புதன், 13 ஏப்ரல், 2022

சித்திரைத் திருநாள்

 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்


சித்திரை விஷுக்கனி காணும் நாளில்,  மா, பலா, வாழை  என்ற
 முக்கனிகளும்மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச்
 சமர்ப்பிக்கப்படும்.



தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு
 விஷுக்கனி கொண்டாடுவதைப் பற்றி  சொல்லிவிட்டேன்.

இந்த ஆண்டு,  விஷுக்கனியில் முக்கியமாக  இடம் பெறும் மா, பலா,
 வாழையும் அதன் நன்மைகளையும் பற்றிப் படித்ததைப் பகிர்ந்து 
கொள்கிறேன்.

பழங்களைப்பற்றி இயற்கை சங்கத்தில் சொல்வதையும்
 பகிர்ந்து கொள்கிறேன்.
என் கணவர் வரைந்த ஓவியம்


சூரியன் தனது ஒளியால் காய்களைக்  கனியச்செய்கிறது.
சூரியசக்தியால் சுவை ஊட்டப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால் எல்லா
உயிரினங்களும், மனிதர்களும், உடலுக்குத் தேவையான சக்திகளைப்
பெறுகிறார்கள்.

காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று 
சொன்னார்கள். அது  தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள்,இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். காலையில் சாப்பிடும் பழ  உணவு, பொன் போன்றது. மத்தியானம் 
வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். 
தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் 
அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த 
அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் 
இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. 
நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும்
இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும்,  குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.

 முக்கனிகள்

 மாம்பழம்:

மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து நிறைந்து உள்ளது.  இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.  மாம்பழம் கிடைக்கும் காலங்களில்
மாம்பழத்தை உண்டு பலம் பெறலாம்.

வாழைப்பழம்:

குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்
பழம், வாழைப்பழம். இதில் வைட்டமின் A ,  வைட்டமின் B,  B2,  C
உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய
இருக்கின்றது. இந்த சத்தின் அளவு வாழைப்பழத்தில் உள்ள வகைக்கு வகை
வித்தியாசப்படும்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்று. தலைநரம்புகளுக்கு  வலிமையக் கொடுக்கும். அதிக
அளவு சூட்டைத்தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். தேகத்தில் தோலை வழுவழுப்பாக வைத்து இருக்க
உதவும். நரம்புகளுக்கு உறுதி தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். பல்
சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும் , பற்களைக் கெட்டிப்படுத்தும்.
வைட்டமின் A உயிர்ச்சத்துக்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி
உண்டாகையால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

பொதுவாக பலாப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவே உள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கூடப் பலாப்பழம் சேர்க்கப்படுகிறது. ஐந்து வகை
பழத்தினையும் தேனையும் சேர்ந்து தயாரிக்கும் பஞ்சாமிர்தம் உடலுக்கு
மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். விருந்துகளில் 
முக்கனி பரிமாறப்படுகிறது.  அதற்குக் காரணம், விருந்தில் 
சுவையான உணவுகள் பரிமாறப்படும்போது  நாம் அதிகமாய்
 சாப்பிட்டு விடுவோம். அதனால் உணவு ஜீரணம் ஆகவும்  உடற் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும்  நம் முன்னோர்கள் முக்கனிகளை 
விருந்தில் பரிமாறினார்கள். விருந்துணவை முக்கனிகளுடன் 
சாப்பிடும் போது ஜீரணம் சீக்கிரமாக நடந்து, இரைப்பையை விட்டு உணவு வெளியேறிவிடும். வயிற்று உபாதை இருக்காது.


எங்கள் வீட்டில் காலையில்  செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:

   1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப்
 பொடி செய்து  1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,  காய்ச்சி
கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க   வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில்   ஊற்றி மூடி வைக்க வேண்டும்,   அதனுடன் சிறிது
 பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,வெல்ல நீரை  கொதி வந்தவுடன்
 அவலில் ஊற்றிவிடவேண்டும். (வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு
 மாதிரி ஆகிவிடும்).  ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏலக்காயைப் 
பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு  போட்டால்  
  இனிப்பு அவல் ரெடி.

மதியம் வடை, பாயசம், மங்காய் வெல்லம் போட்ட பச்சடி. கொஞ்சமாய் சாஸ்திரத்திற்கு வேப்பம்பூவை அதில்  கலந்து விடுவேன். 
(தனியாக வேப்பம் பூ ரசம் வைப்பது  இல்லை.) கசப்பு, இனிப்பு 
எல்லாம் புத்தாண்டில்  இருக்க வேண்டும் என்பதால்.

புத்தாண்டு செய்திகள்

விஜய ஆண்டு நல்ல பலன்களைக் கொடுக்கட்டும்!

//மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்கள் எங்குமே-- நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நாட்டு//

என்று பஞ்சாங்கத்தில் உள்ள பாடல் கூறுகிறது.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்!
தானியங்கள் விளையட்டும்.

இனிய புத்தாண்டு மலரட்டும்!
இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.

//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து  வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.//

 ===== மகா கவி பாரதியார்.





சுபகிருது வருஷம் படித்தவுடன் இந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது. ஆயுள்முழுவதும் சுபதினமாக இருக்கட்டும்.


2022 ம் ஆண்டு வந்த இந்த  சுபகிருது வருடம்  இறையருளால் 
அனைவருக்கும் நலமாக அமையட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

34 கருத்துகள்:

  1. சுப கிருது வருகவே..
    சுகங்கள் எல்லாம் தருகவே..
    அறங்கள் எங்கும் பெருகவே..
    அமுதத் தமிழ் நிறைகவே!..

    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      கவிதை அருமை.
      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. நட்புகளுக்கும் உறவுகளுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
    3. பழ ஆகாரம் பலகாரம் ஆன தகவல்.  அது எவ்வளவு ஆரோக்கியம்?  இன்று?  நாம் எவ்வளவு வகையான சிற்றுண்டிகளை பலகாரமாக, காலை ஆகாரமாக எடுத்துக் கொள்கிறோம்!  ஸார் வரைந்திருக்கும் படம் நேர்த்தி.

      நீக்கு
    4. புத்தாண்டு என்றாலே இனிப்பு கசப்பு பச்சடி செய்து விடுவோம்.  "எமனுக்கு கசப்பாய், மனிதனுக்கு தித்திப்பாய்" என்று சொல்லி எங்கள் வாயில் மூன்றுமுறை விடுவார் அம்மா.

      நீக்கு
    5. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      பழங்கள் குறித்த தகவல்கள் பயனாய் விடயங்கள் வாழ்க வையகம்.

      நீக்கு
    6. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      வாழ்த்துக்களுக்கு நன்றி.
      பழ ஆகாரம், பலகாரமாக மாறி விட்டது .
      சிற்றுண்டிகளை செய்ய வேலை அதிகமாகி விட்டது.
      மற்றும் சார் படத்தை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  2. ஸ்ரீராம், பழைய பதிவிலும் உங்கள் அம்மா சொன்னது பகிர்ந்து இருந்தீர்கள்
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் தேவகோட்டை ஜி வாழ்க வளமுடன்
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. புத்தாண்டு வாழ்த்துகள் கோமதிக்கா.

    நம் வீட்டிலும் விஷுக்கனி வைப்பதுண்டு. இம்முறையும் வைத்தோம் இது பிரார்த்தனை என்பதால் ஆனால் மற்றபடி கொண்டாட்டங்கள் கிடையாதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

      விஷுக்கனி வைத்தது மகிழ்ச்சி. நல்லது நடக்கட்டும்.'
      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  5. அக்கா நம் வீட்டிலும் மாங்காய் பச்சடி அதில் வேப்பம் பூ போட்ட்டு, கூடவே வே பூ ரசமும் உண்டுதான். இந்த வருடம் இனிப்பு வடை அதெல்லாம் இல்லாமல் மற்றபடி சமையல் வேப்பம் பூ போட்டு.

    அவல் இனிப்பு சூப்பர் கோமதிக்கா,

    இதே பொருட்களுடன் செய்வதுண்டு ஆனால் இப்படி இல்லை இதை நோட் செய்து கொண்டேன். எளிதாக இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெல்லம், மாங்காய், வேப்பம் பூ சேர்க்கனும் அதனால் அவல் பாயசம், மாங்காய் வேப்பம்பூ போட்டு சாம்பார்,

      இந்த முறை அவல் இனிப்பு இல்லை. எனக்கு மட்டும் எல்லாம் செய்து சாப்பிட கஷ்டமாய் இருக்கிறது. உடல் நிலையும் சரியில்லை.

      நீக்கு
  6. முக்கனிகளுமே சத்து நிறைந்தவை. பலா சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குக் கூடாது என்றாலும் மிகவும் பிடிக்கும். நான் கொஞ்சம் சாப்பிடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கனிகளில் பலா கிடைக்கவில்லை.
      எப்போதும் பழங்கள் மாமா வாங்கி வருவார்கள்.

      நீக்கு
  7. பழைய பதிவையும் பார்த்தேன் கோமதிக்கா

    ஆமாம் எங்கள் வீட்டிலும் //எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள். // கைநீட்டம் உண்டு.

    பழ ஆகாரம் தான் பலகாரம் ஆனது என்று எங்கள் வீட்டிலும் சொல்வதுண்டு. நம் வீட்டில் இங்கு பழ ஆகாரம் அடிக்கடி உண்டு. அதுவும் பெரும்பாலும் காலையில்தான்.

    மாமா வரைந்திருக்கும் படம் அருமை!! அழகு. அவரின் ஆசிர்வாதமும் உண்டு நம் எல்லோருக்குமே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பதிவை படித்தது மகிழ்ச்சி.
      கை நீட்டம் உங்களும் உண்டு என்று தெரியும்.
      விரதம் இருக்கும் போது காலை ஆகாரம் பழம்தான்.
      காலையில் பழ ஆகாரம் நீங்களும் செய்வது மகிழ்ச்சி.
      பண்டிகை என்றால் மாவிலை கட்டுவது , சுவாமி படங்களுக்கு பூ வைப்பது என்றும் பண்டிகைக்கு வேண்டியதை வாங்கி தருவதும் என்றும் இருப்பார்கள்.
      அவர்கள் வரைந்த பழங்கள் இடம் பெற்று விட்டது பதிவில்.
      இப்போது அவர்கள் இல்லாத முதல் வருட பிறப்பு இது.
      அவர்களின் ஆசீர்வாதம் என்றும் உண்டு எல்லோருக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. விஷு/தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

    எங்கள் வீட்டிலும் விஷுக்கனி காண்பதுண்டு. பழங்கள் பற்றிச் சொன்னது நல்ல தகவல்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      கேரளாவில் மிகவும் சிறப்பான பண்டிகை இல்லையா ?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      நல்லதே நடக்கட்டும் //

      அது தான் வேண்டும் தனபாலன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. வெல்ல அவல் இப்படித்தான் நானும் பண்ணுவேன். ஆனால் இங்கே அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை. கிருஷ்ண ஜயந்திக்கு இந்த மாதிரிப் பண்ணி வைச்சுட்டு அவங்க யாரும் தொட மாட்டாங்க. நான் மட்டும் தான் சாப்பிட்டுப்பேன். அதனாலேயே பண்ணுவதை நிறுத்திவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. புத்தாண்டு வாழ்த்துகள், விஷுக்கனியும் முன்னர் படிச்சிருக்கேன். அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு நல்ல மகிழ்வான அமைதியான வாழ்க்கையைக் கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி கீதா.
      //அனைவருக்கும் இந்தப் புத்தாண்டு நல்ல மகிழ்வான அமைதியான வாழ்க்கையைக் கொடுக்கட்டும்//

      அனைவர் பிரார்த்தனையும் அதுவே.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் கோமதிமா
    வாழ்க வளமுடன்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
    முதலில் கவர்வது ஸாரின் ஓவியம் தான். மிகச் சிறப்பு.

    விஷுக்கனி அம்மா வீட்டில் உண்டு.
    அவர்கள் திரு நெல்வேலிப் பழக்கம். மிக உத்சாகமாக இருக்கும். பழைய பதிவு புதுப் பதிவு இரண்டுமே அருமை.
    பழ ஆகாரத்தோடு காலை வேளையைத் தொடங்குவது
    நன்றாக இருக்கிறது.
    டயபெடிஸ்க்கு முக்கனி ஆர்வம் கூடாது. இருந்தும் பலா
    கிடைத்தால் இரண்டு துண்டு சாப்பிட்டுவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      புத்தாண்டு நல் வாழ்த்துகளுக்கு நன்றி.

      அம்மா திருநெல்வேலிப் பழக்கபடி விஷுக்கனி கொண்டாடுவது மகிழ்ச்சி.

      இங்கு பலா கிடைக்கவில்லை. நானும் மெனகெட்டு தேடவில்லை. கிடைத்த பழங்களை வைத்து கனி பார்த்து விட்டேன். சார் இல்லாமல் கொண்டாடும் முதல் புத்தாண்டு.
      அவர்கள் அன்னாசி பழம் கண்டிப்பாய் வாங்குவார்கள். ஊரில் மகன் அன்னாசி வாங்கி வைத்து வழிபட்டு விட்டான்.

      கனிகள் தின்றால் பிணிகள் இல்லை என்று இயற்கை வைத்தியத்தில் சொல்வார்கள்.விரத காலம் மட்டும் கடைபிடிக்கிறோம் நாம்.

      நீக்கு
  14. சுபகிருது ஆண்டு நன்மைகள் கொண்டு வரட்டும்.
    சீர்காழியின் பாடல் மிக அருமை.

    பழங்களின் மேன்மையைச் சிறப்பாகச் சொல்லி இருக்கிறீர்கள். சூரிய ஒளியைத் தன்னுள் வைக்கும் கனிகளை மனமுடன் உண்டு
    ஆரோக்கியத்துடன் இருப்போம். நன்றிமா.
    தங்கள் உடல் நலம் சீராகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா அக்கா, சுபகிருது ஆண்டு அனைவரின் வாழ்விலும் நல்லதை கொண்டு வரட்டும்.
      சீர்காழியின் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      என் உடல் நலத்திற்கும் வாழ்த்தியதற்கும் சார் படத்தை பாராட்டியதற்கும் நன்றி அக்கா.
      உங்கள் அன்பான இரண்டு கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  15. தகவல்களுடன் பகிர்வு மிக நன்று. சார் வரைந்த ஓவியம் சிறப்பு. தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      பதிவைரசித்து படித்து , சார் வரைந்த ஓவியத்தை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. பழங்கள் பற்றிய தொகுப்பு சிறப்பு. வருட கொண்டாட்ட உணவுகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், வருட கொண்டாட்டத்திற்கு உணவுகள் இறைவனால் படைக்கபட்டு இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு