோயில் பிரசாத வகைகள் எல்லாம் நன்றாக இருக்கும்.
      அழகர் கோயில் தோசை வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன்,பல் வலுவாக இருக்கும் போது சாப்பிடவேண்டிய தோசை.கஷ்டபட்டு சாப்பிட்டால் பல்வலி வந்து விடும்.
      ஸ்டாலில் எப்போதும் உண்டு தோசை.

      நீக்கு
  9. நானும் எங்க பெண்ணுமாகத் திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் கோயிலுக்குப் போனப்போ அன்றைய தினம் தரிசனம் முடிந்து கூட வந்த மாமியுடன் மடப்பள்ளியில் தோசை தான் வாங்கிக் காலை ஆகாரமாகச் சாப்பிட்டோம். தொட்டுக்கப் புளிக்காய்ச்சல் கேட்டதுக்கு நாங்க புளியை மட்டுமே உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு வைத்திருப்போம். சாதம் கலக்கையில் மிளகை நெய்யில் வறுத்துப் பொடி செய்து சேர்ப்போம்.தாளிதத்தில் நிவேதனத்துக்குப் பண்ணும்போது வேர்க்கடலை எல்லாம் சேர்க்க மாட்டோம். என்றார் அங்கே இருந்த பட்டாசாரியார். இது நடந்தது 90 களில். அப்போல்லாம் நான் எழுத்தாளி ஆவேன்னு எனக்கே தெரியாது என்பதால் படங்கள் எல்லாம் எடுக்கவில்லை. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கண்ணபுரம் போய் இருக்கிறோம் தோசை சாப்பிட்டது இல்லை.
      புளியை மட்டுமே உப்பு , மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு வைத்து இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.அந்தக்காலத்தில் மிளகாய் சேர்க்கமாட்டார்களாம் காரத்திற்கு மிளகுதான் என்று சொல்வார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
    2. ஆமாம், பொதுவாகவே பிரசாதமாகக் கொடுக்கும் புளியோதரையில் மிளகு மட்டுமே சேர்க்கின்றனர். இங்கே ஶ்ரீரங்கத்தில் உள் ஆண்டாள் சந்நிதியில் கோஷ்டி முடிந்து தீர்த்தம், சடாரி சாதித்தபின்னர் கொடுத்த புளியோதரைப் பிரசாதத்தில் மிளகு மட்டுமே இருந்தது. அதுவே வீட்டுக்குக் கொடுத்த பாத்திரத்தில் மி.வத்தல், வேர்க்கடலை எல்லாம் போட்டிருந்தார்கள். ஆனால் அதுவும் மடப்பள்ளியிலிருந்தே வந்தது என்பது தான் கொஞ்சம் சந்தோஷம்! :)

      நீக்கு
  10. படங்களும் பகிர்வும் அருமை
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அழகான கோவில். சிற்பங்கள்/ஓவியங்களுக்காகவே பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      அழகான கோவில் மனதுக்கு அமைதி ஆனந்தமும் கிடைக்கும் இடமாகவும் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்களும் விளக்கங்களும் அருமை அம்மா...

    குறிப்புகள் பார்த்தவுடன், எங்கு சுற்றுலா சென்று வந்தாலும் எனது தந்தை அனைத்தையும் எழுதி வைத்துக் கொள்வார்... அந்த ஞாபகம் உடனே வந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் தந்தையும் குறிப்பு எழுதி வைப்பார்களா?
      பாடல் பெற்ற சிவத்தலம், மங்களா சாஸனம் பெற்ற கோவில்கள் எண்ணிக்கை கணக்கு எழுதி வைப்பார்கள். போன தேதி நேரம் எல்லாம் குறித்து அந்த கோவில் பற்றிய வரைபடம் விமானம் படம் எல்லாம் வரைந்து வைத்து இருப்பார்கள். அப்போது எல்லாம் இவ்வளவு பஸ்போக்குவரத்து எல்லாம் இல்லை, கூட்டமும் இருக்காது. ஒறுவேளை பூஜையுடன் மூடி வைத்து இருக்கும் கோவில்களும் உண்டு. எல்லா விவரமும் அந்த குறிப்பில் இருக்கும்.
      உங்கள் தந்தையின் நினைவை பகிர்ந்து கொண்டதற்கும் பதிவின் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    கூடலழகர் கோவில் படங்கள் அனைத்தும் மிக அருமை. கோவிலைப் பற்றியும் மிகவும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்கள். ஒவ் வொரு படங்களையும் மிகத் தெளிவாக மனதில் நிலைத்து நிறுத்தும்படிக்கு அழகாக, பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள. பாராட்டுகள்.

    பிராகார சுவர் ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கும். உங்கள் பதிவை படித்ததும் 108 திவ்ய தேசத்துப் பெருமாளின் ஓவியங்கள் நான் ஒருதடவை சென்ற போது பார்த்தது நினைவுக்கு வருகிறது.

    கோபுர ஓவியங்களும் கைவண்ணம் மிகுந்த சாளரங்களும் மிகவும் அருமையாக உள்ளது.
    தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் கீழே விழாமல் அமைத்துள்ளார்கள் எனத் தெரியும். இங்கேயும் அப்படித்தானா?

    பிரசாதங்கள் குறித்த விபரமும் கண்டு கொண்டேன். பற்கள் நல்ல வலுவான நிலையில் இருந்தால் சாப்பிட இயலும். (திருப்பதி வடையும் அப்படித்தான்) தோசை மிருதுவாக இருந்தால் உண்ணலாம். பொதுவாக பெருமாள் கோவில் பிரசாதங்கள் சுவையாக இருக்கும்.

    தங்கள் கணவரின் கையெழுத்துகள் மிகவும் நன்றாக இருக்கிறது. தங்கள் பதிவை படித்ததும் தங்களுடன் நானும் கூடலழகர் கோவிலுக்கு வந்து அனைத்தையும் பார்த்து ரசித்த உணர்வு வரப் பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.

      சுவர் ஓவியங்கள் எல்லாம் அழகு. 108 ஒவியத்தையும் பார்த்து விட்டால், 108 திவ்யதேசங்களைப்பார்த்த மனநிறைவு கிடைத்து விடும்.

      கோவில் குறிப்பில் நிழல் விழாது என்றுதான் போட்டு இருக்கிறது.

      நாம் பாடத்தில் தஞ்சை கோவில் மட்டும்தான் இருக்கும் அதனால் அது மட்டும் தான் நம் நினைவில்.

      அனைத்தையும் படித்து ரசித்து கருத்தை சொல்லி , பாராட்டியதற்கு நன்றி கமலா.

      நீக்கு
  15. சிற்பங்களும், ஓவியங்களும் அழகு...கோவிலை அழகாக பராமரிக்கிறார்கள். எல்லாவற்றையும் அழகாய் புகைப்படம் எடுத்து வழங்கியமைக்கு நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் உமையாள், வாழ்க வளமுடன்.
      கோவிலை அழகாக பராமரிக்கிறார்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி உமையாள்.

      நீக்கு
  16. மிக அருமை மா

    அனைத்து படங்களும் மிக சிறப்பு...இரண்டாம் படம் வெகு அழகு..


    மீண்டும் செல்லும் ஆவலை தூண்டியது இந்த பதிவு..

    என் அப்பாவும் இப்படி தான் இன்றும் சென்று வரும் கோவில்கள் மற்றும் அதன் வழிதடங்கள் என அனைத்தையும் எழுதி வைப்பார் எப்பொழுது கேட்டாலும் உடனே தகவல்கள் கிடைக்கும்..

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னத்ற்கு நன்றி.
    உங்கள் அப்பாவிடம் வழி தடங்களை கேட்பது போல் உறவினர்கள் நண்பர்கள் சாரிடம் தான் கேட்பார்கள் கோயில்களுக்கு போக.
    உங்கள் கருத்துபகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. படங்களும் இடுகையில் பாசுரங்களும் அருமை. நிறைய படங்களைப் போட்டிருக்கிறீர்கள். கோவிலை தரிசனம் செய்ததுபோலவே தோன்றியது. பாராட்டுகள்.

    அழகர்கோவில் தோசை என்பது, நெய்யில் பொரித்தெடுக்கப்படுவது என்று சொல்வார்கள். இன்னும் சாப்பிட்டதில்லை.

    சிங்கப் பெருமாள் கோவிலுக்கு பல முறை மனைவியுடன் சென்றிருக்கிறேன். என்ன காரணத்திற்காக ஒருவர் எங்களை அங்கு சென்று 9 முறை பிரதட்சணம் வரணும்னு சொன்னாரோ அவர், வீட்டிலிருந்து கிளம்பி, இதனை முடித்துவிட்டு திரும்ப வீட்டுக்கே வரணும், இடையில் பணம் பிறருக்குக் கொடுக்கக்கூடாது (தானமாக), கடைகளுக்கும் செல்லக்கூடாது, வெளி உணவு கூடாது என்றார். அதனைச் சாக்கிட்டு என் மனைவி, அங்கு தோசை வாங்கவிடவில்லை (மற்ற பிரசாதங்கள் அவ்வளவாக ஈர்க்கலை. ஒருவேளை புளியோதரை வாங்கியிருக்கலாம், ஆனால் 5 வாரங்களும் ஒன்றும் வாங்கவில்லை). அதிலும் ஒரு தடவை ஒருவர், தோசையை மிளகாய்ப்பொடியோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். ஹாஹாஹ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

      போன பதிவில் போட நேரம் இல்லை. நிறைய பேருக்கு பார்க்க ஆவல் இருக்கிறது. அதனால் மீதி படங்களையும் போட்டு விட்டேன்.
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      அழகர் தோசைக்கு சுட்டி கொடுத்து இருக்கிறேன் பார்த்தீர்களா? அதில் பொரித்து எடுக்கும் காட்சி இருக்கே!

      சிங்கபெருமாள் கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறீர்களா? நான் இன்னும் பார்த்தது இல்லை. காஞ்சீபுரத்தில் திவ்யதேசங்கள் பார்த்தோம்.

      தோசைக்கு ஏதோ தொட்டுக் கொள்ள கொடுக்கிறார் அந்த பதிவில் உள்ள படத்தில் பார்த்தேன்.
      மிளகாய்ப் பொடியுடன் தோசை என்றால் அவர் வீட்டிலிருந்து கொண்டு வந்து இருப்பார்.

      எப்படியோ அவர் சொன்னபடி பிரார்த்தனையை நல்லபடியாக நிறைவு செய்துவிட்டீர்கள்.


      நீக்கு
    2. ஆமாம் நெல்லை அண்ட் கோமதிக்கா சிங்கப்பெருமாள் கோயிலில் தோசை மிளகாய்ப்பொடியுடன் கிடைக்கும். மிள்காய்ப்பொடியும் விற்கிறார்கள். ஆனால் அங்கு புளியோதரை ம்ம்ம்ம்ம் ஓகே தான்...சிறப்பு என்று சொல்ல முடியாது. கோயில் புளியோதரை என்றால் அது திருக்குறுங்குடி கோயிலில் ஃப்ரீயாக உற்சவத்தின் போது கிடைக்கும்...குறிப்பாக தெலுங்கு வருடப்பிறப்பின் போது பஞ்சாங்கம் வாசிக்கும் வைபவம், அதுக்கு என் அப்பா மற்றும அவர் மாமா வீட்டுச் சிறப்பு என்பதால்... ராமானுஜம் அண்ணா செய்வதுண்டு. பொடி எதுவும் சேர்க்காமல் அப்படியே தாளிதம் செய்து தனியா, மிளகு எதுவும் சேர்க்காத புளியோதரை வெந்தயம், நல்லெண்ணை வாசனையுடன்...இருக்கும்

      இப்போது யார் செய்கிறார்கள் என்று தெரியலை...எப்படி இருக்கிறது என்றும் தெரியலை...இப்ப அங்கு தேசிகர் உற்சவம் நடக்கிறது அப்பா அங்குதான் டேரா 10 நாட்கள். என் அத்தை பெண்ணின் மாமனார் குடும்பம் தான் ஏற்று நடத்துவது. யார் வேண்டுமானாலும் செல்லலாம் தங்கிக் கொள்ளலாம்..

      என்ன பிரசாதம் என்று கேட்கணும்...நமக்கு(எனக்கு) எங்கு போனாலும் அதுதானே பிரதானம் ஹா ஹா ஹா ஹா..இதை அடித்துக் கொண்டிருந்த போது அப்பாவின் அழைப்பு...உடனே நான் கேட்ட முதல் கேள்வி இன்று என்ன பிரசாதம் என்று....இன்று புளியோதரையாம்...அட்டகாசமாக இருந்ததாம் ஆனால் செய்தது வேறு ஒரு மாமா...எனக்கு ஒரே புகை!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. கீதா, எந்த சிவன் கோயிலில் தோசை மிளகாய் பொடி கிடைக்கிறது?
      திருக்குறுங்குடி கோவில் புளியோதரை சாப்பிட ஆசை வந்து விட்டது.
      உங்கள் நினைவு பகிர்வுகள் அருமை.

      அப்பாவை நினைத்தவுடன் அப்பா போனில் அழைத்து விட்டது மகிழ்ச்சி.
      புளியோதரை பிராசதம் என்றவுடன் அப்பாவுடன் போய் இருக்கலாம் என்ற நினைவு வருது இல்லை?
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  19. சாரின் குறிப்புகளைப் பார்க்கும்போது எனக்கு என் அப்பாவின் நினைவுதான் வருது. அவர்தான் ரொம்ப மெடிகுலஸ். எல்லாத்தையும் அங்கு அங்கு நோட் பண்ணுவார். அழகான கையெழுத்து.

    சாரின் கையெழுத்து மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாரின் குறிப்புகளைப் பார்த்தவுடன் அப்பாவின் நினைவு வந்து விட்டதா? அப்பாவின் கையெழுத்தும் அழகாய் இருக்குமா மகிழ்ச்சி.
      சார் ஒரு வருடம் நாலயிர திவய பிரபந்தபாடல்களை படித்து கொண்டு இருந்தார்கள். அப்போது பாசுரங்களை தேட வசதியாக குறித்து வைத்து இருந்தார்கள்.
      அந்த சமயம் வைகுண்ட ஏகாதசிக்கு போன கோவில் விவரமும் அந்த புத்தகத்தில் குறித்து வைத்து இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துகளுக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  20. ஆகா...

    கூடல் அழகன் திருக்கோயிலின் திருக்காட்சிகள் - அருமையான தரிசனம்..

    இத்திருக்கோயில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் இருப்பது தெரிந்தும் அன்றைய சூழலில் தரிசிக்க இயலவில்லை...

    மறுமுறை மதுரையம்பதிக்குச் செல்லும்போது
    கூடல் அழகனின் அருளும் கூடி வரவேணும்...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
      அழகன் கண்டிப்பாய் அழைப்பார் அழகனின் அருள் கிடைக்கும்.
      வாழ்த்துக்கள்.

      நீக்கு
  21. இப்படி எண்ணெய் சேமிக்கும் வழக்கத்தினை
    40 ஆண்டுகளுக்கு முன் பெருமாள் கோயில் ஒன்றில் கண்டிருக்கின்றேன்...

    தூங்காமணி விளக்கின் கீழ் பெரியதொரு பித்தளை வாளி இருக்கும்...

    சேவார்த்திகள் விளக்கில் இடும் எண்ணெய் ஓரளவுக்கு மேல் வழிந்து கீழே வாளியில் வழிந்து நிற்க - பட்டர்கள் அவ்வப்போது சேகரித்துக் கொள்வார்கள்...

    அப்போதெல்லாம் கோயில் விளக்கில் எண்ணெய் இடுவது தான் வழக்கம்...

    நவீன ஜோதிடர்களால் தான் 108/1008 என்றெல்லாம் ஆனது...

    எப்படியோ திருக்கோயில் வளாகம் எண்ணெய்ப் பிசுக்கில்லாமல் இருக்கட்டும்...

    மற்றபடிக்கு
    ஐயாவின் கையெழுத்து அருமை.. அழகு...

    நானும் இப்படித்தான் தேவாரத் திருக்கோயில்களின் திருத்தலக்குறிப்பு நோட்டில்
    அந்தந்த கோயில்களுக்குச் சென்ற நாளைக் குறித்து வைப்பேன்...

    எல்லாம் சிவமயம்.. எங்கும் சிவமயம்...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூங்காமணி விளக்கு எனபது ஒரு தடவை அது கொள்ளும் அளவு ஊற்றினால் தீரும் வரை நாம் ஒன்றும் செய்யவில்லையென்றாலும் எரிந்து கொண்டே இருக்கும்.
      அது பழுது பட்டு அதிலிருந்து எண்ணெய் வீணாகி போகமால் இருக்க வாளி கட்டி இருப்பார்களோ!
      சின்னதிலிருந்து பெரியது வரை கடைகளில் கிடைக்கும். இது புதுமாதிரியாக வடிவமைக்க பட்டது. மேல் வழியாக ஊற்றினால் கீழே சேமிக்கும். கதவை திறந்து எடுத்துக் கொள்ளலாம்.

      நீங்கள் சொல்வது போல் கோவிலுக்கு எண்ணெய் வாங்கி கொடுத்து விடுவோம், இப்போது அவர்களே இத்தனை விளக்கு ஏற்றவேண்டும் என்று சோதிடர்கள், மற்றும் கோவில்களில் எழுதி போட்டு இருப்பதைப் பார்த்து ஏற்றுகிறார்கள். எத்தனயோ கோவிகளில் விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல் இருக்கிறது. அங்கு கொடுக்கலாம்.

      நாம் ஒன்று சொல்லமுடியாது .

      தேவாரத்திருக்கோயில்கள் போய் வந்த குறிப்பு இருப்பது நல்லது, பார்த்த இடத்தையே சில நேரம் மறந்து பார்த்து விடாமல் புதிதான கோயில் பார்க்க உதவும்.

      என் அத்தை அவர்கள் விடுமுறைக்கு வரும் போது அந்த கோயில் பார்க்கவே இல்லை அழைத்து போ, என்பார்கள் நாம் அழைத்து போய் இருப்போம் மறந்து இருப்பார்கள் . அவர்கள் சொன்ன கோயில் கூட்டி போனபின் நான் பார்த்து விட்டேன் என்று சிரிப்பார்கள். வந்து இருக்கும் கொஞ்ச நாளில் பார்க்காத இடத்தை அம்மாவுக்கு காட்டலாம் என்று இந்த ஏற்பாடு. அதனால் இவர்கள் அம்மா பார்த்த நான் பார்த்த கோவில்களையும் நோட்டில் எழுதி வைத்து இருப்பார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  22. அழகர் கோயிலும் சிற்பங்களும் மிக அழகு... வித்தியாசமாக இருக்கு.. சிலதில் முகம் விகாரமாக இருக்கே.. நரசிம்மராக இருக்குமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      லட்சுமி நரசிம்மர், லட்சுமி நராயணர், பிரம்மா.
      உங்களுக்கு எல்லாம் தெரியும் என்று போடவில்லை.
      மேல் விமானத்தில் பூவராகவர் (பன்றி வடிவம் எடுத்து பூமாதேவியை மீட்டு வந்தவர்)

      நீக்கு
  23. அதென்னது கோமதி அக்கா... அப்பம் போலவும் இல்லை.. அடை போலவும் இல்லையே... பொரித்த ரொட்டி போல இருக்கே... ஆனா காரமாக இருப்பின் சுவையாக இருக்கும்போல இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, கோயில் அப்பம் சின்னதாக இனிப்பு தோசை செய்யும் அளவு இருக்கும் .
      நெய்யில் பொரித்து எடுத்த அப்பம், இன்னொன்று கருப்பு உளுந்து பச்சரிசி, மிளகு, சீரகம் எல்லாம் போட்டு செய்த அடை தோசை என்கிறார்கள். அதற்கு சுட்டி கொடுத்து இருக்கிறேன் பார்க்கவில்லையா? செய்முறை இருக்கிறது.
      சூடாய் சாப்பிட்டால் சாப்பிடலாம் போல். ஆறினால் பல்லுக்கு கஷ்டம்.

      நீக்கு
  24. ///
    அதனால் நாங்கள் 11 கோவில்களையும் வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போய் விடுவோம்.///

    ஓ மைகடவுளே... ஒரு நாளிலேயே 11 கோயில்களோ? ஒரு கோயிலுக்குப் போனாலே 2 நாள் ரெஸ்ட் வேணும் எனக்கு ஹா ஹா ஹா... சாறி உடுக்கவே ரயேட் ஆகிடும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா , நாங்கூர் என்ற திருத்தலத்தில் தான் அத்தனை கோவில்களும் இருக்கிறது.(11)
      எல்லாம் பக்கம் பக்கமாய் இருக்கும் . அதனால் தான் போகமுடிகிறது.
      அப்போது வயதும் குறைச்சல்தான்.

      இப்போது நீங்கள் சொன்னது போல் கூடலழகர் கோவிலுக்கு போய் படிகளில் ஏறி இறங்கி போய் வந்ததில் இரண்டு நாள் கால்வலிதான்.(ஆசை யாரை விட்டது)
      ஏற்கனவே பாதத்தின் மேல்புறம் வலி என்று டாகடரிடம் காட்டி மருந்து சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறேன். இன்று காலை மீண்டும் போனேன். அதனால்தான் உங்கள் பின்னூட்டங்களுக்கு தாமதமாய் பதில் கொடுக்கிறேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.கணினியில் வெகு நேரம் இருந்தால் கழுத்துவலி, டைப் செய்தால் கைவலி எல்லாம் இருக்கிறது முடிந்த போது எழுதிவிட வேண்டும்.

      நீக்கு
  25. முந்தைய டைரிக்குறிப்புகளைப் பார்த்தபோது அவை தற்போது எந்த அளவு உதவியிருக்கும் என்பதை உணரமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் முனைவர் ஐயா , வாழ்க வளமுடன்.
    ஆமாம் , சார், டைரி குறிப்புகள் தற்ப்போது உதவுகிறது.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஹையோ கோமதிக்கா சென்ற பதிவு கருத்தில் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகி கூடலழகரை கள்ளழகர் என்று நினைத்து நூபுர கங்கை பற்றிச் சொல்லிட்டேன்...

    கூடலழகர் மதுரைக்குள்...கள்ளழகர் மாலிருஞ்சோலை ஆச்சே!!!
    இந்தப் பதிவு முழுவதும் பார்த்துட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      பெருமாள் எல்லோரும் ஒன்றுதான்.
      இடத்திற்கு ஏற்ப பெயர் கொண்டு இருக்கும் அழகர்.
      அதனால் ஒன்றும் இல்லை.

      நீக்கு
  28. கோமதிக்கா படங்கள் எல்லாம் அட்டகாசம். ஹையோ எத்தனை எடுத்துருக்கீங்க. முதலில் அலவ் செஞ்சுருக்காங்களே!! கோயிலில்!! சில கோயில்களில் எடுக்க அனுமதி இல்லை..அதான்...

    நான் சென்றால் எடுக்க ஆசைப்படுவேன். ஆனால் கூட வருபவர்களைப் பொருத்துதான் எடுக்க முடியும். ரொம்பவே அழகா இருக்கு அக்கா படங்கள் எல்லாம்....செமை...ரொம்பவே ரசித்தோம்..

    பிரசாதம் புரிந்து விட்டது அழகர் தோசைதான் அடை தோசை என்று...ஆனால் வீட்டில் நாம் செய்தால் மெத்தென்று வரும் அக்கா. அவர்கள் நிறைய நெய் அல்லது எண்ணை ஊஊற்றி பொரிப்பது போலச் செய்வதால்....

    ஆனால் நாங்கள் கள்ளழகர் கோயிலில் சாப்பிட்டப்ப ஒரு சின்ன தட்டு சைசில் இருந்தது. ஒரு அரை இஞ்ச் திக்னெஸ் இருந்திருக்கும்....நெய் சொட்டச் சொட்ட...ஆனால் மேலே கிறிஸ்பாகவும் உள்ளே கொஞ்சம் மெதுவாகவும் இருந்தது. நான் சாப்பிட்டது கிட்டத்தட்ட 10,12 வருடங்களுக்கு முன்.பதிவும் தகவல்களும் அருமை அக்கா. குறிப்பாக உங்கள் கணவர் எழுதிய குறிப்புகள் செமை. எழுத்து ரொம்ப அழகா க்ளியரா இருக்கு. என்ன பொறுமை!!!!!!! செம டெடிக்கேஷன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      படங்கள் எடுக்க தடை செய்யவில்லை அதனால் இவ்வளவு படங்கள் எடுக்க முடிந்தது.
      நீங்கள் சொல்வது சரிதான் நம்மை அழைத்து போகிறர்வர்கள் பொருத்தே நின்று நிதானமாய் படம் எடுக்க முடியும்.

      தோசையை எண்ணெயில்
      பொரித்துதான் எடுக்கிறார்கள் நிதானமான சூட்டில்.
      இப்போது நெய் எல்லாம் கிடையாது எண்ணெய் தான். தட்டு சைஸ் இருக்கும் இப்போதும்.

      இன்னும் நிறைய அவர்கள் எழுதி வைத்து இருப்பது இருக்கிறது. சமயம் வரும் போது பதிவில் போடுகிறேன்.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

      நீக்கு