மலரும் நினைவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரும் நினைவுகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 ஜூலை, 2017

காட்சிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் !

ஊமத்தம்பூ- மொட்டும் மலரும்

ரேடியோ பூ என்றும் சொல்லுவோம். கிராமபோன் ஸ்பீக்கர் போல் இருப்பதால் இந்த பேர்.


வேம்பும், அரசமரமும் -நாகர்கள் மரத்தடியில் -மரத்தின் உள் பகுதியை உற்றுப் பார்த்தால் ஐந்து தலை நாகம் கண், மூக்குடன் இருப்பது போல் இருக்கிறது. தெரிகிறதா என்று பாருங்கள்.
காய்ந்த மொட்டை மரத்தைத் தழுவிப் படர்ந்து  மொட்டை மரத்திற்குப் பசுமையைக் கொடுத்து மயில்களை வரவேற்று இருக்கிறது பசுமைக் கொடி.

புல் புல் பறவை   மாடிப்படிக்கு அடியில் கேபிள் ஒயர்களை சேர்த்துக் கூடு கட்டி குஞ்சு பொரித்து, குஞ்சுக்கு உணவு அளிக்கிறது. காத்திருந்து  காத்திருந்து பதிவில்.
மாயவரம் வீடு.

 இங்கு  (மதுரையில்) கேபிள் ஒயர் உள்ள சுவற்றின் பொந்துக்குள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி இருக்கும் படத்தைப் போட்டபோது எல்லோரும் பயந்தார்கள்.  இறைவன்  பறவைகள் கூடு கட்டும் போது   பயமில்லா வரத்தை அளித்து இருப்பார் போலும்.


கோவையில் அத்தை வீட்டில்  மொட்டைமாடியில் வேண்டாம் என்று தூக்கிப் போட்ட கட்டைக்கு அடியில் தூங்கு முஞ்சிமர இலைகள் விழுந்து கிடக்கும் குப்பையில்  குடைபிடித்து இருக்கும் காளான்கள்

நான் வித்தியாசமானவன் என்று தனித்திருக்கும் காளான்!
கற்றாழைப்பூ-
பூ மேல் நோக்கிப் பூக்காமல் கீழ் நோக்கிப் பூத்து இருக்கிறது  


கீரைக் கடைசல், வத்தக் குழம்பு  செய்த கல்சட்டி,
அரைக்கீரை, வத்தக்குழம்பை  இந்த சட்டியில் சுண்ட வைத்த சுண்டக் கறி அத்தனை ருசியாக இருக்கும். இப்போது கீழாநெல்லி முளைத்து கேட்பாரற்றுக் கிடக்கிறது மொட்டைமாடியில்.
ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டவை , இன்று மூலையில்!


  எங்கள் தோட்டத்தில் நந்தியாவட்டைச் செடியின்
 தண்டில் பச்சோந்தி .
நிறம் மாறுவதினால் இதனை அப்படித்தானே சொல்வார்கள்.


மாயவரம் வீட்டில் தொட்டிகளில்   நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தேன்,  அரளிச் செடி முதன்முதலில் பூத்த போது

மேய்ச்சல் நிலம் கண்ணுக்கு எட்டிய தூரம் இல்லை வெகு தூரம் போகணும் அண்ணே !  அதுதான் ஆட்டோ சவாரி!

"நம்ம ஊர் போல வருமா? "பாடலில்  இந்தக் குளியலைப் பற்றி வரி வருது சொல்லுங்களேன்

இது எதற்கு என்று தெரியும் தானே?

பழமையான கோயிலில்  கோபுரத்தில் இருந்த கதை சொல்லும் சிற்பங்கள் இந்தக் கதை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். குழந்தை யார் என்று?  எங்கள் பிளாக் புதிர் போல இருக்கா?

                                                               வாழ்க வளமுடன்!

திங்கள், 5 ஜூன், 2017

ஓடி விளையாடு பாப்பா -2 வது பகுதி

பிள்ளைப் பருவம் விளையாடிக் களிக்கும் பருவம் . காலை முதல்  இரவு  தூங்கப் போகும் வரை விளையாட விரும்பும் பருவம். பாரதியார் மாலை முழுவதும் விளையாட்டு என்றார். ஆனால் எல்லா நேரமும் விளையாடத் தோன்றும் பிள்ளைப் பருவத்தில்.

என் இளமைப் பருவத்தில்   சந்தோஷமாய் விளையாடிக் கொண்டு இருக்கும்போது அம்மா கூப்பிட்டால் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டுதான் வீட்டுக்குள் வருவேன். இவ்வளவு நேரம் விளையாடினாய் சிரித்துக் கொண்டு -வீட்டுக்குள் வரும்போது  ஏன் இப்படி  என்று திட்டுவார்கள்.

எத்தனை எத்தனை விளையாட்டு ! ஆற்றோரம் மணல் எடுத்து அழகு அழகாய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடி வளர்த்து என்ற பாட்டில் மணல் வீடு கட்டி விளையாடுவதைச் சொல்லி இருப்பார்கள்.
ஆற்று மணலை இப்போதும் வீடு கட்ட  அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள் - நிஜ வீடு கட்ட.

நான் போகும் இடம் எல்லாம் குழந்தைகள் விளையாடுவதை ரசிப்பேன்.


டயர் வண்டி,  ஓட்டும் கிராமத்துக்குழந்தைகள் (குத்துக்கல் வலசை என்ற ஊரில் எடுத்த படம்.)


சகோதரியின் பேரனும்  அவன் நண்பனும் விஷ்ணு சக்கரம் கையில் சூழல்வதாய் விளையாட்டு
வீடு கட்டக் கொட்டி வைத்து இருக்கும் மணலில் மலை கட்டி அதில் ஏறிச் செடியை நட்டு வைத்து மகிழும் குழந்தைகள்.

இன்று "குழந்தைகளை மரம் நட வைக்க வேண்டும் அதைப் பராமரிக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தால் மரத்தை வெட்டும்போது அவர்கள் வெட்டக் கூடாது என்பார்கள்' என்றார்கள், தொலைக்காட்சியில்.   மரத்தின் நன்மைகளைக்  குழந்தைகளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்றார்கள்.

பிஞ்சுக் கைகளால் செடி , மரம் நட வைத்து அவர்களே தண்ணீர்  ஊற்ற வைத்து துளிர்ப்பதை, மொட்டுவிடுவதை, மலர்வதை எல்லாம் ரசிக்க வைக்கலாம்,.

நாங்கள் படிக்கும் போது பள்ளி விட்ட பின் பள்ளித் தோட்டத்திற்குத் தண்ணீர் விடும் பொறுப்பு உண்டு.  குழுவாய்ப் பிரித்து இருப்பார்கள், தோட்டவேலை , கரும்பலகைக்கு  ஊமத்தை இலையும், அடுப்புக் கரியும் அரைத்து பூசுதல், மண்பானையில் தண்ணீர் எடுத்துவைத்தல்  எல்லாம் செய்வோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோரு குழு செய்யும்.
கழுகுமலை ஊரில் தேரடித் தெருவில் குழந்தைகளின்  பம்பர விளையாட்டு


கலர் கலராய் அழகாய் மரத்தால் செய்த பம்பரங்கள்  முன்பு    இப்போது  பிளாஸ்டிக்  பம்பரம்.
குத்து வாங்காத பம்பரம் இருக்காது, அபீட் எடுத்தால் தான் பம்பரம் விடுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தப் பையனை சுற்றி நின்று பார்க்கப் பார்வையாளர் கூட்டம் இருக்கும்.
அபீட்
டாஸ் போட்டுப் பார்க்கிறார்கள் யார் முதலில்   விளையாடுவது என்று. பெரியவர்கள் விளையாட்டுக்கு ஈடாக விளையாடுகிறார்கள். நிழல் தேடி இவர்கள் விளையாட்டு இடம்பெயர்ந்து கொண்டெ இருக்கும். பெற்றோர்கள் கட்டளை வெயிலில் விளையாட கூடாது என்று. வெயிலில் விளையாடினால் டீ விட்டமின் கிடைக்கும். "வெயிலோடு விளையாடி வெயிலோடு விளையாடி " பாடல் நினைவுக்கு வருதா?

அடிக்கும் வெயில் எல்லாம் உங்கள் தலையில் தான் என்று அம்மா சொல்வது காதில் கேட்குது.
வெயில், மழை, எல்லாம் தெரியாது அடுத்து என்ன விளையாடலாம் என்ற நினைப்பு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு பால்கனி அருகில் நின்று குழந்தைகள் தன் சகாக்களை விளையாட அழைப்பதே பார்க்கப் பரவசமாய் இருக்கிருது..


மழையில் தான் நனைய விட மாட்டேன் என்கிறார்கள், மழை தண்ணீரிலாவது விளையாடுவோம். என்று மழைத்தண்ணீரில் விளையாடும் குழந்தைகள். முன்பு முற்றத்தில்  விழும் தண்ணீரை அண்டாக்களில் பிடித்து வைப்பார்கள் அதில் காகிதக் கப்பல் விட்டு மகிழ்வோம். அம்மா கத்திக் கப்பல் செய்து  தருவார்கள்.
.
தாத்தாவும் பேரனும் மரவீடு செய்து விளையாடுகிறார்கள்.

வித விதமாய்க்  கட்டடங்கள்  கட்டி விளையாடுகிறான்  பேரன்

அவன் வைத்து இருக்கும் விலங்குகள்   பண்ணையில் அவைகளுக்கு உணவு அளிக்கிறான்.


பக்கத்தில் உள்ள  கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது அதில் குழந்தைகள் விளையாட கார், கொடைராட்டினம் எல்லாம்  இருந்தது.  பெரிய பெரிய தீம் பார்க்கில்  மின்சாரத்தில் சுற்றுவதில் சுற்றினாலும் பழமையை நினைவூட்ட இது போன்ற கையால் சுற்றும்  விளையாட்டு சாதனங்களும் மறையாமல் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொஞ்சம் பொறுங்கள் இன்னும் இரண்டு  குழந்தைகள் வரட்டும்.

கொடை ராட்டினம், கார் விளையாட்டு எல்லாம் விடியோ எடுத்தேன் ஆனால் இங்கு பகிர்ந்தால் சிலருக்குத் தெரிகிறது, சிலர் தெரியவில்லை என்கிறார்கள்.


எங்கள் குடியிருப்புப் பகுதியில் காலை முதல் இரவுவரை  குழந்தைகள் விளையாடும் உற்சாகக் கூக்குரல் கேட்கிறது . இந்தக் கால குழந்தைகள்  விளையாடுவது  இல்லை  எப்போதும்  வீடியோ கேம்,  ஐபேட்,  செல்போன் கேம் தான்  விளையாடுகிறார்கள் என்பது மறைந்து குழந்தைகளை விளையாட வைத்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது. உடலின் உறுதி செய்வது விளையாட்டு தானே!

பள்ளிக்கு வெளியேயும் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன.
விளையாட்டில் வெற்றி தோல்வியைச் சமமாகப் பாவிக்கும் மனப்பான்மை,விட்டுக்கொடுத்தல், சகிப்புத் தன்மை,அடிபட்டால் முதல்உதவி செய்யும் குணம், எல்லாம் தானாக வரும். நம் கடமை அவர்கள் நல்ல குழந்தைகளுடன் பழகுகிறார்களா விளையாடுகிறார்களா என்று கவனிப்பதும்,சண்டை வந்தால் அவர்களே சமாதானம் ஆகிவிடுவார்கள் என்று நாம் தலையிடாமல் இருப்பதும் தான்.

பள்ளி விடுமுறை முடிந்ததும் இருக்கவே இருக்கிறது  வீட்டுப்பாடம்.

காலமிது காலமிது  விளையாடு  கண்ணே, காலமிதைத் தவறவிட்டால் கிடைக்காது இது போல் பொன்னாள். 

ஓடி விளையாடு பாப்பா   முன்பு எழுதிய  பழைய பதிவைப் படிக்கலாம் முன்பு விளையாடிய விளையாட்டுகளின் பேர் எல்லாம் இருக்கும்.

’கல்லா மண்ணா’, ’கண்ணாமூச்சி’, ’சங்கிலி புங்கிலி கதவைத்திற நான்மாட்டேன் வெங்கல
புலி’(வேங்கைப்புலி),’ஒருகுடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்’,’குலைகுலையா முந்திரிக்கா,நரியே நரியே சுத்திவா’ என்று பாடி விளையாடுவார்கள். இந்த விளையாட்டுக்கள் எல்லாம் கண்ணுக்கு கைக்கு, கால்களுக்கு நல்ல பயிற்சி தரும். பாண்டி விளையாட்டும் நல்ல விளையாட்டு.

துள்ளித் திரிந்த காலம் நினைவுக்கு வருகிறதா?



                                                                வாழ்க வளமுடன்.