செவ்வாய், 21 ஜனவரி, 2025

கோவை பழனி ஆண்டவர் திருக்கோயில்




கோவை   பழனியாண்டவர் 




நவம்பர் 20 ம் தேதி மகனுடன் கோவை போய் இருந்தோம்.  உறவினர்கள் வீடு, மற்றும்   சில கோவில்கள் போய் வந்தோம்.
அதில்  கோவை பழனி என்ற இடத்திற்கு அழைத்து போனார்கள் .  (மகனின் சித்தப்பா  குடும்பத்தினருடன் சென்று வந்தோம்) இன்று தை செவ்வாய் என்பதால் இந்த  முருகன் ஆலயம் இந்த பதிவில் இடம்பெறுகிறது.
கோவையில்  கண்ணம்பாளையம்  என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்து இருக்கிறது.



கோபுரத்தில்  நால்வர் சிற்பங்கள் அழகாய் இருக்கிறது.

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் காலை 9.30க்கு  சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடக்குமாம். வருவோர் அனைவருக்கும் கோயில்  நிர்வாகத்தினர்களே  பிரசாதங்கள் செய்து வழங்குவார்களாம். நாங்கள் புதன் அன்று போனோம்.

மகனுடன் நவம்பர் 1 ஆம் தேதி  முதல்   பயணம் தொடர்ந்து செய்து கொண்டு இருந்தேன்.  தொடர்   பயணங்கள் செய்ததால்   கால்வலி இருந்தது . கொஞ்சம் படி இருக்கிறது ஏறி விடுவீர்களா என்று கேட்டார்கள் கைபிடியை பிடித்து கொண்டு முருகனை நினைத்து கொண்டு ஏறி விட்டேன். 27 படிகள் தான்  இருக்கிறது. கடைசியில் உள்ள சிறிய காணொளியில் 27 படிகள் 27 நட்சத்திரங்களை குறிப்பாதகச் சொல்கிறது.


உள்பக்கம் இருந்து எடுத்த படம்






படிகளை கடந்து மேலே போனால் நடுவில் நர்த்தன விநாயகர் இருக்கிறார், அவருக்கு இருபக்கமும் 6, 7 படிகள் இருக்கிறது. வலது பக்கம் ஏறி இடது பக்கம் இறங்க அப்படி அமைத்து இருக்கிறார்கள் போலும். 

                                   கொடிமரம்

யாளி, யானை சிற்பங்கள் கண்ணாடி  தடுப்புக்குள் இருக்கிறார்கள்.  இருபக்கமும்  குதிரையை தாங்கும் வீரர்களும் யாளி, யானை சிற்பங்களும் அழகாய் இருக்கிறது


 

யாளிகளை கடந்து போனால் மூலவர் பழனி ஆண்டவர் அழகான் அலங்காரத்தில் காட்சி தருகிறார்.


யானையும் கம்பி தடுப்புக்குள் பத்திரமாக இருக்கிறார், குழந்தைகள் மேலே ஏறி உட்கார ஆசைப்படுவார்கள் தந்தங்கள்  உடைந்து விடாமல் இருக்கும். சிறிய தேர் இருக்கிறது அந்த சிவப்பு கட்டிடத்தில். தேர் இறங்கி வர சாய் தளம் அமைத்து இருக்கிறார்கள்.
மதில் சுவரில்  நந்திகள், சிவகணங்கள்

அழகிய மேல் விதானம்


பள்ளியறை கதவு இரு மயில்களுடன் அழகாய் இருக்கிறது

 இடும்பன் ,  முருகன்,  மற்றும் காவடிகள் 




அவினாசி சுப்பிரமணியம், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்


100 வருடங்களுக்கு முன் சிறிய கோயிலாக இருந்ததாம் அப்புறம் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து  நான்கு நிலை கோபுரம் கட்டி இருக்கிறார்கள், முக்கியமானவர்கள் சிலைகளும் கோயில் கோபுரத்தில் இருக்கிறது.

ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போல சிற்பம்

குதிரையில் ஒருவர் பயணம் செய்கிறார்.



தூரத்தில் தெரியும் தேவாலயத்தில்  வரபோகும் கிறிஸ்மஸ் விழாவுக்கு மின் விளக்கு அலங்காரங்கள் நடந்து கொண்டு இருந்தது. ஏசு  பாடல்கள் ஒலித்து கொண்டு இருந்தது.




சுற்றுப்பிரகாரம் அழகு. 




மூலவர் இருக்கும்  விமானம். காமிரா எடுத்து செல்லவில்லை, அலைபேசியில் எடுத்த படங்கள். திருமண காட்சி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.



காலையில்  ஏதோ விழா நடந்து இருக்கிறது.

அகத்தியர், நக்கீரர், ஒளவையார்,  போகர், , புலிப்பாணி,  பாலதேவராயர், குமரகுருபர், அருணகிரி நாதர், கச்சியப்பமுனிவர், அருட்பிரகாசவள்ளலார்,  பாம்பன் சுவாமிகள், வாரியார் சாமிகள் இருக்கிறார்கள்.

கொடிமரத்திற்கு பக்கம்  தகர கொட்டகை போட்டு இருப்பதால் கோயிலுக்கு உள்ளே இருட்டாக இருக்கிறது.

கோயில் பிரகாரத்தில் இப்படி ஆசனங்கள் அமைத்து இருக்கிறார்கள் அமர்ந்து அங்கு நடக்கும் திருமணங்களை பார்க்கலாம். ஊர் மக்கள் இங்கு திருமணம், காது குத்து, வளைகாப்பு விஷேசங்களை நடத்தி கொள்வார்களாம். நாங்கள் போய் இருந்த போது குருக்களிடம்  மறு நாள் திருமணம் பற்றி பேசி கொண்டு இருந்தார்கள். 
எங்களுக்கு  ஆரத்தி காட்டி விபூதி பிரசாதம் கொடுத்து விட்டு  வந்தவர்களிடம் பேச்சை தொடர்ந்தார், அதனால் கோயில் பற்றிய செய்திகள் கேட்க முடியவில்லை. இணையத்திலும் அவ்வளவாக இல்லை. கேட்டவரங்களை அருளும் தெய்வம் என்று மக்கள் சொல்கிறார்கள்.

உற்சவர் இருக்கும் இடமும், பள்ளி அறையும்.

உற்சவர் முருகன் இருப்பார் என்று கம்பி கதவு வழியாக எட்டிப்பார்த்தால்  கண்ணன் குழல் ஊதி கொண்டு ருக்மணி, பாமாவுடன் இருக்கிறார். அவருக்கு பின்னால் நிறைய உற்சவ மூர்த்திகள் இருக்கிறார்கள். எல்லா விழாக்களும் நடத்தி கொள்ள உற்சவர்கள் இருக்கிறார்கள். மூலவர் முருகன் மட்டும் தான் கோயிலில். 

கோயிலின் மேல் விதானம் அழகாய் இருக்கிறது.


இந்த ராஜ அலங்கார படம் முகநூலில் ஒருவர் பகிர்ந்து இருந்தார்.

இணையத்தில் பார்த்துதான் இந்த கோயில் போனோம்.

https://www.youtube.com/watch?v=x4Fi4ibq59o


மிக சிறிய காணொளி பாருங்கள். முருகன் அலங்காரம், அபிஷேகம்  எடுத்து இருக்கிறார்கள்.  முருகன் மிக அழகாய் இருக்கிறார். தெளிவாக கோயிலை சுற்றி காட்டுகிறார்.

அவர் கும்பாபிஷேக காட்சியை படம் பிடித்து இருக்கிறார். புதிதாக கட்டிய போது அவர் காணொளி எடுத்து இருப்பார் போலும்.  நான் எடுத்த படத்தில் கோபுர  சிலைகள் பேர் எல்லாம் மறைக்கிறது இரும்பு படிக்கட்டு. இந்த காணொளியில் உட்பக்க கோபுர சிற்பங்கள் நன்கு தெரிகிறது.

இப்போது நிறைய மாற்றங்கள் உள்ளது கோயிலில் .

கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்தேன் பக்கவாட்டில் வேல் இருந்தது.

//வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையில்லை மனமே

கந்தனுண்டு கவலை யில்லை மனமே//

 வேல் உண்டு வினையில்லை குகனுண்டு  பயமில்லை என்று சூரியபகவானும் தன் கதிர்களை  பரப்பி  வேலை பணிகிறார்.

குன்று இருக்கும் இடத்தில் குமரன் இருப்பார் குன்றே இல்லாத இடத்திலும் மலைக்கோயில் போல அமைத்து பழனி மலை முருகனை  கொண்டு வந்து விட்டார்கள் கண்ணம் பாளையம்  ஊர் மக்கள்.

நாங்களும் பழனி மலை முருகனை தரிசனம் செய்து  மகிழ்ச்சி அடைந்தோம். நீங்களும் மகிழ்வீர்கள் என்று   இந்த பகிர்வு. 

மகனுடன் தாய்லாந்து, சீரடி, சென்னை, கோவை என்று போய் வந்தேன், போய் வந்த இடங்களைபற்றி  பகிர நிறைய செய்திகள்  இருக்கிறது.

முடிந்த போது பதிவுகள் வரும்.  "எப்பாடுபட்டாவது உற்சாகத்தை வரவழைத்து கொள்ளும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்" என்று தினப்படி காலண்டரில் படித்தேன். உற்சாகத்தை வரவழைத்து கொண்டு பதிவை வலைஏற்றி விட்டேன் முருகன் அருளால்.


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


------------------------------------------------------------------------------------------------------

33 கருத்துகள்:

  1. சுற்றுலாவில் நடக்க முடிந்தது ஆச்சர்யம். வயதானால் படபடப்பு, கால்வலி இவை தொல்லைப்படுத்தும். படங்கள் அழகு. கோயில் தகரக்கூரை தான் பொருந்தாத ஒன்றாக திருஷ்டி கேடாக உள்ளது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார், வாழ்க வளமுடன்

      //சுற்றுலாவில் நடக்க முடிந்தது ஆச்சர்யம். வயதானால் படபடப்பு, கால்வலி இவை தொல்லைப்படுத்தும்.//

      ஆமாம், சீரடியில் விமான நிலையத்திலிருந்து கோயில் வரை சக்கர நாற்காலி வசதி இருக்கிறது, கிடைக்கும் இடங்களில் அந்த வசதியை பயன்படுத்தி கொண்டோம். வயதானவர்களுக்கு உதவ நம் பிள்ளைகள், மற்றும் அன்பு உள்ளங்கள் எங்கும் இருப்பதால் நல்லபடியாக எல்லா இடங்களுக்கும் மகனுடன் போய் வந்தேன்.


      //படங்கள் அழகு. கோயில் தகரக்கூரை தான் பொருந்தாத ஒன்றாக திருஷ்டி கேடாக உள்ளது.//

      ஆமாம், அதனால் தான் தகரக்கூரை இல்லா காணொளி கொடுத்து இருந்தேன்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. சமீபத்திய கோவில் போல தெரிகிறது.  பழைய கோவில் இல்லையோ...  ஏறும்போதே 27 படிகளா..  அம்மாடி...  ஸ்வாமி மலையும், நாச்சியார் கோவிலும் நினைவுக்கு வருகின்றன!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //சமீபத்திய கோவில் போல தெரிகிறது. பழைய கோவில் இல்லையோ.//

      இல்லை பழைய கோயிலை மாற்றி அமைத்து இருக்கிறார்கள்

      .. //ஏறும்போதே 27 படிகளா.. அம்மாடி... ஸ்வாமி மலையும், நாச்சியார் கோவிலும் நினைவுக்கு வருகின்றன!//

      சுவாமி மலை எல்லாம் முன்பு கொஞ்ச படிகள். நிறைய படிகள் உள்ள கோயிலுக்கு இரண்டு வருடத்திற்கு முன் கூட ஏறி வந்தேன்,(பத்துமலை முருகன் கோயில்) இப்போது 27 படிகளே மலைப்பை தருகிறது.

      நீக்கு
  3. காணொளி பார்த்தேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நவீனமாக எல்லா இடங்களும் புது நிறம் பெற்று நிற்கின்றன. படிக்கட்டுகள் கூட புதுசு போல வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. காணொளி பார்த்தேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நவீனமாக எல்லா இடங்களும் புது நிறம் பெற்று நிற்கின்றன. படிக்கட்டுகள் கூட புதுசு போல வைத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காணொளி பார்த்தேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். நவீனமாக எல்லா இடங்களும் புது நிறம் பெற்று நிற்கின்றன. படிக்கட்டுகள் கூட புதுசு போல வைத்திருக்கிறார்கள்.//

      ஆமாம், கோவை பக்கம் வீடுகளை கூட புதிதாக வைத்து இருப்பார்கள் அடிக்கடி வெள்ளை அடித்து.

      கோயிலை மிகவும் சுத்தமாக வைத்து இருக்கிறார்கள். புதிது போல பராமரிக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. கோவை பழனி கோவில் நன்று.

    எல்லாப் படங்களும் அழகு. புதிய கோவில் தோற்றம் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      //கோவை பழனி கோவில் நன்று.

      எல்லாப் படங்களும் அழகு. புதிய கோவில் தோற்றம் தருகிறது.//

      பழைய கோயிலை மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.
      கோபுர சிலைகளை பார்த்தாலே தெரியும் இந்தக்கால ஆட்கள் எல்லாம் கோபுர சிற்பத்தில் இருக்கிறார்கள்.

      நீக்கு
  6. கோவிலும் தூய்மையாக இருக்கிறது. காணொளி நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோவிலும் தூய்மையாக இருக்கிறது. காணொளி நன்று//

      ஆமாம், கோயிலும் தூய்மை, கோயிலை சுற்றி இருக்கும் இடங்களும் அந்த தெரு எல்லாம் தூய்மையாக இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. கோவை பழனி ஆண்டவர் கோவில் தரிசனம் கண்டேன். தங்களின் படங்கள் மிக தெளிவாக அழகாக உள்ளன மா.

    விதானங்களின் வேலைப்பாடுகள் மிக அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

      //கோவை பழனி ஆண்டவர் கோவில் தரிசனம் கண்டேன். தங்களின் படங்கள் மிக தெளிவாக அழகாக உள்ளன மா.//

      நன்றி அனு.


      //விதானங்களின் வேலைப்பாடுகள் மிக அழகு//

      ஆமாம், மிக அருமையாக இருக்கிறது மேல் விதானம்.

      சிறு கோயில்தான் ஆனால் கலைஅம்சம் அதிகம்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி அனு.

      நீக்கு
  8. அழகிய கோவில் வண்ணமயமாக காட்சி தருகிறது.

    நிறைந்த படங்கள் போட்டு எம்மை எல்லாம் கோவில் வலம் வர வைத்துள்ளீர்கள் கண்டு வணங்கினோம்.

    அழகிய முருகன் காணொளியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //அழகிய கோவில் வண்ணமயமாக காட்சி தருகிறது.

      நிறைந்த படங்கள் போட்டு எம்மை எல்லாம் கோவில் வலம் வர வைத்துள்ளீர்கள் கண்டு வணங்கினோம்.//

      மகிழ்ச்சி மாதேவி.

      //அழகிய முருகன் காணொளியும் அருமை.//

      ஒவ்வொரு அலங்காரங்களில் ஒவ்வொரு விதமாய் அழகாய் காட்சி தருகிறார், அதனால்தான் அந்த காணொளி பகிர்ந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. அழகான புகைப்படங்களுடன் விளக்கங்கள் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //அழகான புகைப்படங்களுடன் விளக்கங்கள் அருமை அம்மா...//

      உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கோவை பழனி மலை முருகனைப் பற்றி இப்போதுதான் கேள்விபடுகிறேன். உங்களால் முருகனின் தரிசனங்கள் நல்லபடியாக கிடைத்தது. ராஜ அலங்காரத்தில் முருகன் கண் கொள்ளாத காட்சி. 🙏. கோவில் அமைப்பும், அதன் அழகும் மனதை கவர்கிறது. ஒவ்வொரு படங்களையும் பொறுமையாக எடுத்து அதன் விளக்கத்தையும் உங்கள் பாணியில் அருமையாக தந்துள்ளீர்கள். எல்லாபடங்களும் நன்றாக உள்ளது. எல்லாவற்றையும் என் கைப்பேசியில் பெரிதாக்கி பார்த்து தரிசித்தேன் . நீங்கள் தந்த காணொளியையும் பார்த்து ரசித்தேன்.

    /எப்பாடுபட்டாவது உற்சாகத்தை வரவழைத்து கொள்ளும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்" என்று தினப்படி காலண்டரில் படித்தேன். உற்சாகத்தை வரவழைத்து கொண்டு பதிவை வலைஏற்றி விட்டேன் முருகன் அருளால்/

    உண்மையான வார்த்தைகள். அவன் அருள் இல்லையென்றால் எந்த செயலும் நம்மால் செய்ய இயலாது. தொடர்ந்து உங்களுக்கு எப்போதெல்லாம் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இறைவனை நினைத்தபடி, அவன் அருளால் பதிவுகளை எழுதி தாருங்கள். உங்களால் இன்று கோவை பழனி மலை முருகனை தரிசித்த திருப்தி கிடைத்திருக்கிறது பாருங்கள்...! அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை.

    உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. கோவை பழனி மலை முருகனைப் பற்றி இப்போதுதான் கேள்விபடுகிறேன். உங்களால் முருகனின் தரிசனங்கள் நல்லபடியாக கிடைத்தது. ராஜ அலங்காரத்தில் முருகன் கண் கொள்ளாத காட்சி. 🙏. கோவில் அமைப்பும், அதன் அழகும் மனதை கவர்கிறது. ஒவ்வொரு படங்களையும் பொறுமையாக எடுத்து அதன் விளக்கத்தையும் உங்கள் பாணியில் அருமையாக தந்துள்ளீர்கள். எல்லாபடங்களும் நன்றாக உள்ளது. எல்லாவற்றையும் என் கைப்பேசியில் பெரிதாக்கி பார்த்து தரிசித்தேன் . நீங்கள் தந்த காணொளியையும் பார்த்து ரசித்தேன்.//

      காணொளியை, பதிவை ரசித்து பார்த்தது மகிழ்ச்சி.

      //உண்மையான வார்த்தைகள். அவன் அருள் இல்லையென்றால் எந்த செயலும் நம்மால் செய்ய இயலாது. //

      ஆமாம் அவன் அருள் இல்லையென்றால் எதுவும் நடக்காது.
      இப்போது நாளும் அவன் அருளால் தான் ஓடி கொண்டு இருக்கிறது.
      அலுப்பும், சோர்வும் வந்து ஒட்டிக் கொள்கிறது, அதை விரட்ட இறை நாமம் , உற்சாகத்தை வரவழைத்து கொண்டு காரியங்களை செய்வது என்று ஓடுகிறது.


      //உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.//

      உடல் நிலைக்கு மருத்துவரிடம் காட்டி மருந்துகள் எடுத்து கொள்கிறேன்.

      உங்கள் அன்பான அக்கறையான வார்த்தைகளுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.





      தொடர்ந்து உங்களுக்கு எப்போதெல்லாம் பதிவுகள் எழுத நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் இறைவனை நினைத்தபடி, அவன் அருளால் பதிவுகளை எழுதி தாருங்கள். உங்களால் இன்று கோவை பழனி மலை முருகனை தரிசித்த திருப்தி கிடைத்திருக்கிறது பாருங்கள்...! அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை.


      நீக்கு
  11. கோவையில் இருந்தப்ப இந்தக் கோயில் பற்றிக் கேட்டதே இல்லையே

    பிரசாதம் எல்லாம் ஆமாம் முருகனுக்குச் செவ்வாய் என்பார்கள் என் மாமியார், எங்கள் வீட்டில் இருவருக்கு முருகன் செவ்வாய் என்பார்கள் என் மாமியார்.

    படங்கள் நன்றாக இருக்கின்றன

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      //கோவையில் இருந்தப்ப இந்தக் கோயில் பற்றிக் கேட்டதே இல்லையே//

      நாங்களும் கேள்வி பட்டது இல்லை. இந்த தடவை பார்க்காத கோயில்கள் பார்த்தோம்.

      உங்கள் மாமியார் சொன்னது போல செவ்வாய் அன்று முருகனுக்கு வழிபாடு சிறப்பு.
      எனக்கு செவ்வாய்தான்.



      நீக்கு
  12. கொடிமரம் மின்னுகிறது அழகாக.

    யானையைத் தூக்கி நிற்கும் வீரர், யாளிச் சிற்பம் யானை துதிக்கையால் இழுக்கிறதோ அழகா இருக்கு. யாளிக்கும் யானைக்கும் சண்டையைக் குறிக்கிறதோ?

    இப்ப அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் யானையின் மரபணுவுடன் டைனசாரின் மரபணு வருவது போல் செய்து மீண்டும் டைனசர் உலா வருவது போன்ற முயற்சி நடக்கிறது என்று செய்தியில் பார்த்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் நன்றாக இருக்கின்றன//

      நன்றி கீதா.

      கொடிமரம் மின்னுகிறது அழகாக.

      // யாளிச் சிற்பம் யானை துதிக்கையால் இழுக்கிறதோ அழகா இருக்கு. யாளிக்கும் யானைக்கும் சண்டையைக் குறிக்கிறதோ?//

      ஆமாம், யாளி யானையை விட பலசாலி என்பதை காட்ட அந்த காலத்தில் சிலைகள் வடிவமைத்தார்கள்.

      //இப்ப அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் யானையின் மரபணுவுடன் டைனசாரின் மரபணு வருவது போல் செய்து மீண்டும் டைனசர் உலா வருவது போன்ற முயற்சி நடக்கிறது என்று செய்தியில் பார்த்தேன்.//

      ஆமாம், டைனோசரின் தலை யானையின் துதிக்கை போல இருக்கும்.
      யானையை போல உயர்ந்த மிருகம் இல்லையா அதனால் இப்படி முயற்சி செய்கிறார்கள் போலும்.

      நீக்கு
  13. யாளியைப் பார்த்ததும் மேலே சொன்ன அந்த அமெரிக்கச் செய்தி நினைவுக்கு வந்தது. யாளி என்ற ஒன்று இருந்ததாகச் சொல்லப்படு. ஒரு வேளை அமெரிக்கர்கள் யாளியைப் பார்த்தால் ஆராய்ச்சி மேற்கொண்டு அதையும் மீண்டும் கொண்டு வருவார்களோ என்னவோ என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //யாளியைப் பார்த்ததும் மேலே சொன்ன அந்த அமெரிக்கச் செய்தி நினைவுக்கு வந்தது. யாளி என்ற ஒன்று இருந்ததாகச் சொல்லப்படு. ஒரு வேளை அமெரிக்கர்கள் யாளியைப் பார்த்தால் ஆராய்ச்சி மேற்கொண்டு அதையும் மீண்டும் கொண்டு வருவார்களோ என்னவோ என்று தோன்றியது.//

      இருப்பதை பாதுகாக்க முயற்சி செய்யலாம், அழிந்து போனதை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்து அதன் பின் விளைவுகளை சந்திக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

      நல்லதை செய்யலாம்,

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. படங்களின் வழியாக தரிசனம் எங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    காணொளியும் கண்டேன்.

    படங்கள் சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள்.

    விளக்கம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //படங்களின் வழியாக தரிசனம் எங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி.

      காணொளியும் கண்டேன்.


      படங்கள் சிறப்பாக எடுத்து இருக்கிறீர்கள்.

      விளக்கம் நன்று.//

      பதிவை, காணொளியை , படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஜி.


      நீக்கு
  15. இடும்பன் , முருகன், மற்றும் காவடிகள், நேதாஜி அவினாசி சுப்பிரமணியம் எல்லாரும் வடிவம் அப்படியே அழகா இருக்கு

    பள்ளியறை கதவு இரு மயில்களுடன் அழகாய் இருக்கிறது// ஆமாம்

    எல்லா சுவாமிகளும் இருக்கிறார்கள். சுற்றுப்புறமும், பிராகாரம் மேல் விதானம் வடிவம், எல்லாமே நன்றாக இருக்கின்றன கூடவே அருகில் தேவாலயம்.

    சுத்தமாக இருக்கிறது கோயில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடும்பன் , முருகன், மற்றும் காவடிகள், நேதாஜி அவினாசி சுப்பிரமணியம் எல்லாரும் வடிவம் அப்படியே அழகா இருக்கு

      பள்ளியறை கதவு இரு மயில்களுடன் அழகாய் இருக்கிறது// ஆமாம்

      எல்லா சுவாமிகளும் இருக்கிறார்கள். சுற்றுப்புறமும், பிராகாரம் மேல் விதானம் வடிவம், எல்லாமே நன்றாக இருக்கின்றன கூடவே அருகில் தேவாலயம்.

      சுத்தமாக இருக்கிறது கோயில்//


      அனைத்தையும் அந்த ஊர் மக்கள் சுத்தமாக வைத்து கொள்ள உதவுகிறார்கள். பக்க்த்தில் தேவாலயம் இருக்கிறது. அங்கு உள்ள மக்கள் டவுனுக்கு போக வேண்டாம் இங்கேயே கோயில்களுக்கு போய் கொள்ளலாம்.

      நீக்கு
  16. ஊர் மக்கள் இங்கு திருமணம், காது குத்து, வளைகாப்பு விஷேசங்களை நடத்தி கொள்வார்களாம்.//

    ஊர்மக்களுக்குப் பல சௌகரியங்கள் இல்லையாக்கா. இதுவும் நல்ல விஷயம்.

    மாமனும் மாமியும் இருக்காங்களே!

    அந்தத் தகரக் கூரைக்குப் பதில் வேறு போட்டிருக்கலாமோ அவங்க. அது என்னவோ போல இருக்கு

    காணொளி நன்றாக இருக்கிறது கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. //ஊர்மக்களுக்குப் பல சௌகரியங்கள் இல்லையாக்கா. இதுவும் நல்ல விஷயம்.//

    ஆமாம், அவர்கள் வீட்டு விழாக்களை கோயிலில் நடத்திக் கொள்வது அவர்களுக்கு செளகரியம், சுவாமி முன் நடத்தும் மகிழ்ச்சி.

    மாமனும் மாமியும் இருக்காங்களே!//

    முருகனின் மாமா, மாமிகளும் இருக்கிறார்கள்.

    //அந்தத் தகரக் கூரைக்குப் பதில் வேறு போட்டிருக்கலாமோ அவங்க. அது என்னவோ போல இருக்கு//

    ஆமாம், கோயிலின் அழகை குறைக்கிறது. வெயிலுக்கு போட்டு இருக்கிறார்கள் போலும்.

    காணொளி நன்றாக இருக்கிறது கோமதிக்கா//

    காணொளி நன்றாக எடுத்து இருந்தார் அதுதான் போட்டேன்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. படங்களும், விளக்கமும் மிகவும் சிறப்பு. நானே நேரில் உங்களோடு வந்தது போல இருந்தது. காணொளி தீபாராதனை முத்தாய்ப்பு அருமை! மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

      //படங்களும், விளக்கமும் மிகவும் சிறப்பு. நானே நேரில் உங்களோடு வந்தது போல இருந்தது. காணொளி தீபாராதனை முத்தாய்ப்பு அருமை! மிக்க நன்றி.//

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி பானுமதி.

      நீக்கு