திங்கள், 25 ஏப்ரல், 2022

தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்


21.4. 2022   வியாழன் அன்று திட்டை கோயில் சென்று வந்தேன். தங்கையின் கணவருக்கு "ஷஷ்டியப்த பூர்த்தி" (மணிவிழா) அதில் கலந்து கொள்ள   திருக்கடவூருக்கு உறவுகளுடன் சென்றேன் போகும் வழியில் சில கோவில் தரிசனம்.    திட்டை கோயில் தரிசனம் இந்த பதிவில்.  மாயவரத்தில் இருந்த போது போய் இருக்கிறோம். பழைய நினைவுகள் வந்து போயின.

புதன், 13 ஏப்ரல், 2022

சித்திரைத் திருநாள்

 தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்


சித்திரை விஷுக்கனி காணும் நாளில்,  மா, பலா, வாழை  என்ற
 முக்கனிகளும்மற்றும் எல்லாப் பழங்களும் இறைவனுக்குச்
 சமர்ப்பிக்கப்படும்.



தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற பதிவில் சென்ற ஆண்டு
 விஷுக்கனி கொண்டாடுவதைப் பற்றி  சொல்லிவிட்டேன்.

இந்த ஆண்டு,  விஷுக்கனியில் முக்கியமாக  இடம் பெறும் மா, பலா,
 வாழையும் அதன் நன்மைகளையும் பற்றிப் படித்ததைப் பகிர்ந்து 
கொள்கிறேன்.

பழங்களைப்பற்றி இயற்கை சங்கத்தில் சொல்வதையும்
 பகிர்ந்து கொள்கிறேன்.
என் கணவர் வரைந்த ஓவியம்


சூரியன் தனது ஒளியால் காய்களைக்  கனியச்செய்கிறது.
சூரியசக்தியால் சுவை ஊட்டப்பட்ட கனிகளைச் சாப்பிடுவதால் எல்லா
உயிரினங்களும், மனிதர்களும், உடலுக்குத் தேவையான சக்திகளைப்
பெறுகிறார்கள்.

காலையில் பழ உணவு எடுத்துக் கொள்வதைப் பழ ஆகாரம் என்று 
சொன்னார்கள். அது  தான் மருவி இப்போது பலகாரம் என்று ஆனதாய் சொல்கிறார்கள்,இயற்கைச் சங்கம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர்கள். காலையில் சாப்பிடும் பழ  உணவு, பொன் போன்றது. மத்தியானம் 
வெள்ளி போன்றது. இரவில் ஈயம் போன்றது என்கிறார்கள். 
தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் 
அதன் மூலம் இயற்கை சத்துக்கள் கிடைக்கும் .அந்த 
அந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதால் 
இயற்கை சக்திகள் குறைவில்லாமல் கிடைக்கிறது. 
நோய் வராமல் பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.

பழம் சாப்பிடுவதால் அது உணவாகவும் இருக்கிறது, மருந்தாகவும்
இருக்கிறது. குடலுறிஞ்சிகளால் எளிதில் உறிஞ்சப்படக்கூடியதாகவும்,
நார்ப்பொருள்கொண்டதாகவும்,  குடலின் புளிப்புத் தன்மையை
அகற்றுவதாகவும் இருக்கிறது.

 முக்கனிகள்

 மாம்பழம்:

மாம்பழத்தில் வைட்டமின் A உயிர்ச்சத்து நிறைந்து உள்ளது.  இரத்தம்
சுத்திகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது.  மாம்பழம் கிடைக்கும் காலங்களில்
மாம்பழத்தை உண்டு பலம் பெறலாம்.

வாழைப்பழம்:

குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்
பழம், வாழைப்பழம். இதில் வைட்டமின் A ,  வைட்டமின் B,  B2,  C
உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய
இருக்கின்றது. இந்த சத்தின் அளவு வாழைப்பழத்தில் உள்ள வகைக்கு வகை
வித்தியாசப்படும்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்று. தலைநரம்புகளுக்கு  வலிமையக் கொடுக்கும். அதிக
அளவு சூட்டைத்தருவதால் அளவோடு உபயோகிக்க வேண்டும்.
வைட்டமின் A உயிர்ச்சத்து அதிகம் இருப்பதால் இதைச் சாப்பிட்டால் உடல்
வளர்ச்சி சீரடையும். தேகத்தில் தோலை வழுவழுப்பாக வைத்து இருக்க
உதவும். நரம்புகளுக்கு உறுதி தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். பல்
சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும் , பற்களைக் கெட்டிப்படுத்தும்.
வைட்டமின் A உயிர்ச்சத்துக்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி
உண்டாகையால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

பொதுவாக பலாப்பழம் உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவே உள்ளது.
பழனி பஞ்சாமிர்தத்தில் கூடப் பலாப்பழம் சேர்க்கப்படுகிறது. ஐந்து வகை
பழத்தினையும் தேனையும் சேர்ந்து தயாரிக்கும் பஞ்சாமிர்தம் உடலுக்கு
மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும். விருந்துகளில் 
முக்கனி பரிமாறப்படுகிறது.  அதற்குக் காரணம், விருந்தில் 
சுவையான உணவுகள் பரிமாறப்படும்போது  நாம் அதிகமாய்
 சாப்பிட்டு விடுவோம். அதனால் உணவு ஜீரணம் ஆகவும்  உடற் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும்  நம் முன்னோர்கள் முக்கனிகளை 
விருந்தில் பரிமாறினார்கள். விருந்துணவை முக்கனிகளுடன் 
சாப்பிடும் போது ஜீரணம் சீக்கிரமாக நடந்து, இரைப்பையை விட்டு உணவு வெளியேறிவிடும். வயிற்று உபாதை இருக்காது.


எங்கள் வீட்டில் காலையில்  செய்யும் தமிழ்ப்புத்தாண்டு இனிப்பு:

   1 டம்ளர் அவலுக்கு அரை டம்ளர் வெல்லம் வேண்டும். வெல்லத்தைப்
 பொடி செய்து  1 ட்ம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து,  காய்ச்சி
கல், மண் போக வடிகட்டி பின் அதைக் கொதிக்க   வைத்து சுத்தம் செய்யப்பட்ட அவலில்   ஊற்றி மூடி வைக்க வேண்டும்,   அதனுடன் சிறிது
 பாசிப்பருப்பு, எள் வறுத்துப் போடலாம்.,வெல்ல நீரை  கொதி வந்தவுடன்
 அவலில் ஊற்றிவிடவேண்டும். (வெகு நேரம் கொதிக்கவைத்தால் பாகு
 மாதிரி ஆகிவிடும்).  ஊறினால் நன்றாக இருக்கும். நன்கு அவல் ஊறியவுடன் அதனுடன் தேங்காய்த் துருவலைப் போட்டு, கிளறி , ஏலக்காயைப் 
பொடி செய்து போட்டு, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு  போட்டால்  
  இனிப்பு அவல் ரெடி.

மதியம் வடை, பாயசம், மங்காய் வெல்லம் போட்ட பச்சடி. கொஞ்சமாய் சாஸ்திரத்திற்கு வேப்பம்பூவை அதில்  கலந்து விடுவேன். 
(தனியாக வேப்பம் பூ ரசம் வைப்பது  இல்லை.) கசப்பு, இனிப்பு 
எல்லாம் புத்தாண்டில்  இருக்க வேண்டும் என்பதால்.

புத்தாண்டு செய்திகள்

விஜய ஆண்டு நல்ல பலன்களைக் கொடுக்கட்டும்!

//மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்கள் எங்குமே-- நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயன்களின்றி வாடுமென நாட்டு//

என்று பஞ்சாங்கத்தில் உள்ள பாடல் கூறுகிறது.

இப்பாடலில் கூறப்பட்டுள்ள நன்மைகளே நடக்கட்டும்.மழை பெருகட்டும்!
தானியங்கள் விளையட்டும்.

இனிய புத்தாண்டு மலரட்டும்!
இனிய வாழ்வு அனைவருக்கும் மலரட்டும்!
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

இந்தப் புத்தாண்டில் நல்லதே நடக்க வேண்டுவோம்.

//இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடியின்புற்றிருந்து  வாழ்வீர்
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.//

 ===== மகா கவி பாரதியார்.





சுபகிருது வருஷம் படித்தவுடன் இந்த பாடல் நினைவுக்கு வந்து விட்டது. ஆயுள்முழுவதும் சுபதினமாக இருக்கட்டும்.


2022 ம் ஆண்டு வந்த இந்த  சுபகிருது வருடம்  இறையருளால் 
அனைவருக்கும் நலமாக அமையட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு நல வாழ்த்துகள்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

ஸ்ரீ ராமநவமி




 "ஸ்ரீ சம்பூர்ண ராமாயணம் " படத்தில் இடம் பெற்ற இந்த பாடலில்  டி.எம்.எஸ் அவர்கள் குரல் மிக அருமையாக இருக்கும். கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில்  மருதகாசி  அவர்கள் எழுதிய  அற்புதமான பாடல். வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் கவனித்து கேட்க வேண்டிய  வரிகள். தசரதன்  பெருமையாக வாலிபன் போல நடந்தான், என்ற அழகான வரி பாடலில் வரும் போது தசரதனாக நடித்த நாகைய்யா பெருமிதம் பொங்க நடந்து வருவார்.



இந்த பாடலும் மருதகாசி அவர்கள் எழுதியது, கே.வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்த பாடல். பி.சுசீலா அவர்கள்   பி.லீலா அவர்கள் பாடியது. "லவகுசா"படத்தில் இடம்பெற்ற பாடல்.
என் அப்பாவிற்கு பிடித்த பாடல்கள் இரண்டும். நானும் கேட்டு மகிழ்ந்தேன்.  உங்களுக்கும் பிடிக்கும்.


கோசலை வயிற்றில் திருமால் அவதரித்தல்

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,
வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,
தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே, 99

சித்தரும், இயக்கரும், தெரிவைமார்களும்,
வித்தக முனிவரும், விண்ணுளோர்களும்,
நித்தமும், முறை முறை நெருங்கி ஆர்ப்புற,
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே. 100

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை. 101

கைகேயி மைந்தனைப் பெறுதல்

ஆசையும், விசும்பும், நின்று அமரர் ஆர்த்து எழ,
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற,
பூசமும் மீனமும் பொலிய, நல்கினாள்,
மாசு அறு கேகயன் மாது மைந்தனை. 102


சுமித்திரை இரு மகவு ஈன்றாள்

தளை அவிழ் தருவுடைச் சயிலகோபனும்,
கிளையும், அந்தரமிசைக் கெழுமி ஆர்ப்புற,
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வுற,
இளையவற் பயந்தனள், இளைய மென் கொடி. 103

படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர, மறை நவில நாடகம்,
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட,
விடம் கிளர் விழியினாள், மீட்டும், ஈன்றனள். 104

கம்பராமாயணம்- பாலகாண்டத்தில் உள்ள திருஅவதாரப் படலத்தில் உள்ளபாடல்வரிகள்-  நன்றி விக்கிமூலம்.




புதுயுகம் தொலைக்காட்சியில் தரிசனம் செய்தேன். இலக்குவணன், ராமர், சீதை . அபிஷேகம் அலங்காரம் , பூஜை பார்த்தேன். ராமரும், சீதையும் அமர்ந்த கோலம், இலக்குவணன் நிற்கிறார்.

"ஜோதி டிவியில்" பார்த்த இந்த அபிஷேகக்காட்சி நன்றாக இருந்தது.  சல்லடையை பிடித்து கொண்டு கஷ்டபடாமல்  ஸ்டாண்டில் வைத்து விட்டார்கள்.

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”

-கம்பராமாயணம்.

ஸ்ரீராமபிரான் அனைவருக்கும் எல்லா நலங்களும் அருளவேண்டும்.

ஸ்ரீராம் ஜெய ராம்! ஜெய ஜெய ராம் !


வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
----------------------------------------------------------------------------------------------------


வியாழன், 7 ஏப்ரல், 2022

மேகமலை -5






மேகமலை 

மேகமலையை பிப்ரவரி 13ம் தேதி குடும்பத்துடன் சென்று வந்தோம். தொடர் பதிவு.

மேகமலையில் நாம் பார்த்து ரசிக்க நிறைய இடம்  இருக்கிறது. மூன்று நாட்கள் தங்கி இருந்து பார்க்கலாம். நாங்கள் சனிக்கிழமையும், ஞாயிற்று கிழமையும் பார்த்தோம். தேயிலை தோட்டம், மலைமேல் போய் இயற்கை அழகை ரசித்தோம்.

பசுமை மாறா காடுகள், தேயிலை, காப்பி, ஏலக்காய் பண்ணைகள் பார்க்க அழகு. யானை, புலி,  மான்கள் பார்க்கலாம் என்றார்கள், நாங்கள் ஏரிக்கரையோரம் மாடுகள், பறவைகள்   தான் பார்த்தோம். 

மாடுகள் அருகே பறவைகள் நிற்கிறது.


 கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர்  உயரத்தில் இருக்கிறது மேகமலை . மேகம் அடிக்கடிவந்து மலையை மறைப்பதால் மேகமலை. சட்டென்று  வெண்மேகம் மறைக்கிறது, சட்டென்று மலை தெரிகிறது. மாயாஜாலம் போல. நாலைந்து மலைசிகரங்களுக்கு நடுவே உள்ளது இந்த பள்ளத்தாக்கு. இங்கு  மிதமான குளிர் எப்போதும் இருப்பதால் கோடை காலத்துக்கு ஏற்ற சுற்றுலா தலம். குற்றால சாரல் போல சாரல் மழை பெய்கிறது.