ஆன்மீக உலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீக உலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கோவை பழனி ஆண்டவர் திருக்கோயில்




கோவை   பழனியாண்டவர் 




நவம்பர் 20 ம் தேதி மகனுடன் கோவை போய் இருந்தோம்.  உறவினர்கள் வீடு, மற்றும்   சில கோவில்கள் போய் வந்தோம்.
அதில்  கோவை பழனி என்ற இடத்திற்கு அழைத்து போனார்கள் .  (மகனின் சித்தப்பா  குடும்பத்தினருடன் சென்று வந்தோம்) இன்று தை செவ்வாய் என்பதால் இந்த  முருகன் ஆலயம் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
கோவையில்  கண்ணம்பாளையம்  என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்து இருக்கிறது.

சனி, 1 ஜூலை, 2017

குன்றத்தூர் உதயகிரீசுவரர் கோயில்

மதுரையிலிருந்து சிவகங்கை சாலையில்  25 கி.மீ தூரத்தில்  இருக்கிறது குன்றத்தூர். போன வருடம் (2016) போய் இருந்தோம்.  தொல்லியல் துறை பொறுப்பில் உள்ளது. குன்றத்தூர்  உதயகிரீசுவரர் கோவில் அருகில்   உள்ள மலைக்குகைகுள் இருக்கும்  பைரவர் பற்றிக் கேள்விப்பட்டு  தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் தரிசனம் செய்யலாம் என்று போனோம்.  அங்கு சமணப்படுக்கையும்,  பிராமிக் கல்வெட்டுக்கள், முருகன் கோவிலும் இருக்கிறது.

நாங்கள் போன போது  நிறைய கூட்டம் வந்து இருந்தது , எல்லோரும் மதுரையிலிருந்து ஒரு  குழுவாய்  சேர்ந்து வந்து இருந்தார்கள்.

இக் கோவிலைப்பற்றி  மேலும் விவரம் தெரிந்து கொள்ள டாக்டர் சுபாஷினி அவர்களின் காணொளியைப்  பார்க்கலாம்.(Dr.K. Subashini)



கிழக்குத் திசை நோக்கி இருக்கும் சிவன்- வாயிலில் துவாரபாலகர்கள் 
நந்தி பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.. தூணில் தாமரைப் பூ விரிந்த நிலையில் இருக்கிறது.

இவர்தான் இந்த கோவில்களைப் பார்த்து கொள்கிறார், மேலே இருப்பவர்களைப் பற்றி கடைசிக்கோவில் போகும்போதுதான் கேட்டுத் தெரிந்து கொண்டோம்.

சதுர வடிவ ஆவுடையாருடன்   சிவலிங்கம்

இரண்டு கைகளுடன் நின்ற நிலையில் விநாயகர் சிலை -முற்றுபெறவில்லை
பக்கத்தில் இயற்கை சுனை நீர்
சமணக்குகை செல்லும் பாதை

உள்ளே சமணப்படுக்கை
மலைக் குகைக்குள்
கீழே குனிந்து போக வேண்டும்
சமணப்படுக்கைகளில் இப்போது சாமான்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்த கோபாலன் போல் என்னவர்
நாங்கள் அமர்ந்து இருக்கும் இடத்தில் ஆடுபுலி ஆட்டம், பாதங்கள் எல்லாம் வரையப்பட்டு இருக்கிறது.
மலைக்குகைகுள், பைரவர், முருகன், பெருமாள், சிவன் எல்லோரும் இருக்கிறார்கள்


இந்தக் கோவிலுக்கு வரும் பாதையில் அழகான மரக் குகை  போன்ற தோற்றம் அளிக்கும் மரக்கூடாரம்.

மலைக்குகைக்குள் இருக்கும் தெய்வங்கள்  பற்றி அடுத்த பதிவில்.
                                                           வாழ்க வளமுடன்!

சனி, 22 அக்டோபர், 2016

கூடல் அழகர் கோவில்

கூடல் அழகர் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று காலை(22.10.16) சனிக்கிழமை என்பதால் பெருமாள்  கோவில் போவது  என்று முடிவு செய்தோம்.   பலவருடங்களுக்கு முன் பார்த்த  கூடல் அழகரைப் பார்த்து வந்தோம். இப்போது கோவில் பழமையும், புதுமையும் நிறைந்ததாய் இருக்கிறது. 

மூலவர் விமானம் கோபுரத்தின் பின்புறம் தெரிகிறது

மேல்தளத்திலிருந்து - ஐந்து கலசத்துடன் ராஜகோபுரம்
 தாயார் சன்னதி விமானம் (மேல் தளத்திலிருந்து எடுத்தது)
ஆண்டாள் சன்னதி விமானம்
மேல் தளக் காட்சி


அஷ்டாங்க விமானம் 
சூரியநாராயணர் நின்ற கோலத்தில் ( அருள்வழங்கும் திருக்கோலத்தில்)
அஷ்டாங்க விமானத்தில் உள்ள நம்மாழ்வார். 
மேல் தளத்தில் பள்ளி கொண்ட பெருமாளாய் (அழகிய கண்களால் நம்மைப் பார்க்கிறார்.)
சக்கரத்தாழ்வார் விமானம்
மணவாள மாமுனிகள் சன்னதி  விமானம்

தூரத்தில் தெரியும் மீனாட்சி அம்மன் கோபுரம்  - மேல் தள வாசலிருந்து எடுத்த படம்
கால் சூடு தெரியாமல் இருக்க வெள்ளை சிமெண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

ஆண்டாள் சன்னதி செல்லும் வழி


 மதுரை பெரியார்  பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கூடல்  அழகர் கோவில்  மிக அழகான கோவில் கலை சிற்பங்கள் நிறைந்த கோவில்.  நின்றும், இருந்தும், கிடந்த கோலத்தில் பெருமாள் காட்சி தருவார். 108 திவ்ய தேசதலத்தில் ஒன்று.  பெரியாழ்வார் மங்களாசாஸனம் செய்து இருக்கிறார். (பல்லாண்டு பல்லாண்டு என்று தொடங்கும் பாடல்  பாடி இருக்கிறார்.)

மூலவரை யாரும் மறைக்க முடியாது.  பரமபத படத்தில் உள்ளது போல்  ஆதிசேஷன்  ஆசனத்தில் ஒரு காலை மடித்து ஒரு காலைத் தொங்கவிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலம். உள்ளே   போய் பக்கத்தில் பார்க்க 10 ரூபாய் கட்டணம். நன்றாக தரிசனம் செய்தோம்.  கருவறையை வலம் வந்து மீண்டும் வணங்கி பிரசாதம் பெற்று வெளியே வந்து ராமர்   , கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகளைத் தரிசனம் செய்தோம். எல்லோரும் கம்பித் தடுப்புக்குள்  இருக்கிறார்கள் அழகாய் அலங்காரத்துடன்.

மூலவர் எதிரில்  உற்சவர்  சுந்தர்ராஜப் பெருமாள் கொலுவீற்றுஇருக்கிறார், அவருக்குத்தான் அர்ச்சனைகள் எல்லாம். 

பின் அஷ்டங்கவிமானத்திற்கு போக பத்து ரூபாய் அனுமதி சீட்டு வாங்கி சில படிகள் ஏறி மேல் தளத்திற்கு போய் நின்ற கோலத்தில் உள்ள   சூரிய நாராயணரையும் , அதற்கு மேல் சில படிகள் ஏறி பள்ளி கொண்ட பெருமாளையும் பார்த்தோம். அழகான மூலிகை வர்ணம் பூசிய திருமூர்த்தங்கள். கண்ணை கவரும் வகையில் இருக்கிறது.  கம்பி கேட் போட்டு பூட்டி வைத்து இருக்கிறார்கள்,  உள்ளே போக அனுமதித்தால் சூடன், விளக்கு எல்லாம் வைத்து புகை படிய செய்து விடுவார்கள் மூர்த்தங்களை வர்ணங்கள் நிறம் மாறி விடும்.  மேல்தளத்திலும் கால் சுடாமல் இருக்க வெள்ளை சிமெண்ட பூசி வைத்து இருக்கிறார்கள். அஷ்டங்க விமானத்தில் உள்ள சிலைகள் அழகு. வைண்வ கோவில் விமானத்தில் திருகடையூர் காலசம்ஹார மூர்த்தி, பிச்சாடனார்,  சுப்பிரமணியர் சிலைகள் உள்ளன.


அடுத்து சக்கரத்தாழவார்   சன்னதி சென்றோம் சன்னதியில் மஞ்சள்   கொடுத்தார்கள் பெற்றுக் கொண்டு அவரை வலம் வந்து பின்னால் உள்ள  யோக நரசிம்மரைச்  சேவித்து வந்தோம்.

தாயார் சன்னதி செல்லும் வழியில் உள்ள தூணில் தசாவதார காட்சி சிலைகள் அழகாய் காணப்படுகிறது. ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்,  விச்வக்சேனர்,   ஆகியோர்   சிலைகள்  சன்னதி போகும் வழியில்  உள்ளது.

தாயார் சன்னதி முன் உள்ள தூண்களில் அஷ்டலட்சுமி சிலைகள் காணப்படுகிறது. முதல் தரிசனம்  அலங்காரத்துடன் உள்ள  உற்சவ அன்னை . மூலவர் மரகதவல்லி தாயார் பெரிய தேவியாக அழகாய் வீற்றிருக்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.

தாயார் சன்னதி அழகிய  வண்ண துணியால் செய்த தோரணங்களால் அழகு செய்யப்பட்டுள்ளது.  தூண்களில் அழகிய சிலைகள் காணப்படுகிறது. மர மூடி போட்ட கண்ணாடி பிரகாரத்தின் மூலையில் வைக்கப்பட்டுள்ளது.
                                          

ஆண்டாள்,  சன்னதி போவதற்கு முன் நீண்ட பிரகாரத்தின் சுவற்றில் திவ்ய தேச படங்கள் அழகாய் வரைய பட்டு இருக்கிறது  அதை ரசித்துக் கொண்டே வந்த போது  ஒரு அம்மா காவேரி அம்மன் கும்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்..

நான் வணங்கினேன் காவிரி அம்மனையும், அந்த அம்மாவையும் அவர்கள்  எனக்கு  மஞ்சள், குங்குமம் வைத்துவிட்டு    இரண்டு வாழைப்பழங்கள் பிரசாதமாய்  தந்தார்கள்.

ஐப்பசி மாதம் முழுவதும் நாள் தோறும் இப்படி கும்பிடுவார்கள் சிலர் வீடுகளிலும் கும்பிடுவார்கள். என் அண்ணி வீட்டில் கும்பிடுவார்கள்.

பக்கத்தில் ஒருவர் ஜோதிடம் பார்த்துக் கொண்டு இருந்தார். பின் 


  ஆண்டாள்  சன்னதி சென்றோம். உற்சவ ஆண்டாளை  முன்புறம் வெகு அழகாய்  அலங்காரம் செய்து வைத்து இருக்கிறார்கள், உள்ளே மூலவரும் நல்ல அலங்காரத்துடன்.  ஆண்டாள் சன்னதியில் திருப்பாவைப் பாடல்கள் காட்சிகள் ஓவியமாய் வரையப் பட்டுள்ளது.   ஆண்டாள் சன்னதி பின் நந்தவனம் உள்ளது. நந்தவனத்தில் கண்ணன் சிலை உள்ளது வர்ணத்தில்.

  ஆண்டாள் சன்னதியை வலம் வந்தோம். ஆண்டாள் சன்னதியில் துளசி மாடம் கண்ணாடியுடன் அழகாய் உள்ளது. ராமனூஜரின் மறு அவதாரம் மணவாளமாமுனிகள் என்று  எழுதப்பட்ட சன்னதி அழகாய் காட்சி அளித்தது.

 அடுத்து வெளியே வந்தால் நவக்கிரக சன்னதி.  நவக்கிரகத்தை வலம் வந்த பின் பிரசாத கடையில் பிரசாதம் வாங்கினோம் அரிசியும், உளுந்தும் மிளகும் கலந்து செய்த அடை  போல் ஒரு பலகாரம்-நடுவில் கனமாய் ஓரத்தில் மொறு மொறுப்பாய்  இருந்தது. இனிப்புக்கு அப்பம் வாங்கினோம்.

  மீனாட்சி அம்மன்  கோவிலில் விசிறி சேவையில் உள்ள பெரியவர் இங்கும்  வந்து  விசிறி வீச அந்த காற்றை அனுபவித்து அவருக்கு நன்றியும், வணக்கமும் சொல்லிச்  சிறிது நேரம் அமர்ந்து இறைவனை மனக்கண்முன் கொண்டு வந்து வணங்கி விடைபெற்றோம்.


வெளியே  பசு மாட்டை வைத்துக்கொண்டு அகத்திகீரை வாங்கி போடுங்கள்,  நன்கு சாப்பிடும் இந்த பசு என்று  ஒரு அம்மா அழைத்துக் கொண்டு இருந்தார்கள் , பசு மாட்டின் கயிறைத் தன் காலடியில் பிடித்து வைத்துக் கொண்டு அதைத் தடவி கொடுத்துக் கொண்டு எல்லோரையும் அழைத்துக்கொண்டு இருந்தார். நாங்களும் வாங்கிக் கொடுத்தோம்.



                                                     வாழ்க வளமுடன்.
                                                          ------------------------------

சனி, 9 ஜூலை, 2016

ஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில்

மதுரையிலிருந்து 15 கி.மீ தூரத்தில், அழகர் கோவிலுக்கு இரண்டு கி.மீபக்கத்தில் இருக்கிறது இந்த ஸ்ரீ பத்திரி நாராயணர் கோவில்.

வேப்பமரத்தின் நிழலில் அழகான மண்டபம்.


 
வடக்கில் உள்ள பத்ரிநாத் ஸ்தல பெருமை  சொல்கிறது  

 

திருமங்கையாழ்வாரின்  பாடல்களும்,  வடக்கில் உள்ளது போல் இங்கு அமைக்க பட்டதற்கு காரணமும் எழுத பட்டு இருக்கிறது.

மூலவர்  ஸ்ரீ பத்ரி நாராயணருக்கு  இலந்தைமரமாக வடிவெடுத்து நிழல் கொடுத்த வரலாறு. 


மூலவர் இருக்கும் விமானம்   இலந்தை மர நிழலில் 
இலந்தை மரம் லட்சுமி  அல்லவா ?அவரை வலம் வந்து வணங்க சொன்னார் பட்டர்.
இலந்தை இலை தெரிகிறதா?

சிறு மண்டபத்தின் உள்ளே நாமம்  தெரிவது பண்டரி நாதர் பக்கத்தில் இருப்பது ருக்மணி.

இந்த கோவில் கட்டியவர் காசி போனபோது கங்கையில் நீராடிய போது அவர் கையில் தட்டுப்பட்டதாம்  ஒரு கல்  அவர்  இந்த கல்லை என்ன செய்வது என்று சான்றோர்களை கேட்டபோது உன் கோவிலில் வை என்று உத்தரவு வந்ததாம்.   அப்போது அவர் கோவில் கட்டவில்லை.
அதன் பின் சிறு மண்டபத்தில் பண்டரிநாதராகவும், ருக்மணி தாயாராகவும் வழி பட்டு வந்து இருக்கிறார்.  அதன் பின்  ஸ்ரீ பத்ரி நாராயணர் கோவில் கட்டிய பின்  முன் புறம் ஸ்ரீ பத்ரி நாராயணரும், பின்புறம் இலந்தைமரமும் வைத்து இருக்கிறார்.

                 

ஸ்ரீபத்ரி நாராயணரை சுற்றி வந்து வணங்குவதற்கு சின்ன பிரகாரம் உள்ளது. அதில் துளசி, மஞ்சள், பச்சை கனகாம்பர செடிகள் வளர்ந்து அழகாய் காட்சி அளிக்கிறது. இலந்தை மரத்தின் நிழல் விழுந்து இருப்பதால் உங்களுக்கு  துளசி செடி மட்டும் தெரியும். இந்த படத்தில்.
விநாயகர் சிலை பெரிதாக தனி சன்னதியில் இருக்கிறார். அரசும், வேப்பும் முன்புறம் இருக்கிறது. விநாயகருக்கு கீரீடம்,  மற்றும் கவசங்கள் தங்கம் போல் மின்னியது .


அரசும், வேம்பும்

மண்டப வாசலை தாண்டி உள்ளே  சிலபடிகள் ஏறி போனால் சின்ன கருடாழ்வார் நடுவில் இருக்கும் ஸ்ரீ பத்ரி நாராயணரை வணங்கியபடி இருக்கிறார். அப்புறம் இடது புறம் முதலில் அழகான அனுமன்.

அடுத்து  அரவிந்தவல்லி தாயார் அழகாய் அலங்காரம் செய்து இருந்தார் பட்டர். அடுத்து ராமர், லட்சுமணன், சீதை, அனுமன் மண்டியிட்ட தோற்றத்தில் இருக்கிறார்.  முன்புறம் அழகான உற்சவ விக்கிரங்கள். கண்கவர் அழகு.

மூலவர்  வடநாட்டில் உள்ள பத்ரிநாராயணரை விட பெரிது. வடநாட்டில்  உள்ள பத்ரிநாராயணரை கஷ்டபட்டு பயணம் செய்து  போய் கருவரையில் இருக்கும் பத்ரிநாராயணரை வரிசையில் நின்று சாமி பக்கத்தில்   போய் தரிசிக்கும்   போது கைபிடித்து இழுத்து நகர சொல்லிவிடுவார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை பட்டர்  நமக்கு  உள்ளே யார் யார் இருக்கிறார்கள் என்பதை அழகாய் விளக்கி தீபத்தை காட்டி விளக்கினார். பக்கத்தில் பார்க்கலாம் .   பத்ரி நாதர் கண் மூடிய நிலையில் தியானத்தில்  இருக்கிறார்.  வலது பக்கம் குபேரன், கைகூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இடது புரம் நரநாராயணர்கள் , கீழே எப்போது நாராயண நாமம் சொல்லிக் கொண்டே இருக்கும் நாரதர்,  கருடன், கண்ணனின் பரம பக்தர் உத்தவர் பஞ்சலோக சிலைகள் அழகாய் இருப்பதை காட்டினார். 

வலது புறம் சங்கரர்  இருக்கிறார்.  உற்சவ விக்கிரங்களை வைக்க இருப்பிடங்கள் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.(பத்திரபடுத்த).

அமைதியான அழகான கோவில். வயதான பட்டர் எங்கு இருந்து வருகிறீர்கள் என்று கேட்டு கதைகளை சொல்லி  பிரசாதங்கள் கொடுத்தார்,

ஆங்கில மாத முதல் ஞாயிறும், தமிழ் மாதம் முதல் ஞாயிறும் மாலை பஜனை உண்டாம் அப்போது மட்டும் கோவில் எட்டுமணிக்கு மேல் வரை திறந்து இருக்கும்.  மற்ற நாட்களில்  இரவு 7.30க்கு எல்லாம்  நடை சாற்றப்படும்.


நாங்கள் வடநாட்டில் உள்ள ஸ்ரீ பத்ரி நாராயண கோவில் பத்ரிநாத்  தரிசனம் செய்ததைப்பற்றி எழுதிய பதிவின் சுட்டி. விரும்பினால் நேரம் இருந்தால் படிக்கலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

                                                             வாழ்க வளமுடன்.