நவராத்திரிச் சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரிச் சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஆலயங்களில் நவராத்திரி விழா

நவராத்திரியில் நிறைய பாடல்கள் பாடி மகிழ்வோம். நம் தேசியக் கவி பாடிய பாடலையும்  பாடி மகிழலாம்.

லக்ஷ்மி பிரார்த்தனை

மலரின் மேவு திருவே-- உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவுசெய்யும் முகமும் -காண்பார்
நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும்-தெய்வக்
களிதுலங்கு நகையும்
இலகு செல்வவடிவும்- கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்

திருமகளை சரண் புகுதல்

பொன்னிலும் மணிகளிலும்- நறும்
பூவிலும் சாந்திலும்  விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் -மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற்  புகழ்பாடி- அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

சரஸ்வதி தேவியின் புகழ்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.

காளி    ஸ்தோத்திரம்

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.    

   
நவராத்திரி விழா சில நினைவுகள்:-

ஆலயங்களில் கொலு வைத்து  அம்மன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலுவீற்று இருப்பாள். கோவிலில்  கொலு10 நாட்கள் நடைபெறும்
எங்கள் ஊரில் இருக்கும் புனுகீஸ்வரர்  கோவிலுக்கு கொலு பார்க்க நாங்கள் தினமும் குழந்தைகளுடன் போவோம். அங்கு அழகாய் கொலு பொம்மைகள் இருக்கும்.
பின் அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சாரங்கபாணி கோவில் செல்வோம். அங்கும் கொலு பார்த்துவிட்டு அதன் அருகில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில் போவோம். அங்கும் கொலு வைத்து இருப்பார்கள் .தினம் பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல்,”அந்த பொம்மையைப் பார், இந்த பொம்மையைப் பார் ”என்று பிள்ளைகள் பேசி மகிழ்வார்கள். மயூரநாதர் கோவிலிலும் கொலு நன்றாக இருக்கும். கோவில் கோவிலாக குழந்தைகளுக்காக் கொலு பார்க்கச் சென்ற நினைவுகள் மனதில் மலர்கிறது.

நாங்கள் திருவெண்காட்டில் இருந்தபோது, ஸ்வேதாரண்யர் கோவிலில் நவராத்திரி கொலு மிகச் சிறப்பாக நடைபெறும். கொலு பொம்மைகளை வைத்து தினம் கதைகள் சொல்வார்கள் .ஒருநாள் கைலாயக் காட்சி என்றால் இன்னொருநாள் வைகுண்ட வாசல், ஏழுகதவுகள் திறக்கும்.கடைசி கதவு திறக்கும் போது பாற்கடலில் பரந்தாமன் காட்சி அளிப்பார்.  பெரிய பெரிய பொம்மைகள் அதை மாற்றி மாற்றி வைத்துக் காட்சி அமைப்பார்கள். வெகு அழகாய் இருக்கும். கச்சேரிகளும் உண்டு.பெரிய பெரிய பிரபலமானவர்களின் கச்சேரிகள் நடக்கும். இப்போது அப்படி நடப்பதில்லை.

வீட்டில் கொலு வைத்து இருக்கும்போது இறைவன் புகழைப் பாடி மகிழ்வார்கள். ஆடல்கலையால் இறைவன் புகழை ஆடியும்  மகிழ்வார்கள். தங்களுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த குருவிற்கு விஜய தசமி அன்று குரு காணிக்கை அளித்து மகிழ்வார்கள். எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற இறைவன் அருளும் குருவருளும் மிகவும் முக்கியம்  இல்லையா?

இந்த ஒன்பது நாளும் தங்களுக்கு இருக்கும் பலகலைகளையும் வெளிப்படுத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பாக குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் இந்த விழாக்கள் மூலம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் இவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாகவும் இருக்கிறது.

இந்த விழா மட்டும்  தான் சாதி மதம் பாராமல் அனைவரும் அவர்கள் தொழில் செய்யும் இடத்தைக் கோவிலாக நினைத்து கொண்டாடும் விழாவாக இருக்கிறது. தொழில் புரிபவர்கள்  தாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகத் துடைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூஜை போடும் நாள்.

கொலுவிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் மகிழ்வாய் வந்து கலந்து கொண்டு மகிழ்வதால்  நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழா.

கோவிலோ வீடோ எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியால்தான் விழாக்களை சிறப்பாக செய்யமுடியும். ஒருவர் மட்டும் செய்தால் அதில் அலுப்பும், சலிப்பும் வந்து விடும்.  கூட்டுமுயற்சிக்கு ஒரு விழா நவராத்திரி.

விழா முடிந்த பின் கொலுவை எடுத்து வைத்தவுடன் கோவிலும், வீடும் கொலுவீற்றிருந்த இடம் வெறிச்சோடி இருக்கும். அடுத்த வருடம் வரும் வரை இந்தப் பத்து நாட்களின் மகிழ்ச்சி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.

           
மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு புனுகீஸ்வரர் சமேத சாந்தநாயகி கோவிலில் அம்மன் சாந்தநாயகி.

நவராத்திரி முதல் நாள் சாந்தநாயகி கொலுவீற்றிருக்கும் அழகு
கொலுமண்டபம்
படியில் கொலு பொம்மைகள் அணி வகுப்பு
தெப்பகுளம் அமைத்து அதில் மீன்கள் விடப்பட்டு இருக்கிறது
சாந்தநாயகி - நவராத்திரி இரண்டாம் நாள்


நவராத்திரி மூன்றாம் நாள் - சாந்த நாயகி
காமாட்சி கோவில் கொலு
 (இரு மனைவியருடன் கல்யாண மாப்பிள்ளை ) கல்யாணத்தில் பாட்டுக்கச்சேரி (சாரங்கபாணிகோவில் கொலு)
சாரங்கபாணி  கோவில் கொலு
சாரங்கபாணி கோவிலில் நவராத்திரி விழா   _தாயார் கலசத்தில் இருக்கிறார்
திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் கலைமகள் அலங்காரம்

அன்னையின் புகழ் பாடும் நாட்டிய நாடகம்

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில்  குழந்தைகள் அம்மன் அலங்காரத்தில் (ந்ன்றி ராஜ் டி.வி)

நவராத்திரி கொலுவில் மும்மூர்த்திகள்
நவராத்திரியில் அன்னையின் புகழ்பாடும் சிறுமியர்

சென்ற வருடம் நவராத்திரி அமெரிக்காவில் - அப்போது அங்கு   மகன் வீட்டில்  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்.


ஆதாரம்  சக்தி யென்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறைத்தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

வாழக வளமுடன்
----------------

புதன், 24 செப்டம்பர், 2014

தேவி கொலுவிருக்கும் வீடு


இந்தப் படம் சுமார் 58 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒரு காலண்டரில் இருந்ததாம். என் அத்தை வீட்டில் பெருங்காயம் வாங்கியபோது அதற்கு அந்தக் காலண்டரைக் கொடுத்தார்களாம்.. அதை அத்தை வீட்டில் பிரேம் செய்து வைத்து இருந்தார்கள். அதை இப்போது நகல் எடுத்துக் கொண்டோம். 

பெருங்காயக் கம்பெனி பெயர்

வரைந்த ஓவியர் பெயர்(ராஜம் )

அந்தக் காலத்தில் வியாபாரத்தில் கூட இறைபக்தியை வளர்த்து இருக்கிறார்கள்.

அத்தை அவர்கள் பின்னிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதி

இந்த முறை கொலு இல்லை . அதனால் படங்கள் மட்டுமே!


2006 ஆம் வருடம் எடுத்த படம்


  2005ஆம் ஆண்டு நவராத்திரி கொலு அம்மன் அலங்காரம் ஒருபுறம்.          குழந்தைகளின் கைவண்ணம் ஒருபுறம்.

 நவராத்திரி என்றால் குழந்தைகளுக்கு விதவிதமாக அலங்காரம் செய்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துவரச் செய்வோம். வீட்டை அழகுபடுத்தி, வாசலில் விதவிதமாய் அழகிய கோலங்கள் போட்டு  ஒன்பது நாளும் உறவினர், நண்பர்கள் என்று மகிழ்ச்சியாக உறவாடி மகிழ்வோம்.

ஒன்பது நாளும்  மூன்று தேவிகளை வழிபட, பாடல்கள் பாடலாம் அல்லது பாடல்களைக் கேசட்டுகள் அல்லது சிடி போட்டுக் கேட்கலாம்.

நம் தேசியகவி அவர்களின் நவராத்திரி பாட்டு கேட்போம்:-

                  நவராத்திரி பாட்டு

உஜ்ஜயினீ நித்யகல்யாணி!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் சக்தி ஓம்சக்தி    (உஜ்ஜயினீ)
உஜ்ஜய் காரண் சங்கர தேவீ
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா                   (உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம். (உஜ்ஜயினீ)
ஸ்த்ய் யுகத்தை அகத்தி லிருத்தித்
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)

                                     பாரசக்தி    (மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)

மாதா பராசக்தி வையமெலா நீ நிறைந்தாய்
ஆதார முன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய், எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப் பணிந்து வாழ்வோமே.

                                       வாணி

வாணிகலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப்போலே அறிவுமுத்து மாலையினள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே.

                                        
                                       ஸ்ரீ தேவி

பொன்னரசி , நாரணனார்தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற்றாளே சரண் புகுநது வாழ்வோமே.

                                               பார்வதி

மலையிலே தான் பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்
நிலையிலுயர்த்திடுவாள், நேரே அவள் பாதம்
தலையிலே தரணிமிசை வாழ்வோமே .

நவராத்திரி நாயகியான அம்பிக்கைக்கு ‘சர்வக்ருக ரூபிணி’ என்ற பெயரும் உண்டு சந்திரன், சூரியன் போன்ற நவக்ரகங்களும் அம்பிகையின் உருவம் என்பதால் நவக்கிரக வழிபாடு மூலமும் அம்பிகையை வழி  படலாம். 

தேவிபாகவத்தைக் கேட்பதாலும் , பாராயணம் செய்வதாலும் ஐஸ்வர்யம், ஆயுள், ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, சுகம், விருப்பங்கள் நிறைவேறுதல், துயரம் நீங்குதல் ஆகிய நற்பயன்கள் கிடைக்கும். அதிலும் நவராத்திரி நேரத்தில் தேவி பாகவதம் படிப்பது விசேஷம்.

ஞான சக்தியான சரஸ்வதி, க்ரியாசக்தியான லட்சுமி, இச்சா சக்தியான மகாகாளி   மூவரையும் வணங்கி நலம் பெறுவோம்.

அன்னை, அருள் வடிவானவள். நவராத்திரி நாளில் வழிபட்டு அன்னையின் அருள் பெறுவோம்!

                                                             வாழ்க வளமுடன்!
                                                                       --------------