வியாழன், 29 அக்டோபர், 2009

ஆதவன் தீபாவளி தொடர் அழைப்பு

ஆதவன் தீபாவளிப் பற்றி தொடர் பதிவு எழுத இரண்டு நாள்களுக்கு முன்பு அழைத்தார்.
தீபாவளி முடிந்து 10 நாட்கள் ஆனாலும் அழைப்பை மறுக்க முடிய வில்லை.

1.உங்களைப் பற்றிய சிறு குறிப்பு?

அன்பான குடும்பத்தின் தலைவி.

2.தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்?

என் தலை தீபாவளிக்கு கோவைக்கு என் மாமியார் வீட்டுக்கு வந்து தீபாவளி சீர் செய்து
விட்டு போனார் என் அப்பா.அது தான் என் அப்பாவை கடைசியாகப் பார்த்தது.கார்த்திகை
மாதம் தன் 51வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.தீபாவளி என்றால் அப்பாவின்
நினைவும் மறக்க முடியாது.

3.2009 தீபாவ்ளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

தீபாவளிக்கு கோவையில்.

4.தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளிபற்றி ஒரு சில வரிகள்?

என் கணவருடன் பிறந்தவர்கள் நாலு பேர் என் கணவரையும் சேர்த்து 5 பேர்.
எல்லோரும் அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து மாமியார் வீட்டில் கொண்டாடுவோம்.

5.புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்கள்?

எங்கள் ஊரில் தான் வாங்கினேன், இந்த முறை என் மகளும் வாங்கி வந்தாள்.

6.உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

அதிரசம் மட்டும் செய்தேன்,பாதுஷா,ஓட்டுப் பக்கோடா சமையல்காரர் செய்து
கொடுத்தார்.

7.உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்
(உ.ம்)மின்னஞ்சல், தொலைபேசி,வாழ்த்துஅட்டை)

தொலைபேசி,மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன்.

8.தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

தீபாவளி அன்று காலை புத்தாடைகளை மாமனார் கொடுக்க அதை பெற்று அணிந்து
வீட்டில் பூஜை முடித்து,பின், வயதில் மூத்த பெரியவர்களிடம் வரிசைப் படி
வணங்கி பின் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு
வந்து, வடை பஜ்ஜி, அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பலகாரங்கள்
இட்லி சட்னி என்று எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியோடு உண்டு உரையாடுவோம். இலையில்
எத்தனை அயிட்டங்கள் என்று எண்ணி உண்போம்.எல்லாம் கொஞ்சம் தான் வைக்க வேண்டும்
ருசிபார்க்கத் தான். பிறகு உறவினர்கள், மாமனார் மாமியாரிடம் ஆசி வாங்க வருவார்கள்.
மதியம் உணவு சமைத்தல்,பிறகு மாலை எல்லோரும் குடும்பத்துடன் அன்னபூரணி
கோவிலில் லட்டு தேர் பார்ப்போம்.சிருங்கேரி சாரதா கோவில் எல்லாம்
போய் வருவோம், இப்படி இருக்க எங்கே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
தொலைந்து போக. பண்டிகை சமயத்தில் தான் எல்லோரும் சேர்வதால்
பேச நிறைய விஷயங்கள் இருக்கும்.

9. இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில்,
அதைப் பற்றி ஒரு சிலவரிகள்?தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின்
பெயர்,முகவரி,தொலைபேசி எண்கள்,அல்லது வலைத்தளம்?

நல்ல நாளில் முடிந்த வரை உதவி செய்கிறேன்.

10.நீங்கள் அழைக்க விருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

அடுத்த வருடம் தான் கூப்பிட வேண்டும்.

புதன், 28 அக்டோபர், 2009

திருப்பம்(சர்வேசன் 500-’நச்’னு ஒரு கதை 2009 போட்டிக்கு)

சிவநேசனின் வீடு அன்று காலை முதலே ஒரே பரபரப்பாய் இருந்தது. அவர் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறார்கள். அவர் , குறித்த நேரத்தில் நாம் பெண் வீட்டில் இருக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் கிளம்புங்கள் என்று தன் மனைவி மகன்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்! அவருக்கு இரண்டு மகன்கள். அவர் மனைவி பட்டுப் புடவையில் வைரநகைகள் மின்ன பூரணி என்ற பெயருக்கேற்றாற்போல் பூரண கலசம்போல்
வந்தார். தன் மனைவி பூரணியைப் பார்த்த சிவநேசன் ஒரு கணம் மெய்ம்மறந்து ரசித்துவிட்டு
குறும்பாய் இப்போது நாம் நம் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறோம் என்று நினைவூட்டினார்.
பூரணியும் வெட்கத்தால் சிவந்து சரி சரி என்று சொல்லி, பூ, பழம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார்கள்.

காரில் போகும்போது தன் மகன்களைப் பெருமிதமாய்ப் பார்த்துக்கொண்டார் பூரணி.அழகு,
படிப்பு, நல்ல வேலை, நல்லகுணம் நிரம்பிய தன் மகனுக்கு நல்ல மனைவியாய் பார்க்கும் பெண் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

பெண்வீட்டை அடைந்தனர். பெண்வீட்டு வாசலில் அழகாய்ச் செம்மண் இட்டுக் கோலம் போட்டிருந்தார்கள் . வரவேற்பறையில் வெண்கல உருளியில் பலவித மலர்களால் அலங்கரித்திருந்தனர். பெண்வீட்டார் சிவநேசனின் குடும்பத்தாருக்கு நல்ல வரவேற்பளித்தார்கள். சிவநேசனின் மனதில் பெண்வீட்டைப் பற்றிய மதிப்பீடு உயர்ந்துகொண்டிருந்தது.

வீட்டின் உள்ளே மூக்கை உறுத்தாத ஊதுவத்தியின் நறுமணம். சிறு ஒலியில் காயத்திரி மந்திரம் பின்னணியில் ஒலிக்க, எல்லோரும் அமர, உறவின்ர்களின் அறிமுகப்படலம் நடந்தது. பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலையைப் பற்றிப்
பேச்சு வந்தது.அப்போது அதில் கலந்துகொண்ட சேகரின் அணுகுமுறை, நேர்மறையான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலிக்குப் பிடித்தது.

பெண்வீட்டில் உள்ள வயதில் மூத்தவர், பெண்ணைப் பார்த்துவிடலாம் எனப் பேச, பெண் அழைத்துவரப்பட்டாள்.பெண்ணைப் பார்த்தவுடனேயே அனைவருக்கும் பிடித்துவிட்டது. பெண்ணின் உயரம்,பெண் நடந்துவந்த விதம், புன்சிரிப்புடன் அனைவரையும் வணங்கிய பாங்கு எல்லாம் பிடித்திருந்தது. பூங்குழலியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்யப் பூரணி முடிவெடுத்துவிட்டார். தன் கணவனைத் தனியாக அழைத்துத் தன் மகனுக்குப் பிடித்திருக்கிறதா எனக் கேட்டு, பிடித்திருந்தால் பெண்வீட்டாரிடம் முடிவு தெரிவித்துவிடுவோம் என்று கூறினார். சிவநேசன் தன் மகன்களிடம் கேட்டார்,பெண் எப்படி என்று.

கல்யாணப் பையன் சங்கர், பெண் பிடித்திருக்கிறது என்றான். தம்பி சேகரும் பெண் நன்றாக இருக்கிறார் என்று தன் கருத்தைச் சொன்னான். சிவநேசன் பெண்ணின் தந்தையிடம் எங்களுக்குப் பூரண சம்மதம்.எப்போது நிச்சயம் செய்வது என்று கேட்டார். பெண்ணின் கருத்தைக் கேட்க அப்பா உள்ளே போனார்.

வெளியில் வரும்போது தயங்கித் தயங்கிப் பெண்ணிற்கு சேகரைததான் பிடித்திருக்கிறதாம் என்று சொன்னார்.

திங்கள், 12 அக்டோபர், 2009

தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்

பண்டிகை என்றாலே குதுகலம் தான். ஊர்,உறவு, சுற்றாத்தாருடன்
பண்டிகை கொண்டாடும் போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும்
ஏற்படுகிறது.நாங்களும் எங்கள் ஊருக்கு போய் கொண்டாட
போகிறோம்.வீட்டுக்கு மூத்தவர் (மாமனார்,மாமியார்)துணிகளை
எடுத்துக் கொடுக்க, அவர்கள் ஆசியுடன் நாம் பெற்று
அணிந்து வந்து,அவர்கள் ஆசீர்வாதங்கள மீண்டும் பெற்று
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்.
அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும்
பூவானமாய் மலரட்டும்.


வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

வியாழன், 8 அக்டோபர், 2009

வாழ்க்கை வாழ்வதற்கே!

காதல், கடவுள், அழகு, பணம், என்ற தலைப்பில்
கவிநயா நயம்பட உறைத்துவிட்டு,வல்லிஅக்காவை
அழைத்து இருக்கிறார்கள்.வல்லிஅக்காவும் அருமை
யாக எழுதி விட்டார்கள்.என்னை அழைத்து
இருக்கிறார்கள் எழுத,நான் என் அறிவுக்கு எட்டியதை
எழுதி இருக்கிறேன், நீங்கள் படித்து தான் ஆக
வேண்டும்.

காதல்:

காதல் என்றால் அன்பு. ஒவ்வொருவருக்கும்
காதல் எதன் மீதும் வரலாம். நாம் ஆண்,பெண்
இடம் வரும் காதலைப் பார்ப்போம்.இளமையில்
ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மலர் போல்
மனம பரப்பி,கனிபோல் கனிந்து இன்பமூட்ட வேண்டும்.
காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே
இல்வாழ்க்கை.முழுமை பெற்ற காதல் என்றால்
முதுமை வரை கூடவரும்.

பாராதியார் காதலைப் பற்றி சொல்கிறார்

“காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்
கானமுண்டாம்,சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினாற் காதல் செய்வீர்,உலகத்தீரே!
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்
காதலினாற் சாகாமலிருத்தல் கூடும்
கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்”

கணவனுக்கு மனைவி,மனைவிக்கு கணவன் இந்த
காதல்(அன்பு)சீராக இருக்கவேண்டும்.
ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை காதலிக்க
வேண்டும்.

கடவுள்:
கட+உள் = கடவுள்
இதையே திருவள்ளுவர்:

" மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"

அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும்
இறைவனை நினைந்து நமக்கு கொடுக்கப் பட்ட
வாழ்வை நல்லபடியாக வாழலாம்.
இறைவன் நம்மை வழி நடத்தி செல்கிறான்
என்று திடமாக நம்ப வேண்டும்.

” அருள் துறை வளர்ச்சியின்று அமைதி உலகில் கிட்டா
அருள் துறையே இறையுணர்வும் அன்பில் உயர்
வழிபாடாம்.” மகரிஷி

பணம்:

” அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைபொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”

திருவள்ளுவர் சொன்னதுபோன்று இவ்வுலகில் வாழ
பொருள் அவசியம்.இளமையில் தேடி,முதுமையில்
இன்பமாக அனுபவிக்க வேண்டும்.பொருள் ஒன்றே
வாழ்க்கை ஆகாது.ஒன்றை பத்தாக்கும் ஆசையில்
ஏமாற்றுவாரிடம் ஏமாறக் கூடாது.வரவுக் கேற்ற செலவு
செய்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

அழகு:
பார்ப்பவர் கண்ணைப் பொறுத்து அழகு மாறுபடும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
இளமையில் ஒர் அழகு,முதுமையில் ஒர் அழகு.
இயற்கை என்றும் அழகு.குழந்தையின் கள்ளமற்ற
பொக்கை வாய் சிரிப்பு அழகு.மழை அழகு, அருவிஅழகு,
பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்
இயற்க்கையின் படைப்புக்கள் எல்லாம் அழகு.

அழகு மாறிக் கொண்டே இருக்கும் அன்பு ஊறிக்
கொண்டே இருக்கும்.இயற்கையின் அழகை
கெடுக்காமல் ரசிக்க வேண்டும்.ரசிக்க கண் கொடுத்த
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

காதல், கடவுள்,பணம்,அழகு.இவை எல்லாம்
ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.
அன்புதான் கடவுள்,கடவுள் தான் அன்பு.
பணம் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருக்கும்.முறையான வழியில் ஈட்டிய பணம்
மகிழ்ச்சியை கொடுக்கும்,வாழ்வில் ஒரு
பிடிப்பைக் கொடுக்கும்,வாழ்வில் நிறைவு
போதுமென்ற மனது இருந்தால் அழகு தானாக
வந்து விடும்.

அப்பாடா ஒரு வழியாக வல்லி அக்கா எழுத
அழைத்த அழைப்பை ஏற்று எழுதி விட்டேன்.

நான் அழைக்க விருப்புபவர்கள்:
ராமலக்ஷ்மி,
கோமா,
R.கோபி,
சந்தனமுல்லை.

நன்றி.

“அருள் பேராற்றல் கருணையினால் உடல்
நலம்,நிறைசெல்வம்,நீள் ஆயுள்,உயர்புகழ்,
மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வோம்”- மகரிஷி.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

எங்கள் வீட்டு கொலு

சரஸ்வதி அம்மன்:

கோலம்:


மான்குன்றம்:


பூங்கா:

கோலம்:

கொலு:

சாலைக்காட்சி:



நவராத்திரி நிறைவு அடைந்து தீபாவளி வரும் சமயம்
எங்கள் வீட்டு கொலுப் பற்றி எழுதுகிறார்களே என்று
நினைக்கிறீர்களா? எனக்கு இப்போது தான் நேரம்
கிடைத்தது.

இந்த தடவை மிகவும் எளிமையாக படிகள் அமைக்காமல்
அப்படியே அலமாரியில் 5 தட்டு உள்ளது வைத்துவிட்டோம்.
கொலுப் பார்க்க வரும் குழந்தைகளுக்காக சிறு பூங்கா.
மலையிலிருந்து தண்ணீர் வருகிறமாதிரி செட்டிங்.
இந்த மலை செட் 12 பன்னிரண்டு வருடங்களுக்கு முன் என் கணவரே
சிமெண்ட்டில் செய்து வண்ணம் பூசியது .
இந்த ஆண்டு மலை கோவிலில் ஊட்டி மான் குன்றத்தில்
உள்ள குமரன் குடிக்கொண்டார்.

சரஸ்வதி பூஜை அன்று என் கணவர் சரஸ்வதி அம்மன்
செய்வார். கணவர் செய்யும் அம்மன் தான் சரஸ்வதி
பூஜை அன்று அனைவரின் பாராட்டையும் பெறும்.
என் அம்மா செய்த கை வேலைப்பாட்டு பொம்மைகள்,
என் மகன் வரைந்த ஒவியங்கள்,பேத்தி வரைந்த
ஒவியம் என கொலுவில் இடம் பெறும்.

குழந்தைகள் இருந்தபோது மிகவும் குதுகலமாய்
இருந்த நவராத்திரிப் பண்டிகை இப்போது கொஞ்சம்
உற்சாகம் குறைந்தாலும், பக்கத்துவீட்டில் இருக்கும்
குழந்தைகளுக்காக உற்சாகத்தை வரவழைத்துக்
கொண்டு செய்தோம், திடீர் வரவாக தம்பி தன்
மனைவி குழந்தைகளுடன் வந்து எங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.


மற்றும் ஒரு திடீர் வரவாக உள்ளூர் தொலைகாட்சி
நிலையத்திலிருந்து வந்து படம் பிடித்து ஒலி
பரப்பினார்கள்.

நவராத்திரி நாயகியர்களிடம் நல்ல உடல் பலத்தையும்
மனபலத்தையும் தரச்சொல்லிக் கேட்டுக் கொண்டு
நவராத்திரியை நிறைவு செய்தோம்.

வியாழன், 1 அக்டோபர், 2009

இன்பச் சுற்றுலாவா? துன்பச் சுற்றுலாவா?

எவ்வளவு ஆசையுடன் எவ்வளவு குதுகலத்துடன் தேக்கடிக்கு
சென்று இருப்பார்கள்,தன் குடும்பத்துடன் ,தன் உறவினர்,
நண்பர்களுடன். ஆனால் படகு கவிழ்ந்ததால் உயிர் இழப்பு
ஏற்பட்டு இன்பச்சுற்றுலா துன்பச்சுற்றுலாவாய் ஆனது மிகவும்
வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

// படகில் பயணத்தின் போது பின் பற்ற வேண்டிய விதி முறை
குறித்து அறிவிப்பு செய்வது வழக்கம். இந்த அறிவிப்பு
ஒவ்வொரு முறையும் செய்யப்படுவதில்லை என்று
படிக்கும் போது மிகவும் அதிர்ச்சியாகவும்,வேதனையாகவும்
உள்ளது.அறிவிப்பில் பயணத்தின் போது ஒரிடத்தில் இருந்து
வேறு இடத்திற்கு செல்லக் கூடாது, கூச்சலிடக் கூடாது,
எழுந்து நிற்ககூடாது, என்று தெரிவிக்கப்படும். இந்த
அறிவிப்பு முறையாக செய்யப்படவில்லை, இரண்டு
ஒட்டுனர்கள் மட்டுமே படகில் இருந்துள்ளனர் சுற்றுலா
பயணிகளை கண்காணித்து கட்டுப்படுத்த கூடுதல்
பணியாளர்கள் ஒருவரை நியமித்துத்திருந்தால் பயணிகள்
ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஒட்டு மொத்தமாக
சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்காது இந்த கோர விபத்தை
தவிர்த்து இருக்கலாம்.//(தினமலர் செய்தி)

படகு உயரம் அதிகமாகி அகலம் குறைவாக இருந்ததும்
விபத்திற்கு காரணம் என கூற்படுகிறது. இப்படிஎத்தனை
எத்தனை ஒட்டைகள் இந்த படகு கவிழக் காரணம்.

உயிர் தப்பியவர்கள், தன்னுடன் வந்த உறவினர், உயிர்
பிழைத்து இருக்க பிராத்தனை செய்வது நெஞ்சை
உருக்குவதாய் உள்ளது.

இடி, மின்னல், மழை என்று இயற்கை வேறு சோதனை
செய்கிறது.சேறு சகதியில் சிக்கி உள்ளவர்ளை மீட்க
சிரமப்படுகிறார்கள். சகோதரியை பிரிந்த தம்பி ,
மகளை பிரிந்த தந்தை என சோகம் கேட்க, பார்க்க
கஷ்டமாய் உள்ளது.

படகில் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருந்தும்,
படகு கவிழந்ததால் அதை பயன்படுத்த முடியவில்லை.

விலங்குகள் நீர் அருந்துவதைப் பார்க்க ஒரு இடத்தில்
குவிந்த்தால் இந்த விபத்து.

விபத்தில் உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய
பிராத்திப்போம். இனியும் இந்த மாதிரி உயிர் இழப்புகள்
ஏற்படாதிருக்க பிராத்திப்போம்.

அரசாங்கமும், சுற்றுலா துறையும் விதிமுறைகள் ஒழுங்காய்
கடைபிடிக்கப் படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.