தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ளது இந்த மணிமண்டபம்
ஜூன் 11 ஆம் தேதி எங்கள் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்தோடு போய்விட்டு திரும்பும் போது இந்த மணிமண்டபத்தை பார்த்து வந்தோம். அங்கு எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது. பேரன் கட்டபொம்மன் வரலாறை படித்து மிகவும் ரசித்துப்பார்த்தான்.
பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்,
பாஞ்சாலங்க்குறிச்சியை ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார் . இந்த வரலாறும் அவர் கதையை படமாக எடுக்கப்பட்டு அதில் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்ததும் அனைவரும் அறிவார்கள்.
1799- ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கட்டப்பொம்மன் தூக்கிலிடபட்டார். அந்த இடத்தில் இந்த மணிமண்டபத்தை அமைத்து இருக்கிறார்கள்.
வாசலுக்கு வெளியே இடது பக்கம் சிவலிங்கம் வைக்கப்பட்டு சுப்பையா தேவர் என்று வருடம் எல்லாம் எழுதி இருக்கிறது. விளக்கு மாடம் இருக்கிறது, அவரின் சமாதி போல் இருக்கிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் ஜக்கம்மா
வீரபாண்டிய படத்தில் வரும் பாடல் நினைவுக்கு வருகிறதா?
ஜக்கம்மா
சிறு முயல் நாயை துரத்துவதை கண்டு "வீரம் மிகுந்த நிலம் " என்று பாராட்டி கட்டபொம்மன் அந்த இடத்தில் தன் கோட்டையை அமைத்தார்
மண்டபத்தின் நடுவே கம்பீரமாக சிவாஜி கணேசன் சாயலோடு கம்பீரமான தோற்றத்தில் 7.25 அடி உயரமுள்ள கட்டபொம்மனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. மாடி ஏறி போய் அங்கு இருந்து சிலையை பார்த்து வந்தார்கள். நான் படியேறி போய் பார்க்கவில்லை அங்கு இருக்கும் பணியாளர் படங்களை பார்த்து வரலாறை சொல்லி சுற்றி காண்பித்தார். வருகை பதிவேட்டில் நம் கையெழுத்தை வாங்கி கொண்டார்.
வரலட்சுமி அவர்களின் குரலில் மனதை கனிய வைக்கும் பாட்டு திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்யும் பாடல் பாட்டின் முடிவில் போர் செய்தியை கொண்டு வரும் வீரன்
கனல் பறக்கும் பேச்சு நினைவுக்கு வந்து இருக்குமே!
கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள் விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .
அதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
புதிதாக கட்டப்பட்டபோது நான் என் கணவருடன் திருநெல்வேலிக்கு ஒரு திருமணத்திற்கு போன போது வழியில் இறங்கி இந்த மணிமண்டபத்தை பார்த்தோம் , அப்போது கட்டப்பபொம்மன் சிலையும், ஒரு படமும் மட்டும் இருந்தது மற்ற படங்கள் சென்னையிலிருந்து சிறிது நாளில் வரும் என்றார்.
அந்த படம் சிறு முயல் ஒன்று நாயை துரத்தி செல்வதை பார்த்து "வீர மிகுந்த நிலம்" என்று சொல்லி தன் பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையை அந்த இடத்தில் கட்டினார் என்ற படம்.
பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டையைப்பார்த்து படம் எடுத்து பதிவு போட்ட நினைவு இருக்கு தேடினால் கிடைக்கவில்லை. 4வது படிக்கும் போது பள்ளியில் அழைத்து சென்ற சுற்றுலா பாஞ்சாலங்க்குறிச்சியும், கயத்தாறும். என் அம்மாவும், அத்தையும் என்னுடன் சுற்றுலாவில் கலந்து கொண்டது பற்றி எல்லாம் பகிர்ந்து இருந்தேன்.
இந்த தடவை பாஞ்சாலங்க்குறிச்சி போக நேரமில்லை. அது கொஞ்சம் தள்ளி போக வேண்டும். கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இங்கு இருக்கும் ஜக்கம்மா கோயிலில் உள்ள பூசாரியுடம் நான் சிறு வயதில் பள்ளிச்சுற்றுலாவில் வந்து இருக்கிறேன் என்று சொன்னதும் அவர் நினைவை பாராட்டினார்.
மணிமண்டபத்தை சுற்றிப்பார்த்து விட்டு வந்து உள்ளேயே சற்று தள்ளி இருக்கும் கட்டபொம்மன் தினைவு தூணை பார்க்க போவதற்குள் மழை வந்து விட்டது. என்னால் வேகமாக நடக்க முடியாத காரணத்தால் சிறு தூறல் சமயம் காரில் ஏற சொல்லி விட்டார்கள். நான் காரிலிருந்து எடுத்த படம்.
குழந்தைகள் விளையாட சிறு பார்க் அமைத்து இருக்கிறார்கள் தூணை சுற்றி.
நன்றி - கூகுள்

மதுரை பெரியார் பேரூந்து நிலையம் அருகில் உள்ள கட்டபொம்மன் சிலை
நன்றி - கூகுள்
நன்றி - கூகுள்
கயத்தாறிலிருந்து திருநெல்வேலி போகும் வழி எல்லாம் இந்த காற்றாலைகளை பார்க்கலாம்.
வழி எல்லாம் நல்ல மழைதான்.
முதன் முதலில் நடக்க தொடங்கும் குழந்தை போல தளர் நடை நடக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள் நான் வீட்டில் இருக்கிறேன் என்றாலும் கேட்காமல் வீல் சேர் வாங்கி வந்துவிட்டான் மகன் அதில் என்னை வைத்து பல இடங்களுக்கு கூட்டி சென்றார்கள். படங்கள் எல்லாம் நான் உடகார்ந்து கொண்டு எடுத்தது.
இன்னும் பதிவுகள் வரும் வெகு நாட்கள் ஆகி விட்டதால் ஒரு சிறிய பதிவு.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------------------------



வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபம் நீங்கள் குடும்பத்துடன் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஉங்கள் பதிவு வழி நாங்களும் சென்ற உணர்வு. நன்றிம்மா.
மறக்க முடியுமா என்ன கட்டபொம்மனின் வீர தீர செயல்களை.....
வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் ஊருக்கும் வந்தோம். தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்து அடுத்து போய் கொண்டே இருந்தோம். உங்கள் எல்லோரையும் நினைத்து கொண்டேன்..(திருச்சி பதிவர்கள் சந்திப்பு வைத்து கொள்ள ஆதி, வை. .கோ சார் அழைப்பு விடுத்தார்கள். கீதா சாம்பசிவம் வீட்டுக்கு அழைத்து கொண்டே இருந்தார்கள். சந்தர்ப்பம் வாய்க்க வில்லை.
//வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபம் நீங்கள் குடும்பத்துடன் சென்று வந்தது அறிந்து மகிழ்ச்சி.
உங்கள் பதிவு வழி நாங்களும் சென்ற உணர்வு. நன்றிம்மா.
மறக்க முடியுமா என்ன கட்டபொம்மனின் வீர தீர செயல்களை.....//
ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் இன்னுயிரை கொடுத்து சுதந்திர உணர்வை ஏற்படுத்திய கட்டபொம்மனின் வீர தீர செயல்களை மறக்க முடியாது .
வீரபாண்டியகட்டபொம்மன் படம் மூலம் .பந்துலூ அவர்களும் சிவாஜியும் மறக்க முடியாதபடி பதிவு செய்து விட்டார்கள்
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்.
வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்துக்குப் போய் வந்தீங்களா...அக்கா உள்ள நடந்து போக முடிந்ததா?
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு
சிவலிங்கம் படம் ரொ ம்பப் பிடித்தது.
கீதா
வணக்கம் கீதா ரெங்கன் , வாழ்க வளமுடன்
நீக்கு//வீரபாண்டிய கட்டபொம்மன் மணி மண்டபத்துக்குப் போய் வந்தீங்களா...அக்கா உள்ள நடந்து போக முடிந்ததா?//
உள்ளேநடந்து போக முடிந்தது படிகள் பழனி யானைபாதையிலிருப்பது போல இருந்தது , கஷ்டம் இல்லை கவின் கையை பிடித்து கொண்டு நடந்து விட்டேன்.
அங்கு மணிமண்டபத்தை பார்த்து கொள்பவர் எனக்கு நாற்காலி போட்டார் அமர . அமர்ந்து கொண்டு பின் எழுந்து படங்கள் எடுத்தேன். சிறிய இடம் தான் நிறைய நடக்க வேண்டாம்.
//படங்கள் எல்லாம் ரொம்ப நல்லாருக்கு
சிவலிங்கம் படம் ரொ ம்பப் பிடித்தது.//
நன்றி கீதா
ஜக்கம்மா என்றதுமே இந்தப் படத்துல ஒரு பாட்டு உண்டே என்று நினைவுக்கு வர நீங்களும் பகிர்ந்திருக்கீங்க. இப்பவும் கேட்டேன் பாடலை சீர்காழியின் குரலும் அந்த தாள இசையும் கோரஸும் கேட்க நல்லாருக்கும்
பதிலளிநீக்குகீதா
//ஜக்கம்மா என்றதுமே இந்தப் படத்துல ஒரு பாட்டு உண்டே என்று நினைவுக்கு வர நீங்களும் பகிர்ந்திருக்கீங்க. இப்பவும் கேட்டேன் பாடலை சீர்காழியின் குரலும் அந்த தாள இசையும் கோரஸும் கேட்க நல்லாருக்கும்//
நீக்குஆமாம் கீதா , பாடலும் காட்சியும் நன்றாக இருக்கும். உணர்ச்சியை கொட்டி பாடி இருப்பார்கள். இசை நன்றாக இருக்கும்.
கட்டபொம்மன் தன் கோட்டையை அமைத்த இடத்தின் காரணம் இப்பதான் தெரிகிறது கோமதிக்கா.
பதிலளிநீக்குதிருச்செந்தூர் விவரம் கூட புதிது எனக்கு.
வரலட்சுமி அவர்களின் பாடல் கேட்டேன் அக்கா நன்றாக இருக்கிறது. முதல் ஆண் குரல் யார்?
கீதா
//கட்டபொம்மன் தன் கோட்டையை அமைத்த இடத்தின் காரணம் இப்பதான் தெரிகிறது கோமதிக்கா.
நீக்குதிருச்செந்தூர் விவரம் கூட புதிது எனக்கு.//
நிறைய வரலாறுகள் இருக்கிறது அனைத்தையும் நாம் தெரிந்து கொள்வது இந்த மாதிரி இடங்களில் தான் கீதா.
//வரலட்சுமி அவர்களின் பாடல் கேட்டேன் அக்கா நன்றாக இருக்கிறது. முதல் ஆண் குரல் யார்?//
ஆண் குரல் வி,என். சுந்தரம்.
கனல் பறக்கும் பேச்சு நினைவுக்கு வந்து இருக்குமே!// இது நன்றாக நினைவுக்கு வந்ததே சிவாஜியின் அனல் தெறிக்கும் வசனம்!
பதிலளிநீக்குபடங்கள் வழி பல விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது
கீதா
//கனல் பறக்கும் பேச்சு நினைவுக்கு வந்து இருக்குமே!// இது நன்றாக நினைவுக்கு வந்ததே சிவாஜியின் அனல் தெறிக்கும் வசனம்!
நீக்குபடங்கள் வழி பல விவரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது//
ஆமாம், படங்கள் மூலம் கதையை அழகாய் சொல்லி விட்டார்கள் சுருக்கமாக.
கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள் விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .
பதிலளிநீக்குஅதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.//
இது எல்லாமே எனக்குப் புதிய தகவல்கள்.
ஆமாம் அக்கா அப்பகுதியில் காற்றாலைகள் நிறைய உண்டு.
கண்ணாடியில் மழை பெய்தது படம் நல்லாருக்கு
பல விவரங்கள் தெரிந்தது கோமதிக்கா
கீதா
//கட்டபொம்மனை தூக்கிலிட்ட புளியமரம் பட்டு போய் விட்டது அந்த இடத்தை சிவாஜி கணேசன் அவர்கள் விலைக்கு வாங்கி 1970 ஆம் ஆண்டு நினைவு தூண் அமைத்தார் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு .
நீக்குஅதன் பின்னர் அரசிடம் ஒப்படைத்து விட்டார். மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.//
இது எல்லாமே எனக்குப் புதிய தகவல்கள்.//
செய்திகளில் படித்தது . அங்கும் சொன்னார்கள்.
//ஆமாம் அக்கா அப்பகுதியில் காற்றாலைகள் நிறைய உண்டு.//
பயணிக்கும் போது அந்த பகுதியில் நிறைய காற்றாலைகள் வந்து கொண்டே இருக்கும்.
//கண்ணாடியில் மழை பெய்தது படம் நல்லாருக்கு//
உங்கள் ரசனைக்கு நன்றி.
பல விவரங்கள் தெரிந்தது கோமதிக்கா
ஓ வீல் சேர் வாங்கி அதில் கூட்டிக் கொண்டு போனாங்களா நல்ல விஷயம் கோமதிக்கா. என் மனம் மிகவும் சந்தோஷப்பட்டதோடு நெகிழ்ந்தும் போனது. நல்ல குழந்தைகள். உங்கள் ஆர்வத்திற்கு அவங்க அன்போடு மரியாதை கொடுத்தது எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பதிலளிநீக்குகவின் நிறைய கற்றுக் கொள்வார் இதிலிருந்து. எப்போதும் நல்லதே நடக்கும் கோமதிக்கா
கீதா
//ஓ வீல் சேர் வாங்கி அதில் கூட்டிக் கொண்டு போனாங்களா நல்ல விஷயம் கோமதிக்கா. என் மனம் மிகவும் சந்தோஷப்பட்டதோடு நெகிழ்ந்தும் போனது. நல்ல குழந்தைகள். உங்கள் ஆர்வத்திற்கு அவங்க அன்போடு மரியாதை கொடுத்தது எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது.//
நீக்கு//கவின் நிறைய கற்றுக் கொள்வார் இதிலிருந்து. எப்போதும் நல்லதே நடக்கும் கோமதிக்கா//
ஆமாம் கீதா. வீல் சேர் டெல்லியில் ஆர்டர் செய்து வாங்கி விட்டான். சுற்றிபார்க்க போகும் இடங்களில் காரிலிருந்து இறக்கி என்ன உட்கார சொல்லி தள்ளி கொண்டு போனார்கள்,மகன், மருமகள்,மகள் பேரன் எல்லாம். எனக்கு தான் கஷ்டமாக இருந்தது. சில இடங்களில் நம் வீல் சேர் அனுமதி இல்லை அவர்கள் வீல் சேர் அவர்கள் அனுப்பும் ஆட்கள் அழைத்து சென்றார்கள்.
பின்னர் பதிவுகளில் வரும்.
ஆமாம், கவின் எங்கு போனாலும் கவனம் ஆச்சி, கையை பிடித்து கொள்ளுங்கள் பார்த்து வாங்க என்று அழைத்து சென்றான்.தாத்தா, அப்பா போல அவனும் என்னை பார்த்து கொள்கிறான்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி கீதா நல்லதே நடக்கட்டும்.
கட்டபொம்மனைப் பற்றி இருவேறு கருத்துகள் உண்டு. அங்கிருக்கும் மற்ற பாளையக்காரர்களை மிரட்டி கொள்ளை அடித்து வந்தான் என்று சொல்வார்கள். அவர்கள் பொறுக்க முடியாமல் போயும் போயும் ஆங்கிலேயர்களிடம் போய் சரணடைந்தார்கள். அவர்கள் இவனைப் பிடிக்க நினைத்தபோது நிகழ்ந்த போராட்டம் ஆங்கிலேயர்களுக்கெதிரான தமிழனின் அல்லது இந்தியனின் போராட்டமாக பார்க்கப்படுகிறது என்று படித்தேன்!
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்கு//கட்டபொம்மனைப் பற்றி இருவேறு கருத்துகள் உண்டு. அங்கிருக்கும் மற்ற பாளையக்காரர்களை மிரட்டி கொள்ளை அடித்து வந்தான் என்று சொல்வார்கள். அவர்கள் பொறுக்க முடியாமல் போயும் போயும் ஆங்கிலேயர்களிடம் போய் சரணடைந்தார்கள். அவர்கள் இவனைப் பிடிக்க நினைத்தபோது நிகழ்ந்த போராட்டம் ஆங்கிலேயர்களுக்கெதிரான தமிழனின் அல்லது இந்தியனின் போராட்டமாக பார்க்கப்படுகிறது என்று படித்தேன்!//
இருக்கலாம், நாம் நல்லதை எடுத்து கொள்வோம்.
ஆங்கிலேயர்களை எதிர்த்த ஒரு மாவீரனாக இருந்து இருக்கிறார் அல்லவா? அவர்கள் பீரங்கிதாக்குதலை தாங்க முடியாமல் பின் வாங்கினார் என்பார்கள். சரியான ஆயுதங்கள் இருந்து இருந்தால், மற்ற பாளையக்காரர்கள் இவருடன் நல் இணக்கத்தில் இருந்து இருந்தால் ஆங்கிலேயர்களை ஒரு வழி செய்து இருப்பார்கள்.
சிவாஜி நடித்த படம் பார்த்தபின் வேறு கருத்தை மனம் ஏற்கவில்லை ஸ்ரீராம்.
விளக்கப்படங்கள் யாவும் சிவாஜியை அடிப்படை முகமாக வைத்தே தயாரித்திருப்பார்கள் போல.. கட்டபொம்மன் என்று சிவாஜி சிலையைப் பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது!
பதிலளிநீக்கு//விளக்கப்படங்கள் யாவும் சிவாஜியை அடிப்படை முகமாக வைத்தே தயாரித்திருப்பார்கள் போல.. கட்டபொம்மன் என்று சிவாஜி சிலையைப் பார்க்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது!//
நீக்குஆமாம். சிலை அருமையாக இருக்கிறது.
ஜக்கம்மா கோவிலில் நீங்கள் சிறுவயதில் பார்த்த அதே பூசாரி இருந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன்! நீங்கள் இங்கெல்லாம் இரண்டு முறைக்கும் மேலாக சென்று வந்து விட்டீர்கள். நான் பார்த்ததே இல்லை.
பதிலளிநீக்கு//ஜக்கம்மா கோவிலில் நீங்கள் சிறுவயதில் பார்த்த அதே பூசாரி இருந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன்! நீங்கள் இங்கெல்லாம் இரண்டு முறைக்கும் மேலாக சென்று வந்து விட்டீர்கள். நான் பார்த்ததே இல்லை.//
நீக்குஇந்த ஜக்கம்மா கோயில் இல்லை ஸ்ரீராம்.
பாஞ்சாலங்க்குறிச்சி கோட்டைகுள் இருக்கும் ஜக்கம்மா கோயில் பூசாரியிடம் பேசினதை சொன்னேன், அவரும் நான் சிறு வயதில் ஜக்கம்மா கோயிலில் பூசாரியை பார்க்கவில்லை.
//நீங்கள் இங்கெல்லாம் இரண்டு முறைக்கும் மேலாக சென்று வந்து விட்டீர்கள். நான் பார்த்ததே இல்லை.//
திருநெல்வேலி போகும் வழியில் இருப்பதால் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மகனும் பார்த்தது இல்லை அதனால் வாய்ப்பு கிடைத்தது.
உங்கள் உடல் நிலை தேவலையா?
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிவாஜி அந்த இடத்தை விலைக்கு வாங்கி முன்னெடுப்பு செய்தியா விட்டால் அந்த இடம் பாழ்பட்டு தனியார் கைகளுக்குப் போய் வேறு ஏதாவது கட்டிடம் வந்திருக்கும்.
பதிலளிநீக்கு//சிவாஜி அந்த இடத்தை விலைக்கு வாங்கி முன்னெடுப்பு செய்தியா விட்டால் அந்த இடம் பாழ்பட்டு தனியார் கைகளுக்குப் போய் வேறு ஏதாவது கட்டிடம் வந்திருக்கும்.//
நீக்குஆமாம், நீங்கள் சொல்வது போல நடக்கலாம். கட்டபொம்மன் பரம்பரையை சேர்ந்தவர்கள் போராடி இருப்பார்கள் அவர் தூக்கிலிட்ட இடத்தை புனித இடமாக வழிபட்டு வந்தார்கள்.
நன்றி ஸ்ரீராம்.
பதினைந்து வருடங்களுக்கு முன் திருச்செந்தூர் சென்று விட்டு தஞ்சை திரும்பும் போதெல்லாம் வழியில் கயத்தாறு நினைவுச் சின்னத்தை பார்த்திருக்கின்றேன்.
பதிலளிநீக்குமணிமண்டபம் சென்றதில்லை..
இப்போது ரயில் வழி என்பதால் பழைய வழித்தடம் அமைவதில்லை...
நேரில் காண்கின்ற மாதிரி
காணொளிகளுடன் சிறப்பான பதிவு...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
நீக்குஇப்போது உடல் நலமா?
//பதினைந்து வருடங்களுக்கு முன் திருச்செந்தூர் சென்று விட்டு தஞ்சை திரும்பும் போதெல்லாம் வழியில் கயத்தாறு நினைவுச் சின்னத்தை பார்த்திருக்கின்றேன்.//
ஓ சரி
//மணிமண்டபம் சென்றதில்லை..
இப்போது ரயில் வழி என்பதால் பழைய வழித்தடம் அமைவதில்லை...
நேரில் காண்கின்ற மாதிரி
காணொளிகளுடன் சிறப்பான பதிவு.//
ஆமாம் , ரயிலில் போகும் போது இதை பார்க்க முடியாது.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி காணொளி ஒன்று கேட்கத் தொடங்கினோம். சரண்யா துராடி என்பவர் வழங்கியது. படத்திற்கும், உண்மைக்கும் நிறைய வித்தியாசம். எனிவே நீங்கள் பகிர்ந்திருக்கும் படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி காணொளி ஒன்று கேட்கத் தொடங்கினோம். சரண்யா துராடி என்பவர் வழங்கியது. படத்திற்கும், உண்மைக்கும் நிறைய வித்தியாசம்.//
எப்போதும் அப்படித்தானே! படங்களில் காட்டப்படுகிறது.
சிவாஜியின் நடிப்பால் மேலும் கட்டபொம்மனுக்கு சிறப்பு சேர்ந்தது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
எனிவே நீங்கள் பகிர்ந்திருக்கும் படங்கள் சிறப்பு.
படங்களும் பகிர்வும் அருமை. கயத்தாறில் வீரபாண்டியக் கட்டபொம்மனின் நினைவிடத்திற்கு சிறுவயதில் அது கட்டப்பட்ட புதிதில் சென்றிருக்கிறேன். அங்கு எடுத்த படங்களும் உள்ளன. மணிமண்டபம் 2015_ல் கட்டப்பட்டுள்ளது. நான் சென்றது 1970-களில் இருக்குமென நினைக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//படங்களும் பகிர்வும் அருமை. கயத்தாறில் வீரபாண்டியக் கட்டபொம்மனின் நினைவிடத்திற்கு சிறுவயதில் அது கட்டப்பட்ட புதிதில் சென்றிருக்கிறேன். அங்கு எடுத்த படங்களும் உள்ளன. மணிமண்டபம் 2015_ல் கட்டப்பட்டுள்ளது. நான் சென்றது 1970-களில் இருக்குமென நினைக்கிறேன்.//
நீங்களும் சிறு வயதில் பார்த்து இருக்கிறீகளா?
2015 ல் மணி மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
மதுரையிலிருந்து கயத்தாறு வழியாக நெல்லை போன 84-85ம் வருடங்களை மனது அசைபோட்டது. அப்போது கயத்தாறில் நிற்கும். அங்கு உள்ள கடையில் பூரிமசால் ரொம்ப நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்கு//மதுரையிலிருந்து கயத்தாறு வழியாக நெல்லை போன 84-85ம் வருடங்களை மனது அசைபோட்டது. அப்போது கயத்தாறில் நிற்கும். அங்கு உள்ள கடையில் பூரிமசால் ரொம்ப நன்றாக இருக்கும்.//
நீக்குநாங்கள் அடையார் ஆனந்த பவனில் டிபன் சாப்பிட்டோம். நீங்கள் சாப்பிட்ட கடை பேர் தெரிந்தால் இருக்கா என பார்க்கலாம்.
நான் பார்த்த காலத்தில், படத்தில் உள்ளதுபோல வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையும் (அதை சிவாஜிகணேசன் அமைத்தது என்று சொல்வர்), தூக்கிலிடப்பட்ட மரமும் பார்த்திருக்கிறேன். மணிமண்டபம் எல்லாம் பிற்காலம். நான் அதன் பிறகு பார்க்கவில்லை.
பதிலளிநீக்குவணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு/நான் பார்த்த காலத்தில், படத்தில் உள்ளதுபோல வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையும் (அதை சிவாஜிகணேசன் அமைத்தது என்று சொல்வர்), தூக்கிலிடப்பட்ட மரமும் பார்த்திருக்கிறேன்.மணிமண்டபம் எல்லாம் பிற்காலம். நான் அதன் பிறகு பார்க்கவில்லை.//
முன்பு எல்லாம் அது மட்டும் தான் இருக்கும்.
மணிமண்டபம் 2015 ஆம் ஆண்டு தான் கட்டப்பட்டு இருக்கிறது..
சிவாஜி கணேசன் அவர்களும் நினைவு தூணை அரசங்காத்திடம் ஒப்படைத்து விட்டார். அதனால் ஒரே வளாகத்தில் இரண்டும் இருக்கிறது.
அதன் பின் நீங்கள் மதுரையிலிருந்து திருநெல்வேலி போய் இருந்தால் பார்த்து இருப்பீர்கள்.
/
இப்போது அந்த இடம் எப்படி இருக்கிறது என்று உங்கள் படங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குவீரபாண்டிய கட்டபொம்மன் படம் எத்தனையோ முறைகள் பார்த்திருக்கிறேன்.
மனம் கனிந்தருள் வேல் முருகா பாடல் வரும்போதெல்லாம். இந்த முறையாவது முருகன் அருளால் கட்டபொம்மன் வெற்றிபெற்றுவிட மாட்டானா என்ற எதிர்பார்ப்பு மனதில் எழும். மிகவும் சோகமான பாடல், பட முடிவு.
//இப்போது அந்த இடம் எப்படி இருக்கிறது என்று உங்கள் படங்கள் மூலம் அறிந்துகொண்டேன்.//
நீக்குநன்றி.
//வீரபாண்டிய கட்டபொம்மன் படம் எத்தனையோ முறைகள் பார்த்திருக்கிறேன்.
மனம் கனிந்தருள் வேல் முருகா பாடல் வரும்போதெல்லாம். இந்த முறையாவது முருகன் அருளால் கட்டபொம்மன் வெற்றிபெற்றுவிட மாட்டானா என்ற எதிர்பார்ப்பு மனதில் எழும். மிகவும் சோகமான பாடல், பட முடிவு.//
ஆமாம். முருகன் இப்படி அருமையான பாடலை கேட்டும் மனம் கனியாமல் இருந்து விட்டானே! என்ன செய்வது கதை அப்படி.
ராமு படத்தில் "கனிமழலை குரல் எடுத்து பாட வேண்டும் கண் மறைந்த தாயும் கேட்க வேண்டும்" என்று உருகி கண்ணனை அழைத்து பாடும் போது அந்த பையன் கண்ணா ! என்று பாடி விட மாட்டானா என்று தோன்றும்.
சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது கிடைத்ததால் ஏற்பட்ட மகிழ்வில் கட்டபொம்மனுக்குச் சிறப்பு செய்தார். பாவம் சிவாஜி..இந்திய அரசு அவருக்கு ஏற்ற மரியாதையைச் செய்யவில்லை. என்ன அநியாயம் பாருங்கள்.
பதிலளிநீக்கு//சிவாஜிகணேசனுக்கு செவாலியே விருது கிடைத்ததால் ஏற்பட்ட மகிழ்வில் கட்டபொம்மனுக்குச் சிறப்பு செய்தார். பாவம் சிவாஜி..இந்திய அரசு அவருக்கு ஏற்ற மரியாதையைச் செய்யவில்லை. என்ன அநியாயம் பாருங்கள்.//
நீக்குஇந்திய அரசு சிறப்பு செய்யவில்லை என்றாலும் அவர்தான் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறார். ஓவியம் வரைந்தவர், சிலை அமைத்தவர் அனைவரும் அவரைதானே நினைவு படுத்துவது போல அமைத்து இருக்கிறார்கள். வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் வாழ்ந்து இருக்கிறார் கட்டபொம்மனாக.
உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நெல்லை.