கணவர் வரைந்த படம்
திடியன் மலை ஏற ஆரம்பித்தோம். இவ்வளவு வேகமாய் இல்லை மெதுவாய்.
நேற்று இதன் முதல் பாகம் படிக்க முந்திய பதிவில் சொன்னது போல்
ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம் சரியா?
சிமெண்ட் படி முடிந்து விட்டது
வீடு கட்டும் கம்பியை வளைத்து ஒன்றுடன் ஒன்று கோர்த்து கைப்பிடிக்கு வைத்து இருந்தார்கள்.
பாறையில் செதுக்கிய படிகள். பத்துப் பத்து படிகள் ஊர்க்காரர்கள் உபயம்.
தொடர்ந்து போக முடியுமா இதில் என்று பயம் வந்து விட்டது, சிமெண்ட் படியில் ஓடி ஓடி இறங்கிக் கொண்டு இருந்த பையனிடம் கோவில் இன்னும் எவ்வளவு தூரம் என்றேன் அந்த பையன் சிரித்துக் கொண்டே ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கி விட்டார்.
அவர் சொல்லி இருந்தால் நான் மேலே ஏறிப் போய் இருப்பேனா என்பது சந்தேகமே! படிகள் ஒழுங்கற்று இருந்தது. படியின் விளிம்பு கீழ் நோக்கி சரிந்து இருந்தது. என் கணவரிடம் என் கைப்பையைக் கொடுத்து விட்டு அலைபேசியை போட்டோ எடுக்கும்போது மட்டும் வாங்கி எடுத்து விட்டு அவர்களிடம் கொடுத்து விடுவேன். 'ராம ராம' என்று சொல்லி ஏற ஆரம்பித்தோம். 7 மணிக்கு ஏற ஆரம்பித்தோம். ஐயப்ப பக்தர்கள் சொல்வது போல் ஏற்றிவிடப்பா ராமா ராமா என்று ஏற ஆரம்பித்தோம். இனி படிகளைப்பற்றி தெரிந்து கொண்டுதான் மலை ஏற வேண்டும் என்று சொன்னேன்.
வாய் உலர்ந்து போனது. மலைக்கோவில் போகும்போது நெல்லிக்காய் கொண்டு போக வேண்டும் என்று தெரிந்து இருந்தது, ஆனால் இந்த மலைக் கோவில் திடீர் என்று அமைந்த பயணம்.(திடியன் மலைக்குத் திடீர்ப் பயணம்.) முன் ஏற்பாடு இல்லையே! அதனால் கொண்டு போகவில்லை. ஒரு பாட்டில் தண்ணீரைக் கொஞ்சமாய்க் குடித்துக் கொண்டோம்.
வேறு சிந்தனை இல்லாமல் ராம நாமத்தை மட்டுமே சொல்லி ஏறினோம்.
உடைந்த கல் படியில் கொஞ்சம் சிமெண்ட் பூச்சு , அடுத்து சின்ன சின்னதாய் வெட்டிய படிக்கட்டுக்கள்
மீண்டும் கொஞ்சம் சிமெண்ட் பூச்சுப் படிக்கட்டுக்கள்
அப்புறம் செதுக்கிய படிக்கட்டுக்கள் கைப்பிடி மிகவும் தள்ளி இருந்ததால் கம்பி என்கைக்கு எட்டவில்லை
நான் இரண்டு கைகளால் தவழ்ந்தபடி
ஏற ஆரம்பித்தேன்.
மேலே இருந்து பார்த்தால் ஊர் தண்ணீர் இல்லாததால் காய்ந்து கிடக்கும் வயல்கள். காமிரா மறந்து விட்டதால் அலை பேசிதான். காமிரா கொண்டு போய் இருந்தாலும் எனக்கு எடுப்பது கஷ்டம் தான் காற்று வேறு தள்ளுகிறது.
படியில்லாமல் சிறிது தூரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோவிலைப் பார்க்க முடியவில்லை.
கொஞ்சம் படிகள் தெரியுது
கோவில் தெரியுது வந்து விட்டது என்று மகிழ்ந்தோம்
மீண்டும் கொஞ்சதூரம் சிமெண்ட் நடை பாதை
என்னை முன்னாலே போகவிட்டு அவர்கள் 'பின்னால் மெதுவாய் ஏறு கீழே பார்த்து வா' என்று சொல்லியே வந்வர்களைப் போட்டோ எடுப்பதற்காக முன்னாலே போக வைத்தேன்.
இன்னும் சிறிது தூரம் தான் வந்து விட்டோம் என்ற நிம்மதி
கோவிலும் டவரும் தெரிகிறது
வந்து விட்டோம் என்று நினைத்தால் இன்னும் போகிறது
நாங்கள் மேலே ஏறிப் போகும் வரை வெயில் வரவில்லை
சூரியபகவான் கருணை காட்டினார்.
கீழே இருக்கும் கைலாச நாதர் கோவில் தீபத்திருநாள் அன்று கார்த்திகை மாதம் ஏற்றும் இடமும் கோவிலும் தெரிகிறது
கீழிருந்து மேலே போக எங்களுக்கு ஒன்றே கால் மணி நேரம் ஆச்சு. நாங்கள் மேலே போகிறவரையில் யாரும் அங்கு வரவில்லை.
(மொத்தப்படிகள் 1100.அது தவிர படிகள் இல்லாமல் ஏற்றமான பாதையும் (ரேம்ப்) உண்டு.மேலே ஏறும்போது படிகளை எண்ணவில்லை. நாம ஜபம் மட்டும் தான். கீழே இறங்கும்போது தான் படிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டோம்.)
இவ்வளவு கஷ்டப்பட்டு இறைவன் அருளால் ஏறி வந்தோம். நாமா ஏறினோம் என்ற மலைப்பு ! நாமா ஏறினோம் ! மலையப்பன் அல்லவா ஏற்றிவிட்டார்.
கீழ் இருந்து பார்த்த எனக்கு பூட்டிய கதவு அருகில் என் கணவர் நின்றதைப் பார்த்து ஏமாற்றமாய் இருந்தது.
வா வா சாமி தெரிகிறது என்று கணவர் அழைத்தை கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி . ராமர் மலை என்றார்கள். உள்ளே இருந்தது என்ன சாமி? ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் இருக்கிறமாதிரி இருக்கிறதே ! என்று கேட்டுக் கொண்டே கணவரின் பக்கம் போய் பூட்டிய கதவு வழியாக பார்த்தேன்.
உள்ளே யார் இருந்தார்? என்பதை அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்.
