செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஊட்டிக்கு ஒரு சமயச் சுற்றுலா




கோடை விடுமுறைக்காலம் இது. விடுமுறையில் வீட்டிலிருக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டில்கட்டி மேய்க்க முடியவில்லையே என்று அங்கலாய்க்கும் நேரம் .
விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு போகலாமா? அல்லது உறவினர்களை அழைத்துக் கொண்டு எங்காவது மகிழ்ச்சியாய் சென்று வரலாமா?- என்று வீட்டில் எல்லோரும் கலந்து ஆலோசிக்கும் நேரம்.அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றமாதிரி விடுமுறையை கழிக்க எங்கு போகலாம் என்று முடிவுசெய்து கொண்டு இருக்கும் காலம் இது. வெயிலுக்கு இதமாய் , கண்ணுக்கு குளிர்ச்சியாய் ,கருத்துக்கு மகிழ்ச்சியாய் செல்ல ஒரு இடம் மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி . மே மாதம் மலர்க்கண்காட்சி நடைபெறும்.கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.




வாழ்க்கை ஒரே மாதிரி ஓடிக் கொண்டு இருந்தால் (வீடு,வேலை,படிப்பு) சிலநேரம் அலுப்பு தட்டிவிடும்.நம் மனச்சோர்வை அகற்றி, நம்மை மீண்டும் புத்துண்ர்வு மிக்கவர்களாய் மாற்ற உதவுவது சுற்றுலா.
எனக்கு சிறு வயதிலிருந்தே சுற்றுலாவில் மோகம் உண்டு. அப்பா எந்த ஊரில்வேலை பார்த்தாலும் அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போவதற்குள் அந்த ஊரின் சிறப்பான இடங்கள் என்னஎன்று தெரிந்து கொண்டு காட்டிவிடுவார்கள் எங்களுக்கு. நான் பள்ளியில் அழைத்து செல்லும் சுற்றுலாவிற்கு முதல் ஆளாய் பெயர் கொடுத்து விட்டு ,பிறகு வந்து வீட்டிலே சொல்வேன். கெஞ்சி, கொஞ்சி அனுமதி பெற்று விடுவேன்.

பள்ளியில் நான்காவது படிக்கும் போது என் முதல் சுற்றுலா ! பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறுக்கு அழைத்து சென்றார்கள். அதற்கு அம்மா தனியாக அனுப்ப முடியாது என்று பள்ளியில் அனுமதி பெற்று என்னோடு வந்தார்கள் . அப்போது தூத்துக்குடியில் இருந்தோம். காலை அழைத்துப் போய் மாலை வந்து விடுவோம்அதற்கே அம்மா வந்தார்கள். 5 ஆவதிலிருந்து நான் பள்ளியில் சுற்றுலா போவேன். அம்மா வரக் கூடாது என்றுசொன்னதாலும், என் தம்பி,தங்கைகளை பார்த்துக் கொள்ள வேண்டியதாலும் அவர்கள் வரவில்லை.

திருமணம் ஆன புதுதில் தனியாக எல்லோரும் ஊட்டி போவார்கள். நாங்கள் அப்படி போகவில்லை. என் கணவரின்இரு அண்ணன்களுடன் மலர்க் கண் காட்சிக்குப் போனோம். அடுத்த முறை மலர்க்கண்காட்சிக்கு மாமியார், மாமனார்,கணவரின் அண்ணன், அண்ணி, குழந்தைகள் என்று கூட்டமாய்ப் போனோம்.

மூன்றாவது தடவை, என் மகன் சிறுவனாய் இருந்தபோது மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் போனோம்.அந்த சமயம் என் மகள் வரமுடியவில்லை. அவள் தனது பெரிய அப்பா வீட்டுக்குப் போய் இருந்தாள். என்னை ரயிலில் கூட்டிப் போகவில்லை என்று வெகு நாட்கள் வரை சொல்லிக் கொண்டு இருந்தாள். மகன் ’ ஆமாம் ! என்னையும் எனக்கு விவரம் தெரியாத வயதில் அழைத்து போய் விட்டு வந்தீர்கள்’ என்பான்.

சென்ற ஆண்டு நாங்கள் இருவர் மட்டும் போனபோது குழந்தைகளையே நினைத்துக் கொண்டுஇருந்தோம். சிறு வயதில் போனபோது தனிமை கிடைக்கவில்லை, இப்போது தனிமையை விரும்பவில்லை மனது. குழந்தைகள்,உறவினர் இல்லாமல் தனியாக போகிறோமே என்று புலம்பும் மனது இப்போது... இரண்டு நாட்கள் ஓட்டலில் தங்கி அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த காரில் மலைகளின் ராணி உதகையின் அழகை காணச் சென்றோம். தொட்டபெட்டா, தாவரயியல் பூங்கா, குன்னூர் சிம்ஸன் பார்க், டால்பின்நோஸ் போய் மலை அழகையும், நதி பாயும் அழகையும் பார்த்தோம். தோடர்கள் குடியிருப்பு பார்த்தோம்ஊட்டியில் குழந்தைகள் ரயிலில் ஏறி குதுகலித்தோம். படகு சவாரி போய் மகிழ்ந்தோம்.





















ஊட்டியில் hotel safire garden view என்ற விடுதியில் தங்கினோம். ஓட்டல் அருகில் ரயில் நிலையம் உள்ளது.

இயற்கை அன்னையின் வழிபாடு முதல் நாள் , மறு நாள் எங்கள் ஊட்டி பயணம் ஆலய வழிபாடு ஆனது. . தங்கியிருந்த ஓட்டலில் பஸ்ஸில் போகலாம்
பக்கத்தில் கோயில் இருக்கிறது என்றார்கள் . நடக்கும் தூரத்தில் பேருந்து நிலையம்.. நாங்கள் பார்த்த கோயில்கள்:

அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் திருக்கோயில்
(vissalakshi viswanathar temple,ooty)









இக்கோயில் ,ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிலோ மீட்டர்தொலைவில் உள்ள ”காந்தல் “(காந்தள்?) என்ற ஊரில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. சிவபெருமான் ,அம்மன், பாலதண்டபாணி, நடராசர் முதலிய சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் மன்னன் ’என்ற சினிமாவினால் புகழ் பெற்றது என்றார்கள். ரஜினிகாந்த் பண்டரிபாயை தூக்கிக் கொண்டு படியில் இறங்கிக் கொண்டே பாடுவாரே ’அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ’ என்று ,அந்தக் காட்சி இங்கு தான் எடுக்கப்பட்டதாம்.

நாங்கள் போனபோது ஒரு கல்யாணம் நடந்து கொண்டு இருந்தது. கல்யாணங்கள் அங்கு செய்கிறார்கள்.கோவை பேரூர் இளைய சன்னிதானம் திருமிகு மருதாசல அடிகளாரின் பொறுப்பில் உள்ளதாய் சொன்னார்கள். இதைத் தட்சிணாமூர்த்திமடம் என்றும் சொல்கிறார்கள். இங்கு அன்னதானங்கள் நடை பெறுமாம்.
நவகிரகங்களுக்கு அழகாய் ஒன்பது பெரிய விளக்கு வைத்து இருந்தார்கள்.பக்கத்தில் சின்ன பாட்டில்களில் எண்ணெய் வைத்து இருந்தார்கள். அதை காசை போட்டு விட்டு நாமே எடுத்துக்கொள்ளலாம். எடுத்து அந்த விளக்குகளில் ஊற்றி வழிபடுகிறார்கள். கோயிலின் பின்புறம் மலைக் காட்சி அழகாய் இருக்கிறது. முன் காலத்தில் குறிஞ்சி நிலத்தில் காந்தள் மலர்கள் பூக்கும் என்று சொல்வார்கள் காந்தள் என்ற சொல்லே காந்தல் என்று மாறி இருக்கலாம். இக்கோயிலின் அருகில் ஒரு சர்ச் உள்ளது.

மாரியம்மன் கோயில்
(mariamman koil,ooty)




அடுத்து ஆட்டோக்காரரிடம் என்ன கோயில் இருக்கு பார்க்க என்று கேட்டால் மாரி அம்மன் கோயில் இருக்கிறது என்றார்,மான்குன்றம் என்னும் முருகன் கோயிலும் உள்ளது என்றார். சரி என்று அவரது ஆட்டோவில் முதலில் மாரி அம்மன் கோயில்போனோம். உதகை நகர் உள்ளேயே உள்ளது குதிரைப் பந்தய மைதானத்திற்கு அருகில் உள்ளது. மிகவும் வரசித்தியாய் உள்ள கோயிலாம்.பெரிய கோபுரம் உள்ளது. அம்மன் மிகவும் அழகாய் அலங்கரிக்கப் பட்டு இருந்தார்.


மான் குன்றம்(elk hill)
















அடுத்து நாங்கள் போனது எல்க்கில்(elc hill) மான் குன்றம். உதகையிலிருந்து 2 கி.மீ தூரத்தில் ஊரின் கடைசியில் மலைமீதுள்ள சிறு கோவில். ஆட்டோ மேலே செல்கிறது. பாதை செங்குத்தாய் இருக்கிறது.போகிறவழியில் ராகவேந்திரா மடம் இருக்கிறது. மலை மீது உள்ள கோயிலுக்கு போக பாதை வளைந்து வளைந்து போகிறது.
குறுக்கே நடந்து செல்ல, படிகளும் உள்ளன. மேலே மலைப்பாறைகளுக்கு இடையே கோயில் அமைந்துள்ளது. அருள்மிகுபாலதண்டபாணி சந்நதி அங்கு உள்ளது. நாங்கள் போனபோது சஷ்டி. சென்னையிலிருந்து ஒரு குடும்பம் அபிஷேகம் செய்ய வந்து இருந்தார்கள். திரை போட்டு இருந்தது . பின் காத்திருந்து அபிஷேகம் அலங்காரம் எல்லாம் பார்த்தோம். குருக்கள் சந்தனகாப்பு செய்து இருந்தார். முருகன் மிக அழகாய் இருந்தார்.

சுற்றுபுறம் அழகாய் அமைதியாய் இருக்கிறது.. கோவிலுக்கு ஒருஅழகிய சிறிய தேர் உள்ளது. சுவரில் சஷ்டிகவசம் எழுதி இருந்தார்கள். காத்து இருக்கும் நேரத்தில் அதைப் பார்த்துபடித்தோம்.1972 ல் இக்கோயில் விரிவாக்கத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டதாக அங்குள்ள அறநிலையத்துறைக் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது அடுத்த தடவை குழந்தைகளை அழைத்து வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டே வந்தோம்.

பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் சென்று குதுகலித்தது ஒரு காலம் , தாய் தந்தையுடன் போனது ஒருகாலம் , கணவர் உறவினர்களுடன் சென்றது
ஒருகாலம், எங்கள் குழந்தைகளுடன் சென்றது ஒருகாலம் இப்போது நாங்கள் மட்டும் சென்றது என்ற காலம்.ஒவ்வொரு சமயத்திலும் வித்தியாசமான உணர்வுகள் ,அனுபவங்கள். . இப்படிப் பலரது பல வகையான உணர்ச்சிக் கலவைகளுக்குச் சாட்சியாய் இருக்கிறது உதகை.பேரன்கள், பேத்தியுடன் எல்லோரும் சேர்ந்து மறுபடியும்போக வேண்டும் என்று பேசிக் கொண்டு வந்தோம்.மூணாறுக்கு ஒருதடவை இப்படி எல்லோரும் சேர்ந்து போனோம்.

குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் அவர்களுக்கு தின்பண்டங்கள் குளிர்பானங்கள் எல்லாம் வாங்கி கொடுத்து விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விடாமல் ஒருபை எடுத்துப்போய் அவற்றை சேகரித்து குப்பைத் தொட்டியில் போடும் நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்கலாம். நம்மைப் பார்த்து நம் குழந்தைகளும் அதை கடைப் பிடிப்பார்கள். சுற்றுப் புறம் சுத்தமாய் இருந்தால் இயற்கையை ரசிக்கலாம். கோயில்களும் ,இயற்கையும் நம் வருங்கால சந்ததிகளுக்கு உரிய சொத்து. அதை சரியாகப் பாதுகாக்க வேண்டும்.

19 கருத்துகள்:

  1. அருமையாக விவரித்துள்ளீர்கள். படங்கள் அழகு. வண்டு தேனுண்ணும் மலரின் வண்ணமும் அதன் டிசைனும் அசத்தலாக உள்ளது. இவ்வகை மலரை இப்போதுதான் பார்க்கிறேன். இயற்கையின் தூரிகைக்கு சபாஷ்:)! பகிர்ந்த உங்களுக்கும்!

    //பள்ளியில் படிக்கும் போது தோழிகளுடன் சென்று குதுகலித்தது ஒரு காலம் , தாய் தந்தையுடன் போனது ஒருகாலம் , கணவர் உறவினர்களுடன் சென்றது
    ஒருகாலம், எங்கள் குழந்தைகளுடன் சென்றது ஒருகாலம் இப்போது நாங்கள் மட்டும் சென்றது என்ற காலம்.ஒவ்வொரு சமயத்திலும் வித்தியாசமான உணர்வுகள் ,அனுபவங்கள். .//

    உண்மைதான்.

    //பேரன்கள், பேத்தியுடன் எல்லோரும் சேர்ந்து மறுபடியும்போக வேண்டும் என்று பேசிக் கொண்டு வந்தோம்.//

    விரைவில் நேரம் கூடி வரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. அழகான படங்களுடன், ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ரொம்பவும் அழகா இருக்குது..
    அமைதியாவும் இருக்கிறதென்று கேட்க உடனே பார்க்கவும் ஆசை வருது..

    போட்டுடலாம் ஒரு டூர்.:)

    பதிலளிநீக்கு
  4. அழகான இயற்கை கொஞ்சும் இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளீர்கள். நல்ல விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றிமா.

    பதிலளிநீக்கு
  5. ஊட்டி! ஆ.. அழகிய இடம். எனக்கு பிடித்திருந்ததால் இருதடவை சென்றிருக்கிறேன்.

    பழங்குடிகளின் கோயில்,வீடுகள் பார்த்து ரசித்தேன்.
    முதுமலையும் சென்றிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பயணக் கட்டுரை. எழில் கொஞ்சும் படங்களும் உங்கள் விவரிப்பும் அருமை. பகிர்வுக்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
  7. ராமலக்ஷ்மி ,இயற்கை தூரிகை வரைந்த மலர் இருப்பது ஊட்டியில் சிம்ஸ் பார்க்கில். உங்கள் ரசனைக்கு நன்றி.

    குடும்பத்துடன் மறுபடியும் சென்று வர வாழ்த்தியதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. நிச்சியம் போடவேண்டும் டூர் குடும்பத்துடன் முத்துலெட்சுமி.
    குழந்தைகளுக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  9. இன்று உலக சுகாதார நாள் ஆதி, சுற்றுலா செல்பவர்கள்
    இந்த மாதிரி அழகான இயறகை கொஞ்சும் இடங்களை பாழ்படுத்தாமல்
    சுத்தமாய் வைக்க வேண்டும் அதுதான் இந்த பதிவு.

    உங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி ஆதி.

    பதிலளிநீக்கு
  10. மாதேவி, நான் இன்னும் முதுமலை பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.

    தமிழநாட்டில் இப்படி நிறைய அழகிய இடங்கள் இருக்கிறது மாதேவி.

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் வாங்க,உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. உதகை என்றாலே சுற்றுலா தான் நினைவுக்கு வரும். நீங்கள் வித்தியாசமாக அந்த ஊர் கோயில்களைப் பற்றியும் எழுதியிருப்பது சுவையாக இருந்தது. படங்கள் கூடுதல் சிறப்பையும் கூட்டியது உண்மை.

    பதிலளிநீக்கு
  13. //அம்மா தனியாக அனுப்ப முடியாது என்று பள்ளியில் அனுமதி பெற்று என்னோடு வந்தார்கள்//

    //சென்ற ஆண்டு நாங்கள் இருவர் மட்டும் போனபோது குழந்தைகளையே நினைத்துக் கொண்டுஇருந்தோம்//

    இரண்டும் தாயுள்ளம் காட்டுகிறது!!

    //சேகரித்து குப்பைத் தொட்டியில் போடும் நல்ல பழக்கத்தை //
    மறக்காமல் இதையும் சொன்னது மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  14. ஹீஸைனம்மா ,தாயுள்ளத்தை கண்டுக் கொண்ட தாயுள்ளத்திற்கு நன்றி.

    நமக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் நம் கருத்தை வலியுறுத்த வேண்டும் இப்போது இளைய தலைமுறைகளிடம்.

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப அருமையான இடம் ஊட்டி, ஒரு முறை சென்றிருக்கிறேன்
    ஜிமிக்கி பூ இப்ப தான் பார்க்கிறேன்.

    சுற்றுலா பயணம் அருமை பழைய நினைவுகள் அசை போடுது.

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பழைய பதிவை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு