திங்கள், 16 ஜூலை, 2012

குண்டுக் காக்கா கதை

குண்டு காக்காய் பட உதவி ராமலக்ஷ்மி. ராமலக்ஷ்மிக்கு நன்றி.

 நான் குண்டு காக்கா கதையை சொல்வதாய் போன பதிவில் சொல்லியிருந்தேன். அதை இப்போது பதிவிடுகிறேன். இது குழந்தைகள் கதை. அவர்கள்  எந்த கேள்வியும் கேட்காமல் சந்தோஷமாய் கேட்டு மகிழ்ந்தார்கள்.
                  குண்டுக் காக்கா கதை
 ஒரு ஊரில ஒரு மாமாவும், மாமியும் இருந்தார்களாம். மாமா அரண்மனையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தார் .  அரண்மனைக்குள்ளேயே அவர் குடியிருக்கிறதுக்கு ஒரு வீடு கொடுத்திருந்தாங்க. மாமாவும் மாமியும் அந்த வீட்டிலே நல்லா வாழ்ந்திட்டிருந்தாங்க.

 அந்த மாமிக்கு கொத்தவரங்கா வத்தல்னா ரொம்ப
பிடிக்குமாம். அதனாலே அப்பப்ப கொத்தவரங்கா வாங்கி மொட்டமாடி நெறய காயப்போடுவாங்களாம்.


இப்படி இருக்கும்போது ஒருநாள் அதே மாதிரி, கொத்தவரங்கா
வாங்கி வேகவைத்து  காயப்போட்டிருந்தாங்களாம். நல்லாக்காயட்டும்னு மாடியிலே நாலுநாள் எடுக்காமலே போட்டுட்டாங்களாம்.

தினமும் காலையிலே மாடிக்குப் போய்ப்பார்த்தா கொஞ்சம்
கொஞ்சமா கொத்தவரங்கா கொறஞ்சிக்கிட்டே வந்துச்சாம்.
எப்படி காணாமப் போச்சுன்னு யோசிச்சாங்களாம். யாரோ ராத்ரியிலே வந்து வத்தலைத் திருடீட்டுப் போறாங்க. அதைக் கண்டுபிடிக்கணும்னு முடிவு பண்ணாங்க.

அன்னைக்கு ராத்ரி அந்த மாமா ஒரு பெரிய கருப்புக் கம்பளியை எடுத்துப் போர்த்திக்கிட்டு, கையிலே ஒரு கம்பை எடுத்துக்கிட்டு மாடிக்குப் போய் ஒளிஞ்சுக்கிட்டாராம், யாராவது திருடன் வந்தா ஒரே அடி!   அடிக்க.

நடு ராத்ரீலே மொட்டைமாடீலே ஒரு பெரிய காக்கா வந்து
உக்காந்துதாம். சாதாரணமா இருக்கிறதைவிட நாலஞ்சு மடங்கு பெரிசாம். இவர் அதை அடிக்கப்போற சமயத்திலே,அந்தக்காக்கா
நில்லுங்க  நில்லுங்க என்னை அடிக்காதீங்கன்னுச்சாம். ஏன் எங்க வத்தலைத் திருடறேன்னாராம். என்னோட மனைவிக்கு கொத்தவரங்கா வத்தல்னா உயிரு. அதனாலே எடுத்துட்டுப் போனேன். என்னை அடிச்சிடாதீங்க உங்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்றேன்னுச்சாம்.

நீ ஒரு காக்கா. நீ எனக்கு என்ன உதவி செய்யப்போறே?ன்னு மாமா கேட்டார். ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வாங்க தெரியும்னு காக்கா சொல்லிச்சாம். வீடா?அது எங்கிருக்குன்னார் மாமா.. பக்கத்துலே ஒரு மலை தெரியுது பாருங்க. அதோட அடிவாரத்துலே என் வீடு இருக்கு. அங்க வந்து குண்டுக்காக்கா வீடு எதுன்னு யாரக்கேட்டாலும் சொல்வாங்க. இப்படிச் சொல்லிட்டுப் பறந்து போயிடுச்சு. இவருக்கு ஆச்சரியமா இருந்துச்சு. மாமியிடம் எல்லாத்தையும் சொன்னார்.

ஒருவாரம் ஆச்சு. மாமாவிடம்  மாமி சொன்னாங்க -அந்தக் குண்டுக்காக்கா எதோ உதவி செய்றேன்னுச்சே.அதைப் போய்ப்பார்த்துட்டு வாங்களேன்னு.. மாமாவும்  புறப்பட்டுப் போனார்.

ரொம்பதூரம் போனவுடன் மலை அடிவாரம் வந்தது. அங்கே .பெரிய பெரிய மரமா இருந்துச்சு. குண்டுக்காக்கா வீடு எங்கேன்னு ஒருத்தரக் கேட்டதும் அவர் ஒருமரத்தைக் காட்டினார். அந்த இடத்துக்கு மாமா போனார். மரப்பலகைகளாலே கட்டப்பட்ட ஒரு பெரிய வீடு மரத்து மேலே இருந்துச்சு. மேலே ஏற மரப்படிகள் இருந்துச்சு. அது மேலே ஏறிப் போனார்.  


(குண்டு காக்காவின் மரவீடுகற்பனை இப்படித்தான் இருக்குமென்று படம் அனுப்பிய முத்துலெட்சுமிக்கு நன்றி)

குண்டுக்காக்கா குண்டுக்காக்கான்னு கூப்பிட்டார். வீட்டுக்குள்ளே இருந்து காக்கா வெளியே வந்துச்சு. வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு. குண்டுக்காக்கா அவரைத் தன் மனைவிக்கு அறிமுகப்படுத்திச்சு. மனைவிக் காக்காவும் சந்தோஷப்பட்டுச்சு. சாப்பிடறதுக்குப் பலகாரங்கள் எல்லாம் கொடுத்துச்சு.

குண்டுக்காக்காவிடம், சரி எனக்கு ஏதாவது உதவி பண்ணுன்னு கேட்டாராம். அது ஒரு ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்துச்சாம். ஆட்டை வச்சு நான் என்ன செய்றதுன்னு கேட்டார். அது சொல்லிச்சு: இது சாதாரண ஆடில்ல. இது கிட்ட தங்கம் கொடுன்னு கேட்டா வாயைத் திறக்கும். வாயிலிருந்து  தங்கக் கட்டிகளாய் விழும். போதும்னு சொன்னா வாயை மூடிக்கும்னு சொல்லிச்சு. மாமாவுக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி சொல்லிட்டு ஆட்டை ஓட்டிக்கிட்டு வேகமா வீட்டுக்கு வந்தார்.
 மாமி ஆட்டைப் பார்த்ததும் இது எதுக்குன்னாங்க. குண்டுக்காக்கா கொடுத்த மந்திர ஆடு இது. இது சாதாரண ஆடில்ல. இது கிட்ட தங்கம் கொடுன்னு கேட்டா வாயைத் திறக்கும். வாயிலிருந்து  தங்கக் கட்டிகளாய் விழும். போதும்னு சொன்னா வாயை மூடிக்கும்னு மாமா சொன்னார். மாமிக்கு  சந்தோஷம். நம்ம கஷ்டம் எல்லாம் போயிடுச்சு. இனிமே நமக்கு எந்தக் கவலையும் இல்லேன்னாங்க.

அந்த ஆட்டுக்கிட்டே போய் தங்கம் கொடுன்னு மாமா கேட்டார்.. அது வாயைத் திறந்துச்சு. வாயிலே இருந்து தங்கக்கட்டியாய் விழுந்துச்சாம். அவங்க தங்கம் கேட்டதையும், தங்கம் விழுந்ததையும் அரண்மனை மதில் மேலிருந்த ஒரு காவல்வீரன் பார்த்துட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டான். அவன் ராஜாவிடம் போய் தான் பார்த்த எல்லாத்தையும் சொன்னானாம். ராஜாவுக்குப் பொறாமை. அந்த ஆடு ராஜாவிடம்தான் இருக்கணும்னு சொல்லி அதை வாங்கித் தனக்கே வச்சுக்கிட்டாராம். மாமாவும், மாமியும்  வருத்தப்பட்டாங்க.

மறுபடியும் குண்டுக்காக்கா கிட்டே உதவி கேட்கணும்ன்னு முடிவு
பண்ணினாங்க. மாமா மறுபடி குண்டுக்காக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். ரொம்ப தூரம் நடந்து அந்த மரவீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார் .
குண்டுக்காக்கா குண்டுக்காக்கான்னு கூப்பிட்டார். வீட்டுக்குள்ளே
இருந்து காக்கா வெளியே வந்துச்சு. வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு.குண்டுக்காக்கா மனைவிக்காக்காவும் வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு. சாப்பிடறதுக்குப் பலகாரங்கள் எல்லாம் கொடுத்துச்சு.

என்ன இவ்வளவு தூரம்னு குண்டுக்காக்கா கேட்டுச்சு. ராஜா ஆட்டப் பிடுங்கிக்கிட்டார்னு சொல்லி வருந்தப்பட்டார் மாமா. அப்படியா சேதி? நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு வேற ஒண்ணு தர்ரேன்ன்னு சொல்லி வீட்டுக்குள்ளே போய் ஒரு இரும்புப்பெட்டிய கொண்டு வந்து மாமாவிடம் கொடுத்துச்சாம். இரும்புப் பெட்டிய வச்சு நான் என்ன செய்றது? எனக்கு எதுக்கு இது?ன்னாராம்.

அதுக்கு அந்தக் குண்டுக்காக்கா இது சாதாரணப் பெட்டியில்ல. இதுல நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் கிடைக்கும். வடை,பாயசம் ,சாப்பாடு கொடுன்னு இதுகிட்டே கேட்டா,எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சாப்பாடு தரும். இதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வேணுங்கிற நேரம் சாப்பிட்டுக்கிட்டிருங்கன்னு சொல்லி மந்திரபெட்டியக் கொடுத்துச்சாம். மாமாவும் அதைச் சந்தோஷமா வாங்கிட்டு அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாராம்.

மாமா இரும்புப் பெட்டியை மாமிக்குக் காட்டினார்.  இந்தப் பெட்டி நமக்கெதுக்கு? இத வச்சு நாம என்ன செய்றது?ன்னு கேட்டாங்க .அதுக்கு மாமா  இது சாதாரணப் பெட்டியில்ல. இதுல நமக்கு வேண்டிய சாப்பாடெல்லாம் கிடைக்கும். வடை,பாயசம் ,சாப்பாடு கொடுன்னு இதுகிட்டே கேட்டா,எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சாப்பாடு தரும். இத வச்சுக்கிட்டுக் கவலையில்லாம சாப்பிடலாம் என்றார். மாமிக்கு ஆச்சரியமாவும் சந்தோஷமாவும் இருந்துச்சாம்.
அந்தப்பெட்டிகிட்டே வடை,பாயசம் சாப்பாடு கொடுன்னு கேட்டு
வேளாவேளக்குச் சாப்பிட்டாங்களாம்.

மாமா  ஒரு நாள் நினச்சாராம்ராஜா தான் பொறாமையோட நடந்துக்கிட்டாரு..நாம பெருந்தன்மையா நடந்துக்கணும்னு நினச்சாராம். அதனாலே அவர் ஒரு நாள் ராஜாகிட்டே போய், ராஜாவே  நீங்களும் மந்திரிகளும் எல்லாப் படைவீரர்களும் என் வீட்டிற்கு நாளைக்கு  விருந்துக்கு  வந்து  சாப்பிடணும்னு கேட்டுக்கிட்டார் . ராஜாவுக்கு ஆச்சரியம். எப்படி எல்லாருக்கும் இவனாலே சாப்பாடு போடமுடியும்னு நினச்சாரு. இருந்தாலும் சாப்பிடவர்ரோம்னு ஒத்துக்கிட்டாரு.

மறுநாள் ராஜாவும் மந்திரிகளும், ஆயிரம் வீரர்களும் சாப்பிட மாமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. எல்லாரும் உக்காருங்க சாப்பாடு கொண்டுவர்ரேன்னு சொல்லிட்டு உள்ளே போனார்.
அப்போது மன்னர் மந்திரியை அழைத்து சாப்பாடு இவ்வளவு பேருக்கு எப்படி செய்கிறான் போய் பார்த்துவா என்று அனுப்பினார். அவர் போய் சமையல் அறையை பார்த்து வந்தார், சமையல் அறையில் சமைக்க எந்த ஏற்பாடும் இல்லை,  அடுப்புக்குள் பூனை தூங்கிக் கொண்டு இருந்தது.

மந்திரி வந்து  மன்னரிடம் சொன்னார். சரி நீ ஒளிந்திருந்து என்ன நடக்குது என்று பார்த்து சொல் என்றார் மன்னன் மாமா மந்திர பெட்டிகிட்டே போய், இங்கு இருக்கிற அத்தன பேருக்கும் அப்பளம்,  வடை,பாயசம்,சாப்பாடு கொடுன்னாராம். அண்டா, அண்டாவாக விருந்து சாப்பாடு  வந்ததாம்.. எல்லாருக்கும் சாப்பாடு வந்துச்சாம். இதை மந்திரி ராஜாவிடம் சொல்ல ராஜாவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அதே நேரத்திலே பொறாமையும் ஏற்பட்டுச்சு. இத்தன பேருக்குச் சாப்பாடு போடற பெட்டி இவனுக்கு எதுக்கு? இது என்னிடத்தில் தான் இருக்கணும்னு சொல்லி அந்தப் பெட்டிய மாமாகிட்டேருந்து பிடுங்கிகிட்டாராம். ராஜாவுக்கு எதிரா மாமாவாலே என்ன செய்ய முடியும்?மாமா மாமிக்கு வருத்தம். இதுக்கு ஒரு முடிவே கிடையாதான்னு நினச்சாங்க.

ஒரு வாரமாச்சு. மாமாவிடம் மாமி கேட்டார்கள். மறுபடியும் நாம ஏன் குண்டுக்காக்காவிடம்  உதவி கேட்கக்கூடாது? என்று   உடனே மாமா ஒத்துக்கிட்டார்.


மறுநாள் மறுபடி மாமா குண்டுக்காக்கா வீட்டுக்குப் புறப்பட்டார். ரொம்ப தூரம் நடந்து அந்த மரவீட்டுக்குப் போய்ச்சேர்ந்தார்.
குண்டுக்காக்கா குண்டுக்காக்கான்னு கூப்பிட்டார். வீட்டுக்குள்ளே
இருந்து காக்கா வெளியே வந்துச்சு. வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு.   மனைவிக் காக்காவும் வாங்க வாங்கன்னு வரவேத்துச்சு.

 சாப்பிடறதுக்குப் பலகாரங்கள் எல்லாம் கொடுத்துச்சு. என்ன இவ்வளவு தூரம்னு குண்டுக்காக்கா கேட்டுச்சு. ராஜா இரும்புப் பெட்டிய பிடுங்கிக்கிட்டாருன்னு சொல்லி அழுதார். குண்டுக்காக்காவும் வருத்தப்பட்டது. ரொம்ப யோசிச்சது. வீட்டுக்குள்ளே போய் இன்னோரு இரும்புப்பெட்டியக் கொண்டுவந்து கொடுத்துச்சு. மறுபடி அந்தப்பெட்டியா? வேண்டாம்னாராம். அதுக்கு அந்தக் குண்டுக் காக்கா இது அந்த மாதிரி பெட்டியில்லே. இது வேறன்னு சொல்லிச்சாம். அப்படியா? இந்தப் பெட்டியிலே அப்படி என்ன விசேஷம்?னு கேட்டார்.

குண்டுக்காக்கா சொல்லிச்சு: - இந்தப் பெட்டியிலே ஒரே ஒரு பிரம்பு மட்டும் இருக்கு. இந்தப் பெட்டிகிட்டேபோய்  தப்பு செய்கிற எல்லாரையும் அடின்னு சொன்னா ஒரே நேரத்திலே எதிரிகள் எல்லாரையும் விளாசு விளாசுன்னு விளாசிரும். விடவே விடாது. நிறுத்துன்னு நீங்க சொன்னாதான் நிறுத்தும். இந்தப் பெட்டிய எடுத்துட்டுப் போய் ராஜாவுக்கு ஒரு பாடம் புகட்டுங்கன்னு சொல்லிச்சாம். மாமா நன்றி சொல்லிட்டு அந்தப் பெட்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தார். மனைவிகிட்டே அந்தப் பெட்டியின் விவரமெல்லம் சொன்னார்.

மறுநாள் மாமா ராஜாகிட்டே போய், ராஜாவே  நீங்களும் மந்திரிகளும் எல்லாப் படைவீரர்களும் என் வீட்டிற்கு நாளைக்கு வந்து வடை பாயசத்தோடு சாப்பிடணும்னு கேட்டுக்கிட்டார். மறுபடி இன்னொரு பெட்டிய வச்சு சாப்பாடு போடப்போறான் போலிருக்கு. போன தடவை மாதிரி போய் சாப்பிட்டிட்டு பெட்டியப் பிடுங்கிக்கிட்டு வந்துட வேண்டியதுதான்னு ராஜா திட்டம் போட்டாரு. சாப்பிடவர்ரோம்னு ஒத்துக்கிட்டாரு.  நல்ல ருசியான உணவு கிடைக்கப் போகுது என்று மகிழ்ச்சியாக.


மறுநாள் ராஜாவும் மந்திரிகளும்,ஆயிரம் வீரர்களும் சாப்பிட மாமா வீட்டுக்கு வந்து சேர்ந்தாங்க. எல்லாரும் உக்காருங்க சாப்பாடு கொண்டுவர்ரேன்ன்னு சொல்லி உள்ளே போனார். இரும்புப் பெட்டிய எடுத்துட்டு வெளியே வந்தான். பெட்டிய எடுத்து எல்லார் முன்னாலேயும் வைத்தான்.பெட்டிக்கு பின்னாலிருந்துக்கிட்டு பெட்டியத் திறந்தான்.முன்னாலெ இருக்கிற அத்தனபேரையும் அடின்னான். 

அவ்வளவுதான். உள்ளே இருந்த பிரம்பு வெளியே வந்து எல்லாரையும் அடி அடின்னு அடிச்சுக்கிட்டே இருந்துச்சாம். எல்லாரும் ஐயோ ஐயோ காப்பாத்துங்கன்னு அலறிக்கிட்டே அங்கெயும் இங்கெயும் ஓடினாங்களாம். பிரம்பு எல்லாரையும் விளாசு விளாசுன்னு விளாசுச்சாம். ராஜாவுக்கும் நல்லா அடி விழுந்துச்சாம். ராஜா மன்னிப்புக்கேட்டுக்கிட்டாராம். அதுக்கப்புறம் தான் மாமா நிறுத்துன்னார்.  பிரம்பு அடிக்கிறதை நிறுத்திட்டு பெட்டிக்குள்ளே போயிடுச்சாம்.

அப்பறம் என்ன? ராஜா மாமாவிடம் வாங்கின ஆடு, பெட்டி எல்லாத்தையும் திருப்பிக்கொடுத்தாராம். மாமாவோட  சமாதானமாய்ப் போயிட்டாராம். ஒரு தொந்தரவும் தரலையாம்.
மாமா குண்டுக்காக்கா வீட்டுக்குப் போய் நன்றி சொல்லிட்டு வந்தாராம். ஆடு,பெட்டி இதயெல்லாம் வச்சுக்கிட்டு மாமாவும் ,மாமியும்  கஷ்டப்படுபவர்களுக்கு உதவி  ரொம்ப காலம் நன்றாக வாழ்ந்தார்களாம். 
                    ----------------
                                                      வாழ்க வளமுடன்.

54 கருத்துகள்:

  1. குழந்தைகளுக்குக் கதை சொல்லுகிறது போலவே அருமையான நடை. ரசித்தேன். கேட்கும் குழந்தைகளின் முகம் எங்கெங்கு பூவாய் மலரும் எப்போது சிரித்து மகிழ்வார்கள் என்பதையும் கற்பனையில் கண்டு களிக்க முடிந்தது:)!

    பதிலளிநீக்கு
  2. இந்த காக்காவோட மரவீடு பத்தி எனக்குள்ள பெரிய கற்பனை இருந்தது.. அங்க வீட்டுக்கான எல்லாப் பொருளும் சின்னச்சின்னதா முழுக்குக் கடை விளையாட்டு சாமான் மாதிரி இருக்கும்ன்னு..:)

    பதிலளிநீக்கு
  3. அன்பு ராமலக்ஷ்மி ,

    ஆர்வமாய் வந்து குண்டு காக்காய் படம் அனுப்பியதற்கு நன்றி.
    என் மனதில் உள்ளது உங்களுக்கு எப்படிதெரிந்தது!
    ஆச்சிரியமாய் உள்ளது. ராமலக்ஷ்மியின் குண்டு காக்காய் படம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதில் நினைத்தேன் வந்தே விட்டது.

    மகிழ்ச்சியில் திளைத்தேன்.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் குண்டு காக்காவை என் பதிவில் போட்டு விட்டேன்.
    நன்றி.

    உங்கள் பின்னூட்டங்கள் எப்போதும் உற்சாகம் தரும் எனக்கு.

    குழந்தைகளுக்கு இன்னும் கதையை நீட்டி அவர்கள் விரும்பும் பலகாரங்கள் மற்றும் சாமான்கள் மந்திர பெட்டியில் இருந்து வர செய்வேன்.
    என் பேத்தி சிறுமியாக இருக்கும் போது அவள் விரும்பும் சாக்லேட்
    மற்றும் அவள் விரும்பும் விளையாட்டு சாமான்கள் வரவழைத்து கொடுப்பேன், பூவாய் மலர்ந்து சிரிப்பாள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. குண்டுக் காக்கா கதை அருமை...
    நல்ல கருத்துடன் முடிந்தது...
    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 1)

    பதிலளிநீக்கு
  5. வா கயல்விழி, உன் கற்பனை நல்ல கற்பனை தான்.
    உன் அப்பா நீங்கள் ஏதாவது பொருள் கேட்டால் ’மஞ்ச பை எடு’ முழுக்கு கடைக்கு போய் வாங்கலாம் என்று கிண்டல் செய்வார்களே.

    உன் கற்பனை மரவீடு கிடைத்தால் அனுப்பு பதிவில் சேர்த்து விடலாம்.
    இது பதிவர் விருப்ப கதை.
    பதிவர்கள் பங்கு கொள்ளலாம்.
    முதல் பங்களிப்பு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  6. ஹை.. குண்டுக் காக்காவும் கதையும் ஜூப்பரு :-)

    பதிலளிநீக்கு
  7. சிறு குழந்தைகளுக்காக உங்களால் சொல்லப்பட்டுள்ள இந்தக்கதை வெகு அழகாக உள்ளது.

    நானும் ஒரு சிறு குழந்தை போலவே மாறி, வெகு சுவாரஸ்யமாகப் பொறுமையாகப் படித்து மகிழ்ந்தேன்.

    பாராட்டுக்கள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  8. கதைக்குப் பொருத்தமாக அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே:)! நன்றி கோமதிம்மா.

    எனக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்லப் பிடிக்கும். அனுபவமும் உண்டு. எனவே ஒன்றி வாசிக்க முடிந்தது.

    /அவர்கள் எந்த கேள்வியும் கேட்காமல் சந்தோஷமாய் கேட்டு மகிழ்ந்தார்கள்./

    ஆம். அதே நேரம் சொல்லப்படும் நீதியையும் மனதில் நிறுத்திடுவார்கள்.
    -------

    @ அமைதிச்சாரல்,
    நன்றி:)!

    பதிலளிநீக்கு
  9. குண்டு காக்காவின் மரவீடு அனுப்பியதற்கு நன்றி முத்துலெட்சுமி.
    அழகாய் இருக்கிறது வீடு.

    பதிலளிநீக்கு
  10. குழந்தைகளுக்குக் கதை சொல்ல நாமும் சிறிது நேரம் குழந்தையாகி விட வேண்டும். அந்தக் கதை சொல்லும் அனுபவமே அலாதி. குழந்தைகள் கதை கேட்கும் போது அவர்கள் முகத்தில் ஓடும் எக்ஸ்ப்ரெஷன்களைக் கவனித்து இருக்கிறீர்களா. ?

    பதிலளிநீக்கு
  11. குண்டுக் காக்கா கதை கேட்டேன். ரொம்ப சுவாரஸ்யமான கதை. கேட்பவர்களும் குழந்தைகளின் மனநிலைக்குப் போய் கேட்கும் சுவாரஸ்யத்துடன், கதையைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்று எனது பேரனுக்கும், பேத்திக்கும் இந்த அழகான கதையைச் சொல்லி அவரகள் சந்தோஷப் படுவதைப் பார்க்கப் போகிறேன். கோமதிம்மா சொன்ன கதை என்றும் ஒரு முன்னுரை கொடுத்துச் சொல்லப் போகிறேன். ஊருக்கு ஊர், தேசத்திற்கு தேசம் இப்படித் தான் கதைகள் கால் முளைத்துச் சுற்றி நம்மை மயக்கிக் கொண்டிருக்கின்றன.

    குண்டுக் காக்காவால் கூட வரவழைக்க முடியாத அந்தக் கொத்தவரங்கா வத்தலின் பெருமையோ பெருமை!

    நல்ல ஒரு குழந்தைக் கதையை அழகாகச் சொன்னமைக்கு குழந்தைகள் சார்பிலும் மிக்க நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  12. குழந்தைகளுக்கு கதை சொல்லுதல் தாளவியலா இன்பம் . ஆர்வம்குறயாத கண்களில் நாம் சொல்லிகொண்டிருக்கும் காக்கைகளும் முயலும் ஆமையும் நரியும் துள்ளி வட்டமிடுவதை பார்க்கலாம். தொலைகாட்சி. வீட்டுப்பாடம். இப்படி களைத்து தூங்கும் கண்களுக்குள் கதை கேட்பதென்பது கர்ப்பனைக்கெட்டாததாகிவிட்டது. கதை நடை சுவாரசியமிகுவாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. குழந்தைகளுக்கு அருமையான நீதிக்கதை.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. குண்டுக் காக்கா ரொம்பவே அருமைம்மா.. ரசித்தேன். ரோஷ்ணிக்குச் சொல்றேன்....

    பதிலளிநீக்கு
  15. கதை அப்புரம் அப்புரம் என்னன்னு படிச்சுட்டே இருக்கலாம் போல அவ்வளவு சுவார்சியம்.

    பதிலளிநீக்கு
  16. குண்டுக் காக்கா குட் காக்கா ;)

    பதிலளிநீக்கு
  17. வாங்க திண்டுக்கல் தனபாலன்,
    உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க ராமலக்ஷ்மி, குழந்தைகள் நீதிக்கதைகளை மனதில் இருத்திக் கொண்டால் அவர்கள் வருங்காலம்
    சிறப்பாய் இருக்கும்.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க அமைதிச்சாரல், குண்டுக்காக்காவையும், கதையையும் ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க G.M Balasubramaniam , சார், குழந்தைகள் கதை சொல்லும் போது ரசித்து கேட்பதை கண்டு மகிழ்ந்து இருக்கிறேன்.
    உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ஜீவி சார், உங்கள் பேரக்குழந்தைகளுக்கு கதை சொல்லிவிட்டீர்களா?
    அவர்களுக்கு கதை பிடித்து இருக்கா கதை.
    இந்த கதை என் கணவருக்கு அவர் எட்டாவது படிக்கும் போது அவர்களுடன் படித்த சக தோழர் சொன்னது. செவி வழி கதைதான்.

    //குண்டுக் காக்காவால் கூட வரவழைக்க முடியாத அந்தக் கொத்தவரங்கா வத்தலின் பெருமையோ பெருமை!//

    கடையில் வாங்கிய் வத்தலை விட வீட்டில் செய்யும் போது அதன் மதிப்பு பலமடங்கு அல்லாவா! அதன் ருசி மந்திரத்தால் கொண்டு வரும் கொத்தவரங்காவத்தலில் இருக்காது என்று குண்டு அக்கா வரவழைக்க வில்லை போலும்.

    உங்கள் வரவுக்கும், உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க யாழினி, நீங்கள் சொல்வது உண்மைதான். குழந்தைகளுக்கு கதை சொல்வது அளவில்லா இன்பம் தான்.

    //தொலைகாட்சி. வீட்டுப்பாடம். இப்படி களைத்து தூங்கும் கண்களுக்குள் கதை கேட்பதென்பது கர்ப்பனைக்கெட்டாததாகிவிட்டது//

    இப்போது கதை கேட்கும் சூழல் இல்லை என்றாலும் கதை கேட்க்கும் ஆர்வமும் படிக்கும் ஆர்வமும் மறுபடி திரும்பி வரும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க மாதேவி, உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க வெங்கட், ரோஷ்ணிக்கு இந்த கதையை சொல்வது அறிந்து மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க லக்ஷ்மி அக்கா, கதையை ரசித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க கோபிநாத், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. குண்டு காக்கா கதை மிகவும் அருமை... குழைந்தைக்களுக்கு சொல்லும் விதத்தில் சொல்லிருப்பது இன்னும் அருமை....
    இன்னும் பலகதைகள் சொல்லுங்கள் ...நல்ல பகிர்வு கோமதியம்மா ..... அதிலும் குண்டு காக்கா வீடு ரொம்ப அழகாகவும் கற்பனைத்திறன் மிகுந்ததாவும் இருந்தது.....

    பதிலளிநீக்கு
  28. வாங்க விஜிபார்த்திபன், கதை, குண்டு காக்கா வீடு எல்லாம் ரசித்தமைக்கு நன்றி.
    உங்கள் உற்சாகமான பின்னூட்டம் கதை எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.
    நன்றி விஜி.

    பதிலளிநீக்கு
  29. பொறுமையாக, பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லுவதுபோலவே, விளக்கமாக வரிவரியாக அனுபவித்து எழுதிருக்கீங்க. ரசிச்சு வாசிச்சேன். அதுவும் அந்த காக்கா படமும் (கதையின் கேரக்டருக்குப் பொருத்தமா, குண்டாகவும் இருக்கு!!), காக்கா வீடு படமும் சூப்பர்!!

    (இந்தக் கதையை என் சின்னவனுக்குச் சொல்ல ஆசை. ஆனால், “காக்கா எப்படிம்மா பேசும்?” என்று ஆரம்பித்து, அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லணுமேன்னு பயம்மாருக்கு) :-)))

    பதிலளிநீக்கு
  30. ஒரு குட்டிப்பாப்பாவிடம் கதை கேட்ட உணர்வுங்க நல்லா இருந்தது நன்றி.

    கோவிக்காதிங்க சும்மா சொன்னேன் குட்டிப் பாப்பா என்று.

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஹுஸைனம்மா, காக்கா கதையை ரசித்தமைக்கு நன்றி.

    குண்டு காக்கா பொருத்தமாய் தந்தவர் ராமலக்ஷ்மி, காக்காவீடு தந்தவர் முத்துலெட்சுமி இருவருக்கும் உங்கள் பாராட்டை தெரிவித்து விடுகிறேன்.

    சின்னவருக்கு சொல்லுங்கள்.கார்ட்டூனில் வரும் விலங்குகள், பறவைகள் எல்லாம் பேசுகிறது. அதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அதனால் பயமில்லாமல் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  32. வாங்க சசிகலா, குட்டிப்பாப்பா கதை நல்லா இருக்கா?
    குட்டிப்பாப்பாவிற்கு மகிழ்ச்சி.
    தொடர்வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. படிக்கப்படிக்க சுவராஸ்யம். மிகவும் அருமையான கதை. நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  34. வாங்க இந்திரா, படிக்கப்படிக்க சுவராஸ்யமாக இருந்த்தா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி இந்திரா.

    பதிலளிநீக்கு
  35. குண்டுக்காக்கா கதை குழந்தைகளாய் மாறி பெரியவர்களையும் ரசிக்க வைத்திருக்கிறது. நல்ல கதை கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
  36. வாங்க பாசமலர், எங்கே கொஞ்சநாளாய் காணோம்?
    குண்டுக்காக்கா கதையை ரசித்தமைக்கு நன்றி மலர்.

    பதிலளிநீக்கு
  37. மௌனவிரதத்தின் மகத்துவத்தையும் அதனால் உண்டான பிரச்சனைகளையும் அதைத் தொடர்ந்து வந்த இந்த குண்டுகாக்கா கதையையும் மிகவும் ரசித்தேன். இப்படி அருமை அருமையாய் கதை சொல்லும் பாட்டி, ஒரு நாள் மௌனவிரதம் என்றாலும் அது குழந்தைகளுக்கு இழப்புதானே?

    மிகவும் இயல்பாக, அழகாக, குழந்தைகளுக்குச் சொல்வது போலவே எழுதியிருக்கிறீர்கள். வாசிக்கும்போது நானும் குழந்தையாய் மாறிப்போனேன் என்பது உண்மை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  38. வாங்க கீதமஞ்சரி, மெளனவிரதப்பதிவையும் குண்டுக்காக்கா கதையையும் படித்து உங்கள் அழகான கருத்தை விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  39. எங்கள் வீட்டு குட்டிக்கு சொல்ல ஒரு அருமையான கதை தந்ததுக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  40. நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

    ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
    http://www.YahooAds.in/publisher_join.php

    பதிலளிநீக்கு
  41. குண்டுக்காக்கா கதை ! எங்கள் இல்லத்தில் பெரிய குழந்தைகளும் ஸ்கைப்பில் ரசனையாக கேட்பார்கள்.. அருமையான பகிர்வுக்குப்
    பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  42. ஆஹா...... கதை நல்லத்தான் இருக்கு. சின்ன வயசுல பாட்டி கிட்ட கதை கேட்ட மாதிரி மனசுல ஒரு நெகிழ்ச்சி. சந்திப்போம். நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வரலாமே?

    http://newsigaram.blogspot.com

    பதிலளிநீக்கு
  43. .
    குழந்தைகளுக்கு அருமையான நீதிக்கதை.

    பதிலளிநீக்கு
  44. வாங்க சிகரம் பாரதி , உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்கள் தளத்தில் குறுங் கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  45. வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. அந்த குண்டுக்காக்கா வீட்டுக்கு
    எப்படி போகணும்?

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  47. அந்த குண்டுக்காக்கா வீட்டுக்கு
    எப்படி போகணும்?

    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  48. வாங்க சகாதேவன் சார், குண்டு காக்கா வீட்டு முகவரியா? பக்கத்தில் ஒரு மலைஅடிவாரம் இருக்கா? அங்கு தான் குண்டு காக்கா மர வீடு இருக்கு.

    அங்கு போய் என்ன வாங்க போகிறீரிகள்?

    மக்கள் பசிப்பிணியைப் போக்க மந்திரபெட்டியா?
    பேராசைக்காரர்களை அடித்து விரட்ட மந்திரக்கோலா?

    உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  49. இந்த குண்டு காக்கா கதையை இன்றுதான் படிக்கிறேன்.   சுவாரஸ்யம்.   காக்காவின் மரவீடு அழகு.  இத்தனையும் தரமுடிந்த காக்காவால் ஒரு கொத்தவரங்காய் வத்தல் வரவழைக்க முடியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      இத்தனையும் தர முடிந்த காக்காவால் ஒரு கொத்தவரங்காய் வத்தல்லை கொண்டு வர முடியாது என்பது தான் கொத்த்வரங்காய் வத்தலின் சிறப்பு.
      அதுவும் வீட்டிலேயே தயார் செய்த வத்தல், கடையில் வாங்கியது இல்லை.
      மர வீட்டு நன்றாக இருக்கா? கதை எழுதிய போது குண்டு காக்கா படம் எடுக்க முடியவில்லை என்னால், ராமலக்ஷ்மிதான் காக்கா படம் கொடுத்தார்.

      கதையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      //குண்டுக் காக்காவால் கூட வரவழைக்க முடியாத அந்தக் கொத்தவரங்கா வத்தலின் பெருமையோ பெருமை!//

      ஜீவி சார் கருத்தை படித்தீர்களா?

      நீக்கு
    2. பின்னூட்டம் போட்டபிறகு படித்தேன்.   குறையொன்றுமில்லை லட்சுமி அம்மா பக்கத்துக்கும் சென்று வந்தேன்.   அவர்கள் பல வருடங்களாக பதிவே போடவில்லை.  மறுபடியும் விசாரித்து வந்திருக்கிறேன்!

      நீக்கு
    3. ஆமாம் ஸ்ரீராம், நானும் இரண்டு மூன்று முறை அவர் பதிவுகளில் கேட்டேன். அமைதி சாரல் கிட்டே கேட்டேன். அவர்கள் வயது மிகுதியால் எழுதவில்லை, மகனுடன் நன்றாக இருப்பதாய் சொன்னார்கள்.
      இந்த பதிவுக்கு கருத்து சொன்ன நிறைய பேர் இப்போது பதிவு எழுதுவது இல்லை.
      மீள் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  50. ஹா ஹா ஹா கோமதி அக்கா, கொஞ்சம் கொஞ்சமா வாசிக்க தொடங்கி இப்போதான் முடிச்சேன்... நல்ல கதை, குழந்தைகளுக்குச் சொல்லலாம், நான் கேள்விப்பட்டதில்லை.
    குண்டுக்காக்காவும் கொத்தவரை வத்தலுக்கும் இதில் என்ன சம்பந்தம் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //குண்டுக்காக்காவும் கொத்தவரை வத்தலுக்கும் இதில் என்ன சம்பந்தம் ஹா ஹா ஹா//

      அதிரா செய்த கொத்தவரை வற்றலை மந்திரத்தால், மாயத்தால் கூட கொண்டு வர முடியாது என்பதுதான் சம்பந்தம்.

      கொத்தவரை வற்றலின் சிறப்பையும் சொல்லவேண்டும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது என்பதும் கதையின் நீதி.

      கதையை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.

      நீக்கு