விநாயகர் விளையாடிய விளையாட்டு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் விளையாடிய விளையாட்டு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஜூலை, 2017

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் - திடியன்

வழியில் இருக்கும் விநாயகரை வணங்காமல் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டையும், நாங்கள் முதலில் வணங்க வந்த  அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதரைத் தரிசனம்  செய்தோமா என்பது எல்லாம் அடுத்த பதிவில். என்றேன்  முந்திய பதிவு திடியன் மலைக் கோவில்  நிறைவுப் பகுதியில்.

மலைக் கோவிலை விட்டு இறங்கிய பின் மலையடிவாரத்தில் உள்ள கோபாலசாமி கோவிலைப் பார்த்துவிட்டுச்   சரிவில் இறங்கி வந்தால் விநாயகர் மேடையோ, மரமோ இல்லாமல் தரையில் ஒரு வீட்டின் பக்கம் காட்சி தருகிறார்.

விநாயகரை பார்த்து போட்டோ எடுத்து விட்டு இவரை வணங்கி விட்டுத் தான் மேலே ஏற வேண்டும் போல,  நாம் இப்போது பார்க்கிறோம் என்று சொன்னேன். என் கணவர் சீக்கிரம் ஏறு கைலாசநாதர் கோவில் போக வேண்டும் என்றார்கள் . ஒரு நிமிடம் இருங்கள் என்று சொல்லி விட்டு   வேப்பமரத்தடியில் இருக்கும்  பசு மாடுகளைப் பார்த்து  ஒரு கும்பிடு போட்டு போட்டோ எடுத்துக் கொண்டேன், அப்புறம் கிராம வறுமை ஓழிப்பு சங்க அலுவலகத்தையும்   போட்டோ எடுத்துவிட்டு   கைலாசநாதர் கோவில் போனோம். 

போய்ப் பார்த்தால் நடை சார்த்தி இருந்தது.   ஆலமரத்தடியில் காவி வேஷ்டி காவித் துண்டு போட்டுக்கொண்டு ஒருவர் உட்கார்ந்து இருந்தார் அவரிடம் "கோவில் இனி எப்போது திறக்கும்?" என்று கேட்டோம். அதற்கு அவர்," இனி நாலு மணிக்குத் தான் திறப்பார்கள். நானும் சிவனடியார் தான் கிரிவலம் வந்தேன், விபூதி தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். அவரிடம் விபூதியை   வாங்கிப்  பூசிக் கொண்டு "சரி போகலாம், இன்னொரு முறை வரலாம்" என்று கிளம்பினோம்.

அன்று ஞாயிறு ஆனதால் காலை உணவு இரண்டு பேருக்கும் கிடையாது விரதம், அதனால் , காப்பி, பால், பிளாஸ்கில் எடுத்து வந்ததைக்  குடித்து விட்டு கிளம்பலாம் என்று நினைத்தோம் , அதன் படி  குடித்து விட்டுக் கிளம்பும் போது நான்கு ஆலமரங்கள் இருப்பதைப் போட்டோ எடுக்கலாம்   என்ற எண்ணம் வந்து அலைபேசியை  எடுக்க கைப்பையைப் பார்த்தால் அதில் இல்லை காரிலிருந்து  கீழே இறங்கிப் பார்த்தாலும் இல்லை. 

 கடைசியாகப்  பிள்ளையாரையும்,  பசுமாடுகளையும் எடுத்தோமே ! அங்கு விழுந்து இருக்கலாம் அங்கு போய்ப் பார்ப்போம் என்று போய்ப் பார்த்தோம், அங்கு தேடுவதைப் பார்த்துவிட்டு இரண்டு மூன்று பெண்கள், ஆண்கள் எல்லாம் "என்ன தேடுகிறீர்கள்?" என்றார்கள். "செல்போன்" என்றேன். ஒருவர் ,"நீங்கள்   கோபாலசாமி கோவிலை போட்டோ எடுத்ததைப் பார்த்தேனே"  என்றார், ஒரு அம்மா பசுமாட்டை கும்பிட்டுவிட்டுப் போட்டோ எடுத்தார்கள் பார்த்தேன் என்றார்கள்,   ஒரு பெண் உங்கள் போனுக்கு அழைத்துப் பாருங்கள் என்றார்கள். என் கணவரின் செல்லில் இருந்து அழைத்தால் ,   "சுவிட்ச் ஆப்   செய்யப்பட்டுள்ளது "என்று வருகிறது. 

அங்கிருந்த  ஒரு அம்மா "காருக்குள் நன்கு தேடுங்கள்  நீங்கள் பக்தியாக இப்படி கும்பிட்டு வந்து இருக்கும்போது கிடைக்காமல் போகாது" என்று சொன்னார்கள். (அந்த அம்மா இஸ்லாமிய பெண்மணி) . மீண்டும் விநாயகரை வணங்கிவிட்டுக் காரில்  தேடினோம். காரில்  சீட்டுக்கு அடியில் கிடந்தது. 

எத்தனை முறை தேடினோம் கண்ணுக்கு தெரியவில்லை,  விநாயகருக்கு வேண்டுதல் தெரிவித்துத் தேடியவுடன் கிடைத்தது. மறைத்துக் காட்டி விளையாடிய விநாயகருக்கு நன்றி சொன்னேன்.  அங்கு எங்களுக்கு ஆறுதலாகப் பேசியவர்களுக்கு  நன்றிகள் சொல்லிக் கிளம்பும் போது ,  "எந்த ஊரிலிருந்து  வருகிறீர்கள்? " என்று கேட்டார்கள். "நாங்கள் மதுரையிலிருந்து வருகிறோம், கைலாசநாதர் கோவிலுக்கு வந்தோம்- பூட்டி இருந்தது அதற்குள் மலைக்கோவில் போய் வரலாம் என்று போனோம். வர நேரமாகி விட்டதால் நடை சாற்றி விட்டார்கள். பார்க்க முடியவில்லை" என்று சொன்னோம்.

எங்கிருந்து  வருகிறீர்கள் ? என்று கேட்ட பெண், "என் வீட்டுக்காரர் தான் குருக்கள்" என்று சொன்னார்கள் "போன் நம்பர் தருகிறேன், போன் செய்தால் வருவார்கள், பூட்டி உள்ளதே திறந்து காட்ட மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் , எப்போது வந்தாலும் போன் செய்யுங்கள் " என்று போன் நம்பர் கொடுத்தார்.

போன் செய்தோம் குருக்களுக்கு.  அவர் வருவதாய்ச் சொன்னார். குருக்களின் மனைவி," கோவில் வாசலில் போய் இருங்கள் வருவார், இங்கு வந்தால் நான் அங்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார்.  

வெங்கட்ராமன் குருக்கள் போன் நம்பர் - 9791994805 .

விநாயகரைக் கும்பிடாமல் மலைக்கோவில் ஏறியதற்குச் செல்போனை மறைத்துக்  கொஞ்சம் மன சஞ்சலத்தைக் கொடுத்துப்  பின் அவரே அதை சரி செய்தார்.   (மனசஞ்சலத்திற்குக் காரணம் அந்த போன் மகன் வாங்கித்தந்தது. பேரன் படங்கள், எல்லோரது( நட்பு, சுற்றம்) போன் நம்பர்கள் அதில்தான்.மலைக்கோயிலில் எடுத்த படங்கள் எல்லாம் போச்சே என்று) 


கைலாசநாதரை பார்க்காமல் போகக் கூடாது என்று எங்களை மீண்டும் அவர் அருகே வரவழைத்து   குருக்கள் மனைவியைப் பார்க்க வைத்து  எப்படி விளையாடி இருக்கிறார்  !

கோவில் வாசலில் விபூதி கொடுத்த சிவனடியாரும் வந்துவிட்டார். "செல் போன் கிடைத்ததா? "என்று கேட்டுக் கொண்டு.  அவரிடம் விபூதி வாங்கி அணிந்து கொண்டதும் நல்லதே செய்தது.

குருக்கள் வந்தார்  கோவிலைத் திறந்து  கோவில் வரலாறு சொல்லி சிறப்பாகப் பூஜை செய்து வைத்தார். கோவிலுக்குப் பக்கத்தில் சமுதாயக்கூடத்தில் விழாவிற்கு வந்தவர்களும் எங்களுடன் வந்து வணங்கினார்கள்.



அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திடியன் மலை (உசிலம்பட்டி) – மதுரை மாவட்டம்.

சுவாமி  பெயர்:      கைலாசநாதர் , 
அம்மன் பெயர்:   பெரிய நாயகி,
தலவிருட்சம்:        நெய்கொட்டாமரம்.
தீர்த்தம்:                  பொற்றாமரைக்குளம்.

மதுரையிலிருந்து தேனி சாலையில் 31 கி.மீ தொலைவில் உள்ளது.

1000, 2000 வருடத்திற்கு முன்பே உள்ள பழைமையான கோவில் இது என்கிறார்கள் இந்தக் கோவில் 'தென்திருவண்ணாமலை' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை போய் கிரிவலம் வர முடியாதவர்கள், இங்கு  கிரிவலம் வந்தால் திருவண்ணாமலையில் செய்த புண்ணியம் கிடைக்குமாம். 

அகஸ்தியர் பூஜை செய்த தலம்.

ராமர், அசுவமேத யாகம் செய்யும்போது குதிரை எங்கெல்லாம் ஓய்வு எடுக்கிறதோ அங்கெல்லாம்  காசிலிங்கம் வைத்து வழிபடுவாராம்.
இங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் அருகே ஓய்வு எடுத்ததால்  அங்கு காசிலிங்கம் வைத்து வழிபட்டாராம்.  வெகுகாலத்திற்குப் பின் இங்கு ஆண்ட மன்னர்  ஒருவர் இங்கு கோவில் கட்டினார் என்று சொன்னார்,குருக்கள்.

தட்சிணாமூர்த்தி இங்கு 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து காட்சி தருவது மிகவும் விஷேசம் என்றார்.  மற்றொரு சிறப்பு காசியிலிருந்து கொண்டு வரப்பட்டது. தட்சிணாமூர்த்தியை 16 முறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடுமாம் .


தலவிருட்சம்

மலைக்கோவில் மேலிருந்து எடுத்த படம் கைலாச நாதர் கோவிலும், பொற்றாமரைக் குளமும்




நந்தி மண்டபத்தின் தூண்களில்  அடியார்களின் சிலைகள் வடிக்கப் பட்டுள்ளது.
கோவிலைக் கட்டிய மன்னர் பக்கத்தில் தன் தேவியுடன்
சுவாமி சன்னதி வாசல் மேல் இருந்த வாசகம்  

 இரண்டு புறமும் நாகங்களுடன் நடுவில் முக்குறுணி விநாயகர்  இவருக்குப் பின்னால் கடைசியில் ஈசான பிள்ளையார் இருக்கிறார்.
. பொட்டு வைத்துக் காட்டி உள்ளார்கள் 14 சித்தர்களை.
.
சுவாமி சன்னதி  விமானம்
 
தலவிருட்சத்தின் பக்கத்தில் முருகன் - வள்ளி தெய்வானையுடன்.


அஷ்டபுஜதுர்க்கை
அம்மன் சன்னதி விமானம்

சுவாமி விமானம், அம்மன் விமானம்
கோவிலிருந்து திடியன் மலை தெரிகிறது.
                                              
                                                                  நவக்கிரக சன்னதி

அதன் அருகில் பைரவர்

என்ன விழா என்று தெரியவில்லை   

கைலாசநாதரைப் பார்க்க வந்த போது கோவில் நடை சாத்தி இருந்தது, இங்கு இருந்த பெரியவர்தான் மேலே மலைக்கு போய் வாருங்கள், அதற்குள் குருக்கள் வந்து விடுவார் என்று சொன்னார். அவரிடம் விடைபெற்று வரப் போனபோது இன்னும் கொஞ்ச நேரத்தில் விழா முடிந்து விடும் சாப்பிட்டு   விட்டுப் போகலாம்  என்று உபசரித்தார்.  அன்பாய் சொன்னவரிடம் விடைபெற்று கிளம்பியபோது  ஐஸ் வண்டி வந்தது. விழா வீட்டுக் குழந்தைகள் வாங்கினார்கள். அதைப் பார்த்து  நாங்களும் குழந்தைகளாகி ஐஸ் வாங்கிச்  சுவைத்தோம். வெயிலுக்கு இதமாய் இருந்தது. ஐஸ் சாப்பிட்டுப் பல வருடங்களாகிவிட்டன.

நாங்கள் கைலாசநாதரை வணங்கிய மகிழ்ச்சியுடன்  அன்று பெளர்ணமி என்பதால் காரிலேயே கிரிவலம் வந்தோம்.  கிரிவலத்தில் நிறைய கோவில்கள் இருக்கிறது.  அங்கு பார்த்த அருள்மிகு நல்லூத்து கருப்பண்ணசாமி கோவில் அடுத்த பதிவில். மிக அழகிய கோவில்.

கைலாசநாதர் கோவிலுக்கு இன்னொரு முறை வரவேண்டும். விநாயகருக்கு வேண்டுதல் இருக்கே! நம்மை மீண்டும் அவரைப் பார்க்க வைத்ததும் அவர் விளையாட்டு தானே!
வாழ்க  வளமுடன்.