வியாழன், 31 ஜூலை, 2014

காட்டுமன்னார்குடி வீரநாராயணப்பெருமாள்

ஜுலை 5ம் தேதி(5/7/2014) நாங்கள் காட்டுமன்னார்குடியில் இருக்கும் வீரநாராயணப்பெருமாள் கோவிலுக்குச்  சென்றிருந்தோம். 

வீரநாரயணபுர சதுர்வேதிமங்கலமென்று கல்வெட்டுகளில் உள்ளது.  வீரநாராயணன் என்ற விருது பேர்பெற்ற முதலாம் பராந்தகன், இவ்வூரை அமைத்தார். இவ்வூர் சிதம்பரத்திலிருந்து 26 கி. மீ தூரத்தில் இருக்கிறது. 
காட்டுமன்னர்கோவில் அருகில் வீராணம் ஏரி இருக்கிறது.

முன்பு இது வீரநாராயண ஏரி என்று குறிப்பிடப்பட்டது. சரித்திரப் புகழ்பெற்ற நாவல்  அமரர் கல்கி எழுதிய  'பொன்னியின் செல்வன்’ நாவலில்  இந்த ஏரி குறிப்பிடப்படும். ஆடி, ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியில் நீர் நிரம்பி ததும்பி இருக்கும் என்று இந்த ஏரியைப்பற்றி அதில் வரும்.

//ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீரநாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறி பிரயாணம் செய்து கொண்டிருந்தான்// 

என்று வரும். இந்த கதையைப் படித்தவர்கள்  அந்தவாலிப  வீரர் பேரை சொல்லுங்களேன் !

நாங்கள் வீரநாராயணப் பெருமாள் கோவில் போனபோது ,  ஆனி மாத 10 நாள் திருவிழா கோவிலில் நடந்து கொண்டு இருந்தது. 

இந்தக்கோயிலில்,

பெருமாள் பெயர்-வீரநாராயணப்பெருமாள்,
உற்சவர்-                 ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.
தாயார் -                   மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.
தீர்த்தம்-                  வேதபுஷ்கரணி, காவேரி நதி
தலவிருட்சம்-       நந்தியாவட்டை.

கோவில் விஷேசம்:-

 ஸ்ரீமத் நாதமுனிகள் ,அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட  ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதாரம் செய்த  தலம் இது. 


(ஸ்ரீமதநாதமுனிகள் திருவரசு என்று நாதமுனிகளைப்பற்றியும் , அவர் பேரர் ஸ்ரீ ஆளவந்தார் பற்றியும் எழுதி இருக்கிறேன் முன்பு.)

”லக்ஷ்மி நாத சமாரம்பாம்” என்ற தனியன் ஏற்பட்ட ஸ்தலம் என்பார்கள்

நாங்கள் சென்றிருந்த சமயம் ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு அபிஷேக ஆராதனை விழா நடந்து கொண்டு இருந்தது. திவ்யபிரபந்தம் பாடி முடிந்தவுடன் பூஜை ஆனது.  பின் தயிர்சாதம்  பிரசாதமாய் கொடுத்தார்கள்.

அதன்பின்தான் பூட்டி இருந்த வீரநாராயணப் பெருமாள் சந்நதியைத் திறந்து காட்டினார்கள். ”பூஜை பார்த்துவிட்டு போகிறீர்களா? அல்லது ஆரத்தி மட்டும் போதுமா” என்று பட்டர் கேட்டார்கள். நாங்கள் அடுத்து திருநாரையூர் போக வேண்டி இருந்ததால் ஆரத்தி. சடாரி, தீர்த்தம், துளசி பெற்றுக்கொண்டோம்.
பெருமாள் சன்னதியின் வலது புறம் யோக நரசிம்மர் இருக்கிறார். அவரையும் தரிசித்து  வந்தோம்.

              முதலில் அருள்மிகு அனுக்கிரஹ ஆஞ்சநேயர் சன்னதி.


அனுமன்,  எதிரில்இருக்கும்  பெருமாளைத் தரிசனம் செய்து கொண்டு இருக்கிறார்.

இறைநம்பிக்கை எனும் துடுப்பைக் கொண்டு வாழ்க்கைப் படகை நடத்திச் செல்லலாம் என்று  உணர்த்தும் வண்ணம் காட்சி அளிக்கிறது -தெப்பக்குளத்தில் உள்ள படகு.

தாரகம் என்றால் கடத்துவிப்பது, படகிலே வைத்து ஓட்டிக் கொண்டு போய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம்.ப்ரணவத்தையும், ராமநாமாவையும் தாரகமந்திரம் என்று சொல்வது வழக்கம். “தாரகநாமா” என்று தியாகராஜர்கூட ராமசந்திர மூர்த்தியை தாபத்தோடு பாடியிருக்கிறார்.ஸம்சாரக்கடலில் விழுந்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிற நம்மைப் படகிலே தூக்கிப் போட்டுக்கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் தாரக மந்திரம்.
அருள்வாக்கு:-
----ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள்.


10 நாள் திருவிழாவில் ஒருநாள் திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு

                                              பெருமாள் கோபுர தரிசனம்


                                              கொடிமரமும் கருடாழ்வார் சன்னதியும்


                                                   பெருமாள் சன்னதி விமானம்

கோவில் பற்றிய கல்வெட்டும், அருகில் ராமர் சீதையும் அனுமனும் உள்ளனர் , எதிரில் ராமர் சன்னதி உள்ளது.
ஸ்ரீமதங்க மகரிஷி சன்னதி

ஸ்ரீ விஷ்ணு பாதம்
பெருமாளும் ஸ்ரீமதங்க மகரிஷியும் , பின்புறம்  பெருமாளும், ஆண்டாளும்

ஆண்டாள் சன்னதி விமானம்
ஸ்ரீஆண்டாள்அருளிசெய்த திருப்பாவை- ஆண்டாள் சன்னதியில்
ஸ்ரீ மதங்கமகரிஷி நேர் எதிரே அழகிய தூண்களுட்ன் கூடிய தீர்த்தக்கிணறு
தாயார் சன்னதி
தாயார் சன்னதியில்  நல்ல கருத்து உள்ள  வாசகம்
தாயார் சன்னதி விமானம்
 , முன் மண்டபம் அபிஷேக மண்டபம்.  பின்புறம் ஸ்ரீ ஆளவந்தார் சன்னதி

ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி விமானம்

நைவேத்தியத்துக்கு நித்தியபடி கட்டளைக்காரர் பற்றிய குறிப்புள்ள கல்வெட்டு


                                      பெருமாள் எழுந்தருளும் பல்லாக்கு.

பின்வரும் படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ’தரிசனம் காணவாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் காட்டுமன்னார்குடி பற்றி வைத்தபோது டிவியிலிருந்து எடுத்த படங்கள், இந்த பதிவில் பகிரலாம் என்று எடுக்கப்பட்டது, நன்றி  விஜய் தொலைக்காட்சிக்கு. 

ஸ்ரீராஜகோபாலன்
ஸ்ரீராஜகோபாலன் மஹாலக்ஷ்மி, மரகதவல்லி
ஸ்ரீமத் நாதமுனிகள், ஆளவந்தார்

அலங்கார தோற்றம்

அலங்கார பூஜை  நாதமுனிகளுக்கும், ஆளவந்தாருக்கும்
அலங்காரத்தில் சுந்தரகோபாலனாகக் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

வாழ்க வளமுடன்.
---------------------------------

31 கருத்துகள்:

  1. நல்லதொரு பதிவினைக் கண்டு மனம் மகிழ்கின்றது.

    பொன்னியின் செல்வனின் இனிய அறிமுகத்துடன் களை கட்டுகின்ற பதிவில் பரமாச்சார்யார் அருள் வாக்கினையும் பதிவு செய்து அழகிய படங்களுடன் வீரநாராயணப் பெருமாளின் திவ்ய தரிசனம்!..

    அது சரி!..

    வந்தியத்தேவனை மறக்கவும் கூடுமோ!..

    பதிலளிநீக்கு
  2. மறக்கமுடியாத பொன்னியின் செல்வன் பாத்திரங்களுடன் ,
    அழகான் படங்களும்
    அருமையான கருத்துகளும் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. அழகழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் பதிவு மிக அருமையாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. //சரித்திரப் புகழ்பெற்ற நாவல் அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்’ நாவலில் இந்த ஏரி குறிப்பிடப்படும்.//

    மகிழ்ச்சி தரும் தகவல். ;)))))

    பதிலளிநீக்கு
  5. அருமை! படங்கள் ஒவ்வொன்னும் கண்ணில் ஒத்திக்கிறாப்போல் இருக்கு! தரிசனம் செஞ்ச திருப்தி எனக்கு!

    எங்க அத்தையின் சொந்த ஊர் இதுதான். போகணும் என்று நினைச்சு இதுவரை போகலை. பெருமாள் கூப்பிடணுமே!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

    //
    வந்தியத்தேவனை மறக்கவும் கூடுமோ!..//

    மறக்கமுடியாத கதாபத்திரம்தான்.
    உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் கருத்துக்கும் நன்றி சார்.



    பதிலளிநீக்கு
  7. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.

    பொன்னியின் செல்வன் ஆரம்ப கதையே தொடங்குவது வீரநாராயண ஏரிதானே அது தான் கேட்டேன்.
    நீங்கள் சொல்வது போல் மறக்க முடியாத பாத்திரம் தான்.

    உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.
    உங்கள் அத்தையின் சொந்த ஊரா?
    மகிழ்ச்சி.அருமையான ஊர்.
    அடுத்தமுறை தமிழ்நாடு வரும் போது நிச்சயம் கூப்பிடுவார், பக்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவார்.
    உங்கள் வரவும் கருத்தும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. கண்டு கொண்டேன்! காட்டு மன்னார் கோயில் பெருமாளை! படங்கள் யாவும் அருமை! பகிர்வுக்கு நன்றி!
    த.ம.2

    பதிலளிநீக்கு

  11. கோவிலுக்குப் போக முடியாதவர்கள் பிரசுரமாகி இருக்கும் படங்களைக் கொண்டு மனசார சேவிக்கலாம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் தி, இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஜி,எம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  14. படங்கள் எல்லாம் அருமை. குறிப்பாகக் கோபுரப் படங்களும் அவற்றிலிருக்கும் நீலவானமும்.

    பொன்னியின் செல்வன் என்றால் ஸ்ரீராமுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

    விஜய் டிவி காட்சிகளை இணைத்திருப்பது நல்ல யோசனை. எங்களுக்கும் கிடைத்தது தரிசனம். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

    //படங்கள் எல்லாம் அருமை. குறிப்பாகக் கோபுரப் படங்களும் அவற்றிலிருக்கும் நீலவானமும்.//

    படங்களை ரசித்துப்பார்த்து உற்சாகம் தரும் கருத்து சொன்னதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    //பொன்னியின் செல்வன் என்றால் ஸ்ரீராமுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.//


    முதலில் வந்து திரு, துரைசெல்வராஜூ அவர்கள் விடை சொல்லிவிட்டதால் ஸ்ரீராம் கருத்து சொல்ல்வில்லை போலும்.

    அடுத்து காட்டுமன்னார்குடி பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து படங்களை என் தொகுப்பிலிருந்து எடுத்துக் கொண்டு இருந்த போது விஜய் தொலைக்காட்சியில் வீரநாராயண பெருமாள் தோன்றினார், தீடிரென்று எடுத்தபடம்.

    தரிசனம் கிடைத்தது என்று நீங்கள் சொல்வது கேட்டு மகிழ்ச்சி.






    பதிலளிநீக்கு
  16. இந்த அத்தைதான் எங்காத்து வேளுக்குடி. கோவில் சமாச்சாரமெல்லாம் நாக்கு நுனியில்!

    காட்டுமன்னார்குடி கோவிலில் அத்தையின் தாத்தா காலத்தில் இருந்தே ஒரு சிலநாட்கள் நமக்குக் கட்டளை இருக்காம். இன்றுவரை தொடர்கிறது. அத்தையின் சதாபிஷேகத்துக்கு அங்கிருந்துதான் முதலாயிரம் சொல்ல நாலுபேர் வந்திருந்தார்கள்.

    கூடுதல் விவரம் இந்தச்சுட்டியில். நேரம் இருக்கும்போது பாருங்கள்.
    http://thulasidhalam.blogspot.co.nz/2009/07/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  17. ஸ்ரீராம் அவர்கள் கருத்து எப்படி பதிவாக வில்லை என்று தெரியவில்லை. மன்னிக்கவும் ஸ்ரீராம்.
    ராமலக்ஷ்மி, ’பொன்னியின் செல்வன் என்றால் ஸ்ரீராமுக்கு தெரியும்’ என்றபின் தான் முன்பே வந்தாரே! ஸ்ரீராம் அவர் கருத்தை காணவில்லை என்று தேடினேன்.
    மெயிலில் இருக்கிறது ஆனால் பப்ளிஷ் ஆக மாட்டேன் என்கிறது.


    மெயிலில் உள்ள ஸ்ரீராம் கருத்து:-

    அழகிய படங்கள். தெப்பக்குளத்தில் நீரைப் பார்ப்பதே சந்தோஷமாக இருக்கிறது.

    கட்டளைக்காரர்கள் குடும்பங்கள் இன்னும் இருக்கிறதா அங்கு?

    தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட படங்கள் கூட மிகவும் தெளிவாக உள்ளன. //

    நீங்கள் சொல்வது சரிதான் தெப்பக்குளத்தில் குப்பைகூளங்கள் எதுவும் இல்லாமல் இப்படி நீரைப்பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம் தான்.

    பரம்பரை பரம்பரையாக கட்டளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்று நம் துளசி கோபால் பதிவில் கூடத் தெரிகிறது.

    என் மாமியாரின் தாத்தா காலத்திலிருந்து ஆழவார்குறிச்சியில் உள்ள பெருமாள்கோவிலில் இன்னும் கட்டளை உள்ளது. செய்து வருகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை விட்டுவிட மாட்டார்கள்.
    தொலைக்காட்சிப் படத்தை ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் துளசி கோபால், வாழ்க வளமுடன்.
    உங்கள் பதிவை படித்தேன் மிக அருமை.

    ஸ்ரீராம் பழைய கட்டளைக்காரார்கள் இருக்கிறார்களா என்று கேட்டு இருக்கிறார்.

    உங்கள் அத்தை குடும்பம் இன்று கட்டளையை செய்து வருவது மகிழ்ச்சியான விஷயம்.

    ஸ்ரீமத் நாதமுனிகளைப்பற்றி நீங்கள் 2009லில் எழுதி இருக்கிறிரீகள்.
    நீங்கள் மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

    நான் 2014 எழுதி இருக்கிறேன்.

    ஸ்ரீமத் நாதமுனிகளைப் பற்றியும், அவர் பேரர் ஸ்ரீ ஆளவந்தாரைப்பற்றியும் இந்த பதிவில் இருக்கும்.

    http://mathysblog.blogspot.com/2014/01/2.html

    ஸ்ரீமத நாதமுனிகள் திருவரசு என்று இரண்டு பகுதி எழுதி இருக்கிறேன்.

    ஸ்ரீமந் நாதமுனிகள் சோழநாட்டில் தற்போது கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள காட்டுமன்னார்குடி என்ற வீரநாராயணபுரத்தில்கி.பி 823ல் சோபகிருது வருடம் ஆனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை பெளர்ணமி திதி கூடிய அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர், ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள நித்ய சூரியான “கஜாநநர்” என்னும் ஆனைமுகமுடையவரின் அம்சமானவர்.
    முடிந்த போது படித்து பாருங்கள் துளசி.



    பொன்னியின் செல்வனில் வரும் முதல் அத்தியாயத்தில் வரும் வீராநாராயண ஏரி அதன் கரையில் குதிரை வீரனை மறக்கவே முடியாது என்பது உங்கள் பதிவிலும் பார்த்தேன்.
    மகிழ்ச்சி துளசி மறுபடியும் வந்து கருத்து சொல்லி, அருமையான பதிவு லிங் கொடுத்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  19. ஆமாம், ஏற்கெனவே வந்தியத்தேவன் என்று பதில் வந்து விட்டதால்தான் நான் சொல்லவில்லை!

    நன்றி ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    ”வந்துவிடான் வந்தியதேவன்” என்று விஜய் டிவியில் விளம்பரம் வருகிறது பார்த்தீர்களா?
    கல்கியில் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து மறுமடியும் பொன்னியின் செல்வன் வருகிறது.

    ராமலக்ஷ்மிக்கு நானும் நன்றி சொல்லவேண்டும்.
    அவர்களால் தான் உங்கள் பதில் இடம் பெறவில்லை என்று தெரிந்தது.



    பதிலளிநீக்கு
  21. கல்கியில் மறுபடி பொன்னியின் செல்வன் தொடங்குகிறது. எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் வருகிறது. 2400 ரூபாய் சந்தா கட்டினால் 4 வருடங்களுக்கு கல்கி வீடு தேடி வரும் என்று!

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம் , நல்ல செய்தி.
    20வருடங்களுக்கு முன்பு நான் தொகுத்த பொன்னியின் செல்வன் பதின்மூன்றாம் அத்தியாயத்திலிருந்து தான் தொடங்கிறது. 12 வாரம் மட்டும் வாங்கலாம் என்று இருக்கிறேன்.
    மீண்டும் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் கலை. வாழ்க வளமுடன்.
    காட்டுமன்னார்குடி, காட்டுமன்னார் கோவில் இரண்டுமே ஒன்று தான்.
    உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. முதல் பின்னூட்டத்தின் கடைசி வரியைக் கவனிக்கத் தவறி விட்டேன்:).

    பதிலளிநீக்கு
  25. வெகு அருமையான பதிவு. விஜய் டிவியின் காட்சிகளை வெகுஅழகாக்ப் பதிந்து இருக்கிறீர்கள். நாதமுனி,ஆள்வந்தார் பற்றிப் படித்ததும் இன்னோரு சந்தோஷம். ராம்லக்ஷ்மி குறிப்பிட்டிருப்பது போல நீலவானமும் நீலவண்ணப் பெருமானும் மனம் கொள்ளை கொள்கின்றனர்.அருமையாக முயற்சி செய்து அமிர்தமாகப் பதிவிடுகிறீர்கள் கோமதி.வந்தியத்தேவன் அறிமுகமாகும் இந்த வரிகளை என்றும் மறக்க முடியாது. மிக மிக நன்றி கோமதி.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் கவனிக்க தவறியதால் தான் நான் ஸ்ரீராம் பதிலை காணோம் என்று தேட முடிந்தது.
    உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  27. அன்பு வல்லிஅக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் இங்கு இருக்கும் போது விஜய் டிவி பக்தி காட்சிகளை அற்புதமாய் எங்களுடன் பகிர்ந்து இருக்கிறீர்கள்.
    ஸ்ரீமத் நாதமுனிகள், ஸ்ரீ ஆள்வார்கள் பதிவை படித்தமைக்கு நன்றி அக்கா.
    வந்தியதேவன் வரும் காட்சிகளை மறந்து இருக்கமாட்டீர்கள் என்று தெரியும்.
    உங்கள் அன்பான கருத்துக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  28. காட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் பற்றிய அழகான தகவல்கள். சிறப்பான படங்கள். டிவியில் எடுத்தது கூட அழகாக வந்துள்ளன அம்மா.

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு