வெள்ளி, 29 மார்ச், 2013

கடல் அழகு





                       
கடல் அழகு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. கடல் ஒரு அலுக்காத பொழுது போக்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும். கடல் அற்புதமான  இதம் தரும் மருந்து. மனதை மகிழச் செய்யும் குழந்தை. அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான்.

இந்தத் கோடை வெயிலுக்கு இதம் தரும் இடம். காசு செலவில்லாமல்
காற்றை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கி வரலாம், காற்று
வாங்கப் போய் கவிதையும் வாங்கி வரலாம் என்று கவிஞர்களும் பாடி
இருக்கிறார்கள். வெயில் காலத்தில் கடற்கரை  இருக்கும் ஊரில்
உள்ளவர்கள் எல்லாம்  மாலை நேரம் அங்கு கூட ஆரம்பித்து
விடுவார்கள். சுகமான காற்று வாங்கி மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக்
களிப்பார்கள். கடலைப்பார்த்தவுடன் சிலருக்கு கவிதை, பாட்டு எல்லாம் வருகிறது. எனக்குக் கடலை ரசிக்கத் தெரியும், அதைக் கண்டு குதூகலிக்கத் தெரியும்.   இதில்  பாரதியின் பாடலையும், புகழ்பெற்ற  எழுத்தாளர் எழுதிய கதையில் வரும் ஒரு பெண்  பாத்திரம் கடலில் போகும் போது பாடிய பாடலையும் பகிர்ந்து இருக்கிறேன்.
 
பாரதி கடல் நீர் ஆவியாகி மழை பொழிந்தால் நல்லது என்கிறார்.
மக்கள், பறவைகள்  பகல் பொழுதில் வெயிலின் கொடுமையால்
படும் துன்பம், குறைய இன்ப மழையை அழைத்துப் பாடுகிறார். நாமும் அவருடன் சேர்ந்து இன்ப மழையை அழைத்துப் பாடுவோம்.

//வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மைகுன்றிய
     பிரதேசங்களுக்கு காற்று ஓடி வருகிறது.
அங்ஙனம் ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக்
     கொண்டு வருகிறது.
இவ்வண்ணம் நமக்கு வரும் மழை  கடற்பாரிசங்களிலிருந்தே
     வருகின்றது.
காற்றே , உயிர்க்கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர்
     மழை கொண்டு வா.
உனக்குத் தூபதீபங்கள் ஏற்றி வைக்கிறோம்.
வருணா, இந்திரா, நீவிர் வாழ்க
இப்போது நல்ல மழை பெய்ய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய் விட்டன்.
சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று
     காலிகளுக்கும் நோய் வருகிறது. அதனை மாற்றியருள
     வேண்டும்.
பகல்நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை
மனம்” ஹா ஹா” வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப்
    பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன.
பலதினங்களாக, மாலை தோறும் மேகங்கள் வந்து
    கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலைகூட
     அசையாமல்,புழுக்கம் கொடிதாக இருக்கிறது.
சிறிதுபொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து
     மேகங்களை அடித்துத் துரத்திக் கொண்டு போகின்றன.
இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள்
     கருணையைப் பாடுகிறேன்.
எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து உலகம் தழைக்குமாறு
 இன்ப மழை பெய்தல் வேண்டும்.//

 --இவை கடலை பார்த்தவுடன்  பாரதிக்கு தோன்றும் எண்ணம்.

அவர் அவர் மனநிலைக்கு ஏற்ற இடம் கடல் தான் என்று முன்பு
சொன்னது போல் ஒரு மங்கைக்கு இந்த கடலைப் பார்த்தவுடன் இப்படி
மனது பொங்கிப் பாடுகிறாள்.- யார் என்று சொல்லுங்களேன்!

//அவளுடைய  கானத்தைக் கேட்பதற்காகவே கடலும் அலை அடங்கி
ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள
மெள்ள தவழ்ந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களுமிலை
அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன
போலும்! வானமும் பூமியும் அந்த கானத்தைக் கேட்டு மதி மயங்கி
அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்த கானத்தை
முன்னிட்டே மூலைக்கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி
நிற்கிறான் போலும்!
தேனில் குழைத்து வானில் மிதந்து வந்த பாடலை நாமும் சற்றுச் செவி
கொடுத்துக் கேட்கலாம்.

“அலைகடலும் ஓய்ந்திருக்க
அகக்கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில்
நெஞ்சகந்தான்  பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும்
கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும்
வீடு நோக்கி ஏகுவரே!
வானகமும் நானிலமும்
மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி
மனத்தில் புயல் அடிப்பது மேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும்
மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே
காற்று சுழன்றடிப்பதுமேன்?”//

யார் என்று தெரிந்து விட்டதா?
எல்லோருக்கும் தெரிந்த பெண் தான்.  இந்தப் பெண் எந்தக்கதையில் வரும் பாத்திரம் என்று தெரிகிறதா?

----------



வியாழன், 21 மார்ச், 2013

வாழைக்காய் அப்பளம்



மாசி மாதம் ஆரம்பித்துவிட்டால் வத்தல், வடகம் போட ஆரம்பித்து விடுவார்கள். பங்குனிக்குள் முடித்துவிடுவார்கள். சித்திரை வத்தல் சிவந்துவிடும் என்று சொல்வார்கள்.


அக்கம் பக்கத்து வீடுகளில் கூழ்வடகம் போடவில்லையா? என்றும்  முடித்துவிட்டீர்களா? என்றும் ஒருவருக்கு ஒருவர்   கேட்டுக் கொள்வார்கள்.
 திருநெல்வேலியில் சாலைக்குமரன் கோவில் எதிரில் அருமையான வீட்டுமுறையில் போட்ட வடகம், வத்தல் கிடைக்கும். சென்ற முறை அங்கு சென்றிருந்தபோது அதை வாங்கி வந்து விட்டேன்.  அங்கு வாங்கியதை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டுவிட்டேன். நம்மால் இப்போது செய்ய முடியவில்லை. வீட்டில் எல்லோரும், கஷ்டப்படுத்திக் கொள்ளாதே போதும். வத்தல் எல்லாம் போட்டு வத்தலாய் காய்ந்தது எல்லாம் போதும் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இரவு சுடச் சுட சாதம் , வத்தக் குழம்பு , மிளகு ரசம், , துவையல், வத்தல் , வடகம்தட்டு நிறைய வறுத்து வைத்து  சாப்பிட்ட காலங்கள் போய் விட்டது. இப்போது இரவு, பலகாரம் தான். குழந்தைகளுக்கும் வித விதமாய் டிபன் தான் வேண்டி இருக்கிறது. வத்தல் வடகம் பொரிப்பது குறைந்து விட்டது.

இந்த முறை வாழைக்காய் அப்பளம்  மட்டும் செய்தேன்.முன்பு ஒருமுறை மஞ்சரி பத்திரிக்கையில் வந்த குறிப்பு அது.

அதன் செய்முறை :
வாழைக்காய் -பெரியது 6
பச்சைமிளகாய் -6
உப்பு, பெருங்காயம்- தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் -ஒரு ஸ்பூன்.

உப்பு, காரம் அவர் அவர்கள் விருப்பம் போல் கூடவோ, குறைத்தோ போட்டுக் கொள்ளலாம்.

பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் வாழைக்காயை முழுதாய் தோலுடன் வேக வைக்க வேண்டும். குக்கரில் வேக வைக்கலாம். ஆனால் கலர் வெள்ளையாக இருக்காது.

நான் குக்கரில் தான் வேகவைத்தேன்.முன்பு எல்லாம் இட்லி கொப்பரையில் வேக வைப்பேன். நேரத்தை மிச்சம்செய்யவும் , கேஸ் சேமிப்புக்காகவும் குக்கரில் வேக வைத்துவிட்டேன்.

வாழைக்காய் இளஞ்சூட்டில் இருக்கும் போதே கல்லுரலில் இட்டு அரைத்துக் கொள்ளவேண்டும் .

நான்  கல்லுரல் இல்லாத காரணத்தால் காரட் துருவியில் துருவிக் கொண்டேன். பின்  பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயம் வைத்து  அரைத்துக் கொண்ட கலவையை, வாழைக்காய் துருவி வைத்ததில்  கலந்து, நன்றாக பிசைந்து கொண்டு, சிறிது சிறிதாக உருட்டிக் கொண்டு, இரண்டு பாலீதீன் சீட்களுக்கு நடுவில் வைத்து, சப்பாத்திக் கட்டையால் அப்பளம் போல் செய்து கொள்ளலாம்.  கைகளால் தட்டவும் செய்யலாம்.
அப்பளம் ஒன்றுபோல அழகாய் இருக்க, நான் பில்டர் மூடியால் வெட்டிக் கொள்வேன்.

பின் வெயிலில் காயவைக்கவேண்டும். இரண்டு நாளில் காய்ந்துவிடும் .
எண்ணெயில் பொரித்தோ, அல்லது சுட்டோ சாப்பிடலாம்.
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது வாழைக்காய் அப்பளம்.


































செய்து பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்.

புதன், 6 மார்ச், 2013

பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்


மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாய் நாம் கொண்டாடுகிறோம்.  சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி பத்மஸ்ரீ  கிருஷ்ணம்மாள் அவர்களை இந்த கட்டுரையில் வாழ்த்த விரும்புகிறேன்.








நாங்கள் கயிலைக்கு  புனிதப்பயணம் ஆரம்பித்தபோது 31.08.2011 அன்று நாங்கள் மயிலாடுதுறையிலிருந்து காலை 11 மணிக்கு சோழன் விரைவு ரயில் வண்டியில் சென்னைக்குப் புறப்பட்டோம்.    ரயிலில்  எங்கள் இருக்கைக்கு போகும் முன்பு ஒரு வயதான பெண்மணி இருந்த இருக்கையை தாண்டி போக நேரிட்டது. அவர்களை எங்கோ பார்த்தமாதிரி இருந்தது , அவர்களை ஏதோ பத்திரிக்கையில்(மங்கையர் மலர், அல்லது சிநேகிதி  என்று நினைக்கிறேன்) படித்து இருக்கிறேன் என்று என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்த போது எனக்கு நினைவு வந்து விட்டது. அவர்கள்  சுதந்திர போராட்ட  வீராங்கனை, சமூக சேவகி  பத்மஸ்ரீ கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஆவார்.
கீழ்வெண்மணி கிராமத்து விவசாய  மக்களுக்கு அவர் தெய்வம் போல் என்று படித்தது நினைவு வந்தது.

அவர்கள் சில வெளி நாட்டு அன்பர்களுடன் வந்து இருந்தார்கள். செங்கல்பட்டுக்கு போகிறேன்  என்றார்கள்.  நாங்கள்  அவர்களை வணங்கி உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என்றோம்.  எவ்வளவு உயர்ந்தவர்கள் அவர்களுடன் நின்று பேசுவதே பெரிய பாக்கியம். அவர்கள் அவர்களைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை கொடுத்தார்கள் அதைப்படித்த போது அவர்கள் எவ்வளவு விருதுகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், எவ்வளவு துன்பங்கள் பட்டு இருக்கிறார்கள் என்பது எல்லாம்  தெரிந்தது.

நிறைய விருதுகள் பட்டங்கள் எல்லாம் வாங்கியும் பெருமை கொஞ்சமும் இல்லாமல் மிக எளிமையாக நிறைகுடம் போல் ஒளிர்ந்த அவர்களை  போட்டோ எடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களை மட்டும் போட்டோ
எடுக்கப் போனேன். அவர்களுடன் வந்து இருந்த அயல்நாட்டுப் பெண்மணி நீங்கள் சேர்ந்து நில்லுங்கள், நான் எடுக்கிறேன் என்று அன்பாய்   எடுத்துக் கொடுத்தார்கள். அவர்களை பார்த்து வந்தபின் அடிக்கடி பொதிகை தொலைக்காட்சியில் அவர்கள் பேட்டி வைத்தார்கள். நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன். இதை முன்பே பார்த்து இருந்தால் அவர்களிடம் உங்களை பொதிகையில் பார்த்தேன் என்று சொல்லி இருக்கலாம். மன உறுதி நிறைந்த  சமூகசேவையை உயிர் மூச்சாகச் செய்த பெண்மணியை சந்தித்தது பற்றி  இந்த மகளிர் தினத்தில்  பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

”நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ” என்று தினமலர் குறிப்பிட்டு இருக்கிறது. படித்து இருப்பீர்கள். இருந்தாலும் இந்த பெண்கள் தினத்தில்  வீரமிக்க  பெண்மணிக்கு வணக்கம் சொல்ல மறுபடியும் படிக்கலாம் அல்லவா!

//"அந்த கூட்டத்தில் கல்யாண வயதில் இருந்த அந்தப் பெண் மட்டும் கழுத்தில், காதில், மூக்கில் என்று பொட்டு தங்க நகைகூட இல்லாமல், சாதாரண கைத்தறி புடவை அணிந்த நிலையில் எளிமையின் வடிவமாக காணப்பட்டார்'' என்று சுதந்திர போராட்ட தியாகியான ஜெகந்நாதனால் கைப்பிடிக்கப்பட்டவரும், தலித் சமூகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்தவரும், பூமிதான இயக்கத்தின் ஆணிவேராக இருந்தவரும், நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படும் சுவீடன் நாட்டால் வழங்கப்படும் "வாழ்வுரிமை விருது” பெற்றவரும்' இன்றைக்கு 94 வயதானாலும் தளரா மனஉறுதியுடன் காணப்படுபவருமான கிருஷ்ணம்மாளை இந்த கட்டுரை படம் பிடிக்கிறது

திண்டுக்கல் மாவட்டம் அய்யங்கோட்டையில் 1926 ம் ஆண்டு பிறந்தவரான கிருஷ்ணம்மாள்தான் தமிழக தலித் இனத்தின் முதல் பட்டதாரி எனலாம்.கல்லூரியில் படிக்கும் போது எதிர்பாரதவிதமாக காந்திக்கு உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.,இதன் காரணமாக காந்தியத்தை கடைபிடிக்கத் துவங்கியவர், சர்வோதய இயக்கத்தில் பணியாற்றியவர், காந்தியவாதியான ஜெகந்நாதனை திருமணம் செய்துகொண்டவர்.

இந்த நிலையில் நாகை,கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்ட விவசாயிகள் எரித்துக்கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து நாகை வந்தவர் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற வேண்டி நாகையில் தங்கியவர் பின்னர் நாகை வாசியாகவே மாறிவிட்டார்.

அப்போது விநோபாவே நாடு முழுவதும் பூமிதான இயக்கத்தை நடத்திக்கொண்டு இருந்தார். இருப்பவரிடம் இருந்து நிலத்தை பெற்று இல்லாதவருக்கு வழங்கும் இந்த பூமிதான திட்டத்தை தமிழகத்தில் நடத்திச் சென்றவர் கிருஷ்ணம்மாளாவார். தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கர் நிலத்தை பெற்று ஏழைகளுக்கு வழங்கினார்.

எவ்வளவுதான் உழைத்தாலும், எத்தனைகாலம் உழைத்தாலும் அரைப்படி நெல் கூடுதலாக கிடைத்தால் அதிசயம் என்று எண்ணியிருந்த உழவர்களுக்கு, சொந்தமாக உழைத்த மண்ணே கிடைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இந்த விஷயத்தை அசாதாரணமாக கிருஷ்ணம்மாள் நடத்திக்காட்டினார்.

நில மீட்பிற்காக தொடங்கப்பட்ட "லாப்டி' இயக்கத்தை விரிவுபடுத்தி விவசாய தொழிலாளர்களின் குடும்பத்தினர் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுதல், பாய் நெய்தல், மேல்படிப்பு படித்தல் என்று வலுவான,வளமான வளர்ச்சிக்கு வழிவகுத்தார்.

இதை எல்லாம் செய்யும் நாங்கள் தேவதூதர்கள் அல்ல,கொள்கைகளை மட்டுமே உதிர்க்கும் அரசியல்வாதிகளும் அல்ல, காந்திய சிந்தனையில் ,விநோபா வழியில் கிராமங்கள் உயர கிராமமக்கள் விழிப்புணர்வு பெற எங்களால் முடிந்த அளவு முயற்சிக்கிறோம்.,இந்த முயற்சி ஆங்காங்கே பலரால் மேற்கொள்ளப்பட்டால், நம் தேசம் ஏழைகளும், கோழைகளும் இல்லாத நல்ல கொள்கைப் பிடிப்புள்ள தேசமாகும் என்பதே எங்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறோம் எனும் கிருஷ்ணம்மாளின் பாதையில் தடைக் கற்களும்,முட்களும் மிக அதிகம், உடம்பிலும்,மனதிலும் பட்ட காயங்கள் இன்னும் அதிகம்.,ஆனால் இதையெல்லாம் சொல்லி எந்த நிலையிலும் பச்சாதாபத்தை பெற விரும்பாதவர் இவர்.

நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.

விவசாய மண்ணையும்,விவசாய மக்களையும் இவர் நேசித்த அளவிற்கு நாட்டில் யாரும் நேசித்து இருப்பார்களா என்பது சந்தேகமே,இதனால் அனைவராலும் "அம்மா' என்றழைக்கப்படுபவர்.

கத்தியின்றி,ரத்தமின்றி சாதிக்கமுடியும் என்பதன் அடையாளமே கிருஷ்ணம்மாள் என்று வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவர் இவரைப்பற்றி எழுதிய புத்தகத்தில் வியந்து பாராட்டி எழுதியுள்ளார்.

தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக இல்லாத விவசாயிகளுக்கு நிலம், வீடு, கல்வி, வேலைவாய்ப்பு என்று நிகழ்காலமாகவும்,எதிர்காலமாகவும் விளங்கும் கிருஷ்ணம்மாளுக்கு சுவீடன் அரசு தனது நாட்டின் மிக உயர்ந்த விருதான "வாழ்வுரிமை விருது' வழங்கி கவுரவித்துள்ளது.

சிலருக்கு விருதால் பெருமை
சிலரால் விருதிற்கு பெருமை
கிருஷ்ணம்மாள் சந்தேகமில்லாமல் இரண்டாவது ரகம்.
-எல்.முருகராஜ்.//


இரு காந்திகள்
இக் கட்டுரை ஜெயமோகன் எழுதி இருக்கிறார்.


இந்த லிங்கில், கத்தியின்றி ரத்தமின்றி ! என்ற புத்தகத்தின் மதிப்புரை வந்திருக்கிறது.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்- சுதந்திர போராளியின் வீரவரலாறு இதில் கூறப்படுகிறது.

திருமதி . கிருஷ்ணம்மாள்  அவர்களின் கணவருக்கு  நினைவாற்றல் குறைந்து வருவதாகவும்   உடல் நலிவுற்ற கணவரை அன்பாக  பார்த்துக் கொண்டார்  என்று பத்திரிக்கை மூலம் அறிந்து கொண்டேன்.
போன மாதம் பிப்ரவரி 12ம் தேதி திரு ஜெகந்நாதன் அவர்கள் மறைந்தார் அப்போது அவருக்கு வயது 100 . திரு ஜெகந்நாதன் அவர்களின் புகழை விவசாயிகள் காலம் முழுவதும்  சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

திருமதி. கிருஷ்ணம்மாள் அவர்கள் மனம் தளராமல் தன் பணியைத் தொடர இறைவன் அவர்களுக்கு மனபலத்தையும், உடல் நலத்தையும் அருளவேண்டும்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.


                                                       ----------------------------