வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியாரை நினைவுகூர்வோம்

பாரதியார்

நம் தேசிய கவி பாரதியார்க்கு இன்று நினைவு நாள்.
அவரை நினைவு கூர்வோம்.

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து இருந்த தமிழகத்தில்

வாராது போல் வந்த மாமணி பாரதி.

மகாகவி, மக்கள்கவி, மானுடம் பாட வந்த வரகவி

பாரதி.

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்று கவிமணி
தேசிக விநாயகம்பிள்ளை பாடியது போல் அவர்
சொல்லாத, எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை.


பக்திப் பாடல்கள்,தேசபகதிப் பாடல்கள்,தன்வரலாறும்
பிறபாடல்களும்,கற்பனையும் கதையும்,
பொதுமைப் பாடல்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.

கடவுள் பாடலிலும் பிறர்துயர் தீர்த்தல்,பிறர்நலம்
வேண்டுதல் என்று யார் எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்
அந்த கடவுள் அவ்ர்களுக்கு அருள் புரிதல் வேண்டும்
என்கிறார். நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
என்னை நீ காப்பாய் என்கிறார்.

அச்சமில்லை யச்சமில்லை என்றுபாடி நம் அச்சத்தை
போக்குகிறார்.ஜயமுண்டு பயமில்லை இந்த ஜன்மத்திலே
விடுதலையுண்டு, என்றுபாடி வெற்றிப்பாடல் பாடுகிறார்,
ஜய பேரிகை கொட்டடா-கொட்டடா என்று.

காக்கை,குருவி யெங்கள் ஜாதி-கடலும் மலையுமெங்கள்
கூட்டம் என்று சமத்துவம் பேசுகிறார்.
ஓயாதே நின்றுழைத்திடுவாய் என்று மனத்திற்குக் கட்டளை
யிடுகிறார்,கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு
வெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்; என்று
வாழ்த்துகிறார்.

தேசிய கீதத்தில்// ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கிலனைவர்க்கும் தாழ்வே//என்று ஒற்றுமையை
வலியுறுத்துகிறார்.

நாட்டு வணக்கத்தில் நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களுக்கு
வீர வணக்கம் தெரிவிக்கிறார்.

பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள் பாரதநாடு என்றும்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்-அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்குவோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் உடலில்
புது ரத்தம் பாயசெய்கிறார்.

தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார் என்று

கொடி வணக்கத்தில் வீரர் புகழ் பாடுகிறார்.
கொடி வணக்கம் பாடும் போது நம் உடல்
சிலிர்த்துப் பூரிப்பு அடைவதை உணரலாம்.

அஞ்சி வாழ்பவர்களைக் கண்டு
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்று
ஜனங்களின் தற்காலநிலைமை என்று பாடினார்.அது
இக்காலமனிதருக்கும் பொருந்துகிறது.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று
பாரதத்தை வாழ்த்துகிறார்.

பாரத சமுதாயம் எல்லோருக்கும் உரியது என விளக்க
எல்லாரு மோர்குலம் எல்லாருமோரினம்
எல்லாரு மிந்திய மக்கள்
எல்லாருமோர்நிறை எல்லாரு மோர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க

என்று பாடுகிறார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்று
தமிழ் நாட்டைப் போற்றிப் புகழ்கிறார்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே.என்று பாடுகிறார்.

சுதந்திரப் பயிருக்காக:
தண்ணீர்விட்டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ? என்ற
இந்தப் பாட்டைக் கப்பலோட்டிய தமிழன் படத்தில்
திருச்சி லோகநாதன் அவர்கள் உருக்கமாய்ப் பாடி
இருப்பார்கள். அதைக் கேட்டால், கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?
என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்?
இந்தப் பாடலையும் திருச்சி லோகநாதன் பாடியிருப்பார்,
கப்பலோட்டிய தமிழன் படத்தில். பாரதியார் பாடல்கள்
அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை சினிமாக்களில்
பாடப் படுகிறது. கர்நாடக இசை கச்சேரிகளிலும்
பாடப் படுகிறது,இன்னும் அதிகமாக பாட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்குப்
பாரதியார் பாடல்கள் கற்றுத் தரவேண்டும்.
நான் பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர்
சொல்லிக் கொடுத்தபடி
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்ற
பாடலைப்பாடிக் கொண்டே உடற்பயிற்சி செய்வோம்.
சுதந்திர தினத்தன்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்ற பாட்டைப் பாடுவோம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என்று அவர் கூறியபடி இக்காலப் பெண்கள் எல்லாத்
துறைகளிலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.











.

14 கருத்துகள்:

  1. //கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு
    வெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்
    எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
    தின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்//


    பாரதியின் வரிகளுக்குள் வாழ்க்கையின் தத்துவம் - வாழும் வாழ்வில் எந்த வித அச்ச உணர்வின்றி வாழ்ந்திட மன தைரியப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுவும் எத்தனையோ பாடல்களில் மனித வாழ்வின் மகத்துவம்,பெண்மை,நாட்டு நலன் இவற்றை குறிப்பிட்டிருக்கும் விதமும்,பொதுமக்களுக்காய் நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மாமனிதராய் மனதில் வலம் வருகிறார்!

    வாழ்க பாரதி புகழ்!

    பதிலளிநீக்கு
  2. பாரதியாரைப் பற்றிய அருமையான தொகுப்பு.. பகிர்விற்கு மிக்க நன்றிகள் அம்மா!

    பதிலளிநீக்கு
  3. ஆயில்யன்,
    வருகைக்கு நன்றி.

    ஆயில்யன் நீங்களும் பாரதியைப் பற்றி
    சிறப்பாய் எழுதி விட்டீர்கள்.

    வாழ்க பாரதி புகழ்!

    வாயுரைக்க வருகுதில்லை,வாழிநின்றன்
    மேன்மை யெல்லாம்.

    பதிலளிநீக்கு
  4. சென்ஷி,
    பாரதியாரைப் பற்றி உங்களுடன்
    பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. Nothing special and interesting. Same old selection from the poet. Upteen times heard and read. He is framed as a National Poet, though he is that too.

    All poets have some philosophy to state. What is his philosophy? Poets are extra-sensitive beings. They differ from common people in many things. Such differences are striking; and interesting.

    What are such differences in this poet? How does he differ? Did such differences bring him to sorrow and suffering? Was he really a misfit in society as he and his wife claimed to be?

    Are all these oft-quoted patriotic songs and a few more on women etc. only things that worth mentioning and reading?

    He wrote thousands of poems, of which, hundreds of them, have been printed and circulated. Even among the available ones, why no other poems attract the attention of people like you.

    Bharathi needs to be studied by discerning minds, and retold to undiscerning minds like us.

    Do you agree with that?

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு இடுகை - எங்களையும் நினைவுக்கூர வைச்சிட்டீங்க! :-) பகிர்வுக்கு நன்றிம்மா!

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க விரும்பும் சிலருக்காக,

    சிந்திக்க வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. புரட்சிக்கவிஞன் பாரதியின் நினைவுகளுக்கு நன்றிகள்.

    சாந்தி

    பதிலளிநீக்கு
  9. சரியான நேரத்தில் பாரதியை நினைவு கூர்ந்தமைக்கு உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்...

    பாரதியின் ரௌத்ரம் எல்லோருக்கும் பிடிக்கும்தானே..

    அதிலும் பெண் விடுதலை பற்றி பாரதி கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...

    வாழ்த்துக்கள் கோமதி மேடம்...

    பதிலளிநீக்கு
  10. கோபி,
    உங்கள் வணக்கத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு