செவ்வாய், 20 மே, 2014

இறைவன் படைப்பில் அதிசயங்கள்!

எறும்பைப் பற்றி சிறு வயதில் படித்த கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.தண்ணீரில் தத்தளித்த எறும்புக்குப் புறா மரத்திலிருந்து இலையைப் பிய்த்துப் போட, எறும்பு அதைத் தெப்பமாய் உபயோகித்துத் தப்பித்தது.தப்பித்த எறும்பு புறாவை வேட்டையாட வந்த வேடன் காலில் கடித்து  புறாவைக் காப்பாற்றியது என்று கதை.. பிறருக்கு உதவும் மனப்பான்மைக்கும், செய்நன்றி மறவாமல் இருக்கவும் சொல்லப் பட்ட கதை. 

எறும்பு பூஜித்த கோவில் - எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூரில் இருக்கிறது. 

இப்போது என்ன இந்த எறும்பு பற்றி சொல்கிறேன் என்றுபார்க்கிறீர்களா?

கோவையில் இந்தமுறை போன போது  எங்கள் வீட்டுஅருகில் இருந்த புங்கமரத்தில் வித்தியாசமாய் இருந்த காய்ந்த இலையின் மொத்த சேகரிப்பை பார்த்தேன் . அது என்ன என்று பார்க்கும்போது தான் தெரிந்தது, அவை எறும்புக் கூடு என்று . பின் எப்படி கட்டுகிறது என்று தினம் தினம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.  அதைப் படிப்படியாக எடுத்து இங்கு கொடுத்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் அருகில் உள்ள வேப்ப மரம். மற்றும் தூங்குமூஞ்சி மரத்திலும் கூடு கட்டி உள்ளது   எறும்பு.
 
                          என்னைக் கவர்ந்த காய்ந்த இலையின் சேகரிப்பு.

ஊரிலிருந்து விடுமுறைக்கு வந்த ஓர்ப்படியின் பேத்தியும்(சிறுமி) என்னுடன் வெகு ஆர்வமாய்  எறும்பு ஆராய்ச்சி செய்ய உதவினாள். தூங்குமூஞ்சி மரத்தில் இருக்கும் கூட்டை அவள்தான் மொட்டைமாடியில் போய் பார்த்து வந்து ,’ காமிராவை எடுத்துக் கொண்டு வா ஆச்சி வந்து பார் இங்கும் கூடு கட்டி இருக்கு’ என்றாள்,போய்ப்  பார்த்தால் அதுவும் எறும்புக் கூடுதான் அதுவும்  புங்க மரத்தில் இலையால் கூடு கட்டிய அதே எறும்பு  வகை தான். பின் வேப்பமரத்தை பார்த்தால் அதிலும் கட்டி இருப்பது தெரிந்து கொண்டேன்.

தரையில் நிமிசமாய் மண்ணைக் குவித்து வைக்கும் எறும்புப் புற்றையும், செடிகளில் வெண் பஞ்சாய் கூடு வைத்து செடியை சாகடிக்கும் எறும்புகளை பார்த்து இருக்கிறேன். இப்படி இலைகளை மடித்து கூடு கட்டும் எறும்பை இப்போது தான் பார்த்தேன்.

அமெரிக்கா போனபோது ஒரு படகுத் துறைக்கு அருகில் இருந்த மரத்தில் குளவி இலைகளால் கூடு கட்டியதை பார்த்தேன். அதை என் மருமகள் எடுத்த படம் கீழே பகிர்ந்து இருக்கிறேன் .



என்  சின்னக் காமிராவில் எடுத்த படம்

                 
           குளவி கூடு கட்டி உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் பரிதியின் ஒளி  

கோவையில் எடுத்த எறும்பு கூடு உருவாகும் படங்கள் பின் வருவது. இது நான் எடுத்த படங்கள்.
                   



               ஒன்றுக்கு ஒன்று பேசிக்கொண்டு வேலை பார்க்கும் அழகு.

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் எவ்வளவு அறிவைக் கொடுத்து இருக்கிறான் என்று வியந்து பார்க்க வைக்கும் காட்சி
மடித்துத் தைக்கும் அழகு. தையல் குருவி இரண்டு இலைகளை தைக்குமே அது போல்
இலைகளில் மடிப்பு இடையே வெண் இழைகள்

பஞ்சு போன்ற இழைகளால்  இலைகளை மடித்து பொட்டலம் போல் கட்டும் விந்தை
புங்கமரத்து இலைகளையும்  கிளைகளையும்இணைத்து கட்டும் எறும்புகள்

தூங்குமூஞ்சிப் பூவின் காய்ந்த கொப்பை சேர்த்த்து இழை பின்னி , பின் இலைகளை இணைக்கிறது கூடாய்



தூங்கு மூஞ்சி மரத்தின் பூ, இலைகள் மாலையில் மூடிக் கொண்டாலும் விழித்து இருக்கும் பூ.
வேப்பமரத்தில் வேப்பமர இலைகளால் கட்டிய கூடு
என் பேரன் அடிக்கடி பார்க்கும் அனிமேஷன்  படம்- ’Bug's life ’  நானும் அதை அவனுடன் விரும்பிப் பார்ப்பேன். எறும்பு சுறு சுறுப்பு என்றுதான் தெரியும் ஆனால் அதன் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது,  பிற உயிரினங்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்படுகிறது,  உணவை சேகரிக்க எத்தனை பாடு படுகிறது என்று எல்லாம் அழகாய் காட்டும் படம்.

அது போல் புங்க மரத்தில் கூடு கட்டும் எறும்புகளின் உழைப்பைப் பார்த்தேன். இலைகளில் விலக்கி, சரியாக பார்க்க முற்பட்ட போது அவை அங்கும் இங்கும் கலைந்து பின் மறுபடியும் தன் வேலையில் கண்ணும் கருத்துமானதை பார்க்கும் போது எறும்புகளின் மேல் தனிப் பாசமே வந்து விட்டது.
நம்மிடம் எறும்புகள் போல் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால்    எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சின்ன வேலையில் இடைஞ்சல் வந்தால் எவ்வளவு கோபம், எவ்வளவு மனத்துயர் படுகிறோம். எறும்பு போல் விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களின்    வாழ்வில் வெற்றி நிச்சயம்! 

                                                         வாழ்க வளமுடன்!



செவ்வாய், 6 மே, 2014

அம்மா என்றால் அன்பு

                    

அம்மா என்றால் அன்பு.   அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)

மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 முன்பு எல்லாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி அம்மாவுக்கு வாழ்த்து சொன்னது இல்லை. என் அம்மாவுக்கு இப்போது வாழ்த்து சொல்கிறேன்:-

 ”அம்மா! அன்னையர் தின வாழ்த்துக்கள்  அம்மா!. உங்கள் அன்புக் குழந்தைகளுக்கும், ஆசைப் பேரக்குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்க அம்மா! அவர்களை எப்போதும் ஆசீர்வாதம் செய்துகொண்டுதான் இருப்பீர்கள் என்றாலும் இப்போது உள்ள குழந்தைகள் அந்த அந்த நாள் வாழ்த்துக்களை விரும்புகிறார்களே! ”

சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தா?  என்றால் - அம்மா. இவ்வளவு அழகாய் யார் தலைவாரி விட்டா? என்று கேட்டால் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க ’அம்மா’ எனும் குழந்தை. யார் இந்த டிரஸ் வாங்கித் தந்தா? அழகாய்  இருக்கே! என்றால் ,’அம்மா’ என்று எதைக் கேட்டாலும் ’அம்மா’ என்று  குழந்தை   சொல்லும். திருமணத்திற்குப் பின்னும்,  ’எங்க அம்மாவீட்டில்’ என்று சொல்வதை விட முடியாது.  இப்படி அம்மா பெருமை பாடுவது காலம் முழுவதும் தொடரும்!

இப்போது விளம்பரங்கள் எல்லாம்  அம்மாவுக்குத்  தான் தெரியும்  குழந்தைகளைப் பற்றி என்று சொல்கிறது.

”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
 மண்ணில் பிறக்கையிலே  
அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் 
அன்னை வளர்ப்பதிலே”

என்று அதிலும் அன்னைக்குத்தான் பெருமையும், சிறுமையும். குழந்தைகள் குற்றம் செய்தாலும் பெற்றோர்களை - குறிப்பாய் அம்மா வளர்ப்பைத் தான் குற்றம் சொல்லும் உலகம். ”மக்கள் குற்றம் பெற்றோர் தலைமேல் ”என்று. எவ்வளவு பெரிய விஷயத்தை ஒருசின்ன கருத்துப்படத்தின்  மூலம் விளக்கி விட்டார்கள் விகடன் பத்திரிக்கையில்.
அந்த கருத்துப்படத்தைப் பாருங்கள் கீழே . கருத்தின் மூலம்  பாடமும் சொல்லித் தருகிறது அன்றைய விகடன்  :--
(கீழே பகிர்ந்த படங்கள் எல்லாம் விகடன் பவழ விழா மலரில் இருந்து எடுத்த படங்கள்.  1926 - 2002)

                                           

தாய் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு தரும் அன்பு என்பது பொக்கிஷத்தில் சேமித்தவை போல வாழ்நாள் முழுமைக்கும் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாதபொக்கிஷம் அது!

என் தாயின் நினைவுகள் சில:--

அதிகாலையில்  எழவேண்டும், கடவுளை வணங்க வேண்டும்
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்கு சாப்பிடுவது.  நேரத்திற்குச் சாப்பிட்டாலே உடலுக்கு ஆரோக்கியம். வீட்டுவேலைகளும் நேரத்திற்கு நடக்கும் என்பது அவர்களின் கருத்து. நேரம் தவறி உண்பவர்களைப் பார்த்தால் இந்த வயிற்றுக்கு தானே சம்பாதிக்கிறீர்கள் வயிற்றை காயப்போடலாமா இவ்வளவு நேரம் என்று கடிந்து கொள்வார்கள்.

 துணி காயப்போட்டால் காய்ந்தவுடன் மடித்து விட வேண்டும். கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு, அதை அங்கே போட்டு இங்கே போட்டு மடித்தால் நன்றாக இருக்காது என்பார்கள்.
பீரோவில் அழகாய் துணிமணிகள் மடித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பானையில் சுருட்டி வைத்த மாதிரி இருக்கு  என்பார்கள்.
மதியம் தூங்கக் கூடாது. பொழுதை வீணாய்க் கழிக்காமல் ஏதாவது கைவேலை செய்தல், நல்ல புத்தகம் படித்தல், சுவாமி புத்தகங்கள் படித்தல் என்று செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் படிக்கும் தோத்திர புத்தகங்களுக்கு அட்டை போட்டு சுத்தமாக வைத்து இருப்பார்கள் கொஞ்சம் கிழிந்து விட்டால்  கனமான அட்டை வைத்து   தைத்து  அட்டை போட்டு விடுவார்கள். எனக்கு பள்ளி நோட்டுக்கள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா தான் அட்டை போட்டுத் தருவார்கள், நான் செய்ததே இல்லை. (என் குழந்தைகளுக்கு என் கணவர் போட்டு கொடுப்பார்,அப்புறம் அவர்களே போட்டுக் கொண்டார்கள்.)

அம்மா வித விதமாய் ஜடை பின்னுவார்கள். என் மகள் , மற்றும் அண்ணன், தங்கை தம்பி  மகள்கள் எல்லாம்  ஆச்சியிடம் ஆசையாக பின்னிக் கொள்வார்கள்.

கண்கண்டால் கை செய்ய வேண்டும் என்பார்கள். பின்னல் கைவேலை எல்லாம் அந்த அந்த சீஸனுக்கு எது புதுசோ அதை செய்து விடுவார்கள் அவை ஒவ்வொரு கொலுவுக்கு வந்து விடும் எனக்கு.

கொலுவில்அம்மாவின் கைவேலைப்பாடுகள்  இடம்பெற்று அம்மாவின் நினைவுகளை தந்து கொண்டே இருக்கிறது.
புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பைண்ட் செய்தோ அல்லது கைப்பட எழுதியோ  வைத்துக் கொள்வார்கள். அவற்றை அம்மாவின் பொக்கிஷ பகிர்வுகள் என்று  முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.

ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும்.  பெண்களுக்கு ஓய்வே கிடைப்பது இல்லை (அவர்களே விருப்ப ஓய்வு பெற்றால்தான் உண்டு). அவர்கள் தன் குழந்தைகளுக்கு, தன் குழந்தைகளின் குழந்தைகளுக்கு, , மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள், அன்பு தரும் பலத்தால்.  அதை விகடனில்  பகிர்ந்து இருப்பார்கள்.
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---



இப்படிப் பட்ட நினைப்பும் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களை நீண்ட நாள் வாழ வைக்கிறது. ”அணைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவா! அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா!

அன்புக்கு ஏங்கும் பெற்றோர் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், அன்பாக அணைத்து அம்மா சாப்பிட்டாயா என கேட்டுப்பாருங்கள்  மகிழ்ந்து போவார்கள் வேறு ஒன்றும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.

முன்பு நாலு நாளுக்கு ஒருமுறை நாலுவரி  கடிதம் எழுது என்று கேட்டார்கள் பெற்றோர்கள்.  -அப்புறம் தொலைபேசி வந்தபின் - அடிக்கடி போன் செய் என்றார்கள்.  இன்னும் தகவல் நுட்பம் வளர்ந்தபின் இணையத்தில்  இன்று என்ன சாப்பிட்டாய்?என்று நேரில் பார்த்துக் கொண்டே பேசும் வளர்ச்சி பெற்றபின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது.

இப்போது அடிக்கடி ஸ்கைப்பில் வா உங்களைப் பார்க்க வேண்டும்  என்று தூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கும் காலம் ஆகிவிட்டது.

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்  அவர்கள் எழுதிய  தினசரி தியானத்திலிருந்து ஒரு சிறு பகிர்வு:-

தாயின் உள்ளம்:-
தன் குழந்தையிடத்துக் குற்றம் ஒன்றும் காணாது குணமே காணும் பாங்குடையவள் தாய். என் தாயே, உனதருளாலன்றி உய்யும் ஆறு நான் அறிகிலேன்.

கடவுளை நோக்கி நாம் ஒரு அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார்.. பெற்ற தாய் படைத்துள்ள  உள்ளக் கசிவு கடவுளின்கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின்கருணையை அறிபவன் ஆகிறான்.

எத்தன்மைக் குற்றம்
இயற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தனமை நின்னருளும்
அன்றோ பராபரமே.
===================தாயுமானவர்

அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்! தாய்மை உணர்வு  உடைய அனைத்து  தாயுமானவர்களுக்கும்  வாழ்த்துக்கள்!


அன்னையர்தினம் , அன்பின் வழி , அம்மாவின் பொக்கிஷங்கள்,
-இவை நான் முன்பு எழுதிய பதிவுகள்.

வாழ்க வளமுடன்!
-------------

சனி, 3 மே, 2014

கழுகுமலை மிளகாய்பழ சித்தர் ஜீவசமாதி

நம் நாட்டில் சித்தர்கள் எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து மறைந்தும் போகிறார்கள். சிலர்  காலம் காலமாய் பேசப்படுகிறார்கள். சிலர் நிறைய அற்புதங்களை ,   சித்து விளையாட்டுகளை செய்து காட்டுவார்கள். சிலர் அற்புதமான மருத்துவம் அறிந்தவர்களாய் இருப்பார்கள். சித்தர்கள் திருமூலர் போல்  கூடு விட்டுப் பாயும் கலை அறிந்தவர்களாக இருப்பார்கள். திருமூலருக்குத் திருவாவடுதுறையில் ஜீவசமாதி உள்ளது.  வருடம் ஒரு பாடலாய் மூவாயிரம் வருடம் வாழ்ந்து மூவாயிரம் பாடல் அடங்கிய திருமந்திரம் தந்தார் நமக்கு.

நமக்கு தெரிந்த சித்தர்கள் 18 . எங்கள் ஊரில்  பெரிய கோவிலில்(மயூரநாதர்) குதம்பைச் சித்தர் ஜீவசமாதியில் இருக்கிறார்.

நான் இங்கு சொல்லப்போகும் சித்தர் கழுகுமலையில் வாழ்ந்து சித்தியடைந்த மிளகாய்ப்பழசித்தர் பற்றி.

கிரிவலப்பாதையில் உள்ள அந்த சித்தரின் சமாதிக்கு சென்ற பங்குனி  உத்திரநாள் அன்று  (13/4/2014) போய் இருந்தோம்.

250 வருடத்திற்கு முன்பு அவர் ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். புரட்டாசி அமாவாசை அன்று அவரது குருபூஜை கொண்டாடப்படுகிறது என்றார்கள்.
அவர் மேல் பக்தி உள்ளவர்களின்  கண்களுக்கு இன்னும் தெரிகிறார் என்றார்கள்.

கழுகாசல மூர்த்தி கோவில் யானை  , சித்தர் கோவிலின் வாசலின் அருகில் வரும் போது முட்டி போட்டு  வணங்கிவிட்டுத்தான் செல்லுமாம். அவர் மேல் நம்பிக்கை வைத்து  வேண்டுதல்களை வைத்து வணங்கிச் செல்பவர்கள் வேண்டுதல் நிறைவேறிய உடன் வந்து தன்னால் முடிந்த காணிக்கைகளை செய்வார்களாம்.

நோய் உற்ற போது மிளகாயொன்றை  எடுத்து சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு விபூதியை பூசிக் கொண்டு மிளகாயை தண்ணீரில் போட்டு விட்டு பின் மறுநாள்  சித்தரை மனதில் நினைத்து நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு குடித்தால் நோய் குண்மாகும் என்று சொல்கிறார்.
-இவை எல்லாம் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொன்னவை.

சித்தருக்குப் பூஜை செய்கிறார்கள்
விளக்கின் ஒளி வெள்ளத்தில் சித்தர்
தலைமுறை தலைமுறையாக இவர்கள் குடும்பம் தான் கோவிலைப் பார்த்துக் கொள்கிறார்களாம் ,  அம்மா சித்தரைப்பற்றி சொல்கிறார்கள்.
கோவிலைப்பற்றி விபரங்களை சொல்லும் தாயும் மகனும்

உள் வாசலில் வாகனங்களை வைக்காதீர்கள் என்று கொட்டை எழுத்தில் எழுதினாலும் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.(பூசாரியின் வாகனம் போலிருக்கிறது)
ஜீவசமாதியின் முகப்பு வாசல்

பூவரசம் பூ 
வானைத் தொடும் வேப்பமரம், பூவரசு மரம்- சமாதி அருகில்
வேப்பமர நிழலில் கல் மண்டபம்  - இன்றும் இந்த மண்டபத்தில் சித்தர் வந்து அமர்வதையும் அதன் பக்கத்தில் நடந்து போவதையும் பார்த்ததாய் கோவிலைப்பார்த்துக் கொள்ளும் அம்மா சொல்கிறார்கள்.

மிளகாய்ப் பழ சித்தர் கழுகுமலைப்பகுதியில் வாழ்ந்து இருக்கிறார் . அவருடைய உணவு மிளகாய்ப் பழங்கள் மட்டும் தானாம். தினம் காடுகளில் மலைகளில் சுற்றி வருவாராம் மிளகாய்ப் பழம் சாப்பிட்டு விட்டு தவத்தில் அமர்ந்து இருப்பாராம்.

சிறுவயதில் வீட்டில் மிளகாய்ப் பழம் சாப்பிடுவாராம். சித்தரின் பெற்றோர்கள் ஏன் இப்படி சாப்பிடுகிறாய் என்று கேட்டவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டாராம். அது முதல், மலைதான் அவரின் வீடாய் மாறி விட்டது.
சித்தர் சமாதியைப் பார்த்துக் கொள்ளும் வயதான பெண்மணி கூறிய செய்திகள் இவை. அவரும் அவர்மகனும் நமக்கு செய்திகள் சொன்னார்கள்.  விபூதி, மிளகாய் பிரசாதமாய் கொடுக்கப்பட்டது.

கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் வாங்கி கொடுங்கள் என்றார்கள் . நாங்கள் எண்ணெய் வாங்க கடைக்கு போக வேண்டுமே அதனால் அவர்களிடம் பணம் கொடுத்து விட்டோம்.

உங்கள் வேண்டுதல்களை சொல்லிச் செல்லுங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் மிளகாய்ப்பழ சித்தர். அடுத்தமுறை வரும் போது உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு மகிழ்ச்சியாக வந்து வணங்கி செல்லுங்கள் என்றார்கள். எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?    என்று கேட்டுக் கொண்டார்கள். எல்லோர் நலனுக்கும் சித்தரிடம் சொல்லி பூஜை செய்தார்கள்.
நாங்களும் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி வந்தோம்.

                                                  வாழ்க வளமுடன்
                                                   ---------------------------