ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

இன்ப மழை பெய்ய வேண்டும்!


கோடை காலத்தில் உயிரினம் வாழ நீர் அவசியம் வேண்டும்.
கோடையில் வெப்பம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்
 அமைத்து  தண்ணீர் கொடுத்து வருகிறார்கள்.

தண்ணீர்ப் பானைகள் வீட்டுத்திண்ணைகளில் வைக்கும்
பழக்கம் முன்பு இருந்தது. நடந்து செல்வோரின் தாகம் தணிக்க
வீட்டுத் திண்ணைகளில் மண்பானைகளில் தண்ணீர், மற்றும்
நீர்மோர் இருக்கும். இப்போது குடி தண்ணீர் கஷ்டத்தில் தண்ணீர்
 விலைக்கு வாங்கும் மக்கள், தண்ணீர் சேவை செய்வது கஷ்டமே!
 அப்படியும்  செய்து வரும் நல் உள்ளங்களும் உண்டு.

தண்ணீர் மூலம் வியாதிகள் பரவுவதைத் தடுக்கத் தண்ணீரைக்
காய்ச்சி குடிக்கவேண்டும் என்பதால் வெளியில் தண்ணீர்
குடிக்கவும் பயமாய் உள்ளது. இந்தக் கோடைகாலத்தில்
கோவில்களில் கொடியேறி, விழாக்கள் நடக்கும். அப்போது
திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்
வைப்பார்கள். சிலர் மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்,
கருவேப்பிலை, கொத்தமல்லி போட்ட  நீர்மோர் தருவார்கள்.

இப்போது  தண்ணீர் தண்ணீர் என்னும் நிலை ஏன் வந்தது?
என்ன காரணம்? மழை பொய்த்துப் போனதற்கு என்ன காரணம்
என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்தால் நீர்வளத்தை
மேம்படுத்தலாம்.

ஊர்களில் உள்ள ஊருணிகள், குளங்கள் , ஏரிகள் இவற்றை
சுத்தம் செய்யவே ண்டும்.மழை நீரை சேமிக்க அவற்றிற்கு
 நீர் வரும் பாதைகளைச் சரிசெய்யவேண்டும். நீர் வரும்
வழியில் வீடுகளைக் கட்டி நீர் வரத்தை தடுத்துக் கொண்டு
இருக்கும் தடைகளை அப்புறப்படுத்தி நீர்வரத்து வர ஒத்துழைக்கலாம்.வீட்டுக்குப்பைகள், கழிவுகளைக் குளத்தில்
விடுவதை நிறுத்தலாம்.

குளத்தில் ஊர்க் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நாளைடைவில்
அதை தூர்த்து விட்டு அதைக் காணாமல்அடிக்காமல் வைத்துக்கொள்ளவேண்டும்
(ஒரு படத்தில் வடிவேல் கிணத்தை காணோம் என்பார்)
அப்படி எத்தனை, குளங்கள் காணாமல் போய் விட்டது என்று கணக்கெடுத்தால் தெரியவரும்.

”எங்கள் பிளாக் ”என்ற வலைத்தளத்தில்  ஸ்ரீராம் அவர்கள்
வழங்கிய பாசிட்டிவ் செய்திகளில் நேற்று பகிர்ந்த விஷயம்
மனதைக் கவர்ந்தது.  நீர் இல்லாமல் மக்கள் படும் துன்பத்தை
ஒரு தனி மனிதர் எப்படிப் போக்கினார் என்று  குறிப்பிட்டு
இருந்தார்கள்

// வானம் பார்த்த பூமி,  நிலத்தடி நீர் குறைந்து போதல், விவசாயக்
கடனுக்கு வட்டி கட்டி மாளாதது, என்று குடும்பமே ஊரை விட்டு
மாறி, மற்றும் விவசாயிகளின் தற்கொலை என்று மகாராஷ்டிராவின்
 பல கிராமங்களில் இருந்த நிலையேதான் ஹைவாரே பஜார் என்ற கிராமத்திலும். அந்த அவலங்களைத் தனி நபராகத் தடுத்து நிறுத்தி
தன் அறிவின் மூலம், தன் உழைப்பின் மூலம் சாதித்திருக்கிறார்
போப்பட் ராவ் பவார்.

                    முதற்கட்டமாக மக்களின் குடிப் பழக்கத்தை நிறுத்தி,
 புகையிலை,     குட்கா, பான் பராக் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பதையும் நிறுத்த வைத்து, மக்கள் சக்தியின்
ஒருங்கிணைப்போடு கிராமம் முழுவதும் சிறுசிறு குளங்கள்
வெட்டி, மழைக்காலத்தில் பெய்யும் மழையைச்  சேமித்து,
 நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்து, (52 மண் அணைகள், 2
நீர்த் தொட்டிகள், 9 சின்ன வாய்க்கால்களை அரசாங்கப்
பணத்திலேயே கட்ட வைத்தார்) 1995 களில் 80-125 அடிகளில்
கிடைத்த தண்ணீரை, தற்சமயம் 15 அடி தோண்டினாலே
கிடைக்கச் செய்திருக்கிறார். //

இது போல் நம் தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றாக இருக்கும்.

தொலைக்காட்சியில் நேற்று கேட்ட செய்தி மனதை கனக்க
வைக்கிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டுக்காடுகளில் யானைகள்
 அதிகமாக இறக்கின்றனவாம். காட்டிலிருந்து யானைகள் கூட்டமாய் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் ஊருக்குள் வருகிறது .  தண்ணீருக்காகவும் ஊருக்குள் வரும் யானைகள் பூச்சிக்
கொல்லி அடித்த பயிர்களை சாப்பிடுவதால் அவை சீக்கிரம் இறந்து
விடுகின்றன என்கிறார்கள், வனவிலங்கு பாதுகாவலர்கள்.

யானையின் வழித்தடத்தில் சுற்றுலாவிடுதிகள், அமைப்பதால்
அவைஅவதிப்படுகின்றன, 32 யானைகள் இறந்து இருக்கின்றன, காட்டுஎருமைகளும் நிறைய இறந்து இருக்கின்றன.

வனவிலங்கு பாதுகாவலர் இதற்குக் காரணங்கள் சொல்லுகிறார்கள்:
சுற்றுலா வரும் பயணியர் போடும்  பாலீதீன் கவர்,குப்பைகளை சாப்பிடுவதாலும்  பூச்சிமருந்துகள் அடித்த பயிர் பச்சைகளைச்
சாப்பிடுவதாலும் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு இறக்கின்றன
என்கிறார்கள். ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு 250 லிட்டர்
தண்ணீர் வேண்டுமாம், காடுகளில் அதற்கு தென்னை ஓலைகள்,
தண்ணீர் தொட்டிகள் எல்லாம் அமைத்து இருக்கிறார்கள். அவை
 ஊருக்குள் வராமல் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரைக்
குடித்தும், மேலே ஊற்றியும் கொள்கிறது, அதுகளுக்கு வைத்த
உணவைச் சாப்பிட்டு செல்கிறது.

 (யானைக்கு வேர்வை சுரப்பிகள் குறைவாய் இருப்பதால்  வெப்பத்திலிருந்து  காத்துக் கொள்ள உடம்பின் மேல் தண்ணீரை வாரி இறைத்துக் கொள்கிறதாம்.)

இயற்கை விஞ்ஞானி  நம்மாழ்வார்  அவர்கள் ஒரு தொலைக்
காட்சியில் சொன்னார்: //தண்ணீர் உபயோகத்திற்கு  ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார்,   நம் தந்தை,
குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். //

வருங்காலத்தில் நிலைமைஎன்னவாகும்?

 மண்ணுக்கு மழைத்துளி, நமக்கு உயிர்த்துளி. பறவைகள் கூட மழை
எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வானிலை அறிக்கையை எதிர்பார்க்கிறதாம்

’எங்கள் பிளாக்’  ஆசிரியர்
குழுவில் உள்ள ஸ்ரீராம் அவர்கள்  இன்று பகிர்ந்து கொண்ட கற்பனைக் கவிதை பாருங்கள்.

//வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//

எப்படி இருக்கிறது  மயில் சொல்லும் கவிதை ? மழை பெய்து பறவைகளும்,
விலங்குகளும் ஆடட்டும்.

 நகரங்களில்   மோட்டார் வைத்துக் கார்ப்பரேஷன் குடிதண்ணீரை
சில குடியிருப்புகளில்  திருடிக் கொள்வதால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்க மாட்டேன் என்கிறது. தனியார் நிறுவனங்கள் தண்ணீரை மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து பாட்டில்களில் அடைத்து
விற்கிறார்கள். அதைத் தடுக்கவேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தார்கள் , மதுரையில்.

தண்ணீர் கஷ்டம் தீர, குளம் குட்டைகளைப் பராமரிப்பதுடன் நாம்
 இயற்கைக்கு மாறாய் நடக்காமல் இருந்தாலே மழை பெய்யும்.
மழையை மக்கள் ஒவ்வொரு காரணங்களால்  வேண்டாம் என்று
சொல்லக் கேட்கும் போது மழை தள்ளிப் போகிறது.

இயற்கையை போற்றுதும் என்பார்கள்.
இயற்கையானது ஓயாது தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.

மழைக் காலத்தில் மழை வேண்டும், வெயில் காலத்தில் வெயில்
வேண்டும். மழை இல்லை என்றால் உயிரினங்கள் வாழமுடியுமா?
வெயில் இல்லை என்றால் தாவரங்கள் உணவு தயார் செய்ய முடியுமா?
நாமும் தான் வெயில் காலத்தில் தானியங்களை காயவைத்து
எடுத்துக் கொள்கிறோம், வத்தல், வடகம் போட்டு மழைக்  காலத்தில் உபயோகப்படுத்த சேமித்து வைக்கிறோம். நாம் மட்டும் அல்ல சகலஜீவராசிகளும் கோடைக்காலத்தில் மழைக்காலத்திற்குத்
தேவையான  உணவை சேமிக்கும் அறிவு  பெற்று இருக்கிறது.

பாரதி வெம்மைகொடுக்கும் ஞாயிறைப் போற்றுகிறார்:

//நாம் வெம்மையை புகழ்கின்றோம்,வெம்மைத்தெய்வமே,
ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின்
ஊற்றே, ஒளி
மழையே, உயிர்க்கடலே!
மழையும் நின் மகள்; மண்ணும் நின் மகள்; காற்றும் கடலும்
கனலும் நின் மக்கள் ; வெளி, நின் காதலி; இடியும் மின்னலும்
நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன். நின்னைப் புகழ்கின்றோம்.//

பாரதி பராசக்தியின் செயல் தான்  கருணை  மழை   என்கிறார்.

//மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெலாம் இடையின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மாழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்!” என்று பாடும்மென் வாணியே.//

வாணி பாடும் பாட்டைக்கேட்டு , பராசக்தி நம் துயர் தீர்க்க,
கருணை மழை பெய்து அருள் செய்ய வேண்டும்.

தாயுமானவர் இறைவனை நினைந்து பாடும் போது,

//வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி
எனை வாழ்விப்பது உன்பரங் காண்,//

என்கிறார்.


எல்லோரும் நலமாய் வாழ இன்பமழையாய் இறங்கி வா இறைவா!

இன்று உலக சுகாதார தினம். ஊர் முழுவதும் சுத்தமாய் வைத்துக்
கொள்ள வேண்டும். இப்போது விடுமுறை வ்ரப்போகிறது
குடும்பத்துடன் இயற்கை சூழ்ந்த இடங்களை கண்டு களிக்க
சுற்றுலா போவோம் அப்படி போகும்   இடமெல்லாம் நாம்
 சுத்தமாய்  வைத்துக் கொண்டால்  போதும்.
”சொர்க்கம் என்பது நமக்கு  சுத்தம் உள்ள ஊருதான் “
விண்ணில் உள்ள சொர்க்கத்தை மண்ணில் காண சுத்தமாய் வைத்து இருப்போம் நம் ஊரை.

இறைவன் குடி இருக்கும் வீடு சுத்தமாய் இருக்க வேண்டும்
அல்லவா! விண்ணுக்கு ஒருமருந்து மண்ணுக்கு வர நாம்
எல்லோரும் ஒத்துழைப்போம்.

                                                        வாழ்க வளமுடன் !

                                                    --------------------------------


61 கருத்துகள்:


  1. "இன்ப மழை பெய்ய வேண்டும்!"

    மழை பெய்து பறவைகளும்,
    விலங்குகளும் ஆடட்டும்...!!!

    பதிலளிநீக்கு
  2. பிரச்சனை என்னவென்று அநேகமாக எல்லோருக்கும் தெரிகிறது. இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது. இன்னும் பல பொப்பட்ராவ் பவார்கள் தேவை.ஆதங்கப் பட்டே வாழப் பழகி விட்டோம் நாம். குறைந்தது இதைப் பற்றி சிந்திக்க வைக்கும் பதிவுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான, அவரவர் உணர வேண்டிய... செயல்படுத்த வேண்டிய கருத்துக்கள்... பாராட்டுக்கள்...

    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  4. ஆஹா! எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி விட்டீர்கள்!

    கோடையில் மழை பெய்தாலும், அதை 'கோடை மழை' என்றழைத்து, கோடையைத் தான் கொண்டாடுவோம் நாம்!

    பதிலளிநீக்கு
  5. //சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள ஊருதான் “
    விண்ணில் உள்ள சொர்க்கத்தை மண்ணில் காண சுத்தமாய் வைத்து இருப்போம் நம் ஊரை.//
    அருமையாய் சொன்னீர்கள் கோமதி. உலக சுகாதார தினத்திற்கு ஏற்ற பதிவு.
    செல்வ மழை பொழிந்து ஊரெல்லாம் செழிக்கட்டும்.
    வாழ்த்துக்கள்...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  6. தண்ணீர் பற்றிய மிக அழகான அலசல் கட்டுரையை வழங்கியுள்ளீர்கள்.

    //”சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள ஊருதான் “ விண்ணில் உள்ள சொர்க்கத்தை மண்ணில் காண சுத்தமாய் வைத்து இருப்போம் நம் ஊரை.

    இறைவன் குடி இருக்கும் வீடு சுத்தமாய் இருக்க வேண்டும்
    அல்லவா! விண்ணுக்கு ஒருமருந்து மண்ணுக்கு வர நாம் எல்லோரும் ஒத்துழைப்போம். //

    மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    //"இன்ப மழை பெய்ய வேண்டும்!"

    மழை பெய்து பறவைகளும்,
    விலங்குகளும் ஆடட்டும்...!!!//

    சுருக்கமாக வெகு அழகாகச் சொல்லி விட்டார்க்ள், அசரீரி போல அந்த தெய்வீகப் பதிவரும். அவர்கள் வாக்கு பலிக்கட்டும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் ந்ன்றிக்ள்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் கணவர் வரைந்துள்ள மழைப்படம் வெகு அருமையாக் உள்ளது.

    அதைப்பார்த்ததும் வெளியே நிஜமாகவே மழை பொழிவதுபோன்ற மகிழ்ச்சி மனதில் ஏற்பட்டது.

    வெளியே 107 டிகிரி திருச்சியில் வெயில் கொளுத்துகிறது. காவிரி வரண்டு போய் உள்ளது.

    ஏதோ ஏ.ஸி. ரூமில் இருந்து இதை இப்போது டைப்படிக்கிறேன். அதனால் வெப்பம் தெரியாமல் உள்ளது.

    இந்த ஜலக்கஷ்டம் எப்போது தான் தீருமோ, மிகவும் கவலையாகத் தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பகிர்வு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மழைபெய்ய நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான். குற்றங்களைச் சொல்லிச் சொல்லியே நாட்கள் கடக்கின்றன. அடுத்தவீடு எப்படி இருந்தால் நமக்கென்ன கவலை. நம்வீட்டு வாசல் சுத்தமா என்றுதான் போகிறது நகர வாழ்க்கை.
    நம்மாழ்வார் போன்றவர்கள் நடத்தும் பசுமைப் புரட்சி முகாம்களைக் கண்டுவந்தாலே போதும். எத்தனையோ மக்கள் திருந்துவார்கள்.

    அருமையான பதிவு கோமதி.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. மழை என்றதுமே மண் வாசத்தை தேடுகிறது மனது.. பாரதியின் வரிகளில் சிறப்பான பகிர்வுங்க பழைய நினைவுகளையும் இன்றைய சூழலையும் விளக்கிச்சொன்னீர்கள் .

    பதிலளிநீக்கு
  11. உங்க பதிவை படித்தவுடன் மனது எங்க ஆரம்பித்துவிட்டது கோடை மழைக்கு
    ”சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள ஊருதான் “
    விண்ணில் உள்ள சொர்க்கத்தை மண்ணில் காண சுத்தமாய் வைத்து இருப்போம் நம் ஊரை.// நல்ல சொன்னீங்க உணர வேண்டிய வரிகள்
    மிக நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  12. குறைந்த மக்கள்தொகைக் காலங்களில் நீர், மோர் வைத்தல் எளிதாக இருந்தது. இன்றுதான் மினரல் வாட்டர், கேன் வாட்டர் என்று பார்க்கிறோம். அன்று தெருவில் இருந்த குழாய்த் தண்ணீரைக் குடித்தோம். என்ன வியாதி வந்தது?

    கோவில் திருவிழா நீர்மோர் என்றாலே நாகையில் கோடைத் திருவிழாவில் குடித்த நீர்மோர், பானகம் நினைவுக்கு வருகிறது.

    மழை பெய்ய மரம் வேண்டும். இன்று நாம் காடழித்து வீடு செய்கிறோம். மணல் விற்றுப் பணம் பார்க்கிறோம். மழை எப்படிப் பொழியும்? ஆற்றில் நீர் எப்படி ஓடும்? நிலத்தடி நீர் எப்படிச் சேரும்? பிளாஸ்டிக் பேப்பர்கள் உபயோகித்துப் பொறுப்பின்றித் தெருவில் எறிந்து மழை நீர் மண்ணுக்குள் போகாமல் செய்கிறோம். போதாக்குறைக்கு வேலிகாத்தான், பார்த்தனீயம் போன்ற நிலத்தடி நீரைப் பாழாக்கும் செடிகள், மரங்கள் ஊரெங்கும்! யானைகள் சாப்பிடும் தாவரங்களைக் கூட வளர விடாமல் செய்வது இவ்வகைத் தாவரங்களே என்கிறது செய்தித்தாள் கட்டுரை.

    ஹைய்யா... நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசு ஸார் ஓவியம்....!

    பதிவில் 'எங்களை'க் கொண்டு வந்ததற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. நிறைய விஷயங்கள்.
    தண்ணீர் பிரச்சினை, குறிப்பாக தென் மாநிலங்களில், பயங்கரமாக வெடிக்கப் போவதென்னவோ மிகுந்த அச்சம் தரும் நிச்சய சாத்தியம். என்றைக்கு எப்போது என்பது தான் கேள்வி.

    உங்கள் பதிவுகளில் அடிக்கடி பாரதி பாடல்களைச் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எதிர்பார்க்கவும் வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. மக்களும் திருந்தனும் மழையும் பெய்யணும் அப்பத்தான் தண்ணீர்ப் பஞ்சம் தீரும்

    பதிலளிநீக்கு
  15. மனிதன் குடியிருக்கும் வீடு என்று உணர்ந்தால் ஒருவேளை நம் மனம் மாறி எல்லாவற்றையும் சுகாதாரமாக வைத்திருப்போமோ? 'இறைவன் தானே.. எல்லாம் அடுத்த பிறவியில் பார்த்துக்குவோம்' என்று இருந்து விடுகிறோமோ?

    பதிலளிநீக்கு
  16. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.

    சுருக்கமாக வெகு அழகாகச் சொல்லி விட்டார்க்ள், அசரீரி போல அந்த தெய்வீகப் பதிவரும். அவர்கள் வாக்கு பலிக்கட்டும்.//

    திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் உங்கள் வாக்கு பலிக்கட்டும் என்று சொல்லி விட்டார்.
    மழை பெய்து எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
    உங்கள் வரவுக்கு நன்றி.



    பதிலளிநீக்கு
  17. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் இன்னும் பல பொப்பட்ராவ் பவார்கள் தேவை தான் நாட்டுக்கு.

    நிறையபேர் இவர் போல் முன் வந்தால் நாடு நலம் பெறும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க திண்டுக்கல் தனபாலன்,வாழ்க வளமுடன்.
    உங்களுக்கு பதிவு பிடித்து இருந்தால் பிறருக்கு பகிரும் உங்கள் குணம் வாழ்க.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , மற்றவ்ர்களுடன் பகிர்தலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் கோடையில் மழை பெய்தால் கோடைமழை என்று கோடையை தான் கொண்டாடுவோம்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க ராஜி, வாழ்க வளமுடன். உங்கள் வாழ்த்துக்கு நன்றி. மழை பெய்ய வேண்டிய காலங்களில் பெய்தால் பயிர் பச்சை மற்றும் சகலஜீவராசிகளும் செழித்து வளர்ந்து செல்வ மழை நீங்கள் சொன்னது போல் பெய்யும் நிச்சயமாய் .
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராஜி.

    பதிலளிநீக்கு
  21. எங்கள் ப்ளாக் பதிவில் மயில் படம் மட்டும்தான் நான் எடுத்தது. கவிதை வரிகள் எழுதியவர் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார். வாழ்கவளமுடன்.

    //அசரீரி போல அந்த தெய்வீகப் பதிவரும். அவர்கள் வாக்கு பலிக்கட்டும்.//
    நல்லோர் வாக்கும் எப்போதும் பொய்ப்பது இல்லை.உங்கள் பாராட்டும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    என் கணவரின் ஓவியத்தை பாராட்டியமைக்கு நன்றி.
    மழை பொழிவதாய் நீங்கள் நினைத்து விட்டதால் நிச்சியம் ம்ழை பெய்யும்.
    திருச்சியில் வெயில் எப்போதும் கொஞ்சம் கடுமையாக தான் இருக்கும்.

    மழை நன்கு பெய்தால் நிலத்தடி நீர்பெருகி மக்களின் தண்ணீர் கஷ்டம் தீரும்.
    பிராத்திப்போம் மழை வேண்டி எல்லோரும் சேர்ந்து பிராத்தனை செய்யும் போது வருணபகவான் மனம் இரங்கி விடுவார்.
    உங்கள் வரவுக்கும், உற்சாகம் ஊட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.




    பதிலளிநீக்கு
  23. உலக சுகாதார தினத்தில் சிந்திக்க வைக்கிற சிறப்பான பதிவு. பெங்களூரில் இப்போதும் கோடை நேரத்தில் ஓரிரு இடங்களில் நீர்ப்பந்தல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். வனவிலங்குகள் இறந்து போவது வருத்தம் அளிக்கிறது. இயற்கையை மதிக்கக் கற்றாலே பாதிப் பிரச்சனை தீரும். நல்ல பதிவு.

    இன்பமழையில் நனைந்தபடிக் காகிதக் கப்பல் விடுகிற சிறுவனை அழகாகத் தீட்டியிருக்கிறார் அரசு சார்.

    பதிலளிநீக்கு
  24. மிகமிக அவசியமான ஆழமான நல்ல கருத்துப்பகிர்வு சகோதரி.

    நீரின்றி வாழாது உலகு. காற்றும் நீருமின்றிப்போனால் வாழ்வே போய்விடும்.

    எல்லோரும் சிந்தித்து செயல்படும்வேளை வந்துவிட்டது.

    காலத்துக்குகந்த நல்ல விடயம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி!

    பதிலளிநீக்கு
  25. அருமையான ஆக்கம் கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

    நீங்கள் சொல்வது சரிதான்.
    தங்கள் வீடு சுத்தமாய் இருக்க எல்லா நேரமும் தெருவில் குப்பையை கொட்டுகிறார்கள். காலை குப்பை எடுப்பவர் வருவார் குப்பை இருக்கா குப்பை இருக்கா? என்று கேட்பார் அப்படி அவர் வரும் போது கொட்டலாம், ஆனால் அவர்களுக்கு வசதிபட்ட நேரம் தான் கொட்டுவார்கள்.
    அதனால் தெரு எல்லா நேரமும் குப்பையாக காட்சி அளிக்கும், நாய், ஆடு, எல்லாம் சிதறி வைக்கும் குப்பையை பாலீதீன் கவர்கள் பறந்து நம் வீட்டு வாசலுக்கே வரும்.
    உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி அக்கா.



    பதிலளிநீக்கு
  28. வாங்க சசிகலா, வாழ்கவளமுடன்.

    உங்களை போல் தான் என் மனமும் மழை பெய்து மண்வாசனைக்கு ஆசை படுகிறது.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க பூவிழி, வாழ்கவளமுடன்.
    கோடைமழைக்கு மனது ஏங்க ஆரம்பித்து விட்டதா!
    மழை பெய்து நம் மனதை குளிரவைக்க வேண்டும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான் அந்தக் காலத்தில் மக்கள் தொகை குறைச்சலாய் இருந்ததால் நீர் மோர் கொடுக்க முடிந்தது.
    மினரல் வாட்டருக்கு தெருவோர அடிபம்பு எவ்வளவோ மேல்.
    மினரல் வாட்டர் கேன்களைப் பார்த்தால் தண்ணீர் குடிக்க தோன்றவில்லை.

    //மழை பெய்ய மரம் வேண்டும். இன்று நாம் காடழித்து வீடு செய்கிறோம். மணல் விற்றுப் பணம் பார்க்கிறோம். மழை எப்படிப் பொழியும்? ஆற்றில் நீர் எப்படி ஓடும்? நிலத்தடி நீர் எப்படிச் சேரும்? பிளாஸ்டிக் பேப்பர்கள் உபயோகித்துப் பொறுப்பின்றித் தெருவில் எறிந்து மழை நீர் மண்ணுக்குள் போகாமல் செய்கிறோம். போதாக்குறைக்கு வேலிகாத்தான், பார்த்தனீயம் போன்ற நிலத்தடி நீரைப் பாழாக்கும் செடிகள், மரங்கள் ஊரெங்கும்! யானைகள் சாப்பிடும் தாவரங்களைக் கூட வளர விடாமல் செய்வது இவ்வகைத் தாவரங்களே என்கிறது செய்தித்தாள் கட்டுரை.//

    நீங்கள் சொல்வது உண்மை. வீடுகளில் முன் பக்கம் இருந்து தோட்டம் வரை சிமெண்ட் நடை பாதை போட்டு மழை நீர் பூமிக்குள் வரவிடாமல் செய்கிறார்கள்.
    ஊர் முழுவதும் அடுக்கு மாடி குடியிருப்பு வந்து சுற்றுப்புறம் முழுவதும் சிமெண்ட் போட்டு விடுகிறார்கள்.
    குளம் குட்டைகளில் ஆகாச தாமரைகள் படர்ந்து தண்ணீரை உறிஞ்சுகின்றன.
    பூமிக்கு கொடுத்தால் தான் நமக்கு கிடைக்கும்.

    //
    ஹைய்யா... நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசு ஸார் ஓவியம்....!

    பதிவில் 'எங்களை'க் கொண்டு வந்ததற்கு நன்றிகள்.//
    ஹைய்யா! என்று சாரின் ஓவியத்தை கண்டு மகிழ்வது மனது மகிழ்ச்சி அளிக்கிறது. சாரிடம் சொன்னவுடன் அவர்களும் மகிழ்ந்தார்கள்.
    மழை படங்கள் ஏற்கனவே போட்டு விட்டாயிற்று வேறு படங்கள் இல்லை நேரம் இருக்கா ? வரைந்து தருகிறீர்களா என்று கேட்டவுடன் வரைந்து தந்தார்கள்.

    உங்களை கேட்காமல் உங்கள் பதிவிலிருந்து செய்திகளை இதற்கு பொருத்தமாய் இருந்ததால் போட்டு விட்டேன். கோபம் கொள்ளாமல் நன்றி சொன்னது மகிழ்ச்சி.
    கெளதமன் சார் படமும், உங்கள் கவிதையும் என்று கெளதமன் சார் வந்து சொல்லி இருக்கிறார்.

    உங்கள் கவிதையும் இந்த பதிவுக்கு மிக பொறுத்த்மாய் இருக்கிறது.
    உங்கள் வரவுக்கும்,விரிவான கருத்துக்கும் நன்றி.








    பதிலளிநீக்கு
  31. வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.

    நீங்கள் சொல்வது போல் தண்ணீர் கஷ்டம் தென்மாநிலங்களில் ஆரம்பித்து விட்டது.
    பெண்கள் காலிக்குடத்தோடு சாலை மறியல் செய்வது நாளும் தொடர்கதை ஆகி விட்டது.

    பாரதி பாடல்கள் சிறு வயதிலிருந்தே பிடிக்கும். அவார் சொல்லத விஷ்யம் இல்லை. பதிவுக்கு பொறுத்தமாய் உள்ளதை பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    பாரதி பாடல் புத்தகம் அடிக்கடி படித்து கிழித்து விட்டது, மூன்று நாட்களுக்கு முன் புது பாரதி கவிதை புத்தகம் வாங்கி வந்து அசத்தினார் என் கணவர். பாரதி கவிதை தான் இருக்கே என்று கேட்டால் அது கிழிந்து வருகிறது பொடி எழுத்தாய் இருக்கிறது இந்த புத்தகம் நீ படிக்க வசதியாக இருக்கும் என்று சொன்னார்கள்.

    //மனிதன் குடியிருக்கும் வீடு என்று உணர்ந்தால் ஒருவேளை நம் மனம் மாறி எல்லாவற்றையும் சுகாதாரமாக வைத்திருப்போமோ? 'இறைவன் தானே.. எல்லாம் அடுத்த பிறவியில் பார்த்துக்குவோம்' என்று இருந்து விடுகிறோமோ?//

    ஒ! நீங்கள் சொல்வது போல் வேறு இருக்கா!

    மனிதன் குடியிருக்கும் வீடு என்று நினைத்து சுகாதாரமாய் வைத்துக் கொள்ளட்டுமே! இறைவன் தன்னை தேடித் தேடி அலையட்டுமென்று மனிதனின் உள்ளத்தில் தான் ஒளிந்து இருக்கிறானோ!

    உங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டங்களுக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  32. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மை.
    மக்கள் மனம் மாறினால் மழை பெய்யும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வாங்க கெளதமன் , வாழ்க வளமுடன்.
    உங்கள் மயில் படம் அழகு, ஸ்ரீராம் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு
  34. வாங்க ராமல்க்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் இயற்கையை மதிக்கக் கற்றாலே பாதிப் பிரச்சனை தீரும் என்பது உண்மை.
    சாரின் ஓவியம் நன்றாக இருக்கிறதா? நன்றி. சிறு வயதில் மழைநீரில் கத்தி கப்பல் விட்ட நினைவு வந்து விட்டது போல்!
    நான் மழை படம் வேண்டும் என்றவுடன் வரைந்து தந்தார்கள்.
    உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வாங்க இளமதி வாழ்க வளமுடன்.
    //நீரின்றி வாழாது உலகு. காற்றும் நீருமின்றிப்போனால் வாழ்வே போய்விடும்.//

    நீங்கள் சொல்வது உண்மைதான் இளமதி. எல்லோரும் சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது தான்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. எங்கள் பிளாக்கிலிருந்து வருகிறேன். அதில் 'பறவைகளுக்கு நீர் வைக்கலாம் என்ற பதிவில் நீங்கள் முன்பு போட்டிருந்த - காலையில் உங்கள் வீட்டிற்கு வரும் புறாக்களைப் பற்றிய செய்தியை சொல்லிவிட்டு இங்கு வந்து பார்த்தால் நீங்கள் அவர்களிடமிருந்து ஒரு பாசிடிவ் செய்தியைப் போட்டிருக்கிறீர்கள்.

    மிகச் சிறந்த, படிக்க வேண்டிய, படித்துவிட்டு நம்மால் இயற்கையைக் காக்க என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டும் என்று உணரவைத்த பதிவு.

    தண்ணீரைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

    அரசு ஸாரின் ஓவியத்துடன் சிறப்பான பதிவுக்குப் பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  40. வாங்க ரஞ்சனி, வாழ்கவளமுடன்.
    எங்கள் பிளாக்கில் என் ’மெல்லவிடியும் காலைபொழுது’ பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    அவர்கள் பகிர்ந்து கொண்ட பாசிடிவ் செய்தி என் பதிவுக்கு பொருத்தமாய் இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்.பொப்பட்ராவ் பவார் அவர்கள் போல் நம் தமிழ் நாட்டிலும் நிறைய பேர் இருந்தால் தண்ணீர் கஷ்டம் இருக்காது.
    தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதியும், கோடை மழை பெய்யாமல் இருப்பதும் தான் இந்தபதிவுக்கு காரணம்.
    //தண்ணீரைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. //

    நீங்கள் சொல்வது போல் தண்ணீரை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமைதான்.

    பதிவையும், என் கணவரின் ஓவியத்தையும் பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. மிக மிக பிந்தி வருகிறேன் குறை எண்ண வேண்டாம்.நீரின் அருமை பெருமைகள் கூறி ஓரு நீண்ட பதிவு இட்டுள்ளீர்கள். நாட்டு நிலைமை புரிகிறது.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  42. வாங்க வேதா. இலங்காதிலகம் வாழ்கவளமுடன்.

    உங்கள் வரவு தான் முக்கியம், முந்தி பிந்தி என்பது எல்லாம் குறையில்லை.
    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள். நன்றி.

    மழை இல்லாமல் தண்ணீர் தட்டுபாடு வந்து இருக்கிறது, அந்த ஆதங்கத்தில் எழுந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  43. இன்ப மழை பெய்ய வேண்டும்.இதுதான் நாம் பிரார்த்திப்பது.தண்ணீர் பற்றாக்குறை நேரத்திலும்கூட குழாய்நீரை வீணடிக்கும் சிலரை என்ன சொல்வது அம்மா?

    பதிலளிநீக்கு
  44. இன்ப மழை பெய்ய வேண்டும் என்கிற கனவு எல்லோரிலும் இருக்கிறதுதான்.

    பதிலளிநீக்கு
  45. வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
    நலமா?

    எல்லோரும் கூட்டு பிறாத்தனை செய்தால் இன்பமழை பெய்யும் நிச்சயமாய்.

    தண்ணீர் பற்றாக்குறை நேரத்தில் மொட்டைமாடியில் தண்ணீரை கொட்டி கீழ் தளத்தை குளிர வைப்பவர்களைப் பார்த்தால் எனக்கும் மனது கஷ்டப்படுகிறது.
    மின்சார சிக்கனம் வேண்டும் என்பது போல் தண்ணீர் சிக்கனமும் வேண்டும்.

    ’தண்ணீர் சிக்கனம் வேண்டும் இக்கணம் ’ படித்து இருக்கிறீர்களா?

    http://mathysblog.blogspot.com/2010/03/blog-post_14.html//
    படித்து பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. வாங்க விமலன், வாழ்கவளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் இன்ப மழைவேண்டும் என்கிற கனவு எல்லோருக்கும் இருக்கும் தான்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. நல்ல விழிப்பு பகிர்வு.

    "தண்ணீர் கஷ்டம் தீர, குளம் குட்டைகளைப் பராமரிப்பதுடன் நாம்
    இயற்கைக்கு மாறாய் நடக்காமல் இருந்தாலே போதும்" இருப்பதையும் அழித்து விட்டு முழிக்கின்றோம்.

    விமானம் பறக்க பறவைகள் இடைஞ்சல் படுத்துவதால் நீர்நிலைகளை மூடிவிடலாமா பறவைகள் ஒதுங்கிவிடும் என யோசிக்கின்றோம்.

    இயற்கை என்ன செய்யும்.....

    பதிலளிநீக்கு
  48. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.

    //இருப்பதையும் அழித்து விட்டு முழிக்கின்றோம்.//

    நீங்கள் சொல்வது உண்மைதான்.

    //விமானம் பறக்க பறவைகள் இடைஞ்சல் படுத்துவதால் நீர்நிலைகளை மூடிவிடலாமா பறவைகள் ஒதுங்கிவிடும் என யோசிக்கின்றோம்.

    இயற்கை என்ன செய்யும்.....//

    நீங்கள் சொல்வது சரி விஞ்ஞானம் வளர வளர நல்லதும், கெட்டதும் இணைந்தே இருக்கிறது.
    இயற்கையை மாற்றாமல் மக்கள் வாழக்கற்றுக் கொண்டால் இயற்கை நம்மை வாழ்த்தி நமக்கு எல்லா வளங்களையும், நலங்களையும் தரும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. உலக சுகாதாரம் மற்றும் நீர்வளத்தின் இன்றியமையாமை பற்றிய விழிப்புணர்வூட்டும் பதிவுக்குப் பாராட்டுகள் மேடம்.

    நீர் குறித்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் கருத்து, இன்றைய மோசமான நிலைமையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சுள்ளென்று சுட்டுகிறது.

    ஒவ்வொருவரும் மனம் வைத்தால் முடியாததும் முடியுமே...மனம் வைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  50. வாங்க கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.


    //ஒவ்வொருவரும் மனம் வைத்தால் முடியாததும் முடியுமே...மனம் வைக்க வேண்டும். அதுதான் முக்கியம்.//

    நீங்கள் சொல்வது உண்மை எல்லோரும் மனம் வைத்தால் நிச்சயம் மழை பொழியவைக்கலாம், நிலத்தடி நீரை அதிகப்படுத்தலாம், நீர் பற்றாக்குறை தீர்ந்து வருங்காலத்திலும் நலமாய் வாழலாம்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  51. இனிய சித்திரை நன்னாள் வாழ்த்துக்கள் அம்மா.உங்கள் வாக்கு போல் இன்பமழை பெய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  52. நீர்வளம் பற்றிய அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  53. வாங்க முருகானந்தன் சார், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  54. //மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்,
    கருவேப்பிலை, கொத்தமல்லி போட்ட நீர்மோர் //

    படிக்கும்போதே நாவில் நீர்.......

    மழை - இப்போதைய அத்தியாவசிய தேவை....

    தண்ணீர் இருக்கும் குளம் குட்டைகளை வீடுகளாகக் கட்டி, ஆற்று மணலைத் திருடி, இயறைக்குக்கு எதிராய் எல்லாய் வேலைகளையும் செய்து கொண்டே இருக்கிறோம்..... எங்கே செல்கிறோம்.

    தண்ணீருக்காகவே உலகப் போர் வந்தாலும் சந்தேகமில்லை.

    சிறப்பான கட்டுரைம்மா...

    பதிலளிநீக்கு
  55. வாங்க வெங்கட், வாழ்கவளமுடன்.
    உங்கள் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  56. ஆஹா ஸ்ரீராம் ஆடப்போகிறாராமே:)... ஹா ஹா ஹா.. கவிதையும் அழகு.. மாமாவின் ஓவியமும் அழகு .

    பதிலளிநீக்கு
  57. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
    மயிலாக நான் மாற வேண்டும் என்ற பாடல் உண்டு.
    கெளதமன் சார் போட்ட மயில் படத்திற்கு ஸ்ரீராம் எழுதிய கவிதை.
    அவரே மயிலாக ஆட போவதை உங்கள் கருத்து மூலம் அறிந்தேன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா பின்னூட்டம் மட்டும் மெயில் பெட்டிக்கு வந்தபோது குழம்பினேன். இப்போது தெளிவுறுகிறேன். ஆனால் நான் ஆடுவதாகச் சொல்லவில்லை. இப்போதெல்லாம் மயில் கூட வானிலை அறிக்கை கேட்டுதான் மழை வருவதை அறிகிறது என்று சொல்ல வந்திருக்கிறேன். அது ஆடுவதாகச் சொல்வதாகவே எழுதி இருக்கிறேன்! மறுபடியும் ஸார் ஓவியம் கண்டு ரசித்தேன். அங்கும், அப்போதும் மழை, மழைநீர் சேகரிப்புப் பற்றியெல்லாம் பொங்கியிருக்கிறேன்!

      நீக்கு