வியாழன், 5 மே, 2016

ஒருநாள் ஒருபொழுது!

பொதுவாக ஒவ்வொருவரும் காலையில் படுக்கையை விட்டு எழும் போது இறைவா இன்றைய பொழுது நல்ல பொழுதாக போக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

நான் எங்கள் மன்றத்தில்  செய்யும் பிரார்த்தனையை சொல்லிக் கொள்வேன் காலையில்,  அது : --

//அருட்பேராற்றல்  இரவும் பகலும் எல்லா நேரங்களிலும்,  எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்,  உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும்  வழி நடத்துவதாகவும் அமையுமாக//

இன்பமோ, துன்பமோ அவன் பொறுப்பு என்று போய் கொண்டு இருக்கிறது என் வாழ்க்கை.

மத்தியதர மக்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் ஒரு நாள் பொழுது  வழக்கம் போல் போகும்.  ஆனால் சாமானியர்கள் என்று சொல்லப்படுபவர்கள்  அன்றாடக்காச்சி என்று சொல்லப்படுபவர்களுக்கு ஒரு நாள் பொழுது ஒவ்வொரு மாதிரிதான் போகும். தினம் ஒரே மாதிரி இருப்பது  இல்லை.

ஒரு நாள் தொலைக்காட்சிப்பெட்டியில் சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தேன், அன்று என் மனநிலை ஒன்றிலும் லயிக்கவில்லை.
புதியதலைமுறை சேனலில்  ” சாமானியர்களுடன் ஒரு நாள் ” என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.  அது சீனி மிட்டாய், சவ் மிட்டாய், பப்ரமிட்டாய் என்று சொல்லபடுகிற  மிட்டாயை செய்து அதை விற்று வாழ்க்கை நடத்துபவரைப்பற்றி. 

 ஒரு நாள் முழுவதும் அவருடன் இருந்து மிட்டாய் செய்வது முதல் அவர் சைக்கிளில் போய் பக்கத்து கிராமத்தில் விற்பதையும், பின் வீட்டுக்கு வருவது வரை  காட்டினார்கள்.

கடையில் போய் இரண்டு கிலோ சீனி வாங்கி வந்தார் ,  சீனியை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு வீட்டின் பின்புறம்  உள்ள  விறகு அடுப்பில் வைத்து காய்ச்சுகிறார், காய்ச்சும் போதே நல்ல  ரோஸ் கலர் சேர்க்கிறார்.(மிட்டாய் கலர் என்றே அழைப்பார்கள் ரோஸ் கலரை) கரண்டியின் பின்புறம் வைத்து கிண்டி விடுகிறார்.  கம்பி பதத்தில் ரெடியானவுடன்   பக்கத்தில் இருக்கும் ஒரு வழு வழு என்று சிமெண்ட் போட்ட திண்ணையில் தண்ணீர் விட்டு கழுவி விட்டு சீனி கலவையை அதில் விடுகிறார் அவர் மனைவி அதை துணி சுருட்டுவது போல( பாயை சுருட்டுவது போல்) சுருட்டி பின்  நீட்டி மடித்து அதனை மரக் கம்பில் சுற்றி அதன் மேல் பாலீதீன் கவரை சுற்றிக் கொடுக்கிறார் கணவனிடம்.
கணவர் ஒரு பை, கூடை எல்லாம் எடுத்து கொண்டு சைக்கிளில் பயணிக்கிறார். சீனி மிட்டாய் சீனி மிட்டாய் என்று கூவி கொண்டு போகிறார்.
சென்னைக்கு அருகில் உள்ள  ஒரு கிராமத்தில் நிற்கிறார். குழந்தைகள் அவர் குரலைக் கேட்டு  ஓடி வருகிறார்கள் அவர்கள் கையில் காசு இல்லை , அவர்கள் கையில் கொஞ்சம் சுருட்டிய முடி இருக்கிறது அதை பையில் போட சொல்கிறார் பின் அதன் அளவுக்கு ஏற்ற மாதிரி மிட்டாய் கொடுக்கிறார்.

சில குழந்தைகள் மதுபாட்டில் கொடுத்து மிட்டாய் வாங்கி செல்கிறார்கள்.
மிட்டாய்காரர் சொல்கிறார் அப்பாவின் மது பாட்டில் குழந்தைகளுக்கு மிட்டாயாகிறது என்று. குழந்தைகளிடம் நிறைய கொண்டு வாருங்கள் நிறைய மிட்டாய் தருகிறேன் என்கிறார்.

மிட்டாய்க்கார ர் பாட்டில்களை கடையில் போட்டு காசு வாங்கி கொண்டு அரிசி, காய்கறி மற்றும் தன் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்கி செல்கிறார்.

வாங்கி போன பொருட்களை மகிழ்ச்சியுடன் கொடுக்கிறார். மனைவியிடம்.  தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு உணவு சமைக்கிறார் மனைவி. பின் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். அதன் பின் குழந்தைகள் விளையாட போய்விடுகிறார்கள்.

கணவனும் மனைவியும் பையில் இருந்த தலைமுடியை எடுத்து சுத்தம் செய்து சவுரிமுடி செய்கிறார்கள். மனைவி நாளை கொண்டு வரும் முடியில்தான் சவுரி ரெடியாகும் என்கிறார் .
இப்படி ஒருநாள் பொழுது போகிறது.

மிட்டாய் விற்பனை நன்கு நடந்தால்தான் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நல்லது.இவர் சும்மா சவ் மிட்டாயை இழுத்து பிய்த்து மட்டும் கொடுக்கிறார். முன்பு சவ் மிட்டாய் விற்றவர்கள் போல் அழகாய் பலகலரில் மிட்டாய் செய்து மாலை, வாட்ச் எல்லாம் செய்து கொடுத்தால் நன்றாக விற்பனை ஆகலாம்.இப்போது காலமும் மாறி விட்டது கிராமத்து குழந்தைகளும் பைவ்ஸ்டார் சாக்லேட், மற்றும் வித விதமாய் குழந்தைகளை கவர விளம்பரங்களுடன் வரும் மிட்டாய்களை வாங்கி சாப்பிட பழகி விட்டதால் இந்த சவ் மிட்டாய் மவுசு குறைந்து விட்டது.


முன்பு  சவ் மிட்டாய்காரார் இரண்டு மூன்று கலரில் பள பள என்று இருக்கும் சவ் மிட்டாயை  கொண்டு வருவார். அவர் வைத்து இருக்கும் தடியில் மேல் புறம் பொம்மை இருக்கும் அதன் கையில் தாளம் இருக்கும் அதை தட்டிக் கொண்டே மிட்டாய் விற்பார்.  (பொம்மை மிக அழகாய் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்) காசுக்கு ஏற்ற மாதிரி, வாட்ச், கழுத்துக்கு மாலை, செயின், எல்லாம் வித விதமாய் செய்து தருவார்.  நான் சிறுமியாக இருக்கும் போது இந்த மிட்டாய் வாங்கி சாப்பிடத் தடை இருந்தாலும்   ஏதாவது ஒருசமயம் தடை விலக்கப்பட்டு  போனால் போறது இன்று ஒருநாள் மட்டும் அடிக்கடி கேட்க கூடாது என்று வாங்கி கொடுக்கப்படும்.

இந்த முறை அழகர் திருவிழாவில் ஒரு மிட்டாய்க்காரரைப் பார்த்தேன் அழகரும் அவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டதால்  அழகரை வணங்கி விட்டு  மிட்டாய்காரரை  படம் எடுக்கலாம் என்றால் அவர் நகர்ந்து விட்டார். அவர் முதுகுபக்கம்  சாய்த்து வைத்து இருந்த பொம்மையை எங்கோ பார்த்து போல் இருக்கே என்று  நினைத்த போது  திருப்பரங்குன்றத்தில்  ஒரு முறை பொம்மை மிட்டாய்காரரை  போட்டோ எடுத்தது நினைவு வந்தது. அவரே தான் இவர்.  


                                            அழகர் திருவிழாவில் எடுத்த படம்


                                             திருப்பரங்குன்றத்தில் எடுத்தபடம்




                                        என் கணவர் வரைந்த  கணினி ஓவியம்.


உறவோடு உறவாடி  என்ற இந்த பதிவில்  திருப்பரங்குன்றத்தில் காதணிவிழாவிற்கு போய் இருந்த நிகழ்வுகளையும் திருப்பரங்குன்றத்தில் நடந்த விழாக் காட்சிகளையும், மிட்டாய்காரர் பற்றிய செய்திகளையும் காணலாம்.. 
                                          வாழ்க வளமுடன்!

சனி, 16 ஏப்ரல், 2016

வடக்கு மாசி வீதியிலே!




 சித்திரைத் திருவிழாவைப் பார்க்கக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தாள் என் தங்கை.  அவள் வீடு வடக்கு மாசி வீதியில் இருக்கிறது,அங்கு தான்  மீனாட்சி கோவில் சித்திரைத் திருவிழாப் பார்க்க எப்போதும் போவோம். இம்முறை நான் போகவில்லை ஐந்து நாளாய். நேற்று வீட்டுக்கு வந்து கையோடு கூட்டி சென்று விட்டாள். ”இன்று ரிஷபவாகனத்தில் சுவாமியும் பிரியாவிடையும், ரிஷபவாகனத்தில் மீனாட்சி வருவதை பார்ப்பது நல்லது” என்று சொன்னாள். போய் தரிசனம் செய்து வந்தோம்.  தினமும் என் தங்கை வீடு,  உறவினர், நண்பர்கள் வருகையால்  விழாக் கோலம் பூண்டு இருக்கும் மகிழ்ச்சி அலைகளைப் பரப்பிக் கொண்டு.

 உள்ளூர் தொலைக்காட்சியில் நேரலையாக  சுவாமி கோவிலைவிட்டு கிளம்பி வருவது முதல்  எந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்றும் காட்டிக் கொண்டு இருந்தார்கள். எங்கள் தங்கை வீட்டுக்கு வரும் நேரம் அறிந்து 8.30க்கு நல்ல இடம் பார்த்து அமர்ந்து கொண்டோம்.(நடை  மேடையில்) நிறைய பேர்  நடு ரோட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். மாலையில் வீதி முழுவதும் தண்ணீர் லாரி பூ மாதிரி நீரைப் பொழிந்து கொண்டு போனது.

குழந்தைகள் வித விதமாய் அலங்காரம் செய்து கொண்டும் கோலாட்டம் செய்து கொண்டும் வந்தார்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவைகளும் இருந்தன. மீனாட்சி வேடத்தில்  பெண்கள் நிறைய பேர் பவனி வந்தார்கள், கேரள பாணி உடை அணிந்து ஆடி வந்தார்கள்.சிவன், பார்வதி உடையில், கருப்பண்ணசாமி  மாதிரி வந்து கையில் அரிவாளுடன் அருமையாக ஆடினார்கள். அஷ்டபுஜ துர்க்கை வேடம் அணிந்து வந்தாள் ஒரு பெண்.

முதலில் வந்த கோவில்யானை ’பார்வதி’.

மின் விசிறி விளம்பரமும் ஆச்சு, வந்து இருக்கும் பக்தர்களுக்கு  நல்ல காற்று வீசியது போலவும் ஆச்சு.  
மீனாட்சி அம்மன் கோவில் அம்மனைத் தரிசிக்க வரும் பக்கதர்களுக்கு  பல வருடங்களாய்  விசிறி சேவை செய்து வந்தவர் வீதியில் காத்து இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.

அவர் மகன் என்று சொன்னார்கள். அவர்களும்  இருமருங்கில் இருக்கும் பக்தர்களுக்கு விசிறி சேவை செய்தார்.
நாராயணா என்று விசிறியால் வீசிச் சென்றார்கள் 
ரமணா தையல் மிஷின் விளம்பரம் செய்த விசிறியால் பக்தர்களுக்கு வீசி சென்றார்கள்.

பக்தர்களுக்கு விசிறிகள் இருப்பது சிறப்புதானே!

சுவாமியும் , அம்மனும் தங்க ரிஷபத்தில்
தங்க ரிஷபத்தில்

அழகிய வேலைப்பாடு நிறைந்த ரிஷபம்.

மீனாட்சி அம்மன் 
வெள்ளி ரிஷபத்தின்  பின்புறம்

பெரிய தொலைக்காட்சி பெட்டியில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டு  போய்க்கொண்டு இருந்தார்கள்>(மினி வேனில்.)


ஜவ்வு மிட்டாய் மூன்று ருசிகளில் --சுக்கு கலந்த மிட்டாய்,  கமர்கட் போன்ற மிட்டாய், ஜவ்வாய் இருக்கும் ஜவ்வு மிட்டாய்(ரோஸ்கலர்)
திருவிழாவில் உள்ள அனைத்தும் அங்கு இருந்தது. ஜவ்வு மிட்டாய், பஞ்சு மிட்டாய், சூடான நிலக்கடலை, பட்டாணிசுண்டல், குல்பி ஐஸ்கீரீம்  எல்லாம் விற்றார்கள்.  எல்லாரும் வாங்கிக் கொண்டு இருக்கும்போது காவல்துறையினர் விற்பவர்களை  அந்த இடத்தில் நிற்கவிடாமல் விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பாவம் ஓடிக் கொண்டே இருந்தார்கள். தங்கை பெண் வாங்கி தந்தாள்  ஜவ்வு மிட்டாய்கள்.

                                                             
                                                                     பஞ்சு மிட்டாய்

அலங்காரக் குடைகள்
கோலாட்டங்கள் 
பொய்க்கால் குதிரை போல் பொய்க்கால் மாடு --அப்பாவின் தோளின் மேல் இருந்து பார்க்கும் குழந்தை பின்புறம்.

அஷ்டபுஜ துர்க்கை அலங்காரம்

சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு வந்தார்கள் இரண்டு சிறுவர்கள்.

               
கோலாட்டம் ஆடிக் களைத்துப் போய் அப்பாவின் தோள் மீது இளைப்பாறும் குழந்தை.

உயரமாய்    கட்டைக்காலை வைத்துக் கொண்டு ஆடிய இருவர். நான் படம் எடுக்கும் போது ஒருவர்  யாரிடமோ பேச குனிந்து  விட்டார்.

                                                
                           கடைசியில் தேவாரம் பாடிக் கொண்டு போனார்கள்.

                                                       
காவல்துறை வாகனத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கொண்டு வந்தார்கள் ’பெண்கள் அணிந்து இருக்கும் நகைகள் பெயர் சொல்லி பத்திரம், பத்திரம்! கவனம்! கவனம்!’ என்று.

ஊர்கூடி திருவிழாவைச் சிறப்பாய் நடத்தி மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

                                                                 வாழ்க வளமுடன்.
                                                                        -----------------------

வியாழன், 14 ஏப்ரல், 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்.



                                                         
                                                           வாழ்க வளமுடன்.

திங்கள், 11 ஏப்ரல், 2016

ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பகுதி -- 2

கோவில் நகரம் என்று அழைக்கப்படும்  ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்கள் பற்றி முந்திய பதிவில்  சில படங்களைப் பகிர்ந்து இருந்தேன். இந்தப் பதிவில் அந்தக் கோவிலில் உள்ள அழகான ஜன்னல்கள், கலையம்சம் உள்ள சிலைகள் பகிர்வு.

இங்கு உள்ள சிற்பங்கள் இரண்டு காலத்தில்  உள்ளவர்களின் கலைப்பாணி என்கிறது விக்கிமீடியா.  சில சிற்பங்கள் ஏழாம் நூற்றாண்டை சார்ந்த  சாளுக்கியர்கள் கலை ,  சிலசிலைகள் 12ம் நூற்றண்டை சேர்ந்த காகதீயர்கள் காலத்தை சேர்ந்தது    என்கிறது.  இருவர் காலத்து சிற்பங்களும் அழகுதான்.

   










                                                                                           
                                                                 


                                               

                                                                         










இங்கு உள்ள சந்நிதிகளில் சிவலிங்கங்கள் உள்ளன   கருவறையில் எல்லா   சிவன் அருகிலும் எண்ணெய் டின்கள் அடுக்கப்பட்டு இருக்கிறது. அதையும் சேர்ந்து தான் வணங்க வேண்டும். படம் எடுக்க வேண்டும்.

கோவில் வளாகத்தில்  தர்க்கா இருக்கிறது.  ஹஸரத் சையது ஷா பயில்வான்  அவர்கள் தர்க்கா.  அந்த தர்க்காவில் நடக்கும் திருவிழாவில் சாதி மதம் பாராமல் அனைவரும் கலந்து கொள்வார்களாம் என்று  எங்கள் டாக்ஸி  டிரைவர் அந்த தர்க்காவை பற்றி சொன்னார்.   அங்கு உள்ளே போய் வணங்கி வந்தோம் அங்கு இருந்தவர் வீபூதி மாதிரி (பாபா கோவில் உதி போல்)   கொடுத்து பூசிக்கொள்ளுங்கள் என்றார்  இந்தியில். நினைத்தது நடக்கும் அமர்ந்து வேண்டிச் செல்லுங்கள் என்றார்.









நம் ஊர்ப் பக்கம் கோவில்களில்  தாங்கள் வீடு கட்ட வேண்டும்  என்று வேண்டிக் கொண்டு கல்மேல் கல் வைத்து அடுக்கி வைத்து இருப்பார்களே அது போல் இந்தக் கோவிலிலும் அடுக்கி வைத்து இருந்தார்கள்.

நாம் கோவிலை பார்த்துக் கொண்டு இருக்கும் போது  நம்மைச் சிறிது நேரம்  நின்று  தன்னைப் பார்க்க வைத்த அழகிய நாய்.    

அடுத்து கர்நூல் பயணம்.   அங்குள்ள  கொண்டாரெட்டி கோட்டையைப்  பார்த்தோம். அடுத்த பதிவில். அதை பார்ப்போம்.

                                                                வாழ்க வளமுடன்.
                                                                    -----------------------