சுற்றுசூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுசூழல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

இன்ப மழை பெய்ய வேண்டும்!


கோடை காலத்தில் உயிரினம் வாழ நீர் அவசியம் வேண்டும்.
கோடையில் வெப்பம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல்
 அமைத்து  தண்ணீர் கொடுத்து வருகிறார்கள்.

தண்ணீர்ப் பானைகள் வீட்டுத்திண்ணைகளில் வைக்கும்
பழக்கம் முன்பு இருந்தது. நடந்து செல்வோரின் தாகம் தணிக்க
வீட்டுத் திண்ணைகளில் மண்பானைகளில் தண்ணீர், மற்றும்
நீர்மோர் இருக்கும். இப்போது குடி தண்ணீர் கஷ்டத்தில் தண்ணீர்
 விலைக்கு வாங்கும் மக்கள், தண்ணீர் சேவை செய்வது கஷ்டமே!
 அப்படியும்  செய்து வரும் நல் உள்ளங்களும் உண்டு.

தண்ணீர் மூலம் வியாதிகள் பரவுவதைத் தடுக்கத் தண்ணீரைக்
காய்ச்சி குடிக்கவேண்டும் என்பதால் வெளியில் தண்ணீர்
குடிக்கவும் பயமாய் உள்ளது. இந்தக் கோடைகாலத்தில்
கோவில்களில் கொடியேறி, விழாக்கள் நடக்கும். அப்போது
திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தண்ணீர்ப் பந்தல்
வைப்பார்கள். சிலர் மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய்,
கருவேப்பிலை, கொத்தமல்லி போட்ட  நீர்மோர் தருவார்கள்.

இப்போது  தண்ணீர் தண்ணீர் என்னும் நிலை ஏன் வந்தது?
என்ன காரணம்? மழை பொய்த்துப் போனதற்கு என்ன காரணம்
என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்தால் நீர்வளத்தை
மேம்படுத்தலாம்.

ஊர்களில் உள்ள ஊருணிகள், குளங்கள் , ஏரிகள் இவற்றை
சுத்தம் செய்யவே ண்டும்.மழை நீரை சேமிக்க அவற்றிற்கு
 நீர் வரும் பாதைகளைச் சரிசெய்யவேண்டும். நீர் வரும்
வழியில் வீடுகளைக் கட்டி நீர் வரத்தை தடுத்துக் கொண்டு
இருக்கும் தடைகளை அப்புறப்படுத்தி நீர்வரத்து வர ஒத்துழைக்கலாம்.வீட்டுக்குப்பைகள், கழிவுகளைக் குளத்தில்
விடுவதை நிறுத்தலாம்.

குளத்தில் ஊர்க் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நாளைடைவில்
அதை தூர்த்து விட்டு அதைக் காணாமல்அடிக்காமல் வைத்துக்கொள்ளவேண்டும்
(ஒரு படத்தில் வடிவேல் கிணத்தை காணோம் என்பார்)
அப்படி எத்தனை, குளங்கள் காணாமல் போய் விட்டது என்று கணக்கெடுத்தால் தெரியவரும்.

”எங்கள் பிளாக் ”என்ற வலைத்தளத்தில்  ஸ்ரீராம் அவர்கள்
வழங்கிய பாசிட்டிவ் செய்திகளில் நேற்று பகிர்ந்த விஷயம்
மனதைக் கவர்ந்தது.  நீர் இல்லாமல் மக்கள் படும் துன்பத்தை
ஒரு தனி மனிதர் எப்படிப் போக்கினார் என்று  குறிப்பிட்டு
இருந்தார்கள்

// வானம் பார்த்த பூமி,  நிலத்தடி நீர் குறைந்து போதல், விவசாயக்
கடனுக்கு வட்டி கட்டி மாளாதது, என்று குடும்பமே ஊரை விட்டு
மாறி, மற்றும் விவசாயிகளின் தற்கொலை என்று மகாராஷ்டிராவின்
 பல கிராமங்களில் இருந்த நிலையேதான் ஹைவாரே பஜார் என்ற கிராமத்திலும். அந்த அவலங்களைத் தனி நபராகத் தடுத்து நிறுத்தி
தன் அறிவின் மூலம், தன் உழைப்பின் மூலம் சாதித்திருக்கிறார்
போப்பட் ராவ் பவார்.

                    முதற்கட்டமாக மக்களின் குடிப் பழக்கத்தை நிறுத்தி,
 புகையிலை,     குட்கா, பான் பராக் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பதையும் நிறுத்த வைத்து, மக்கள் சக்தியின்
ஒருங்கிணைப்போடு கிராமம் முழுவதும் சிறுசிறு குளங்கள்
வெட்டி, மழைக்காலத்தில் பெய்யும் மழையைச்  சேமித்து,
 நிலத்தடி நீர் மட்டம் உயரச் செய்து, (52 மண் அணைகள், 2
நீர்த் தொட்டிகள், 9 சின்ன வாய்க்கால்களை அரசாங்கப்
பணத்திலேயே கட்ட வைத்தார்) 1995 களில் 80-125 அடிகளில்
கிடைத்த தண்ணீரை, தற்சமயம் 15 அடி தோண்டினாலே
கிடைக்கச் செய்திருக்கிறார். //

இது போல் நம் தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றாக இருக்கும்.

தொலைக்காட்சியில் நேற்று கேட்ட செய்தி மனதை கனக்க
வைக்கிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டுக்காடுகளில் யானைகள்
 அதிகமாக இறக்கின்றனவாம். காட்டிலிருந்து யானைகள் கூட்டமாய் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் ஊருக்குள் வருகிறது .  தண்ணீருக்காகவும் ஊருக்குள் வரும் யானைகள் பூச்சிக்
கொல்லி அடித்த பயிர்களை சாப்பிடுவதால் அவை சீக்கிரம் இறந்து
விடுகின்றன என்கிறார்கள், வனவிலங்கு பாதுகாவலர்கள்.

யானையின் வழித்தடத்தில் சுற்றுலாவிடுதிகள், அமைப்பதால்
அவைஅவதிப்படுகின்றன, 32 யானைகள் இறந்து இருக்கின்றன, காட்டுஎருமைகளும் நிறைய இறந்து இருக்கின்றன.

வனவிலங்கு பாதுகாவலர் இதற்குக் காரணங்கள் சொல்லுகிறார்கள்:
சுற்றுலா வரும் பயணியர் போடும்  பாலீதீன் கவர்,குப்பைகளை சாப்பிடுவதாலும்  பூச்சிமருந்துகள் அடித்த பயிர் பச்சைகளைச்
சாப்பிடுவதாலும் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டு இறக்கின்றன
என்கிறார்கள். ஒரு யானைக்கு ஒரு நாளைக்கு 250 லிட்டர்
தண்ணீர் வேண்டுமாம், காடுகளில் அதற்கு தென்னை ஓலைகள்,
தண்ணீர் தொட்டிகள் எல்லாம் அமைத்து இருக்கிறார்கள். அவை
 ஊருக்குள் வராமல் தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரைக்
குடித்தும், மேலே ஊற்றியும் கொள்கிறது, அதுகளுக்கு வைத்த
உணவைச் சாப்பிட்டு செல்கிறது.

 (யானைக்கு வேர்வை சுரப்பிகள் குறைவாய் இருப்பதால்  வெப்பத்திலிருந்து  காத்துக் கொள்ள உடம்பின் மேல் தண்ணீரை வாரி இறைத்துக் கொள்கிறதாம்.)

இயற்கை விஞ்ஞானி  நம்மாழ்வார்  அவர்கள் ஒரு தொலைக்
காட்சியில் சொன்னார்: //தண்ணீர் உபயோகத்திற்கு  ,நம் தந்தைக்கு அவருடைய அப்பா குளம், ஏரியைக் காட்டினார்,   நம் தந்தை,
குழந்தைகளுக்கு கிணற்றைக் காட்டினார், நாம் நம் குழந்தை
களுக்கு பைப்பைக் காட்டினோம்., நம் குழந்தைகள் அவர்களின் குழந்தைகளுக்குப் பாட்டிலைக் காட்டுகிறார்கள். //

வருங்காலத்தில் நிலைமைஎன்னவாகும்?

 மண்ணுக்கு மழைத்துளி, நமக்கு உயிர்த்துளி. பறவைகள் கூட மழை
எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள வானிலை அறிக்கையை எதிர்பார்க்கிறதாம்

’எங்கள் பிளாக்’  ஆசிரியர்
குழுவில் உள்ள ஸ்ரீராம் அவர்கள்  இன்று பகிர்ந்து கொண்ட கற்பனைக் கவிதை பாருங்கள்.

//வானிலை அறிக்கையைக்
கொஞ்சம்
சத்தமாக வையுங்கள்
ரமணன் சொல்கேட்டு
மழை வரும் நாள்
அறிந்து
ஆடுகிறேன்..//

எப்படி இருக்கிறது  மயில் சொல்லும் கவிதை ? மழை பெய்து பறவைகளும்,
விலங்குகளும் ஆடட்டும்.

 நகரங்களில்   மோட்டார் வைத்துக் கார்ப்பரேஷன் குடிதண்ணீரை
சில குடியிருப்புகளில்  திருடிக் கொள்வதால் மற்றவர்களுக்கு தண்ணீர் கிடைக்க மாட்டேன் என்கிறது. தனியார் நிறுவனங்கள் தண்ணீரை மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து பாட்டில்களில் அடைத்து
விற்கிறார்கள். அதைத் தடுக்கவேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தார்கள் , மதுரையில்.

தண்ணீர் கஷ்டம் தீர, குளம் குட்டைகளைப் பராமரிப்பதுடன் நாம்
 இயற்கைக்கு மாறாய் நடக்காமல் இருந்தாலே மழை பெய்யும்.
மழையை மக்கள் ஒவ்வொரு காரணங்களால்  வேண்டாம் என்று
சொல்லக் கேட்கும் போது மழை தள்ளிப் போகிறது.

இயற்கையை போற்றுதும் என்பார்கள்.
இயற்கையானது ஓயாது தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.

மழைக் காலத்தில் மழை வேண்டும், வெயில் காலத்தில் வெயில்
வேண்டும். மழை இல்லை என்றால் உயிரினங்கள் வாழமுடியுமா?
வெயில் இல்லை என்றால் தாவரங்கள் உணவு தயார் செய்ய முடியுமா?
நாமும் தான் வெயில் காலத்தில் தானியங்களை காயவைத்து
எடுத்துக் கொள்கிறோம், வத்தல், வடகம் போட்டு மழைக்  காலத்தில் உபயோகப்படுத்த சேமித்து வைக்கிறோம். நாம் மட்டும் அல்ல சகலஜீவராசிகளும் கோடைக்காலத்தில் மழைக்காலத்திற்குத்
தேவையான  உணவை சேமிக்கும் அறிவு  பெற்று இருக்கிறது.

பாரதி வெம்மைகொடுக்கும் ஞாயிறைப் போற்றுகிறார்:

//நாம் வெம்மையை புகழ்கின்றோம்,வெம்மைத்தெய்வமே,
ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய
உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின்
ஊற்றே, ஒளி
மழையே, உயிர்க்கடலே!
மழையும் நின் மகள்; மண்ணும் நின் மகள்; காற்றும் கடலும்
கனலும் நின் மக்கள் ; வெளி, நின் காதலி; இடியும் மின்னலும்
நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன். நின்னைப் புகழ்கின்றோம்.//

பாரதி பராசக்தியின் செயல் தான்  கருணை  மழை   என்கிறார்.

//மழை பொழிந்திடும் வண்ணத்தை கண்டு நான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெலாம் இடையின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மாழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்!” என்று பாடும்மென் வாணியே.//

வாணி பாடும் பாட்டைக்கேட்டு , பராசக்தி நம் துயர் தீர்க்க,
கருணை மழை பெய்து அருள் செய்ய வேண்டும்.

தாயுமானவர் இறைவனை நினைந்து பாடும் போது,

//வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி
எனை வாழ்விப்பது உன்பரங் காண்,//

என்கிறார்.


எல்லோரும் நலமாய் வாழ இன்பமழையாய் இறங்கி வா இறைவா!

இன்று உலக சுகாதார தினம். ஊர் முழுவதும் சுத்தமாய் வைத்துக்
கொள்ள வேண்டும். இப்போது விடுமுறை வ்ரப்போகிறது
குடும்பத்துடன் இயற்கை சூழ்ந்த இடங்களை கண்டு களிக்க
சுற்றுலா போவோம் அப்படி போகும்   இடமெல்லாம் நாம்
 சுத்தமாய்  வைத்துக் கொண்டால்  போதும்.
”சொர்க்கம் என்பது நமக்கு  சுத்தம் உள்ள ஊருதான் “
விண்ணில் உள்ள சொர்க்கத்தை மண்ணில் காண சுத்தமாய் வைத்து இருப்போம் நம் ஊரை.

இறைவன் குடி இருக்கும் வீடு சுத்தமாய் இருக்க வேண்டும்
அல்லவா! விண்ணுக்கு ஒருமருந்து மண்ணுக்கு வர நாம்
எல்லோரும் ஒத்துழைப்போம்.

                                                        வாழ்க வளமுடன் !

                                                    --------------------------------