திங்கள், 19 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை







சிவமயம்
காவாய் கனகத்திரளே போற்றி !
கயிலை மலையானே போற்றி!!

சென்ற செப்டம்பர் மாதம் நாங்கள் கயிலையாத்திரை சென்று வந்தோம். மனோகர்
ட்ராவல்ஸ் மூலம் சென்றுவர ஏற்பாடு செய்திருந்தோம்.அதற்கு 15 நாட்களுக்கு முன்தான் எங்கள் கயிலைப் பயணம் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன் இரண்டு முறை போயிருந்த என் கணவரின் அண்ணன், அண்ணியின் அனுபவ உரைகளை கேட்டு தேவையானவைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் ஆசிகள். மற்றும் என் மாமனார், மாமியார் ஆசிகளுடனும், திருவருள் துணையோடும் 31.08.2011 அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரயில் வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம். மாலை சென்னை சென்றடைந்த பின் கணவரின் பெரிய அண்ணா வீட்டில் தங்கி அவர்களிடம்ஆசி பெற்று எங்கள் கயிலை பயணத்தை தொடங்கினோம்.

02.09.2011 காலை 4.45 மணிக்கு விமானநிலையம் வந்தோம். கயிலை செல்லும்
எங்கள் குழுவினரில் பலர் அங்கு வந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம்.எங்கள் குழுவில் மொத்தம் 27 பேர் என்ற விவரம்முன்பே தந்திருந்தனர். எங்கள் இருவரைத்தவிர இரண்டு பேர் மட்டுமே எங்களுடன் சென்னையிலிருந்து விமானத்தில் வந்தனர். 06.50 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் டெல்லி புறப்பட்டோம். 09.30 மணிக்கு டெல்லி உள்நாட்டு விமானநிலையத்தை அடைந்தோம்.அங்கிருந்து சர்வதேச விமானநிலயத்திற்குச் சென்றோம். எங்களை வழிநடத்திச் செல்லும் திரு.மனோகர் எங்கள் எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து குழுமச்செய்தார். பயணக்குழுவினரில் பெரும்பாலானோர் வந்து சேர்ந்திருந்தனர்.



ஆவணச்சரிபார்ப்பு,லக்கேஜ் செக்-இன் முதலியவை முடிந்து காத்மாண்டு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினோம்.பிற்பகல் 2 மணிக்கு காத்மாண்டு விமானநிலையத்தில் இறங்கினோம்.எங்களை மதுசூதன் என்பவர் அங்கிருந்து வேனில் ”ஹோலிஹிமாலயா” என்ற விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கு எங்களுக்கு நன்கு உபசாரம் செய்தனர். சற்று நேரம் ஓய்வு எடுத்தோம். பயணச்செலவுக்கெனக் கூடுதலாகக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டதால், ரிக்‌ஷாவில் ஏறி, தர்பார் ரோட்டில் உள்ள ”நேபாள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா” ஏ.டி.எம்மில் பணம் எடுத்துக் கொண்டோம். நேபாள ரிக்‌ஷாகாரர் நல்ல மனிதர் ஊருக்குப் புதியவர்கள் என்று ஏமாற்றவில்லை. மாலையில் 8 மணிக்கு மீட்டிங் அறையில் கயிலைப் பயணிகளின் கூட்டம் திரு.மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இறைவழிபாட்டுடன் கூட்டம் துவங்கியது. நாங்கள் எடுத்துச் சென்று இருந்த ’பன்னிருதிருமுறை திரட்டை’ எங்களுடன் கயிலைக்கு வருபவர்களுக்கு கொடுத்தோம். மனோகர் அவர்களும் பன்னிருதிருமுறை திரட்டு புத்தகங்களை எல்லோருக்கும் கொடுத்தார். திருப்பராய்த்துறை ஸ்ரீ இராமகிருஷ்ணா மடாலயத்தில் இருந்து மூன்று ஸ்வாமிஜிக்கள்
எங்களுடன் பயணிகளாகக் கலந்து கொண்டனர். எல்லோரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.


மனோகர் டிராவல்ஸ் அதிபர் ,திரு. மனோகர், சுற்றுலா அதிபர் திரு.ஜோதி அதிகாரி, வழிகாட்டி திரு.பதம் ஆகியோர் கயிலாயம் செல்லுவதற்குரிய குறிப்புகளைத் தந்தனர்.செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தேவையான பொருட்கள் முதலியவை பற்றிய குறிப்புகளைத் தம் பேச்சில் குறிப்பிட்டனர். மூன்று நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல பெரிய சுற்றுலாப்பையும், முதுகில் சுமக்கக் கூடிய ஒரு சிறிய பையும், தொப்பியும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டன. குளிருக்கு ஜெர்க்கின் தரப்பட்டது.

கொண்டு செல்ல கூடிய பொருட்களின் லிஸ்ட்: மூன்று செட் உடைகள் தனி தனி பாலுதீன் கவரில் வைத்து வைக்க வேண்டும், மருந்து மாத்திரைகள் ஒரு லிட்டர் பிடிக்கும் பிளாஸ்க், கையுறை, வாயுறை 10(டஸ்ட் மாஸ்க்), லைட் வெயிட் மழைகோட்டு, தெர்மல் வேர் பேண்ட், டாய்லெட் டிஸ்யூ, குளிக்க கப், 2 பேண்ட்ஜ் துணி ரோல், சிறிய கத்திரி, சன் ஸ்கின் லோஷன், பாண்ட்ஸ் லிப்ஸ்க்ரீம்,1 ஜோடி ட்ரெக்கிங் ஷூ, 1ஜோடி செருப்பு ,குரங்குக் குல்லா, முழுக்கை ஸ்வெட்டர், மானசரோவர் தீர்த்தம் கொண்டு வர 5லிட்டர் கேன் 1, வேள்விப் பொருட்கள், (மயக்கம் வந்தால் முகர்ந்து பார்க்க)பொடித்த சூடம், புளிப்பு மிட்டாய், இலந்தை வடை,உப்பு நார்த்தங்காய், சிகரெட் லைட்டர், பேனா, பென்சில், 1லிட்டர் பெட் பாட்டில், ஒரு சிறிய பை, பூட்டு, சாவி,டார்ச்லைட் ( உயரம் காரணமாய் பேட்டரிகள் சீக்கிரமே அதன் சக்தியை இழந்து விடுவதால் கைவசம் பேட்டரிகள் நிறைய வைத்துக் கொள்ளலாம் என்றார்).’மற்ற நம் லக்கேஜ்கள் நாம் திரும்பி வரும் வரை மீட்டிங் அறையில் பத்திரமாய் இருக்கும்’ என்றார்கள்.

இரவு உணவு சுவையாக சமைத்து அன்பாகப் பரிமாறினார்கள். நாங்களும் அளவாக உண்டு எங்களுக்கு தரப்பட்ட நல்ல வசதியான அறையில் உறங்கினோம்.மறுநாள் காட்மாண்டுவில்
உள்ள பசுபதிநாத் கோயில் முதலியவற்றிற்குச் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.

28 கருத்துகள்:

  1. தங்களின் வர்ணிப்பு நாங்களும் தங்களுடன் வருகின்ற உணர்வை ஏற்படுத்துகிறது. காத்மண்டுவில் நம்முடன் கொண்டு செல்லக் கூடிய பொருட்களின் லிஸ்ட்டைக் கூட மிகவும் அக்கரையுடன் ஒன்றைக் கூட விட்டு விடாமல் மிகவும் விளக்கமாகக் கொடுத்து வழிகாட்டியிருக்கிறீர்கள். காட்சிகளைக் கண்முன் நிறுத்த புகைப்படங்கள் வேறு.

    திருகயிலை யாத்திரைப் பதிவுத் தொடருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. திருக்கயிலாய யாத்திரை தொடரை ஆரம்பித்து விட்டீர்களாம்மா...
    நாங்களும் வருகிறோம் தங்களுடன்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான விவரமான பகிர்வு. தொடருங்கள். உங்கள் தயவால் நாங்களும் தரிசிக்க வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  4. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த பகிர்வும்மா... நல்ல வர்ணனையுடன் ஆரம்பித்து இருக்கிறது பகிர்வு... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. எங்களையும் தங்களோடு உணர்வால் அழைத்து செல்வது போல் உள்ளது சகோ
    இந்த பதிவு .

    த.ம 2

    பதிலளிநீக்கு
  6. சிவனருள் இருந்தால்தான் இந்த யாத்திரை எல்லாம் வாய்க்குமாம். நிறையவே இருக்கிறது தங்களுக்கு. தங்கள் மூலம் எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கச் செய்வதற்கு நன்றி.

    யாத்திரையைத் தொடர காத்திருக்கிறேன்.
    ஓம் நமசிவாய !

    பதிலளிநீக்கு
  7. அருமையான ஆரம்பம். தொடர்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மானசரோவர் என்றதுமே எனக்குள் சிலிர்ப்பு. என்று எனக்கு வேளை வருமோ.. உங்கள் பதிவு படித்து இப்போதைக்கு மகிழ்ச்சி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஜீவி சார், உங்கள் முதல் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஆதி,இறைவன் அருளால் ஆரம்பித்து விட்டேன் வாருங்கள் .

    பதிலளிநீக்கு
  11. வாங்க வெங்கட், உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க கபீரன்பன், எல்லாம் சிவனருள் தான்.உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க துளசி கோபால், உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ரிஷபன், மானசரோவர் உங்களுக்கு நிச்சியம் கிடைக்கும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அழகான அருமையான விளக்கமான பதிவு.

    மயிலாடுதுறையிலிருந்து, வீட்டிலிருந்து கிளம்பியது முதல், சென்னை, டெல்லி போன்ற விமான நிலையங்கள் சென்றது, தங்குமிடம், கூட வந்தவர்கள் பற்றிய விபரங்கள், எடுத்துச்சென்ற பொருட்கள், என எல்லாமே ஒன்றுவிடாமல் வெகு அழகாகச் சொல்லியுள்ளது மிக நன்றாக உள்ளது.

    இனி புறப்பட்டுப்போக விரும்புபவர்களுக்கும் மிகவும் பயன்படுவதாகவே இருக்கும்.

    தொடருங்கள். பொறுமையாக எல்லாவற்றையும் ஒன்று விடாமல் பல சிறு சிறு பகுதிகளாக அனுபவங்களை எழுதி அசத்துங்கள்.

    நாங்களும் உங்களின் இந்த வரப்போகும் பதிவுகளால் திருக்கயிலை யாத்திரையை அனுபவித்த புண்ணியத்தை ஓரளவுக்காவது பெறலாமே!

    பதிவு வெளியிட்டதும் எனக்கு மெயில் மூலம் ஒரு லிங்க் மட்டும் தர முடிந்தால் தயவுசெய்து தாருங்கள்.

    டேஷ்போர்டில் அவை எனக்குத் தெரிவதில்லை.

    இதுவரை நல்ல படங்களுடன், அருமையாக எல்லாவற்றையும் பற்றி எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  16. வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
    உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

    உங்கள் அறிவுரைப் படி என்னால் முடிந்தவரை எழுதுகிறேன்.


    நீங்களும் சென்று வரலாம் சார்.

    பதிலளிநீக்கு
  17. திருக்கைலாய யாத்திரை மகிழ்சியைத் தருகின்றது.

    அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.....

    பதிலளிநீக்கு
  18. வாங்க மாதேவி, அடுத்த பதிவு இன்று போட்டு விடுவேன்.

    அடுத்த பதிவில் பார்க்கலாம்.
    நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  19. சௌந்திரராஜன்.கார்த்திக் ,பெங்களூரு21 டிசம்பர், 2011 அன்று PM 11:39

    ஓம் நமசிவாய சிவ சிவ

    சிவனருள் இருந்தால்தான் இந்த திருகயிலை யாத்திரை எல்லாம் கிடைக்குமாம், மொத்த பயண செலவு,மொத்த பயண நாள் பற்றி கூறவும், இதுவரை நல்ல படங்களுடன், அருமையாக எல்லாவற்றையும் பற்றி எழுதியுள்ளீர்கள், மேலும் தொடருங்கள். பாராட்டுக்கள் திருகயிலை யாத்திரைப் பதிவுத் தொடருக்கு மனமார்ந்த நன்றிகள்
    சிவ சிவ

    பதிலளிநீக்கு
  20. ஓம் நமசிவாய சிவ சிவ


    சிவனருள் இருந்தால்தான் இந்த திருகயிலை யாத்திரை எல்லாம் கிடைக்குமாம், மொத்த பயண செலவு,மொத்த பயண நாள் பற்றி கூறவும், இதுவரை நல்ல படங்களுடன், அருமையாக எல்லாவற்றையும் பற்றி எழுதியுள்ளீர்கள், மேலும் தொடருங்கள். பாராட்டுக்கள் திருகயிலை யாத்திரைப் பதிவுத் தொடருக்கு மனமார்ந்த நன்றிகள்



    சௌந்திரராஜன்.கார்த்திக்

    பதிலளிநீக்கு
  21. தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பதிவு செய்வது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. நாங்களும் அவற்றை அனுபவித்தது போல உணர்கிறோம்..

    பதிலளிநீக்கு
  22. வாங்க சொளந்திரராஜன் கார்த்திக், உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    திருக்கயிலாயம் என்றால் மொத்தம் 16 நாட்கள், முக்திநாத்தும் போவது என்றால் 21 நாள்.

    மொத்த பயணச்செலவு ஒரு ஆளுக்கு ஒரு இலட்சம் ஆகும்.

    அடுத்த பாகம் எழுதி விட்டேன்.

    ஓம் நமசிவாய!

    பதிலளிநீக்கு
  23. முத்துலெட்சுமி, அனுபவங்கள் உங்கள் எல்லோருக்கும் பயன் படத்தான் எழுதுகிறேன்.

    எல்லோரும் நல்ல ஆரோக்கியமாய் இருக்கும் போதே போய் வர வேண்டும் கயிலைக்கு என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. ஆஹா திருக்கயிலை யாத்திரையா நாங்களும் ரெடியா கிளம்பிட்டோம் உங்க கூடவே.

    பதிலளிநீக்கு
  25. ''...நேபாள ரிக்‌ஷாகாரர் நல்ல மனிதர் ஊருக்குப் புதியவர்கள் என்று ஏமாற்றவில்லை''...
    I liked this line.
    அன்புச் சகோதரி சடுதியான இந்த கட்டுரை இறுதிக்கு முன்னது வாசித்தேன். வலைச்சரத்தால் பின்பற்றினேன். உடனே தேடி 1வது வாசித்தேன் மேலும் தொடருவேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  26. அன்புச் சகோதரி சடுதியான இந்த கட்டுரை இறுதிக்கு முன்னது வாசித்தேன். வலைச்சரத்தால் பின்பற்றினேன். உடனே தேடி 1வது வாசித்தேன் மேலும் தொடருவேன்.//

    வாங்க வேதா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு