நிறைவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிறைவு பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 பிப்ரவரி, 2021

திங்கள், 16 ஜனவரி, 2012

திருக்கயிலை யாத்திரை - பகுதி - 6

KAILASH YATHRA-PART-6
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலைமலையானே போற்றி!

13.09.2011

இன்று காலை 6 1/2 மணியளவில் புறப்பட்டோம். சாகாவில்
1 மணி நேரம் ஷாப்பிங். பிரம்மபுத்ரா நதிக்கரையில் மதிய
உணவு. பிற்பகல் 4 மணியளவில் நியாலம் வந்துசேர்ந்தோம்.
முன்பு தங்கியிருந்த அதே ரிசார்ட்டில் தங்கினோம்;



திபெத் பகுதியில் அதுவரை எங்களுக்கு உதவிய
நண்பர்கள்,சமையல் பணியாளர்கள் முதலியோர்க்கு
பிரியா விடை தந்தோம்.அவர்களுக்கு நன்றியும்
அன்பளிப்பாய் ஒரு தொகையும் கொடுத்தோம்.
எங்களுக்கு உணவு சமைத்துத் தந்த நால்வர்
குழுவுக்கு நன்றியும் ஒரு தொகையும் அன்பளிப்பாய்க்
கொடுத்தோம். அவர்களுக்கு அது மிகவும்
மகிழ்ச்சியாக இருந்தது.









கயிலை செல்லுகிறபோதை விட திரும்பும்போது
வேகமாக வரமுடிகிறது. செல்லும்போது குளிருக்கு
உடலைப் பழக்கிக்கொள்ள வேண்டி கூடுதலான
நாட்கள் தங்கித்தங்கிச் செல்லவேண்டி இருக்கிறது.

மலைப்பகுதிகளில் உயரத்திற்குத் தகுந்தாற்போல்
ஆக்ஸிஜன் விகிதம் குறைகிறது. அதன் விவரம்.**

உயரம்: மீட்டர்/அடி - ஆக்ஸிஜன் விகிதம்

கடல் மட்டம்----- 100%

1000 / 3281-------- 88%
2500 / 8202-------- 73%
3000 / 9843-------- 68%
3500 /11483-------- 64%
4000 /13123-------- 60%
4500 /14764-------- 57%
5000 /16404-------- 53%
5500 /18045-------- 50%
6000 /19865-------- 47%
7000 /22968-------- 41%
8000 /26247-------- 36%

8848 /29028}--------33%
எவெரெஸ்ட்

** நன்றி: Nepal Map Publishers.Pvt.Ltd.
Kathmandu

கயிலை யாத்திரையின் போது தங்குமிடங்களின்
உயரங்கள் :

காத்மண்டு - 1300மீ
நியாலம் - 3750மீ
சாகா - 4550மீ
பர்யாங் - 4600மீ
சூகேம்ப் - 4600மீ

இவ்விவரப்படி கயிலைமலையின் அடிவாரப் பகுதிகளில்
சுமார் 55% ஆக்ஸிஜன் இருப்பதாகத் தெரிகிறது.

திருக்கயிலாயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்
ஒன்று. திருநாவுக்கரசு நாயனாரும், சுந்தரமூர்த்தி
நாயனாரும் ’கயிலாயம்’ என்றும் ’திருநொடித்தான்
மலை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

// வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி!
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி!
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி!
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி!
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி!
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி!போற்றி! //

என்று திருநாவுக்கரசு நாயனார் தன்னுடைய போற்றித்
திருத்தாண்டகத்தில் போற்றுகிறார். இதில் 30 பாடல்கள்
உள்ளன.

// தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனை வந்தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை உத்தமனே! //

என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.

நக்கீரதேவர் பாடிய ‘கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி'
என்ற நூலும்,சேரமான் பெருமாள் நாயனார் பாடிய ‘திருக்
கைலாய ஞான உலா என்ற நூலும் 11-ஆம் திருமுறையில்
அமைந்துள்ளன.

திருக்கயிலாயத்தில் கோயில் கிடையாது. மலைதான்
இறைவனாய் வணங்கப்படுகிறது. இம்மலைக்கு நான்கு
திசைகளை நோக்கியவண்ணம் நான்கு முகங்கள் உண்டு.
வடக்கு முகத்தில் காலை வெயில் படும் போது பொன்
வண்ணமாய் தெரியும் . பொன்னார் மேனியன் என்று
சொல்வார்கள்.

14.09.11

காலை 6 1/2 மணிக்கு நியாலத்திலிருந்து புறப்பட்டோம்.
காலையிலிருந்தே அதிக பனிமூட்டமாகவும் மழையாகவும்
இருந்தது. நல்லவேளை நாங்கள் கயிலை சென்று
இவ்விடம் வரும் வரை காலநிலை சீராகவே இருந்தது.
காலை 8 1/2 மணிக்கு நேபாள-சீன எல்லையை
அடைந்தோம்..

திபெத் முழுவதற்குமாக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த
பேருந்துக்கும் ஓட்டுநருக்கும் விடை கொடுக்கும் நேரம்
வந்தது.

திபெத்திய குழந்தைகள் நம்மை ’ஹலோ’ என்று
தொட்டுக்கூப்பிட்டு ’பைசா தாங்க’ என்று கையேந்து
கிறார்கள். எங்களிடம் இருந்த இனிப்புகள், பிஸ்கட்டு
களைக் கொடுத்தோம். பெண் குழந்தைகள் வளையல்,
பொட்டு கேட்கிறார்கள்.புடவை கட்டியிருந்த என்னை
பெண்கள், குழந்தைகள் எல்லாம் ஆச்சரியமாய்ப்
பார்த்தார்கள். ஒரு பெண் என் மெட்டியைத் தொட்டுப்
பார்த்து, வேண்டும் என்று கேட்டாள்.

அவர்கள் தண்ணீர் எடுத்து வரப் பெரிய பிளாஸ்டிக்
கேனைப் பயன்படுத்துகிறார்கள்.அதன் மேற்பகுதியில்
உள்ள இரண்டு வளையங்களையும் சேர்த்துக் கயிறு
கட்டி,கேனை முதுகில் வைத்து,கயிற்றைத் தலையின்
நடுப்பகுதியில் மாட்டிச் சுமந்து செல்கிறார்கள்

அங்குள்ளவர்கள் தலைக்கு மட்டும் குளிக்கிறார்கள்.
தண்ணீரை வாய் அகன்ற பேஸினில் ஊற்றி விட்டு,
தலையை உள்ளே முக்கி முக்கி எடுக்கிறார்கள்.
அவ்வளவு தான் குளியல் முடிந்து விட்டது.
பேஸின் தண்ணீரிலில் கொஞ்சம் ஷாம்பு போட்டுக்
குழந்தையை நன்கு அமுக்கி பிடித்துத் தலையை
மட்டும் அதில் முக்கித் தேய்த்துஅலசுகிறார்கள்.
மூக்கு ஒழுகும் முகத்தைக் கூடத் துடைப்பது
இல்லை. அழுக்கு உடையையும் மாற்றவில்லை.



பாத்திரம் கழுவுவதும் பேஸினிலில் தான்.
சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்ட வைத்து
இருப்பார்களே. அந்த மாதிரி பெரிய பெரிய
பேஸின்.

ஆண்களுக்கு பேன் பார்க்கும் பெண்களை வழி
எங்கிலும் பார்க்கலாம். எங்கு பார்த்தாலும்
சின்னச் சின்ன அருவிகள்,ஆனால் தண்ணீருக்கு
மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். வீடுகளுக்கு
தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை.

திபெத்தில் போக்குவரத்துக்கு மோட்டார் சைக்கிள்கள்
உள்ளன.அதன் உரிமையாளர் இரண்டு பேருக்குக்
குறையாமல் ஏற்றிச்செல்கின்றனர். டாக்சியைப்
போல இவை இயங்குகின்றன.இவற்றில் நிறைய
எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ், துணிகள்,மணிகள்.அந்த
அலங்காரத்தைப் பார்க்கிறபோது நம்மூர் பூம் பூம் மாடு
நினைவுக்கு வருகிறது.

சீனப்பகுதியில் சாலைப் போக்குவரத்தில் வலது
புறமாகவே(keep right) செல்லவேண்டும்.
நேபாளத்தில் இந்தியாவைப் போலவே இடது புற
மாகவே செல்லவேண்டும். பொதுவாக நண்பகல் 12
மணிக்குள் எல்லையைக் கடந்துவிடுவது நல்லது.
அதன் பின்னர் மறுநாள் தான் இம்மிகிரேஷன்
என்று சொல்லிவிடுவார்களாம். அப்படிச்சொல்லி
விட்டால் எல்லைப் பகுதியில் அன்றிரவு தங்குவது
சிரமமாய்ப் போய்விடுமாம்.பொதுவாகவே திபெத்
பகுதியில் இரவுப் பயணம் அனுமதிக்கப்படுவது
இல்லையாம். மாலை 6 மணிக்குள் நமது பயணத்தை
முடித்துக்கொள்ளவேண்டும். அதற்குத் தகுந்தாற்போல்
பயணத்திட்டத்தை வகுத்துக் கொள்ளவேண்டும்.

டிராவல்ஸ் மூலம் செல்லும்போது பிரச்னையில்லை.
தனியாகச் செல்லும்போது இதை மனதில் கொள்ள
வேண்டும். மேலும் டிராவல்ஸ் மூலம் செல்லும்
போது சீனாவிற்கு குரூப் விசா எடுத்துத் தந்து
விடுகிறார்கள்.சீனாவிற்குத் தனிவிசா வாங்குவதில்
சிரமம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சீன எல்லைக்குள் நுழையும்போதும், திரும்பவும்
நேபாளத்திற்குள் வரும்போதும் சீன இமிகிரேஷனின்
போது குழு விசா வைத்திருப்பவர்களுக்குத் தொல்லை
எதுவும் இல்லை.ஒவ்வொரு குழுவினரையும்
வரிசையாக நிறுத்தி பாஸ்போர்ட்டைச் சரிபார்க்கிறார்கள்.
கயிலை செல்பவர்கள் என்றால் ஒரு மதிப்பு இருக்கவே
செய்கிறது. பொருட்களை ஸ்கேனிங் கூட செய்வதில்லை.

வெவ்வேறு கயிலைக் குழுவினர் வெவ்வேறு
வண்ணத்தொப்பிகள் அணிந்திருப்பதால் ஒவ்வொரு
குழுவினரையும்எளிதில் அடையாளம் காணமுடிகிறது.
நாங்கள் மனோகர்ட்ராவல்ஸ் மூலம் சென்றோம்.
நாங்கள் எல்லோருமே ஆரஞ்சுத் தொப்பி அணிந்திருந்
தோம். அதே சமயம் சென்னையிலிருந்து அன்னபூர்ணா
ட்ராவல்ஸ் குழுவினரும்,ஐதராபாத்தில் இருந்து ஒரு
குழுவினரும் அங்கே வந்தனர்.ஒவ்வொரு குழுவினருக்கும்
தனித்தனி அடையாளங்கள்.பிரமிட் தொப்பி அணிந்து
இருந்தனர் சிலர்.

’ஜெயா டிவி’, ’z தமிழ் டிவி’ இரண்டிலும் ஜோதிடம்,
மந்திரங்கள் பற்றிச் சொல்லும் காழியூர் கண்ணன்
பட்டாச்சாரியார்,கயிலைக்கு வேறு ஒரு குழுவில்
வந்திருந்தார். இந்தியா திரும்பிய பின் அவர்
’z தமிழ்’ டிவியில் கயிலைப் பயணத்தைப் பற்றிக்
காலை 9.30க்குசொல்லிக் கொண்டு இருந்தார்.

சீன எல்லை முடியும் இடத்தில் சில கடைகள்
உள்ளன. அங்கு சிலர் பொருட்கள் வாங்கினர். சூரிய
ஒளியில் இயங்கிச் சுற்றும் சிறியசாதனம் அங்கே விஷேசம்.
(புத்தர் கோயில்களில் சுழற்றி விடும் மணி வரிசைகள்
இருக்கும். ஒரு முறை சுழற்றினால் புத்த வேதம்
முழுவதும் படித்தமாதிரி என்றார்கள்.
அந்த மணிகளில் புத்தசமய
மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும்.அதைச்சுழற்றினால்
நல்லது என்பார்கள். அந்த மணியைபோல் மிகச்சிறிதாக
இருக்கும், இச்சாதனம்.) நமது காரில் முன்பகுதியில்
வைத்தால் சூரிய ஒளி படும்போதெல்லாம் சுற்றிக்கொண்டே
இருக்கும். நாங்களும் அதை வாங்கினோம்.

சீனாவில் இது தயாராவதால் அங்கு இது விலை
குறைவு. நேபாளத்தில் ஒரு சில இடங்களில்
கிடைத்தாலும் விலைமிகஅதிகம். சிலர் பொதி சுமக்கும்
’யாக்’ எருமைப்பொம்மை வாங்கினார்கள்.

இம்மிகிரேஷன் முடிந்த பிறகு நேபாள எல்லைக்கு
வந்தபின் அங்கு ஒரு ஓட்டலில் காலை உணவு உண்டோம்.
அந்த ஓட்டலிலேயே பெரிய பெரிய கயிலாய போட்டோக்களை
ஒருவர் விற்ற வண்ணம் இருந்தார். நாங்களும் வாங்கினோம்.
பின்னர் வேறொரு பேருந்தில் ஏறிப் பயணித்தோம்.நேபாள
மலைப்பகுதிகளில் சாலைகளில் அவ்வப்போது மலைச்
சரிவுகள் ஏற்பட்டபடி இருக்கிறது.சிறுசிறு கற்கள் ஆறு
போல் விழுகிறது.






அவ்வாறு விழுந்து நின்ற சில இடங்களைக் கண்டோம்.
மலைச்சரிவுகள் ஏற்படுகிறபோது போக்குவரத்து பாதிக்கப்
படுமாம். நல்ல வேளையாக எங்களுக்கு அப்படியெல்லாம்
ஏது நடக்கவில்லை.எங்கள் குழுவினரில் இரண்டு பேர்
முன்னதாகத் திரும்பியபோது நிலச்சரிவால் ஒரு நாள்
பயணம் பாதிக்கப்பட்டது.

மதியம் காத்மாண்டு அருகில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம்.
மாலை 4 மணிக்கு நாங்கள் முதலில் தங்கியிருந்த ’ஓட்டல்
ஹிமாலயாஸ்’வந்து சேர்ந்தோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு
காத்மாண்டு ஹோட்டலில் வெந்நீரில் நீண்ட நேரம் திருப்தி
யாகக் குளித்தோம்.

மாலை 7 மணியளவில் கயிலை சென்றவர்களுக்குப்
பாராட்டுக் கூட்டம் நடை பெற்றது. சுற்றுலாவிற்கு
உதவிகள் புரிந்த சுற்றுலா அலுவலர் ஜோதி அதிகாரி,
பதம், எங்கள் முதல் கைடான மதுசூதனன் முதலியவர்களை
உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பயணம் சென்றவர்களுக்குப் பொன்னாடைகள்
போர்த்தப்பட்டன. பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
கயிலை பற்றிய சி டி க்கள், படங்கள் தந்தார்கள். நடந்தே
பரிக்கிரமா சென்று திரும்பிய ரகுநாதனுக்கு சிறப்புப்
பொன்னாடை அணிவித்தனர். மூன்று முறை கயிலை
யாத்திரை வந்த இளமுருகு ஐயாவிற்கும்,
பரிக்கிராமாவில் பாதியில் திரும்பாமல் கடைசி வரை
சென்று வந்த எங்கள் குழுவை சேர்ந்தவர்களுக்குப்
பரிசும், பாராட்டும் தரப்பட்டன.

மறுநாள் முக்திநாத் பயணம் தொடங்கிற்று. முக்தி நாத்
பயணம் தனிக் கட்டுரையாக வர இருக்கிறது. மொத்தம்
இருந்த எங்கள் குழுவினரில் 11 பேரைத் தவிர 3
ஸ்வாமிஜீக்கள் உட்பட மற்றவர்கள் பயணத்தை முடித்துக்
கொண்டு இந்தியா திரும்பினார்கள்.முக்திநாத்தை தரிசித்து
நாங்கள் இரண்டு நாள் காத்மாண்டு விடுதியில் தங்கி
சுயம்புநாத் என்ற புத்தகோயில், தட்சிண காளி கோவில்,
(மீண்டும்) பசுபதி நாத கோயில், புத்தநீல்கண்ட் கோயில்
எல்லாம் போனோம்.

அன்று இரவு டெல்லி திரும்ப, சாமான்களை எடுத்து
வைத்துக் கொண்டு இருந்த போது கீழே உட்கார்ந்து
பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டு இருந்தேன்.
அப்போது கட்டில் வேகமாய் ஆடியது.

பெடஸ்டல் ஃபேன் வேகமாய் ஆடியது, சுவரில்
மாட்டியிருந்த குருவி படம், இரண்டு பக்கமும்
வேக வேகமாய் ஆடியது.ஏன்? என்ன? இப்படி
ஆடுகிறது? என்று நாங்கள் கேட்டுக் கொண்டு
இருக்கும்போதே. வெளியே மக்கள் கூட்டத்தின்
கூக்குரல் நிறைய கேட்டது அப்புறம் தான்
நிலநடுக்கம் வந்தது என்று உணர்ந்தோம். நாங்கள்
இருந்ததோ மூன்றாவது மாடியில்!

பாஸ்போர்ட்டை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு
லிப்டைப் பயன்படுத்தாமல் படி வழியாக இறங்கிக்
கீழே ஓடி வந்தோம்.எங்களுடன் பயணம் செய்தவர்கள்
எல்லோரும் நலமாய் இருப்பதை அறிந்து நிம்மதி
அடைந்தோம். தொலைக்காட்சியில் 6.8 ரிக்டர்
அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாய் அறிவித்தார்கள்.

75 வருடங்களுக்குப் பின் இந்த நிலநடுக்கம் வந்து
இருப்பதாய் ஒட்டல் பணியாளர்கள் சொன்னார்கள்.
காட்மாண்டுவில் தூதரகத்தைச் சேர்ந்த 3 பேர் சுவர்
இடிந்து விழுந்து இறந்து விட்டதாய்த் தொலைக்
காட்சியில் கூறினார்கள்.


எங்கள் மகள் டெல்லியில் அடிக்கடி நிலநடுக்கத்தை
உணர்ந்து இருக்கிறாள்; எங்கள் மகன், தான் இருக்கும்
நியூஜெர்சியில் ஒருமுறை நிலநடுக்கத்தை உணர்ந்து
இருக்கிறான். நாங்களும் அதை உணரத்தான்
காத்மாண்டு நில நடுக்கம் ஏற்பட்டது போலும்!
ஊரில் உறவினர்கள் தொலைக்காட்சி செய்தி பார்த்து
பயப்படுவார்களே என்று உடனே மகளுக்கு போன்
செய்து நாங்கள் இறைவன் அருளால் நலமாக
இருப்பதாய் சொன்னோம். ஊரில் தாத்தா, ஆச்சி
மற்றும் அனைவருக்கும் எங்கள் நலத்தை அறிவித்து
விடும்படி சொன்னோம். இல்லையென்றால் எல்லோரும்
கவலையாய் இருப்பார்கள்.அடுத்து 4.5 அள்வில்
மறு நிலநடுக்கம் வந்ததாய் தொலைக்காட்சியில்
அறிவித்தார்கள்.அளவில் சிறியதாய் இருந்ததால்
அதை எங்களால் உணர முடியவில்லை.

கயிலை இறைவன் எங்களை நிலநடுக்கத்திலிருந்தும்
காப்பாற்றிவிட்டான். அவனை மனதால் வழிபட்ட
வண்ணம் இருந்தோம்.


21 09.11 அன்று காலை நாங்கள் காத்மாண்டுவிலிருந்து
விமானம் மூலம் டில்லி வந்து அன்றே பிற்பகல் வேறொரு
விமானத்தில் ஏறி 4 மணியளவில் சென்னை வந்தோம்.
சென்னையில் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் காலை
சோழன் விரைவுவண்டி மூலம் புறப்பட்டு பிற்பகல்
மயிலாடுதுறை வந்து இறையருளால் நல்லவிதமாக
இல்லம் வந்து அடைந்தோம்.

திருக்கயிலாய யாத்திரை இனிதே நிறைவடைந்தது.
சென்று வந்ததால் ஏற்பட்ட இனிய உணர்வுகள் நீடிக்
கின்றன. கடுங்குளிர், பிராணவாயுப் பற்றாக்குறை,
அடிப்படை வசதிக்குறைவுகள் போன்ற துன்பங்கள்
இருந்தாலும் கயிலையைக் காணப்போகிறாம் என்று
எண்ணும்போது அவை துன்பமாகத் தோன்றுவதில்லை.
கயிலையைக் காணுகிறபோது கொஞ்சநஞ்ச துன்பமும்
பஞ்சாய்ப் பறந்து போய்விடுகிறது.

உள்ளத்தில் பக்தி இருக்கிறபோது துன்பங்கள்
தோன்றாது. ஒரு முறை நாங்கள் வைஷ்ணவதேவி
கோயிலுக்குப் போனபோது 14 கி.மீ மலையேற
வேண்டியிருந்தது.முதலடி காலை வைத்தபோது
அங்கிருந்தவர்கள் சொன்னார்கள் முதல் அடியை நீங்கள்
எடுத்து வைத்துவிட்டீர்களானால் மற்ற அடிகளை
அம்பாளே எடுத்து வைத்து உங்களைக் கோயில் வரை
ஏற்றிவிடுவாள் என்றார்கள். அந்த உண்மையை அங்கே
உணர்ந்தோம். அதே போல் கயிலாயம் செல்ல வேண்டும்
என்ற உறுதி நம்மிடையே ஏற்பட்டுவிட்டால்
மற்றவற்றை இறைவனே செய்துவிடுவான்.இது
எங்கள் அனுபவம்.

கயிலை சென்ற குழுவினரில் நடுத்தர வயதினரும்
அதற்கு மேற்பட்டவர்களுமே அதிகம். 73 வயதான
ஒரு அன்பர் பரிக்கிரமா சுற்றி வந்தார். அவர்
கயிலைக்கு வந்தது இது மூன்றாவது முறை.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் பலர் கயிலை
சென்று வந்திருக்கிறார்களாம். கயிலைமலையைத்
தரிசிக்க நடந்து மலையேறத் தேவையில்லை.
மானசரோவர் வரை பஸ்,கார் செல்கிறது.
அங்கிருந்து கயிலையைக் காணலாம். அதற்கு
மேலும் யமத்வார் வரை பஸ்ஸில் சென்று கயிலையை
அருகில் காணலாம். பரிக்கிரமா செல்வதற்கு மட்டுமே
நடந்தும் குதிரையிலும் செல்லவேண்டும்.

விசா ஏற்பாடு,போக்குவரத்து வசதி,தங்கும் வசதி,
தமிழ்நாட்டு உணவு வசதி எல்லாமே சுற்றுலா
நிறுவனத்தினரே செய்துவிடுகின்றனர். நமக்கு எந்தக்
கஷ்டமும் இல்லை.

ஒவ்வோராண்டும் மே,ஜூன்,ஜூலை,ஆகஸ்டு,
செப்டம்பர் ஆகிய மாதங்களில் தனித்தனியாகக் குழுக்கள்
கயிலை சென்று வருகின்றன.

எங்களுக்கு இவ்வளவு வசதிகளும் தந்து இப்படிப்பட்ட
சிறந்த யாத்திரைக்கு ஏற்பாடு செய்து தந்த ஈரோடு,
’மனோகர் ட்ராவல்ஸ்’ நிறுவனத்தார்க்கு எங்கள்
மனமார்ந்த நன்றிகள் !

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பார்கள்.
அது போல் அன்பர்கள் பலர் கயிலை சென்று
இறையருளைப்பெற எமது வாழ்த்துக்கள்!.










காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலைமலையானே போற்றி!