திங்கள், 7 செப்டம்பர், 2009

குருந்த மலை முருகன்

















குழந்தை வேலாயுதசாமி

மேட்டுப்பாளையம் செல்லும் பாதையில்,கோவை மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான காரமடையிலிருந்து 5கிலோ மீட்டர் தூரத்தில் அத்திகடவு செல்லும் பாதையில் மரங்கள் நிறைந்த பகுதியில் இந்த குருந்தமலை உள்ளது.


நான் சிறுமியாக இருக்கும் போது போனது. ஒவ்வொரு முறை கோவை போகும் போதும் என் கணவரிடம் குருந்தமலை முருகன் கோவில் போகவேண்டும் என்று சொல்வேன். வேறு எந்த எந்தக் கோவிலோ போவோம், இந்த முருகன் கோவில் மட்டும் போக முடியவில்லை. என் மகள் விடுமுறைக்கு வந்தபோது கோவையில் ஆச்சி வீட்டுக்குப் போய்விட்டு பெரியப்பாவீடு, சித்தப்பாவீடு, மற்றும் எங்கு போவது என்று முடிவு செய்த போது, நான் மறுபடியும் குருந்தமலையைத் தேர்வு செய்தேன். என் மகளிடமும் பேத்தியிடமும் குமரன் இடம் பற்றி நிறைய வர்ணித்து என் கட்சிக்கு வலு சேர்த்து டாக்சி வைத்துக் கொண்டு போனோம்.

‘ சின்ன வயதில் நான் (கோவையில் படிக்கும் போது) சின்மயா மிஷன் நடத்திய பாலவிஹாரில் ஞாயிறு தோறும் வாரவழிபாடு நடக்கும். அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒருநாள், பஸ்ஸில், இந்த மலைக்கு வந்தோம். முருகன் மலைக்கு எதிரில் அனுமன் இருப்பார். மலையில் அனுமனைச் சுற்றி வரலாம் அங்கு தான் நாங்கள் எல்லாம் பஜனை செய்தோம் . கொண்டு போன உணவை அங்கு வைத்து சாப்பிட்டோம்.’ இப்படி எல்லாம் குழந்தைகளிடம் சொன்னேன். முருகன் மலையில் கொஞ்ச படி தான்(125 )உண்டு. மேலே இருந்து பார்த்தால் வயல்களும் மரங்களும் காற்றும் நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களைஅழைத்து சென்றேன்.

டாக்ஸியை விட்டு இறங்கியதும் ஒரு சிறுமியின் குதுகலத்துடன் அனுமன் மலையை நோக்கிப் போனேன் ,அங்கு அனுமனைச் சுற்றி மதில் சுவர் எழுப்பிவிட்டார்கள். முருகன் கோவிலும் திருப்பணி நடந்து கொண்டு இருந்தது. மலை மேலும் புதிதாகக் கட்டடங்கள் இப்போது வந்து விட்டன.மலையின் இயற்கை அழகை அவை ஓரளவு கெடுத்துவிட்டன.

தலவரலாறு
-----------


சுமார் ஏழு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகக் குருந்தமலை குழந்தை
வேலாயுதசாமி கோவில் கருதப்படுகிறது. சிறிய குன்று தான். கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஐநூற்றாம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் மிளகு, கிராம்பு போன்ற வாசனைத் திரவியங்களை சேர நாட்டிலிருந்து வாங்கி அட்டப்பாடி, குருந்தமலை சத்தியமங்கலம் போன்ற ஊர்களின் வழியே மைசூர் சென்று வணிகம் செய்தனர்.ஒரு முறை பொதி மாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வ்ந்தபோது, இந்த குருந்தமலையடிவாரத்தில் தங்கியிருந்தனர். ஒரு சிறுவன் இந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்க அவர்கள் விளையாட்டாக தவிட்டு மூட்டைகள் என்றார்கள்.மறு நாள் மூட்டைகள் தவிடாக மாறி இருப்பதை அறிந்து இரவு வந்தது குமரன் என உணர்ந்து அந்த குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டமுடிவு செய்தனர். மீண்டும் அவர்கள் தவிட்டு மூட்டையை மிளகு மூட்டையாக மாற்றினான் சித்தாடும் செல்வகுமரன்.

ஐந்து நிலை கோபுரத்தை வணங்கி உள்ளே போனால் ராஜகம்பீர விநாயகர்.
18வது படியில் கருப்பண்ணசாமி அதற்கு மேலே வடக்கு நோக்கி இடும்பன். காசிவிஸ்வநாதர் கோவிலும் கருங்கல்லினாலான தீபஸ்தம்பமும் உள்ளன. இங்கு நாகதீர்த்தம், மயில்தீர்த்தம் என்ற சுனைகள் பாசி பிடித்துப்போய் குப்பைகூளங்களால் நிறைந்து உள்ளது.படிக்கட்டுக்கு கீழ் செங்குத்தாக உள்ள பாறையில் நாகபந்த சிலை வடிக்கப் ப்ட்டுள்ளது. இரண்டு நாகங்கள் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து ஒர் அழகியகோலத்தின் உருவில் காட்சி தருகின்றன.

காசிவிஸ்வநாதரை அடுத்து சூரியன் பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கங்கள்,
வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக கல்யாண சுப்ரமணியர் சன்னதிகள், கிழக்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கிய ஆதிமூலவர் சன்னதி உள்ளது. கிழக்குப் பக்கம் பாறையில் இயற்கையாக ஏற்பட்ட சண்முகச்சுனை, ஆறுமுகச்சுனை உள்ளன. இதுவும் பாசி பிடித்து உள்ளது. திருப்பணி நடப்பதால் சுனைகளை சுத்தம் செய்வார்கள் என நம்புகிறேன். கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் குழந்தை வேலாயுதனாக காட்சி தருகிறார்.

அகத்திய முனிவரும் , ஆதிசேஷனும், சூரியனும் குமரனை வழிப்பட்டதாகத்
தலவரலாறு கூறுகிறது.மார்ச் மாதம் 21,22,23 தேதிகளில் மாலை 5.30 முதல் 6.30வரை கதிரவன் தன் ஒளியால் வழிபடுகிறான்.

கொடிமரத்தின் பக்கத்தில் சுற்றுசுவர் அருகிலிருந்துப் பார்த்தால் இயற்கையை
ரசிக்கலாம்.என் மகள் அடுத்த தடவை வரும் போது இந்த வயல்வெளியெல்லாம் கட்டடமாக மாறிவிடும் இல்லையாம்மா என்றாள். என் பேரனும் ,பேத்தியும் பாறைகளில் தவம் செய்வது போல் அமர்ந்து புகைப்ப்டம் எடுத்துக் கொண்டார்கள். நான் பாறையில் குதுகலமாய் ஏறி இறங்குவதைப் பார்த்து அம்மாவிற்கு தன் பள்ளிப் பருவம் நினைவு வந்து விட்டது என்று என் கணவர் மகளிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டார்.


மலைக்குக் கிழக்கில் இன்னொருமலையில் வள்ளி குகை உள்ளது . முன்பு வந்தபோது பார்த்திருக்கிறேன். இப்போது அமாவாசையன்று மட்டும் தான் மக்கள் போவார்கள் என்று சொன்னதால் நாங்கள் அங்கு செல்லவில்லை. அங்குள்ள சுனையில் எப்போதும் நீர் இருக்குமாம். ஆண்டிற்கொருமுறை பழனிக்கு இங்கிருந்து அதை பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்வதற்கு எடுத்துச் செல்வார்களாம்.

குழந்தைவேலாயுதசாமியின் அலங்காரத்தைப் பார்க்கும்போது பழனிமுருகனைப் பார்ப்பது போலவே உள்ளது.

தூயகாற்று, அமைதி, ஆனந்தம் ஆகிய்வற்றை அங்கு பெறலாம்.
மிகுந்த மனநிறைவோடு வீடு திரும்பினோம்.






7 கருத்துகள்:

  1. இயற்கை அழகு சூழ்ந்த இடம்.. முருகனும் அழகு முருகன்..

    பதிலளிநீக்கு
  2. முத்துலெட்சுமி,
    முருகன் என்றாலே அழகு,
    அழகு என்றாலே முருகன்.

    ரசிப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அழகான நினைவுப் பகிர்வுகள்!

    மிக்க நன்றி அம்மா

    பதிலளிநீக்கு
  4. தொடர்ந்து என் பதிவைப் படித்து ஆதரவு
    தெரிவித்து வரும் சென்ஷிக்கு நன்றி.

    ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. //மலைக்குக் கிழக்கில் இன்னொருமலையில் வள்ளி குகை உள்ளது//

    நான் இன்னும் இந்தக்கோவிலுக்கு போனதே இல்லை கோமதி

    பதிலளிநீக்கு
  6. //நான் இன்னும் இந்த கோவிலுக்கு
    போனதே இல்லை//

    போய் பாருங்கள் சின்ன அம்மிணி,
    மிக நன்றாக இருக்கும்.

    என் பதிவுக்கு வந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக்க மகிழ்ச்சி. நாங்களும் டிசம்பர் 7 தேதி சென்று வந்தோம் நானும் உங்களைப் போன்று blog எழுதியுள்ளேன். உங்கள் பதிவும் சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு