வெள்ளி, 4 நவம்பர், 2022

இயற்கை செழித்தால் உயிர்கள் செழிக்கும்



மழை பெய்து மரங்களும், செடி, கொடிகளும் செழிப்பாக வளர்ந்தவுடன் பறவைகள்   நிறைய வருகிறது.
பறவைகளுக்கு பிடித்த சூழல் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.
இந்த பதிவில் குருவிகள் மற்றும்  புல் புல் பறவைகள், ஆண் குயில்   இடம்பெற்று இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------





இரண்டு வித குருவிகள் இருக்கிறது

நிறைய கூட்டமாய் மரக்கிளை முழுவதும் அமர்ந்து இருந்தது, நான் படம் எடுக்கும் போது கொஞ்ச குருவிகள்தான் இருந்தது.

என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கிறது இந்த மரம். பறவைகளை ஓரளவு ஜூம் செய்து எடுத்து இருக்கிறேன்.




புல் புல் பறவைகள்



புல் புல், குருவிகள், கருங்குயில் (ஆண் குயில்)
ஆண்குயில்
இயற்கை செழித்தால் உயிர்கள் செழிக்கும்  .

எங்கள் குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் காலி மனையில்  முன்பு இருந்த மரங்களை , செடி, கொடிகளை அழித்த போது பறவைகள் வரத்து குறைந்து விட்டது. மரங்களை அழிப்பதை படம் எடுத்து முன்பு பதிவு  போட்டது நினைவு இருக்கும்.

 இப்போது மழை பெய்து காலி மனையில் மீண்டும் செடி, கொடிகள் துளிர்க்க ஆரம்பித்தவுடன் பறவைகள் வரத்து அதிகமாகி விட்டது.
 
//இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையெனச்சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் //

"கவலை இல்லா மனிதன்"  படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலில் சந்திரபாபு இப்படி  பாடி இருப்பார்.

மழை பெய்து துளிர்த்து இருக்கும் புற்கள்.

புற்களை படம் எடுக்கும் போது இரட்டை வால் குருவி(கரிச்சான்) வந்து அமர்ந்தது சரியாக விழவில்லை படத்தில்

புள்ளிச் சில்லை பறவைக்கும், திணைக்குருவிக்கும் கூடு கட்ட பசும்தளைகள் கிடைக்கிறது, அதற்கு உணவு கிடைக்கிறது, அதனால் கூட்டம் கூட்டமாய் வருகிறது. இந்த புற்களைதான் எடுத்து வரும் கூடு கட்ட. கதிர் போன்றவைகளை கொத்தி தின்னும்.

இந்த மரம் எங்கள் குடியிருப்பை கட்டி கொடுத்தவர் வீட்டு தோட்டத்தில் இருக்கும் மரம். பறவைகளுக்கு பிடித்த மரம்.

முன்பு கோயில்களில், மசூதிகளில் கொண்டு போய் தானியங்களை கொடுத்து வருவார்கள் பறவைகளுக்கு உணவாக.

தினதந்தியில் படித்த செய்தி. (பழைய செய்தி 7 வருடங்களுக்கு முன்பு எடுத்து வைத்து இருந்தேன்) மாநகராட்சி பூங்காவில் பறவைகளுக்கு உணவாக  உலர் தானியங்கள் வைக்க இடம் ஒதுக்கி இருப்பது பற்றி படித்தது.



//உலர் தானியங்கள்’

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மூதாதையர்கள், இறந்தவர்கள் நினைவாக திதி கொடுப்பவர்கள் மொட்டை மாடி, சாலையோரம் உள்பட பல்வேறு இடங்களில் வைத்து பறவைகளுக்கு உணவு அளித்து வருகிறார்கள். பறவைகளுக்கு உணவளிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பூங்காக்களில் ‘உலர் தானியங்கள்’ போடுவதற்காக தனியாக இடவசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் பறவைகள் விரும்பி சாப்பிடும் கம்பு, தினை, சாமை, அரிசி, நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்கள், நவ பருப்பு வகைகள் பொதுமக்கள் போடலாம். சாதம் உள்ளிட்ட சமைத்த உணவு பொருட்கள் வைக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.//

இப்படி செய்வது நல்லதுதான்.

கோவையில் இருக்கும் தோழி நேற்று பேசி கொண்டு இருந்தார், அவர் சென்னைக்கு மகன் வீட்டுக்கு தீபாவளிக்கு போய் விட்டு திரும்பிய போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை சொன்னார்.

அவர் இருக்கும் குடியிருப்பில் அதை பராமரிப்பவர் (புதிதாக வந்து இருப்பவர்)  குடியிருப்பில் வசிப்பவர்கள் வைத்து இருக்கும்  வாழை மரம், துளசி, ஓமவல்லி எனறு அனைத்தையும் அழித்து விட்டு ஒன்று போல குரோட்டன்ஸ் தொட்டிகளை வைத்து விட்டாராம்.  அப்போதுதான் குடியிருப்பு பார்க்க அழகாய் இருக்கும் என்று.

தோழி ஒரே புலம்பல் வாழைமரம் புலம்புவது போல எழுதி அனுப்பினார் எனக்கு.  குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வளவு பயனாக இருந்தேன் என்று புலம்பியது வாழை.

 வெட்டபடும் மரங்களும் செடிகளும் இப்படித்தான் அவர் சொல்வது போல புலம்பும் என்று நினைத்து கொண்டேன்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------

40 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ !

    குடியிருப்பு வாசிகளுக்கு எவ்வளவு பயனாக இருந்தேன் என்று புலம்பியது வாழை!

    கண்ணைக் கவரும் செடிகளிலே
    கவனம் செலுத்தும் அயலார்கள்
    மண்ணைக் கொஞ்சும் மரங்களுக்கு
    மதிப்போ மகிழ்வோ அளிப்பதில்லை
    திண்ணைப் பாட்டி இல்லாத
    தேசம் தன்னில் வாழ்பவர்கள்
    எண்ணம் எல்லாம் நவீனத்தில்
    இருந்தால் வாழையும் புல்தானே !

    அவர்கள் அறியாதவர்கள் ......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கவிதை சீராளன். பாராட்டுகள்.

      நீக்கு
    2. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      சீராளன் கவிதையை பாராட்டியதற்கு நன்றி.

      நீக்கு
    3. மிக்க நன்றி சகோ ,நெல்லைத்தமிழன் என் கவிதையைப் பாராட்டியதற்கு!

      நீக்கு
  2. வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன்

    நீங்கள் சொன்னது உண்மை.
    திண்ணையில் பாட்டி இருந்து இருந்தால் இந்த குரோட்டன்சால் பயனில்லையப்பா!
    நமக்கு உதவும் செடிகளை வை . முன்பக்கம் பூந்தோட்டம் பின் பக்கம் கீரை பாத்தி , அவரை, புடலை வை என்று சொல்லி இருப்பார். கை வைத்தியத்திற்கு , வெற்றிலை, துளசி ஓமவல்லி வை என்று சொல்லி இருப்பார்.

    வாழையடி வாழையாக தளைத்து வந்து கொண்டே இருக்கும் பயனுள்ள வாழையை புல் என அழித்து விட்டார்கள்.
    உங்கள் கவிதையை என் தோழிக்கு அனுப்புகிறேன். படித்தால் ஆறுதல் அடைவார்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ என் கவிதையைப் பாராட்டியதற்கு!

      நீக்கு
  3. தலைப்பைப் படித்த உடனேயே சந்திரபாபு நினைவுக்கு வந்து விட்டார்.  அடுத்த வரி மனிதன் அழுதாள் இயற்கை சிரிக்கும் என்பது.  அருமையான பாடல். கண்னதாசனிடமும் எம் எஸ் வியிடமும் சந்திரபாபு அடிக்கடி நச்சரிப்பாராம், தான் பாடும்படி பாடல்கள் எழுதித்தரச்சொல்லி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      சந்திரபாபு இயற்கை அழுதால் என்று சொல்லி இருப்பார்.
      பாட்டை மிக உருக்கமாக பாடி இருப்பார்.
      கண்ணதாசன் பாடல் வரிகள் மிக அருமையாக இருக்கும், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை என்று நினைக்கிறேன் .

      நீக்கு
  4. மழைபெய்தால் மனதுக்கும் மகிழ்ச்சி, இயற்கைக்கும் மகிழ்ச்சி.  அப்போதுதான் பூமியின் வாழ்க்கை சுழற்சி தடையில்லாமல் நல்லபடி சுழலும்!  மழை, மரங்கள், பறவைகள், எச்சங்கள், விதைகளும் மறுபடி மரங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை.இயற்கையின் சுழற்சி முறை சரியாக நடந்தால் எல்லாம் நலம்.
      மழை மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், மழை இல்லையென்றால் அவதி படும் நாம் மழை தொடர்ந்து பெய்தால் அலுத்து கொள்கிறொம்.
      நம் வாழ்க்கை முறையை அதற்கு ஏற்றார் போல அந்தக்கால மக்கள் வாழ்ந்தார்கள். கோடை காலத்தில் வத்தல் வடகம் போட்டு வைத்து, பொருட்களை வெயிலில் காய வைத்து எடுத்து சேமித்து கொண்டார்கள், அடை மழையால் வெளியே போக முடியாத போதும்
      காய்கறிகள் கிடைக்காத போதும் பயன்படுத்தி கொண்டார்கள்.

      மழை காலத்தில் சேமிக்க முடியாதவர்களுக்கு உதவியும் செய்தார்கள்.

      நீக்கு
  5. பறவைகளுக்கு சாமை, தினை என்று அட்வைகள் விரும்பும் உணவு கொடுப்பது நல்ல ஏற்பாடு.  வாழையை வெட்டி குரோட்டன்சா..  நெல்லை அறுத்து களையை பயிர் செய்யும் புத்திசாலிகள்!  வெட்டப்படும் மரம் பற்றி நான் ஒரு கவிதை சில வருடங்களுக்கு முன் முயற்சித்திருந்தேன்.  கிடைத்ததால் இங்கு பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பறவைகளுக்கு சாமை, தினை என்று அட்வைகள் விரும்பும் உணவு கொடுப்பது நல்ல ஏற்பாடு.//

      ஆமாம், நல்ல ஏற்பாடுதான். அப்படி கொண்டு போடாமல் விட்டதால்தான் பறவைகள் குடியிருப்புகளை தேடி வருகிறது.
      அவைகளால் நோய் வருவதாய்ச்சொல்லி பால்கனிகளை அடைத்து கொண்டு இருக்கிறோம்.

      //வாழையை வெட்டி குரோட்டன்சா.. நெல்லை அறுத்து களையை பயிர் செய்யும் புத்திசாலிகள்//

      ஆமாம்.

      வயல்வெளி, ஏரிகள் முழுவதும் வீடுகள் தான். நெல் விளையும் பூமி முழுவதும் கான்கீரீட் மலர்கள் போல வீடுகள் அழகாய் முளைத்து இருக்கே!

      //வெட்டப்படும் மரம் பற்றி நான் ஒரு கவிதை சில வருடங்களுக்கு முன் முயற்சித்திருந்தேன். கிடைத்ததால் இங்கு பகிர்கிறேன்.//

      சீராளன் கவிதையை படித்தவுடன், உங்களையும், சகோ துரை செல்வராஜூ அவர்களை நினைத்தேன். பழசு கிடைக்கவில்லை யென்றாலும் புதிதாக எழுதி அனுப்புங்கள்.கவைதையை எதிர்ப்பார்க்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. கிடைத்து விட்டது... இதோ இந்தக் கவிதையைத்தான் சொன்னேன்!


    ஒற்றைக் குருவி ஒன்று
    தான்நேற்றுக் குடியிருந்த
    ஒற்றை மரத்தைத் தேடி
    சுற்றி வருகிறது பரிதாபமாய்
    அரசியல் காரணங்களுக்காக
    வெட்டுப்பட்ட மரம்
    வேரோடு வீழ்ந்து கிடக்கிறது மண்ணில்..
    உற்றுக் கேட்டால்
    கூடு நொறுங்கி
    குஞ்சுகள் இழந்த
    குருவியின் அழுகையோடு
    மரத்தின் மரண வாக்கு மூலமும்
    கேட்கலாம்..

    உன் தலைவன்
    நாளைஇல்லம் சேர்ந்தால்
    மறுபடி என்
    வேரை மண்ணில் நிறுத்தி
    மண் சேர்ப்பாயா மானிடனே...

    2014 may மாதம் எழுதியது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கவிதை.

      //உற்றுக் கேட்டால்
      கூடு நொறுங்கி
      குஞ்சுகள் இழந்த
      குருவியின் அழுகையோடு
      மரத்தின் மரண வாக்கு மூலமும்
      கேட்கலாம்..//

      உண்மை.

      இப்போது மரத்தை எளிதாக வெட்டும் கருவிகள் வந்து விட்டதால் சகட்டுமேனிக்கு பல காலம் வளர்ந்த மரங்களை வெட்டி விடுகிறார்கள்.

      மண் சேர்ப்பாயா மானிடனே
      வரிகள் மனதை கனக்க வைக்கிறது.
      தான் வாழ பிறர் நலம் அழிக்கும் மானிடம்.

      கவிதையை தேடி அனுபியதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. மரம் வளர்க்க மனிதனுக்கு மனமில்லை
    மழை பொழிய வானுக்கு வழியில்லை பிப்ரவரி 24, 2014

    மேலே உள்ளது எழுதிய தேதி பிப்ரவரி 24, 2014!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கவிதையும் அருமை.
      மரத்தை வெட்டினால் மழை எப்படி பெய்யும்.மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்று முன்பு வாசகம் நிறைய இருக்கும். இப்போது மரத்தை அழிப்போம், பாதைகள் அமைப்போம்.
      உங்கள் கவிதை பகிர்வுகளுக்கு நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பாடலையும் படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. எங்கும் பசுமையுடன் காட்சி தரும் அழகான படங்களை கண்டு ரசித்தேன். படங்கள் அனைத்தும் அழகான பூக்களுடன் மலர்ந்து மணம் வீசுகின்றன .

    உண்மைதான்.. பசுமை கண்களுக்கு எவ்வளவு விருந்தாக உள்ளது. அவற்றை நாடி பறவைகளும் வரும் போது மனதுக்குதான் எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது. நீங்கள் ஒவ்வொன்றையும் அழகாக படங்கள் எடுத்திருக்கிறீர்கள். அனைத்தையும் ரசித்துப் பார்த்தேன்.

    குருவிகள் வரிசையாக அமர்ந்திருக்கும் படங்கள் அழகாக இருக்கிறது.ரசித்தேன். நீங்கள் பகிர்ந்த பாடல்களும் அழகானவை.

    பறவைகளுக்கு உணவு தரும் விபரம் குறித்து தாங்கள் படித்ததை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    தங்கள் தோழி சொல்வது வருத்தப்படுவது அனைத்தும் உண்மைதான். படிக்கும் போது எனக்கே வருத்தமாக இருந்தது.

    /வெட்டபடும் மரங்களும் செடிகளும் இப்படித்தான் அவர் சொல்வது போல புலம்பும் என்று நினைத்து கொண்டேன்/

    நானும் இங்கு குடியிருப்புக்காக மரங்கள், செடிகள் வெட்டப்படும் போது அப்படித்தான் நினைப்பேன். ஆனால் என்னசெய்வது? மனிதரின் சுயநலங்களுக்காக அவை தியாகம் செய்யத்தான் பிறந்திருக்கின்றன. மனிதர் தாம் வாழும் இடங்களை தங்களின் தேவைகளுக்காகவோ ஆசைகளுக்காகவோ விஸ்தரிப்பு செய்து கொண்டே போகின்றனர். அதையும் என்றுமே தடுக்க முடியாதுதான்.

    காலம் மாறி விட்டது. மாறி விட்ட அந்த காலங்களுடன் நாமும் பயணிக்க வேண்டியதுதான். வேறு வழியுமில்லை. நாம் வசிக்கும் இந்த அப்பார்ட்மெண்ட் கட்டி நாம் இங்கு வாழ வரும் போது எத்தனை மரங்கள், எத்தனை பறவைகளின் இயற்கையான புகலிடங்கள் அழிந்துள்ளதோ எனவும் நினைத்துக் கொள்வேன். வருத்தமாகத்தான் இருக்கும். குற்ற உணர்ச்சியாகவும் இருக்கும். இது என் பலம்பலாக இருந்து விடப்போகிறது:))) தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      //பதிவு அருமையாக உள்ளது. எங்கும் பசுமையுடன் காட்சி தரும் அழகான படங்களை கண்டு ரசித்தேன். படங்கள் அனைத்தும் அழகான பூக்களுடன் மலர்ந்து மணம் வீசுகின்றன .//


      நன்றி.

      //குருவிகள் வரிசையாக அமர்ந்திருக்கும் படங்கள் அழகாக இருக்கிறது.ரசித்தேன். நீங்கள் பகிர்ந்த பாடல்களும் அழகானவை.//

      இன்னும் நிறைய அமர்ந்து இருந்தது எடுக்க முடியவில்லையே என்று வருத்தம்.

      /
      தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.



      /

      //தங்கள் தோழி சொல்வது வருத்தப்படுவது அனைத்தும் உண்மைதான். படிக்கும் போது எனக்கே வருத்தமாக இருந்தது.//

      ஆமாம். நாம் ஆசையாக வளர்க்கும் செடிகள் வெட்டுப்பட்டால் மனம் வேதனை அடையும்.

      //மனிதர் தாம் வாழும் இடங்களை தங்களின் தேவைகளுக்காகவோ ஆசைகளுக்காகவோ விஸ்தரிப்பு செய்து கொண்டே போகின்றனர். அதையும் என்றுமே தடுக்க முடியாதுதான்.//

      ஆமாம், உண்மைதான் தடுக்க முடியாதுதான்.

      குற்ற உணர்ச்சியாகவும் இருக்கும். இது என் பலம்பலாக இருந்து விடப்போகிறது:))) //

      எல்லோருக்கும் குற்ற உணர்ச்சி இருக்கும். நாம் புலம்ப மட்டுமே முடியும்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.





      நீக்கு
  11. பறவைகள் அழிந்தால் மனிதர்களுக்கு இவ்வுலகில் இடமில்லை இதை இன்றைய இளையசமூகம் உணர்வதில்லை, காரணம் நாம் போதிக்கவில்லை.

    அழகான படங்கள் நேற்று வீட்டுக்குள் ஒரு குருவி வந்தது தலையில் கொண்டை இருந்தது படம் பிடிப்பதற்குள் பறந்து விட்டது.

    அதேநேரம் உங்களது நினைவும் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      //பறவைகள் அழிந்தால் மனிதர்களுக்கு இவ்வுலகில் இடமில்லை இதை இன்றைய இளையசமூகம் உணர்வதில்லை, காரணம் நாம் போதிக்கவில்லை//

      ஆமாம். இன்னும் தெளிவாக குழந்தைகளுக்கு பறவைகளைபற்றி சொல்வோம். உணர்ந்து கொள்வார்கள்.

      //அழகான படங்கள் நேற்று வீட்டுக்குள் ஒரு குருவி வந்தது தலையில் கொண்டை இருந்தது படம் பிடிப்பதற்குள் பறந்து விட்டது.//

      ஆஹா! மறு முறை வந்தால் எடுத்து பகிருங்கள்.
      என் நினைவு வந்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      மனம் சஞ்சலம் கொள்ளும் போதெல்லாம் பறவைகளை கவனிப்பதுதான் மகிழ்ச்சி தரும் பொழுது போக்கு எனக்கு.



      நீக்கு
  12. குருவிகளையெல்லாம் பொறுமையாகப் படம் பிடித்துள்ளீர்கள்.

    சிறு பறவைகளைப் பார்ப்பதும் மன மகிழ்ச்சியாக இருக்கும்.

    எங்கள் வளாகத்தில் முன்பு மயில் வரும். நான் படங்கள் எடுத்திருக்கிறேன். செம்போத்தும் வரும். இப்போ அவற்றையெல்லாம் காணமுடியவில்லை. பருந்துகள்தாம் அதிகம் இருக்கிறது (கழுகு?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      குருவிகளை படம் எடுக்க பொறுமை வேண்டும் தான்.
      கும்பலாக வ்ந்து அமர்ந்து இருந்தது, அதை படம் எடுக்கும் போது பறந்து விடுகிறது அப்புற மீண்டும் வந்து அமரும் , மீண்டும் பறக்கும்.
      மிக வேகமாக எடுக்க வேண்டி இருக்கிறது.
      எப்படியோ எடுத்து விட்டேன் ஓரளவு குருவிகளும் தெரிகிறது.

      //சிறு பறவைகளைப் பார்ப்பதும் மன மகிழ்ச்சியாக இருக்கும்.//

      ஆமாம், பறவைகளை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடையும்.
      பெண் மயில் வந்தது இருக்கு எங்கள் குடியிருப்புக்கும் படம் எடுத்து இருக்கிறேன். செம்போந்து சத்தம் மட்டும் கேட்கிறது, பார்க்க முடியவில்லை.
      முன்பு இருந்த வீட்டில் செம்போந்து வந்ததை படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்.

      நீக்கு
  13. அழகான பதிவு..
    நெகிழ்வான செய்திகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. அந்தத் தோட்டக்காரன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?..

    ஈயும் தேடி வந்து மொய்க்காத
    குரோட்டன்ஸை
    பயிராக்கும் மூடனிடம் சொல்லுங்க..

    தோட்டமும்
    அழகு தான்..
    அதனூடே
    கருங்குருவி
    காதலுடன்
    பாடுங் கவி
    அழகு தான் அதுவும்
    பேரழகு தான்!..

    - என்று..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
      அழகான கவிதை.
      உங்கள் கவிதைக்கு நன்றி.
      ஊருக்கு போய் இருந்தேன், சின்ன மாமியார் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். அதனால் திருநெல்வேலி போய் வந்தேன்.

      அதனால் உங்களுக்கு மறுமொழி கொடுக்க தாமதம்.

      நீக்கு
    2. ஏதோ முக்கிய விஷயம் என்று மட்டும் புரிந்தது..

      அம்மையாரின் ஆன்மா சாந்தியடையட்டும்..

      எல்லாம் இறைவன் சித்தம்..

      நீக்கு
    3. ஆமாம், எல்லாம் இறைவன் சித்தபடிதான் நடக்கிறது.
      மகளின் மறைவு அவர்களையும் அழைத்து கொண்டது.
      நோய் வாய் பட்ட மகள் வெள்ளிக்கிழமை, அம்மாவும் அடுத்த வெள்ளிக்கிழமை இரவு .
      இறைவன் சித்தம் தான்.

      நீக்கு
  15. எல்லாப்பறவைகளையும் பொறுமையாய்ப் படம் பிடித்து இருக்கிறீர்கள். வாழை மரத்தை வெட்டியவருக்கு எப்படித் தான் மனசு வந்ததோ? இங்கேயும் அக்கம்பக்கம் நிறையக்குடியிருப்புகள் வரப்போவதாய்ச் சொல்கின்றனர் மரங்களெல்லாம் வெட்டப்பட்டு மொட்டையாய்க் காட்சி அளிக்கும். பறவைகளுக்கு என்ன கதி நேரிடுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      வாழைமரம் , மற்றும் அனைத்து பலன் தரும் செடி கொடிகளையும் வெட்டி விட்டாராம். அழகை விரும்பும் அவருக்கு இவை எல்லாம் அசிங்ககமாய் தெரிகிறது. வேறு என்ன சொல்ல!

      வீடுகள் வேண்டி இருக்கு எல்லோருக்கும். வீட்டுக்கு ஒரு மரம் வைத்தால் போதும் குடியிருப்பு பார்க்க அழகாய் பறவைகள் வசிக்கும்
      சோலையாக மாறிவிடும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. வணக்கம் சதீஸ் முத்து கோபால், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. https://www.writersatheesh.com/2021/06/blog-post.html - பறவையினங்களின் தமிழ் பெயர்கள் - பயன்படுத்திக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  18. இயற்கை செழித்தால் உயிரினங்களுக்கு கொண்டாட்டம் எவ்வளவு பறவைகளின் மகிழ்ச்சி படங்களில் தெரிகிறது. மிகவும் அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    //இயற்கை செழித்தால் உயிரினங்களுக்கு கொண்டாட்டம்//

    ஆமாம் மாதேவி.
    உங்கள் கருத்துக்கு நன்றி.





    பறவைகளுக்கு மகிழ்ச்சிதான்.

    பதிலளிநீக்கு