செவ்வாய், 31 டிசம்பர், 2019

செவ்வாய், 24 டிசம்பர், 2019

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
நம் அன்பு ஏஞ்சலுக்கு  வாழ்த்துக்கள்!


முன்பு கிறிஸ்தவ நட்புகளுக்கு புதுவருட கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை வாங்கி அனுப்பி மகிழ்வோம். இப்போது வாட்ஸப்பில் அழகிய படங்களுடன் கூடிய வாழ்த்தை அனுப்புகிறோம்.  போனில் வாழ்த்தை  சொல்லி விடுகிறோம். கடையில் போய் வாழ்த்துக்களைத் தேடித் தேடி எடுத்த காலங்கள் மிக அருமையானவை.

சனி, 21 டிசம்பர், 2019

அஷ்டமி சப்பரத் திருவிழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் அஷ்டமி சப்பரங்கள் திருவீதிஉலா வியாழக்கிழமை  19.12. 2019  தேதி அன்று நடைபெற்றது.


முரசு  அறைந்துகொண்டு முன்னே வரும் காளை

செவ்வாய், 17 டிசம்பர், 2019

மார்கழி மாத நிகழ்வுகள்


படம் கூகுள்

 மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு உள்ள  மாதம்

படம் கூகுள்

மார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன். 

வெள்ளி, 6 டிசம்பர், 2019

தருமபுரம் குருமகா சந்நிதானம் அவர்கள்

சகோ துரைசெல்வராஜூ அவர்கள் தளத்தில்   குருமகா சந்நிதானம் பற்றி எழுதி இருந்தார்கள்.   நாங்கள் சந்நிதானம் அவர்களைத் தரிசனம் செய்த செய்திகளைப்  பகிர்ந்து இருந்தேன் பின்னூட்டத்தில்.
நெல்லைத் தமிழன் அவர்கள், நீங்களும் பதிவு ஒன்றை வெளியிடுங்கள் , ஆதீனங்களைப் பற்றிய பதிவில் உங்கள் கணவரது கருத்துக்களும் இடம் பெறட்டும் என்றார்கள்.

கீதா சாம்பசிவம் அவர்களும் தருமைஆதீனத்துடன் உங்கள் கணவருக்கு  தொடர்பு உண்டே  ! என்று சொன்னார்கள். சார் அங்கு பணி புரிந்த நினைவு அவர்களுக்கு வந்து இருக்கிறது.

 நான் என் கணவரிடம் சொன்னேன், நேற்று முழுவதும் அவரைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். அதைப் பதிவாக்கச் சொன்னேன். முகநூலில் அவர்கள் பக்கத்தில் பதிவு செய்தார்கள்.


அதை இங்கே உங்கள் பார்வைக்கு.
              தருமபுர ஆதீனம் , 26ஆம்  குருமகா சந்நிதானம் அவர்கள் சித்தியடைந்த  நிலையில்     
                                                எனது நெஞ்சில் நிறைந்த நினைவுகள்

                                                  

வியாழன், 5 டிசம்பர், 2019

அன்புள்ள அப்பா

அப்பாவின் நினைவுகள் 

நான் எட்டாவது படிக்கும்போது என் அப்பா வாங்கிக் கொடுத்த ஃபாரின்
வாட்சைப்பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.


அப்பாவிற்கு நாங்கள் எல்லோரும் செல்லக் குழந்தைகள்தான்.  இருந்தாலும் என் தங்கைகள் சிறுமியாக இருந்ததால் என் அக்காவிற்கும், எனக்கும் வாட்ச் வாங்கித் தந்தார்கள்.  என் அக்கா பியூசி படித்துக் கொண்டு இருந்தார்கள்.  அப்பா வாங்கி வந்த  இரண்டு வாட்சில்  ஒன்று  வட்டம், மற்றொன்று சதுரம்.  அந்த காலக்கட்டத்தில்  சதுரம் தான் பேஷன்.  என் அக்கா சதுர வாட்சை எடுத்துக் கொண்டார்கள்.
அக்காவின் வாட்ச் கறுப்பு ஸ்ட்ராப், என் வாட்ச் தங்ககலர் ஸ்ட்ராப்.

சனி, 30 நவம்பர், 2019

கிளிகளின் விளையாட்டு

"ஜன்னல் வழியே" என்று முகநூலில் பதிவுகள் போடுவேன். வீட்டு பால்கனியிலிருந்து எடுக்கும் படங்களை.  இங்கு என் சேமிப்பாய்-
ஒரு நாள் காலை கிளிகளின் கீச் கீச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது . எப்போதும் கீச் சத்தம் கேட்கும். நான் எட்டிப் பார்க்கும்போது அது வெகு தூரம் பறந்து  போய்  இருக்கும். அன்று  புறா, காக்கா, மைனா எல்லாம் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் கம்பியில் இந்த கிளிகள் அமர்ந்து இருந்தது. இந்த கம்பி, பறவைகளுக்குப் பிடித்தமான இடம்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

குடியிருந்த கோவில்

எனது பெற்றோர்

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' 

என்றார் திருவள்ளுவர்.

போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர், துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள் என் தாய்.


எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும் துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும் இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன் படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.


இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை இறைவன
டி சேர்ந்தார்கள்.

வியாழன், 21 நவம்பர், 2019

அன்றும் இன்றும்


ஒரு காலத்திலே என்று சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவு போட்டு இருந்தார்கள் இன்று.

அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுக்களைப் பற்றியும், வீடு நிறைய குழந்தைகள் அண்ணன், அக்காள், தங்கைகள், தம்பிகள் என்று வீட்டில் அதிக குழந்தைகள் இருப்பார்கள்; அவர்கள் விளையாடியும், அவர்களுக்குள் சண்டையிட்டும் , பின் சமாதானம் ஆகியும் களிப்பார்கள்.
தாத்தாவோடு விளையாடுவது எல்லாம் வரும் அந்த காணொளியில்.நாங்களும் அப்படித்தான் நிறைய உடன்பிறப்புகளுடன் விளையாடி மகிழ்ந்தோம்.

சனி, 2 நவம்பர், 2019

கலியுக வரதன்


இன்று காலை  2.11. 2019   சூரசம்மாரம் இல்லையா ! அதனால் பழமுதிர்சோலை போனோம். அங்கு நடைபெற்ற யாகசாலை பூஜை, அபிஷேக , அலங்கார பூஜைகள் இந்தப் பகிர்வில்.
மாலை நடைபெறும் சம்ஹாரம். தாராசுரன்   முதலில் வதம் செய்யப்படுவார், அடுத்து சிங்கமுகன், அடுத்து சூரசம்மாரம். சூரன் தலை சிவப்புக் கலராக அவன் கோபத்தை காட்டுது. சிங்கமுகம் பச்சைக் கலராக இருக்கிறது. 

வியாழன், 31 அக்டோபர், 2019

கந்தனுக்கு அரோகரா!



கந்த சஷ்டி விழாவில்  முன்பு விரதம் இருந்து கந்தபுராணம் படிப்பேன் ஆறு நாளில்   நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள்  எழுதிய  ஸ்ரீ கந்தபுராணம் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். (நர்மதா பதிப்பகம் வெளியீடு.)
கந்தன் பெருமையும், கந்த புராண மகிமையும் , புராணம் தோன்றிய வரலாறும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் கொஞ்சம்,  மற்றும் சில படங்களும் இங்கு பகிர்வாய்.

சனி, 26 அக்டோபர், 2019

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

தீபாவளி உல்லாசம் பொங்கும் இன்பத்  தீபாவளி  சிலருக்கு. சிலருக்கு உறவுகளுடன் கொண்டாட முடியாமல் விடுமுறை கிடைக்காமல் இருக்கும்.   முன்பு ஊரில் கொண்டாடிய நினைவுகளை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ளும் தீபாவளியாக இருக்கிறது.

சுகமான நினைவுகளை மனச்சுமையோடு  போனிலும், நேரடியாக வீடியோ காட்சியாகவும் பரிமாறிக் கொள்ளும் தீபாவளி சிலருக்கு.

பெற்றோர்  அக்கா,அண்ணன், தம்பி, தங்கைகள் இவர்களுடன் கொண்டாடிய தீபாவளி ஒரு தனி  இன்பம்.  அடுத்துக் கணவர் வீட்டாருடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.  அடுத்துக் குழந்தைகள் வீடுகளில்.
இப்போது நாங்கள் மட்டும், உறவினர்கள் வருவதாய்ச் சொல்லி இருக்கிறார்கள்.  பண்டிகை உற்சாகம் குறைந்து தான் காணப்படுகிறது. அதைப் போக்க 'தீபாவளி அன்றும் இன்றும்'  என்று கொஞ்சம் கதம்பப் பதிவு. 

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

இருகூர் மாசாணி அம்மன் கோவில்

13.10 .2019 அன்று   இருகூர் மாசாணி அம்மன் கோவில் போனோம் .அன்று பெளர்ணமி .

கோயம்புத்தூரிலிருந்து 15 கிமீ தோலைவில் இருக்கிறது. இங்கு இருகூர் ரயில் சந்திப்பு இருக்கிறது.

புதன், 16 அக்டோபர், 2019

பழமுதிர்சோலை

இன்று 16/10/19  கிருத்திகைக்குக்  காலை  பழமுதிர்சோலை போய் இருந்தோம்.   கூட்டமே இல்லை .அபிஷேகம் முடிந்து அலங்காரம் ஆகிக் கொண்டு இருந்தது .
திரை விலகியதும் தங்கக்கவசத்தில் முகத்தில் விபூதி அலங்காரத்தில் நம்மைப் பார்த்துச் சிரித்த முகத்தோடு காட்சி தந்து பரவசம் அளித்தார். பூஜை முடியும் வரை கண்குளிரப் பார்த்து மகிழ்ந்தோம்.

திங்கள், 14 அக்டோபர், 2019

பயணத்தில் கண்ட காட்சிகள்

பயணத்தில் கண்ட காட்சிகளைக் காரின் பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு அலைபேசியில் எடுத்த  படங்கள். காரின் மூடிய ஜன்னல் வழியாக எடுத்த படங்கள்.

கோவைக்கு 12/10/19 அன்று குடும்ப விழாவிற்குப் போய் இருந்தோம். விழா முடிந்து 13ம் தேதி திரும்பி வரும் போது சில கோவில்களுக்கும் போனோம்.

கோவிலாகக் காட்டிக் கொண்டு இருந்தால் சிலருக்கு அலுப்பாக இருக்கும் என்பதால் பயணத்தில் எடுத்த எனக்குப் பிடித்த இயற்கைக் காட்சிகளின் பகிர்வு. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

பயணத்தில்  மதிய உணவுக்காகப்  போன ஓட்டலில் பார்த்த சில காட்சிகள் இங்கே.

பசுமை போர்த்திக் கொண்ட மலையும்  பஞ்சுப் பொதிகளாக வெண்மேகங்களும் நீலவானமும்

வியாழன், 26 செப்டம்பர், 2019

சக்கரபாணி திருக்கோயில்



24,8.2019 ல் குடந்தையில் பார்த்த கோவில்கள் பதிவாக வந்து கொண்டு இருக்கிறது. இன்று சக்கரபாணி கோவில். இந்த கோவில்  காவிரிக் கரையின் தென் கரையில் அமைந்துள்ள கோவில். குடந்தை  பெரியகடைத்தெருவின் வட கோடியில் அமைந்து இருக்கிறது.
இந்த வாசல் முகப்பில் ஸ்ரீ சக்கர ராஜா இருக்கிறார் ஸ்ரீ சுதர்ஸனவல்லி,  ஸ்ரீ விஜயவல்லி தாயாருடன் இருக்கிறார்

நாங்கள்   காலை சீக்கீரம் வந்தோம். கடைகள் திறந்து விட்டால் காரை நிறுத்துவது கடினம் என்பதால் 7 மணிக்கே வந்து விட்டோம் கோவிலுக்கு.
இந்த நுழைவாயில் வழியாகக் கோவிலுக்குப் போனோம்.
உள்பக்கத்தில் பெருமாள் நின்ற கோலத்தில் - ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்த கோலத்தில்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள் - பகுதி 2


இந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் மகாமகக்  குளம் கீழ்க்கரையில் உள்ளது.

23.8.2019 அன்று கும்பகோணம் போனபோது  அங்கு பார்த்த கோவில்கள் பதிவுகளாய் வருகிறது.

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

குடந்தைக் கோவில்கள்

திருப்பனந்தாள் காசி மடத்தின் அன்பளிப்பாக இந்த மணிக்கூண்டு . இப்போது அதனைப் பராமரிப்பவர்கள் சிட்டி யூனியன் வங்கி

திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் பதிவில் குடந்தையில் போன கோவில்கள்பதிவுகள் இனி அடுத்தபதிவில் என்றேன்.

வியாழன், 5 செப்டம்பர், 2019

திருக்குடந்தை மங்கள நாயகி பிள்ளைத்தமிழ்



ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீ அபிமுகேஸ்வர பெருமான் கோயில்
இந்தக் கோவிலில் இருக்கும் மண்டபத்தில் தான் விழா நடந்தது.

திருக்குடந்தைத் திருமுறை மன்றம் 1973ல் ஆரம்பிக்கப்பட்டுச் சிறப்பாக நடந்து வ்ருகிறது. அந்த மன்றத்தின் 46 ஆம் ஆண்டு  நிறைவு விழாவில் தான் என் கணவர்  உரை எழுதிய "திருக்குடந்தை மங்களநாயகி பிள்ளைத் தமிழ் "
நூல் வெளியீடு நடந்தது.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

லாடன் கோயில் - ஆனைமலை

யானை மலை மேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில்   நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

வரலெட்சுமி, வருவாய் அம்மா!


பழைய பாடல் ராதா ஜெயலட்சுமி பாடிய  'வரலெட்சுமி வருவாய் அம்மா திருமாலின் தேவி கடைக்கண் பாரம்மா ' என்ற  பாடல் எங்கள் வீட்டு கேஸட்டில் இருக்கிறது.  முன்பு வானொலியில் வைக்கும் பாட்டை வீட்டில் கேஸட்டில் பதிவு செய்து வைத்து இருந்தது. அதை இன்று கேட்டேன். மிக நன்றாக இருக்கும், ஒவ்வொரு வரலெட்சுமி பண்டிகை  அன்றும் கேட்டு மகிழ்வோம், வீட்டில் பூஜை செய்யும் போது போட்டுக் கேட்போம். இங்கு பகிரலாம் என்று தேடினால் கிடைக்கவில்லை அந்தப் பாடல் . ஆனால் அந்த பாடலை  இவர் பாடியது கிடைத்தது.  அமைதியாக அழகாகப் பாடுகிறார்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே!

வெள்ளிக்கிழமையிலே அம்மா உன் வாசலிலே

எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்  ஐயனார் கோவிலில் இருக்கும் அம்மன்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வாரமும் கஞ்சி வார்த்தல், கூழ் வார்த்தல் நடை பெறும். இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பான பூஜை நடைபெற்றது.

வெள்ளி, 26 ஜூலை, 2019

அம்பா கருணைபுரிவாய்


குழந்தைகளுக்குப் பிள்ளையாரும், முருகனும்  சிறு வயதில் மிகவும் பிடிக்கும்.  சின்ன வயதில் குழந்தைகளை நவராத்திரியில் பாடச் சொன்னால் இந்தப் பாடலை ஒரு சில குழந்தைகள் கண்டிப்பாய்ப் பாடும். இப்போது புதுவகையான இசை அமைப்பில் இந்தப் பாடல் நன்றாக இருக்கிறது கேட்டுத்தான் பாருங்களேன். தைப் பூசத்திற்குப் பழனிக்குப் பாதயாத்திரையாகப் போவோர் இந்தப் பாடலைப் பாடி , ஆடிச் செல்வார்கள்.

செவ்வாய், 23 ஜூலை, 2019

யானைமலை

யானை மலை நோக்கிப் பயணம் . பசுமை நடையின் 101 வது நடை. பிப்ரவரி மாதம் 10.2.2019 ல் 100வது நடை  அதன் பின்  7.7.2019 ஞாயிறு மீண்டும் பசுமை நடை தன் 101 வது நடையை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 முதன் முதலில் 36 பேருடன் ஆரம்பித்த யானைமலையை நோக்கித் தன் பசுமை நடைப் பயணத்தை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து இருக்கும்    அவர்களை வாழ்த்துவோம். இந்த நடைக்கு வந்தவர்கள் 250 பேர்.

சமணர்களின் எண்பெருங்குன்றங்களுள் ஒன்றாக ஆனைமலை அக்காலத்தில்  திகழ்ந்தது.

புதன், 10 ஜூலை, 2019

மலை அழகு

ஜீலை 6ம் தேதி சனிக்கிழமை போட்ட பதிவு கீழவளவு  சமணச்சின்னம்
அதன் தொடர்ச்சி இந்த பதிவு.

சமணச்சின்னம் இருக்கும்  பக்கத்தில் உள்ள அரசமரத்தடியில்  பிள்ளையார், முருகனின் வேல் மட்டும் இருக்கும் கோயில்

சனி, 6 ஜூலை, 2019

கீழவளவு




இந்த இடத்திற்கும் போன ஆண்டு  ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு வருடம் ஆகப் போகிறது. பசுமை நடையின் 93 வது நடை.

அந்த இரண்டு பாறைகளுக்கு நடுவே ஒரு நாலு படிகள் ஏறினால்  மலையின் இடப்புறத்தில் பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர் ஆகியோரின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 4 ஜூலை, 2019

கொங்கர் புளியங்குளம்- நிறைவுப்பகுதி

நேற்று போட்ட கொங்கர்புளியங்குளம்  பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு.
படிக்கவில்லையென்றால் படிக்கலாம்.


  மலை மேல்   போய் வந்த  விவரம் அடுத்த பதிவில் என்று சொல்லி இருந்தேன்.

மாயன் கோவில்

புதன், 3 ஜூலை, 2019

கொங்கர் புளியங்குளம் - பகுதி -1

பதிவு போட்டு வெகு நாட்கள் ஆகி விட்டது.  நிறைய  பதிவுகள் வலையேற்றாமல் இருக்கிறது.  25.11. 2018 ல்  பசுமைநடை இயக்கத்தினருடன் சென்று வந்த கொங்கர் புளியங்குளம்  பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மதுரை எட்டுத்திக்கிலும் மலைகள் சூழ்ந்த நகரம் என்று அழைக்கிறார்கள். அந்த எண் பெருங்குன்றங்களில் ஒன்று  இந்த கொங்கர் புளியங்குளம்.

கொங்கர் புளியங்குளம் 


புதன், 19 ஜூன், 2019

கீழடி

பசுமை நடை 95 வது நடையில் கீழடிக்கு அழைத்துச் சென்றார்கள்.(23.9.2018) அங்கு போய் வந்ததைப் பதிவு போட இவ்வளவு நாளாகி விட்டது. அவர்கள் 100 வது பசுமை நடை விழாவும் கொண்டாடி விட்டார்கள். 100வது பசுமை நடையில் கலந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இந்த கீழடிக்கு அழைத்துச் செல்லும்போது முதல் நாள் மழை பெய்து இருந்தது அதனால் அந்த இடம் எப்படி இருக்கிறது, போகும் பாதை எப்படி இருக்கிறது என்பதை அங்கு போய் பார்வையிட்டு வந்து பின் நம்மை அழைத்துச் சென்றார்கள். மழையால் அகழாய்வு செய்யும் இடங்களை த் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து இருந்தார்கள்.  நாங்கள் அங்கு போனதும் திறந்து காட்டினார்கள்.

மிகவும் அழகான அமைதியான இடம்.

அங்கு கீழடி பற்றிக் கொடுக்கப்பட்ட கையேடு- படித்துப் பாருங்கள்.

ஞாயிறு, 9 ஜூன், 2019

மழை ! மழை!

எங்கள் வீட்டுப் பால்கனியிலிருந்து எடுத்த மழைக்காட்சிகள்.


ஒரு வாரத்திற்கு முன் பெய்த மழை, காற்றுடன்  நல்ல மழை.
இரண்டு நாளுக்கு முன் பெய்த மழை

மழை வருமா?மழை உண்டா?  என்று கேள்வி கேட்கப்படுகிறது.
கிடைத்த பதில் என்ன பதிவைப் படிங்கள்.

திங்கள், 3 ஜூன், 2019

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்!

நேற்று(2/6/19) பழமுதிர்சோலைக்குப் போய் இருந்தோம் கிருத்திகை என்பதால்.  விடுமுறை தினம் என்பதால்  நல்ல கூட்டம் கோவிலில்.  அழகர் மொட்டை, காது குத்து விழா என்று   அழகர் கோவில் வளாகம் முழுவதும்  கூட்டம். 

திங்கள், 20 மே, 2019

சின்னத் தோட்டம்



என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு.

பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அதில்  மலரும் பூக்களும் அப்படித்தான்  என்னை மகிழ்விக்கிறது. அப்பார்ட்மென்ட் பால்கனியில் இவ்வளவுதான் வளர்க்க முடியும்.
காலையில் இந்த செடிகளைப் பார்க்கும் போது அது தரும் மனதுக்கு மகிழ்ச்சி.

புதன், 1 மே, 2019

சாமானியரின் குரல்




ஒரு பொருள் உற்பத்தி ஆகி அது சந்தைக்கு விற்பனைக்கு வருவதற்குள் அவர்கள் படும்பாடுகள், விற்பனைக்கு வரும்போது மக்கள் ஆதரவு இல்லை என்றால் அதனால் அவர்கள் படும் வேதனைகள், இவைதான் இந்தப் பதிவில்.

புதிய தலைமுறையில்  ஞாயிறு மாலை சாமானியரின் குரல் என்று பாடுபடும் தொழிலாளிகளைப் பற்றி வைப்பார்கள். அதில் ஒரு நாள் பனை ஓலையில் விசிறி செய்யும் தொழிலாளிகள் பற்றி பார்த்த காட்சிகளின் தொகுப்பு.
சிறு குழந்தைகளும் இந்த தொழில் செய்கிறார்கள்.

திங்கள், 29 ஏப்ரல், 2019

ஜன்னல் வழியே


முதுகு காட்டி நின்றாலும் தலை திருப்பி  என்ன பார்வை!

ஜன்னல் வழியே என்ற என் முகநூல் பதிவை   சேமிப்பாய் இங்கு.
 இந்த முறை புல் புல் பறவைகள் .




சனி, 27 ஏப்ரல், 2019

ஜன்னல் வழியே

அமர்ந்து வேடிக்கைப் பார்க்க கொடிக்கம்பி வசதியாக இருக்கிறது இவைகளுக்கு

தினம் தினம் இவைகளைப் பார்வையிடுவது என் பொழுது போக்கு. அலுப்பு தட்டுவது போல் இருந்தால் பால்கனி வந்து பறவைகளைப் பார்வையிடுவேன். வித்தியாசமாய்  இவைகள் போஸ் கொடுக்கும் போது   படம் எடுப்பேன். காமிராவை எடுத்து வருவதற்குள் சில நேரம் நான் எடுக்க நினைத்த தோற்றத்தை மாற்றி விடும். சில நேரம் அதே மாதிரி நிற்கும். 
ஊஞ்சல் ஆடுவது போன்ற பிரமை கொடுக்கிறது

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

சித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும்



திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல் சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலம்.
பரங்கிப்பேட்டையில் உள்ள ஆதிமூலேஸ்வரர் கோவில்


இறைவன் -ஆதிமூலேஸ்வரர்
இறைவி -அமிர்தவல்லி
தல மரம் -வில்வம், வன்னி
தீர்த்தம் -வருண தீர்த்தம்
புராண பெயர் -வருண ஷேத்திரம்
கிராமம்/நகரம் -பரங்கிப்பேட்டை
மாவட்டம் -கடலூர்
மாநிலம் -தமிழ்நாடு

காஷ்யப முனிவர் ஒரு முறை  சிவனை எண்ணி யாகம் நடத்தினார்.  அந்த யாகத்தை நிறுத்த வருணன் மழையை ஏற்படுத்தினான். இதனால் முனிவர் வருணனை சபித்தார். வருணன் சக்தி இழந்தான். பின் அவன் சிவபெருமானை வணங்கி சாபம் தீர்ந்தான். வருணன் சிவபெருமானை   இததலத்திலேயே இருந்து அருளும்படி வேண்டினான். அப்படி இங்கே தங்கியுள்ள அந்த இறைவனுக்கு ஆதிமூலேஸ்வரர் என்று பெயர்.

வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்கிறார்கள் .நாமும் மழை வேண்டி இப்போது அவரை வணங்குவோம்.

சித்திர குப்தர் 12 வயதில் இறந்து விடுவார்  என்று விதி இருந்தது. அவரது தந்தை  வசுதத்தன் மிகவருந்தியபோது, சித்ரகுப்தன் இததலத்து சிவனை வழிபடுவோம் என்று தன் தந்தையிடம் சொன்னார். ஆதிமூலேஸ்வரரை வழிபட்டார்கள்.

 மார்க்கண்டேயரை  சிவபெருமானே  வந்து காப்பாற்றினார். இத்தலத்தில்  தன் துணைவியைப் பெருமைப்படுத்த அம்பாளை விட்டு எமனை தடுக்கச் சொல்கிறார்.  அம்பாள் எமனிடம்,  ”சித்திரகுப்தன் சிறந்த சிவபக்தன் -அதனால் அவனை விட்டுவிடு ” என்கிறார். சிவபக்தர்களை அவ்வளவு சீக்கிரம் எமன் நெருங்கமாட்டார் என்பார்கள்.

மார்க்கண்டேயனை கொல்ல வந்த எமனை சிவன் இடது காலால் உதைத்தார் ,அந்த இடது பாகம் பார்வதி தேவியுடையது என்பார்கள். சேய்க்கு இரங்கும் குணம் தாய்க்குத்தான் உண்டு என்று  மார்க்கண்டேயர் வரலாறும், சித்திர குப்தன் வரலாறும் சொல்கிறது. சிவனின் ஆணைப்படி   சித்திரகுப்தனை எமன் கொல்லாமல் விட்டதுடன் தன் உதவியாளராகவும் ஏற்றுக் கொண்டார்.

இக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரில் சித்திரகுப்தன் சன்னதி உள்ளது.
இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அமிர்தம் போல் அருளை அள்ளி வழங்குவதால் அம்பாள்,அமிர்தவல்லி  என்று அழைக்கப்படுகிறார். அம்மன்சிலைக்கு கீழ் ஸ்ரீசக்கரம் உள்ளதாம் . சித்திரை மாதம் சிவன், அம்பாள் இருவர் மீதும் சூரிய ஒளி படுமாம் . அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெறுமாம்.

இங்கு ஆயுள் விருத்தியடையவும், மரண பயம் நீங்கவும் , நோய் தீரவும் மிருத்யுஞ்சய ஹோமம் செய்கிறார்கள்,  சஷ்டிஅப்தபூர்த்தி, சதாபிஷேகம்,  செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேது பகவானுக்கு அதி தேவதை சித்திரகுப்தர் ,அதனால் சித்திரகுப்தரை வணங்கினால் இவ்விரண்டும் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.  சிவன் கோவில்களில் அர்த்தஜாமபூஜை முடிவில் பைரவருக்கு பூஜை நடக்கும். இந்த கோவிலில் சித்திரகுப்தருக்கும், பைரவருக்கும் பூஜை செய்து நடை சார்த்தப்படுகிறது. அர்த்தஜாமத்தில் சிவனுக்கு சித்திரகுபதர் பூஜை செய்வதாக ஐதீகம். சிதராபெளர்ணமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஆயுள்விருத்திக்கு தயிர்சாதம்  நைவேத்தியம் செய்கிறார்கள்.


சுண்ணாம்பு கலப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரே கல்லால் செதுக்கப்பட்ட பாத்திரம்

விமானம்

தெற்குப் பிரகாரம்

துர்க்கையை வலம் வந்து வணங்கலாம்


சித்திரகுப்தர் திருவுருவம்

இக்கோவிலில் ராமேஸ்வரம் ராமலிங்கசுவாமி, காசி விஸ்வநாதர், நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பாதாளலிங்கம், கஜலட்சுமி, காலபைரவர், சூரியன் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
திருநள்ளாறில் கிழக்குப் பார்த்துகொண்டு நின்று சனீஸ்வரர் அருள்வது போல் இங்கும் இருக்கிறார். 




மாசி மகத்தன்று தீர்த்தவாரி. அருகில் இருக்கும் கடலுக்குச் சென்று வருணனுக்கு விமோசனம் கொடுக்கும் விழா நடக்குமாம். தைஅமாவாசை, ஐப்பசி கடைமுழுக்கு நாட்களில் தீர்த்தவாரி உண்டாம்.
இக் கோவிலை தரிசிக்கும் நேரம் காலை 7 மணி முதல், 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு எட்டுவரை. நாங்கள் போனபோது 11மணி பக்கம். குருக்கள் வேறு ஏதோவிழாவுக்கு வெளியே போய் விட்டார். போவதற்கு முன் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து விட்டு போய் இருந்தார். 
காஞ்சி மகாபெரியவரின் தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது என்று சொல்கிறார்கள்.
நாங்கள் பரங்கிப்பேட்டை கோவில்களை தரிசித்து விட்டு    அப்படியே சிதம்பரம் போனோம். அங்கு  அம்மன்  சந்நிதி பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் இருக்கும் சித்திரகுப்தரையும்  தரிசித்தோம்.
சிதம்பரம்-அம்மன் சந்நிதி
ஆயிரக்கால் மண்டபமும் சிவகங்கைத் தீர்த்தமும்

சிதம்பரம் -வடக்குக் கோபுரம்

என்றும் 12வயதாய் இருக்கும் சிவபக்தராகிய  அவரை வணங்கினால் நமக்கும் நல்லது நடக்கும் நம்பிக்கையில் வணங்குகிறார்கள் என நினைக்கிறேன்.
ஒருமுறை அபிஷேகம் பார்த்து இருக்கிறோம். அண்டா அண்டாவாக அனைத்து அபிஷேகங்களும் இருக்கும், இந்த முறை ஏகப்பட்ட தீபங்கள் ஏற்றி வழிபட்டார்கள். பக்தர்கள் தங்கள் கணக்கை சித்திரகுப்தர் நல்லபடியாக எழுதவேண்டும், எமதர்மராஜாவிடம் நம்மைபற்றி நல்லவிதமாக சொல்ல வேண்டும் என்று எடுக்கும்   முயற்சி போலும்!. நல் எண்ணம், நற்செயல், நற்பண்புகளுடன் நாம் வாழ்ந்தால் அவர் நல்லபடியாக நம்மைப் பற்றி நாலுவார்த்தை நல்லதாய் எழுதப் போகிறார்.

தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று 
அழுது காமுற்று அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே’ 

என்பது தேவாரம். திருஇன்னம்பர் என்ற பாடல் பெற்றதலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்வார் என்று திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் கூறுகிறது. சித்திரகுப்தர் அதற்காக நியமிக்கப்பட்டவர் போலும்! 
                                 வாழ்க வளமுடன்.
                                     ------------