கந்த சஷ்டி சிறப்பு பதிவு-3 மருதமலை கோயிலும் சில நினைவுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்த சஷ்டி சிறப்பு பதிவு-3 மருதமலை கோயிலும் சில நினைவுகளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 அக்டோபர், 2022

மருதமலை மாமணியே!


முருகனைச் சிந்திப்போம் -3


மருதமலை

கந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம். 
 இன்று மருதமலை முருகையா பாடலை ரேடியோ சிட்டியில் 
வைத்தார்கள். மதுரை சோமு அவர்களின் குரலும், பாடல்
 வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையும் எல்லாம் சேர்ந்து கேட்கும் போது கண்ணில் நீர்துளிர்க்க வைக்கும் பாடல்.


இந்தப் பாடலைத்தான் இன்று  பகிர எண்ணி இருந்தேன். கீதா 
அவர்களின் பதிவு அதைக் கண்டிப்பாய் போட வேண்டும் 
எண்ணத்தை வளர்த்து விட்டது. ஸ்ரீராமுக்கு நன்றி சொல்ல வேண்டும். 
 அவர் வியாழன் எழுதிய பதிவு நிறைய பேரை எழுத 
ஊக்கப்படுத்துகிறது. நன்றி ஸ்ரீராம், நன்றி கீதா.

இந்தப் பாடலில் 'கோடிகள் கிடைத்தாலும் கோமகனை மறவேன்' என்று
வரிகள் வரும். இன்பம் வந்தால் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால்
இறைவனை நினைப்பது இல்லாமல்  எப்போதும் அவரை நினைக்க
 வேண்டும். இன்பத்திற்கு நன்றி சொல்லி வணங்க வேண்டும், துன்பத்தில்
 என்னைவிட அதிகமாய் அடியார்கள் துன்பங்களை அனுபவித்து 
இருக்கிறார்கள்  என் துன்பம் குறைவே என்று அவரை சரண்
 அடைந்து விட வேண்டும். 


கோவையில் சிறு வயதில் இருந்த போது  66லிருந்து
 70 வரை கோவையில் சிறு வயதில் இருந்தேன். அப்போது
 அடிக்கடி மருதமலை முருகனை தரிசனம் 
செய்வோம். அதன் பின்   கணவர் ஊர் கோவை
 என்பதால் கோவைக்கு செல்லும் பொழுது எல்லாம்
 மருதமலை முருகன் தரிசனம் உண்டு.

காலை சீக்கீரம் போனால் பாம்பாட்டி சித்தரை கீழே போய்
 தரிசனம் செய்வோம்.மாலை போனால் மருதாசல மூர்த்தியை மட்டும் தரிசனம் செய்து வந்து விடுவோம்.



2012 ம் வருடம் மருதமலை போன போது எடுத்த படங்கள்.
2012 ம் வருடத்திற்கு பின் போகவே இல்லை. கோபுரம் கட்ட 
மலையை நிறைய வெட்டி இருக்கிறார்கள். மலை தொடரில்
 அமர்ந்து நானும் என் கணவரும் படங்கள் எடுத்துக் 
கொண்டோம்.(அவை நினைவுகளில்)

இராஜ கோபுரம் கட்டி கொண்டு இருக்கும் போது 
எடுத்த படங்கள் நான் போட்டு இருப்பது

என் தம்பி சில நாட்கள் முன் மகளை கல்லூரியில் 
சேர்க்க போய் இருந்தான்.அப்போது மருதமலை போய் வந்த
 படங்கள் அனுப்பி இருந்தான்.அவன் போனபோது 
தங்கத்தேர் பவனி வந்ததை காணொளி எடுத்து
அனுப்பி இருந்தான்.




பழைய கல்வெட்டு 



//சிறந்த முருக பக்தராக விளங்கிய தேவர் ஒவ்வொரு படத்திலும்
கிடைக்கும் லாபத்தை நான்காகப் பிரிப்பார். இதில் ஒரு பங்கு
முருகனுக்கு வழங்குவார். 

முருகன் அருளால்தான் தனக்கு வெற்றி மேல் வெற்றி
 கிட்டுவதாக தேவர் எண்ணினார். அதனால், லாபத்தில் கால்
 பகுதியை, முருகன் கோவில் திருப்பணிகளுக்கு வழங்கினார். பழனி கோவில், மருதமலை முருகன் கோவில் உள்பட பல
 கோவில்கள் இதனால் பலன் அடைந்தன.
 ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொரு பங்கை, 
தனக்கு ஆயிரம்,இரண்டாயிரம் என்று பணம் கொடுத்து, 
திரைப் படம் எடுக்க 10 ஆயிரம் ரூபாயுடன்சென்னைக்கு அனுப்பி வைத்த பழைய நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 
மற்றொரு பங்கை நன்கொடைகளாக வழங்கினார். தேவர்,
காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கிவிட்டு வேலை தொடங்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு
 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார்.//

நன்றி- விக்கிப் பீடியா.



சீர்காழி கோவிந்த ராஜன் அவர்கள் பாடிய 'வரம் தருவாய் 
முருகா' என்ற பாடலும் மிகவும் பிடித்த பாடல். அவரை
 வாழ்நாள் எல்லாம் மறக்காமல் இருக்க அவர் தானே அருள
 வேண்டும். மாணிக்க வாசகர் சொன்னது போல்,
'//அவனருளாலே  அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும் ஓயவுரைப் பன்யான்'//

முருகன் அருள் இருந்தால் வாழ்நாள் எல்லாம் அவரை 
வணங்கும் பேறு கிடைக்கும்.

அருணகிரிநாதர் அருளிய மருதமலை முருகன் திருப்புகழ்:-

திரிபுரம் அதனை ஒரு நொடியதனில்
எரிசெய் தருளிய சிவன் வாழ்வே!
சினமுடைஅசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி விடுவோனே!
பருவரை யதனை உருவிட எறியும்
அறுமுகமுடைய வடிவேலா!
பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

மருதமலை ஆண்டவனே போற்றி போற்றி!
மருதாசலமூர்த்தீ அனைவருக்கும்  எல்லோருக்கும் எல்லா
 நலங்களும் அருள்வாய்.



புதியதாக கட்டிய இராஜ கோபுர படம் - கூகுள் நன்றி
.

//நான் திருச்செந்தூர் சஷ்டிகவசம் மட்டுமே  படித்து 
இருக்கிறேன், மற்ற படைவீடுகளின் சஷ்டி கவசங்களைத் தேடி
 இந்த கந்த சஷ்டி நாளில் படிக்க வேண்டும் என்று நினைத்து
இருக்கிறேன்.

மற்ற ஐந்து படை வீடுகளுக்கான கவச நூல்கள் பின்வருமாறு,
திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்; பழனிப்பதி வாழ் 
அப்பன் கவசம்;திருவேரகம் வாழ் தேவன் கவசம்; 
குன்றுதோறாடும் முருகன் கவசம்;பழமுதிர்ச் சோலை
 பண்டிதன் கவசம் என்பன.//

திருப்பரங்குன்றுறை திருமகன் கவசம்  இன்று இந்த கவசம் 

படித்தேன். போனபதிவில் பழனிப்பதிவாழ் அப்பன் கவசம் 

படித்தேன் அதன் சுட்டி கொடுத்து இருந்தேன்.


திருவேரகம் வாழ் தேவன் கவசம்;  சுவாமி மலை கவசம் 

படித்தேன்.

இன்று என் மாமனார் அவர்களுக்கு பிறந்த நாள். தீபாவளி

முடிந்து இரண்டு நாளில் அவர்கள் பிறந்த நாள் வரும்.

ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு

குடும்பத்தினர் அனைவரும் சென்று வருவோம்.

மாமாவின் 100வது பிறந்த நாளுக்கு திரு சுகி.சிவம் அவர்கள் 

மாமா அவர்களை பற்றி பேசியது இருக்கிறது இந்த

 காணொளியில் .

மாமா கந்தசஷ்டிக்கு கோவை ஆர்.எஸ். புரம் இரத்தினவிநாயகர்

 கோயிலில் கந்த புராணம் தொடர் சொற்பொழிவு செய்வார்கள்.

//கந்தர்சஷ்டி விழா-
-------------------------
தொடர்சொற்பொழிவு-1951-ல்
----------------------------------------
எமது தந்தையார் திரு. எஸ் அருணாசலம் பிள்ளையவர்கள்
ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் கோவை ஆர்.எஸ்.புரம்
அருள்மிகு இரத்தினவிநாயகர் திருக்கோயிலில் கந்தசஷ்டித்
திருவிழாவை முன்னிட்டுக் கந்தபுராணத் தொடர்சொற்பொழிவு ஆற்றினார்கள். அவ்விழா அழைப்பிதழை இங்குக் காணலாம்.
இன்று கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. எமது தந்தையாருக்கு
இன்று 111ஆவது பிறந்தநாளுங்கூட.

அதனை முன்னிட்டு அவர்களை வணங்கி நினைவுகூருகிறோம்.//

இப்படி என் கணவர் நவம்பர் 15ம் தேதி 2020 முகநூலில் போட்ட

கடைசி பதிவு.

மருதமலை ஆண்டவர் அனைவருக்கும் உடல் நலம், மனநலத்தை

அருள வேண்டும்.


         வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்  !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------