சனி, 19 நவம்பர், 2011

என் முதல் கவிதை

கண்ணே கண் உறங்கு
செல்ல பெண்ணே நீ கண் உறங்கு

பூவே கண் உறங்கு
பூவின் தேனே நீ கண் உறங்கு

பொண்ணே கண் உறங்கு
தங்க பொண்ணே நீ கண் உறங்கு

மானே கண் உறங்கு
மானின் விழியே நீ கண் உறங்கு

விழியே கண் உறங்கு
கயல்விழியே நீ கண் உறங்கு


ஆரி ஆரிரரோ ஆரி ஆரிரரோ ஆரி ஆரோ

இந்த ஆரி ஆரிரரோவை அவள் தூங்கும் வரை பாடுவேன்.

முதலில் சின்ன சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே தான் பாடுவேன்


வாராயோ வாராயோ தென்றல் காற்றே
வந்து எந்தன் சேயை கண்ணுறங்க வீசாயோ
வானகம் என்னும் சோலை தனிலே
வளரும் தாராகை நீயே!
இந்த நாலுவரியை திரும்ப திரும்ப பாடுவேன் .
அப்போது சிலோன் ரேடியோவில் பழைய பாடல் (எனக்கே இது பழைய பாடல் தான்)


தர்மபுர சுவாமி நாதன் பாடல் : வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
என்ற பாடலை பாடுவேன்.

அப்புறம் நாமே தயார் செய்து பாடினால் என்ன தாலாட்டு பாடல் என்று பாடியது தான்.எழுதி எல்லாம் பார்க்க வில்லை கவிதைக்கு எப்படி எழுத வேண்டும் என்று தெரியாது மனதில் வந்ததை பாடினேன். இன்று தான் இதை எழுதி இருக்கிறேன். மனதில் தான் இருந்தது.
இப்போது என் பேரக் குழந்தைகளுக்கும் இதை பாடுகிறேன். சொற் குற்றம் பொருள் குற்றம் பார்க்காமல் சும்மா படித்துப் பாருங்கள். என் குடும்பத்தார் இவள் பாடும் பாட்டு எல்லோரையும் தூங்க வைத்து விடும் போலவே என்று கேலி செய்வார்கள்.

பேரனுக்கு ஒரு பாட்டு பாடினேன் அதையும் இப்போது குறிப்பிட்டு விடுகிறேன்

செல்ல தங்கமே செல்ல குட்டியே
செல்ல தங்கமே செல்லம் செல்லம்
வைர தங்கமே வைர குட்டியே
வைர தங்கமே வைரம் வைரம்
பொண்ணு குட்டியே பொண்ணு தங்கமே
பொண்ணு தங்கமே தங்கம் தங்கம்

செல்லம் செல்லம். வைரம், வைரம், தங்கம், தங்கம், தொடர்ந்து சொல்லும் போது அவன்
விழுந்து விழுந்து சிரிப்பான்.


என் முதல் கவிதை என்று தலைப்பை பார்த்தவுடன் அட! கவிதைகூட எழுதுவார்களா இவர்கள் என நினைப்பீர்கள். என் முதல் கவிதையே என் பெண்தான்.அவளுக்கு பாடிய தாலாட்டுப் பாட்டுதான் அது.


மருத்துவமனையில் அவள் பிறந்தவுடன் நர்ஸ் சொன்னது கோமதி உனக்கு மூக்கை எடுத்து விட வேண்டிய வேலையே இல்லை. நல்ல அழகான தீர்க்கமான மூக்குடன் பிறந்து இருக்கிறாள். இந்திரா காந்தி பிறந்த அன்று பிறந்து இருக்கிறாள் என்று பாராட்டினார்கள்.

என்ன பெயர் வைக்கலாம் என நினைத்த போது மதுரையில் பிறந்ததால் மதுரை மீனாட்சியின் பெயர் வைக்க வேண்டும் என்று நினைத்து நானும் என் கணவரும் கயல்விழி என்று தேர்வு செய்தோம். பின் மாமியார் பெயரையும் அம்மா பெயரையும் சேர்த்து கயல்விழி முத்துலெட்சுமி என்று வைத்தோம்.

இப்போது தெரிந்து இருக்குமே என் மகள் யார் என்று பதிவுலக நண்பர்களுக்கு.

இன்று அவள் நிறைய கவிதைகள் எழுதுகிறாள். அவள் மகள் கவிதை எழுதுகிறாள்.

என் மகள் பிரசவத்திற்கு நான் அம்மா வீட்டுக்கு போய் இருந்த போது அவள் அப்பா கடிதம் நாலுவரி நாலுவரிதான் எழுதுவார்கள் அப்போது நான் ’விரிவுரையாளரே விரிவாய் கடிதம் எழுத கூடாதா’ என்று கேட்டு கடிதம் எழுதினேன் அதற்கு என்னை மகிழ்ச்சிப் படுத்த இரண்டு கவிதை எழுதி அனுப்பினார்கள். அதைத் திரும்ப திரும்ப படித்த காரணத்தால் என் மகளுக்கு கவிதை மேல் ஆர்வம் வந்தது போல.

என் மகளுக்கு இன்று பிறந்த நாள். அவள் இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

சனி, 5 நவம்பர், 2011

சதயத் திருநாள்


ஐப்பசி சதய நட்சத்திரத்தில் சோழச்சக்கரவர்த்தி ராஜராஜ சோழன் பிறந்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் மகன் அதே நட்சத்திரத்தில் பிறந்தான். அது தெரியாது அல்லவா உங்களுக்கு?

 
ராஜராஜ சோழன் சிவனுக்கு பெரிய கோவில் கட்டினார். அது போல் என் மகனும் சிவனுக்கு ஆலயம் கட்டினான். எப்படி என்று கேட்கிறீர்களா சாக்பீஸில் மெஷின் ஊசி என்னும் உளியால் செதுக்கி செதுக்கி கட்டினான். அவன் பாடம் படிக்கும் சோபா சேரில் உட்கார்ந்து எழுதும் அட்டையில் சாக்பீஸை வைத்துக் கொண்டும் பிளைடாலும் ஊசியாலும் செதுக்கி செதுக்கி செய்தான்.

ஒரு மாதகாலத்திற்கும் மேலாக அதைச் செய்தான். அப்போது பள்ளியில் அவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். அவன் கட்டிய கோவிலில் தேவாரக் கல் வெட்டு இருக்கிறது. துவாரபாலகர் , லிங்கோத்பவர் இருக்கிறார்கள். கோவிலுக்கு முன்பு சுவாமி எழுந்தருளும் மண்டபம் கட்டி உள்ளான். ராஜ கோபுரம் கட்ட ஆரம்பித்து, படிக்க வேண்டியது நிறைய இருந்ததால் பாதியில் விட்டு விட்டான். பின் நேரம் இல்லை.

 புடவைகட்டி, கோட்டுப் போட்ட முதல்வர் ஜெயலலிதா, தபால் பெட்டி, கீரைக்காரம்மா, பலிபீடம், டிராபிக் போலீஸ், பள்ளி செல்லும் சிறுமி, சிறுவன் ஆண், பெண் என்று நிறைய கொலுவில் ஆங்காங்கு வைக்க செய்து தந்தான். இவை எல்லாம் கொலு பெட்டியில் இருக்கிறது.

 உங்களுடன் இன்னொரு முறை பகிர்ந்து கொள்ள்கிறேன். இந்த கோவிலை தூசுதட்டக் கூட பயம் எனக்கு. மிக கவனமாய் மெதுவாய் துடைப்பேன் எங்கு உடைந்து விடுமோ என்று.இப்போது இரண்டு வயதாகும் அவனுடைய மகனிடம் நாளை வளர்ந்தபின் காட்ட பத்திரப்படுத்தி வருகிறேன்.

நாளைதான் சதயத்திருநாள். தஞ்சையில் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள்.என் மகனும் தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறான்.அவனுக்கு எங்களது வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லோரும் வாழ்த்துக்கள்.

                                         வாழ்க வளமுடன்.