புதன், 30 அக்டோபர், 2013

தீபாவளி வாழ்த்துக்கள்

(படம் வரைந்தது - என் கணவர் ) 
தீபாவளி என்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி,ஆனந்தம் அவர்களுக்கு பிடித்த ஆடைகள், அவர்களுக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் கிடைக்கும் நாள் அல்லவா! தீபாவளி.வாணவெடிகள்.குழந்தைகள் வெடிக்கும் போது பெற்றோர்கள் பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் கவனமாய்.
தீபாவளி அன்று குழந்தைகள் வெடிக்கும் போது ஏழை, சிறுவர், சிறுமியர் ஏக்கமாய் வந்து பார்த்துக் கொண்டு இருந்தால் அவர்களுக்கும், இரண்டு மத்தாப்புக்களை கொடுக்க சொல்ல வேண்டும் குழந்தைகளை. அவர்கள் மலர்ந்து  மத்தாப்பாய் சிரிக்கும் போது  எல்லோருக்கும் ஆனந்தம் ஏற்படும்.குழந்தைகளுக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வரும்.

 மலர்கள் ஏற்றிய மத்தாப்பு ’என்ற பதிவில்  கற்கை நன்றே வலைத்தளம் வைத்து இருக்கும் கபீரன்பன் அவர்கள் வித்தியசமாய்  நாற்பது ஏழைச் சிறுவர், சிறுமியருடன் தீபாவளி பண்டிகையைக்   கொண்டாடியதையும் அவர்களின் உற்சாகத்தையும் எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள். இப்படி எல்லோரும் வித்தியாசமாய் ஒருமுறையேனும் கொண்டாட ஆசை வரும், படித்தால்.

 வயிற்றை கெடுக்காமல் பலகாரங்களை அளவோடு உண்ண வேண்டும்.  பலகாரங்களை  உறவு நட்புகளுக்கும்,மற்றும்  தீபாவளி அன்று நம்மை நாடி வரும் ஏழைகளுக்கும் கொடுத்து மகிழ வேண்டும்.

வலை உலக நட்புகள் எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
                                                              
                                                               வாழ்க வளமுடன்!

                                                                       -----------------

சனி, 26 அக்டோபர், 2013

ஆலோவின் தினக்கொண்டாட்டம்.

நாங்கள்ஆலோவீன் கொண்டாட்டத்தை இந்த முறை மகனுடைய ஊரில் பார்க்கப் போகிறோம்.அக்டோபர் மாதம் கடைசிநாளன்று இது கொண்டாடப்படுகிறது. கிறித்தவ மதப்பெரியார்கள் ,தியாகிகள் மற்றும் இறைநம்பிக்கையாளர்களை வணங்கும் தினமாகச் சிலர் கருதுகிறார்கள். இந்நாளை ஆல் செயிண்ட்ஸ் டேயுடன் தொடர்பு படுத்திக்  கூறுகிறார்கள். (உலகெங்கிலும் உள்ள கிறித்தவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி ஆல் செயின்ஸ்டேயும் மறுநாள் ஆல் சோல்ஸ்டேயும் கொண்டாடுகிறார்கள்)

(நியூஜெர்சி) ஊரே ஆலோவீன் கொண்டாட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. ஆலோவீன் காஸ்டீயூம் கடைகள்,  புதிதாக விளைந்த பறங்கிகாய்கள், காய்ந்த சோளத்தட்டைகள், வைக்கோல்கள் விற்பனை என்று எங்கும் கடைகள். இலை தெரியாமல் அழகாய் சிவந்தி மலர்கள் தொட்டிகள்  எல்லாம் ஆலோவீனை வரவேற்கக் காத்து இருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் மலர் தொட்டிகள் பறங்கி காய்களை வித விதமாய் அழகாய் அடுக்கி வைத்து இருக்கிறார்கள்.

ஆலோவீன் என்றால் என்ன என்று பார்த்தேன் விக்கிப்பீடியாவில். உங்களுக்கு தெரிந்திருக்கும் . அதுபற்றி  கொஞ்சம் கீழே கொடுத்து இருக்கிறேன்.


//ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். 

இப்போது  இது மதச்சார்பற்ற ஒரு கொண்டாட்டமாகவே திகழ்கிறது. இந்த நாளானது ஆரஞ்சு வண்ணத்துக்கும் மற்றும் கருமை நிறத்துக்கும் தொடர்புபட்ட நாளாகக் கருதப்படுகிறது.

மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இந்த கொண்டாட்ட நாளில் இடம்பெறும்.

சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.

ஆலோவீன் நாளில் பேய்க் கதைகளை சொல்வதும் திகிலூட்டும் படங்களைப் பார்ப்பதும் பொதுவானவைகளாக இருந்தன. பல பேய்ப் படங்கள் ஆலோவீன் விடுமுறை நாட்களுக்கு முன்பாக வெளியாகின்றன.//


நன்றி : விக்கிப்பீடியா.
                                                                         -------------

ஆலோவீனுக்கு எங்கள் வீட்டிலும், ஒரு சோளக்கொல்லை பொம்மை ஒன்றும் பெரிய  பறங்கிக்காயும்(உண்மையான பறங்கிகாய்) வைத்து இருக்கிறோம். சிறிய பறங்கிக்காய் அலங்கார விளக்கும் மாட்டி இருக்கிறோம். பேரனுக்கு டைனோசர் போல் வடிவு அமைக்கப்பட்ட ஆடை வாங்கி இருக்கிறது. வீடுகளுக்கு போய் சாக்லேட் வாங்கி வர ஆரஞ்சு கலர் பறங்கிக்காய் கூடை  வாங்கி உள்ளது. பேரனுக்கு உடை வாங்க கடைக்கு போனபோது கடைகளில் உள்ள பொம்மைகளை எடுத்த படங்கள் பின் வருகிறது , உங்கள் பார்வைக்கு.

                            
பறங்கி காய் பொம்மைகள்
பறங்கி காய் பொம்மைகள்

சோளக் கொல்லை பொம்மைகள்
மூகமூடிகள்
மிட்டாய் வாங்க எடுத்துச் செல்லும் கூடைகள்
வயதான பிச்சைக்காரர்
அவரின் பின் பக்கம்
வீட்டு வாசலில் தொங்கவிடும் பொம்மைகள்
கல்யாண மாப்பிள்ளை
தொங்கும் பூதம்
எலும்பு மாலைகள்,  எலும்புக்கூடு  ஆடைகள்
பேய்க் கைப்பை
வெட்டுப்பட்ட உடல்கள்
சூனியக்காரி
கல்யாண உடையில் எலும்புகூடுகள்
மண்டை ஓடு லாந்தர்
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட எலும்புகூடு
ராட்சச வெளவால்
வைக்கோல் திணிக்கப்பட்ட பயங்கர பொம்மைகள்
மிட்டாய் வாங்கச் செல்லும் சிறுவன்
அழகாய், கட்டமாய் வெட்டப்பட்ட வைக்கோல் மஞ்சள் சிவந்தி மலர்த் தொட்டி, நிஜ பறங்கிகாய்
அழகிய பறங்கிக்காய் பொம்மைகள் மேல் எலும்பு கூடுகள்



சோளக்கொல்லை பொம்மைகள்

இலை தெரியாமல் பூத்து இருக்கும் ஆரஞ்சும் சிவந்திப் பூக்கள்


கடைகளில் ஆலோவின் உடைகள் , மண்டை ஓடு ஆடை, எலும்புகூடு ஆடை,சூனியக்காரி ஆடை, வெட்டுப்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட உள்ள உருவங்கள்,கை, கால் தனியாக, தலை தனியாக இரத்தம் சொட்ட சொட்ட இருக்கிறது. இரும்பு சங்கிலிகாளால் கட்டப்பட்ட நிலையில் இறந்தவர்களின் எலும்புகூடுகள் பெரியசிலந்திகள், பெரிய வெளவால்கள், திருமண உடையுடன் இறந்தவர்களின் எலும்புகூடுகள் என்றும், பிச்சைக்கார தோற்றம் கொண்டவை என்றும் அவர் அவர் விருப்பபடி நிறைய இருக்கிறது. 
பக்கத்துவீடுகளில் நிறைய பறங்கிக்காய்கள், மரத்தில் தொங்கும் எலும்புகூடு, கார்செட் கதவில் பெரிய சிலந்தி வலைகள் வைத்து இருக்கிறார்கள்.
சோளக்கதிர் காய்ந்தவை, கோதுமை வைக்கோல் எல்லாம் வைத்து பறங்கி காய்களும் வைத்து இருக்கிறார்கள். இந்த சம்யம் பறங்கிகாய், ஆப்பிள் நிறைய காய்க்குமாம். அதனால் அதில் இனிப்புகள், உணவுகள் செய்து உறவினர், நண்பர்களுக்கு கொடுப்பார்களாம்.

முன்னோர்களை வணங்கும் பழக்கம் எங்கும் இருப்பது நல்ல விஷயம் தானே!

வாழ்க வளமுடன்!
------

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

பொளைச்சுக் கிடந்தால் வரேன் தாயி!


நாங்கள் எந்த வருடத்திலிருந்து கொலுவை வைக்க  ஆரம்பித்தோம்  என்று பேசிக் கொண்டு இருந்தோம்.  முதலில் கொலு வைக்க  ஆரம்பித்தபோது திருவெண்காட்டில் இருந்தோம்.1980 ம் வருடம் ஆரம்பித்தோம்.

 பொம்மை கொண்டு வரும் தாத்தாவின் நினைவுகளை மருமகளிடம்  பகிர்ந்து கொண்டேன்.அதை நீங்களும் படித்துப் பாருங்களேன். ஒவ்வொரு கொலு சமயத்திலும் பொம்மை கொண்டு வரும் தாத்தா நினைவு வந்து விடும்.

ஒரு வயதான தாத்தா பண்ருட்டியிலிருந்து பொம்மைகள்
கொண்டு வருவார், அவரிடம் முதன் முதலில் பிள்ளையார்,  சிவலிங்கம்
நந்தி மூன்றும் 12 ரூபாய்க்கு வாங்கினேன்.


எங்கள் அம்மா வீட்டிலும் கொலு உண்டு, மாமியார் வீட்டிலும் கொலு
வைப்பது உண்டு.  விடுமுறை இல்லை என்று நவராத்திரிக்கு ஊருக்கு
வரமாட்டார்கள் என்னவர். குழந்தைகளுக்கு நவராத்திரி கொலுவைப் பற்றி
தெரிய வேண்டுமே! இப்போது போல் காமிராவில் கொலுவை படம் எடுத்து
உடனே அனுப்பும் வசதி எல்லாம் கிடையாதே!  கொலு வைக்க வேண்டும்
என்ற எண்ணம் திடீர் என்று தான் வந்தது.பக்கத்து வீட்டில் ஒரு மாமி  வீட்டில் முன் வாசலில் மண் கொட்டி வைத்து இருப்பார்கள். அதில் குழந்தைகளை விளையாட அழைத்து செல்வேன். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது  பண்ருட்டி தாத்தா பொம்மைகளுடன் வந்தார். பொம்மை வேண்டுமா? கொலு பொம்மை என்று கேட்டு  மாமியின் வீட்டு திண்ணையில் ஓய்வாய் உட்கார்ந்து தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தார். அப்போது சும்மாதான்
பொம்மைகளைப் பார்வை இட்டேன். மாமி, தாத்தாவிடம் ’நாங்கள் கொலுவைப்பது இல்லை எங்களுக்கு வேண்டாம்’ என்றார்கள்.

 நான் ’எங்கள் அம்மா வீட்டில், அத்தை வீட்டில் எல்லாம் கொலு வைப்பார்கள்’ என்றவுடன்  மாமி,’ நீயும் தான் வையேன்’ என்றார்கள்.  உடனே ஆசை தொற்றிக் கொண்டது. மூன்று பொம்மைகளை எடுத்து வைத்து விட்டேன். என்
கணவரிடம் கேட்க வேண்டுமே! கொலு வைக்கலாமா  என்று கேட்க
வேண்டுமே என்ற தயக்கம் இருந்தாலும்   ஆசை வென்றது.என்ன சொல்லப்
போகிறார்கள் சம்மதித்து விடுவார்கள் என்று  எனக்கு நானே சமாதானம்
செய்துகொண்டு வாங்கிவிட்டேன்.

தாத்தாவும் ’மூன்று போதுமா ’என்று கேட்டார், ’அடுத்த வருடம் தான் இனி
வருவேன்’ என்றார். ’போதும் அடுத்தவருடம் வாங்கிக் கொள்கிறேன்’ என்று
சொல்லி விட்டேன், நிறைய வாங்கும் ஆசையை அடக்கிக் கொண்டு.

எல்லாப்பொம்மையுமே அழகு. ’என்னை வாங்கிக் கொள்’ என்றது.

மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த அப்பாவிடம், குழந்தைகள் அப்பா
கொலுபொம்மை  கொலுபொம்மை என்று குதித்து கும்மாளமிட்டனர். பெண்ணுக்கு விபரம் தெரியும்: பையனுக்கு விவரம் புரியாது  இருந்தாலும் அக்காவுடன் சேர்ந்து குதித்து மகிழ்ந்தான்.என் கணவர் பொம்மைகளைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி,’ இவ்வளவு பெரிதா?’என்றுதான்.

’எங்கள் வீட்டில் இவ்வளவு பெரிய பொம்மையே கிடையாது. நீ என்ன
இவ்வளவு பெரிதாக வாங்கி இருக்கிறாய்?’

  ’நாலு ரூபாய் தான் ஒரு பொம்மை’ என்றேன். ’நான் ரூபாய்க்கு சொல்லவில்லை இவ்வளவு பெரிதாக வாங்கிவிட்டாயே என்று தான் கேட்டேன்’ என்றார்கள்.

எப்படியோ  தாத்தாவும் ’பொளைச்சு கிடந்தால்  வரேன் தாயி அடுத்தவருடம் என்று சொல்லிச் சொல்லியே  வருட வருடம் பொம்மைகளை கொண்டு வந்து கொடுத்தார். நான்கு வருடங்கள்.

 ராமர், லக்ஷ்மணர்,சீதை,அனுமன்செட், மயில்பீலியுடன் பெரிய கிருஷ்ணர்(மயில்பீலியை தனியாக கழற்றி மாட்டலாம்)  தங்க கலரில் இரண்டு  பாவை விளக்குகள் , பெருமாள், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை , கடிகாரம், செட்டியார், புத்தர், வெங்காடஜலபதி என்று அவரிடம் வாங்கியது எல்லாம் மிக அழகு.

அப்புறம் நாங்கள் மாயவரம் வந்து விட்டோம்.அங்கு வந்த பின் கைலாய குடும்ப செட் -சிவன், பார்வதி, பிள்ளையார்,நாரதர் மாம்பழம்  கொடுக்கும் காட்சி.  மற்றும் மீனாட்சி வாங்கினேன். நால்வர் செட் வாங்கினேன்.
(அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்.)

முன்பு வாங்கிய சிவலிங்கம் மதுரை சொக்கநாதர் ஆனார். ஆமாம்! மீனாட்சி பொம்மை வாங்கி அதன் அருகிலே வைத்து மீனாட்சி சொக்கநாதர் ஆனார்.

என் கணவரின் அண்ணா வீட்டில் முன்பு கொலு வைக்க மாட்டார்கள்
அவர்கள் மூன்று வருடம் எங்கள் கொலுவுக்கு வந்தார்கள்( அப்புறம் அவர்கள் வீட்டிலும் கொலு  வைக்க ஆரம்பித்து விட்டதால் வரவில்லை) அவர்கள் வாங்கி தந்த அன்ன படகில் சரஸ்வதி, லட்சுமி, ராதாகிருஷ்ணர் ஊஞ்சல் ஆடும் காட்சி, நாதஸ்வர செட் இவைகளுடன்  பொம்மைக் குடும்பம் பெரிதானது.

அம்மா, தங்கைகள் ஒரு முறை வந்தார்கள் அவர்கள் சிவன், பார்வதி. ஆறு
முகர் ஆறு தாமரைகளில் இருக்கும்  பொம்மை, கார்த்திகை பெண்கள்
அறுவர் வாங்கி வந்தார்கள்.



மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  போன போது  நம் வீட்டில்  செட்டியார் மட்டும் இருக்கிறாரே! என்று செட்டியார் அம்மாவும் வாங்கினேன் பலவருடங்களுக்கு பிறகு செட்டியாருக்கு வாழ்க்கைத் துணை கிடைத்தார்.



தெரிந்தவர்கள் கொலுப் பார்க்க வரும்போது  குபேர பொம்மை,
பிள்ளையார், சரஸ்வதி, கிருஷ்ணர், பெரிய யானைகள் எல்லாம் வாங்கித்
தந்தார்கள்.  அவை  வாசலில் வரவேற்பது போல் நித்திய கொலுவானது.
அதை வைக்கப்  பெட்டியில் இடமில்லை. அந்த நித்தியகொலு படம் துளசி கோபால் அவர்கள் மாயவரம்  பதிவர் சந்திபைப் பற்றி  எழுதிய இடுகையில் இடம் பெற்றது.

இனி வருபவர்களிடம் தயவு செய்து வரும்போது பூ வாங்கி வாருங்கள்
போதும் பொம்மைகள் வேண்டாம் வைக்க இடமில்லை என்று அன்புக்
கட்டளை இட்டேன். அப்படியும் சிலர் ,’பெரிதாக வாங்கினால் தானே வைக்க
இடமில்லை சின்னதாக வாங்கி வருகிறோம் ’என்று வாங்கி வருவார்கள்.
நான் போகும் ஊர்களில் எல்லாம் கொலுவுக்கு என்று சேர்த்த கலைப்பொருட்கள் ஏராளம்.

நீ பொம்மை வாங்கி விடுகிறாய் அதை எடுத்து அடுக்குவது, படிகளை செட்
செய்வது, மீண்டும் அதை பேக் செய்வது எல்லாம் பெரிய வேலை என்று
வேலை அதிகமாகிறது என்று என் கணவர் அலுத்துக் கொண்டதால்
இப்போது வாங்குவது இல்லை. அப்படி வாங்கினாலும் கொலுவில்
பொம்மை கொஞ்சமாய் இருக்கும் வீடுகளுக்கு கொடுத்து விடுவது என்று
இருக்கிறேன்.

அம்மா   ஒயரில், கம்பளி நூலில் செய்த பொம்மைகள்  புதிதாக செய்து
கொடுப்பார்கள் வருட வருடம். அவை கொலுவில் இடம்பெற்று நெஞ்சில்
அவர்களின் நினைவை எப்போதும் தந்து கொண்டு இருக்கிறது .

மகனின் ஓவியங்கள், மருமகள், மகள், பேரன், பேத்திகள் என்று அவர்களின்
கைவேலைகள் கொலுவை அலங்கரிக்கிறது.

சென்ற வருடம்  மாயவரத்தில் மகன் மருமகள், பேரன் வந்து  உற்சாகமாக கொண்டாடிய கொலு படங்கள் இவை:-



                                    

                                              

                                              
  மகன் செய்த சாக்பீஸ் கோவில், அப்பா செய்த மலைக் கோவில்  அருவியுடன்.
                                       

                                             






மகன் , மருமகள் சேர்ந்து செய்த பூங்கா ரயில்
கணவர் செய்த சரஸ்வதி அம்மன்  
நவராத்திரியில் போட்ட கோலங்கள் 
பன்னீர் தெளித்து விட்டேன் . சந்தனம், குங்குமம் எடுத்துக் கொள்ளுங்கள் !

கொலுவுக்கு வந்து கொலு பார்த்தவர்களுக்கு ஜூஸ், பிஸ்கட் , எடுத்துக் கொள்ளுங்கள்.  மற்றும்  வெற்றிலைபாக்கு ,மஞ்சள் குங்குமம் கூடையில்.
பெற்றுக் கொள்ளுங்கள். எல்லோர் வீட்டிலும் சுண்டல் சாப்பிட்டு இருப்பீர்கள் அதனால் ஒரு மாறுதலுக்கு பிஸ்கட், மிட்டாய்  எடுத்துக் கொள்ளுங்கள்.

நியூஜெர்சியில் இன்று சரஸ்வதி பூஜை!
எல்லோருக்கும், சரஸ்வதிபூஜை,  விஜய தசமி வாழ்த்துக்கள்!
இன்று படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு கலைமகள்  கல்விச் செல்வத்தை அள்ளித் தர வாழ்த்துக்கள்!

                                                         வாழ்க வளமுடன்!

                                                                            ----------------

புதன், 9 அக்டோபர், 2013

நலங்கள் நல்கும் நவராத்திரி




நவராத்திரி வந்து விட்டது !
தேவி கொலு இருக்க வீடுகளுக்கு வந்துவிட்டாள் !

அம்பிகையைச் சிறப்பாக வழிபடுவதற்குரிய நாட்கள் நவராத்திரி. இது மாதந்தோறும் அமாவாசையை அடுத்துள்ள ஒன்பது நாட்களில் வந்தாலும், இரண்டு நவராத்திரிகளையே சிறப்பாக எடுத்துக்கூறுவார்கள் பெரியவர்கள்.

ஒன்று கோடைக்காலத்தில் வரும் பங்குனி அல்லது சித்திரையில் அமாவாசையை அடுத்துவரும் ஒன்பது நாட்களில் கொண்டாடப்படும்.
வசந்தருதுவில் வருவதால் இது வசந்த நவராத்திரி.

புரட்டாசி அமாவாசையை அடுத்து வரும் நவராத்திரி எல்லோரும் போற்றும் நவராத்திரி. இது சரத்(மழை) காலத்தில் வருவதால் சாரதா நவராத்திரி எனப்படும்.

வசந்த ருதுவும், சரத்ருதுவும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமானவை என்பார்கள். இவ்விரு காலங்களிலும்  வெம்மை மிகுதியால்  தண்மை மிகுதியாலும் அம்மை, காலரா முதலிய நோய்கள் பெருகி மக்கள் துன்படும் காலம். இக் காலங்களில் உலக மாதாவாக விளங்கும் அம்பிகையை வழிபடுவோர் அந்நோய்களினின்றும் நீங்கி அனைத்து நலங்களையும் பெறுவார்கள் என்பது  நம்பிக்கை.

கோடைகால உணவுகள், குளிர்கால உணவுகளை  அளவோடு உண்டு, நன்றாக உழைத்து ,உடல் நலத்தை காத்து கொள்ளச்செய்து இருக்கிறார்கள். வாழ்க்கையை நல்லபடியாக நடத்திச்செல்ல  இறை நம்பிக்கை !.  இறை நம்பிக்கை  இருந்தால் ஒழுக்கம், பண்புகள் தானாக வரும் என்பதால் முன்னோர்கள் விழாக்களை வகைப்படுத்திக்  கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள்.

முன் காலத்தில் போருக்குப் போகும்போது கொற்றவையை (மலைமகள்)  ,வழிபட்டு வெற்றியைப் பெற்று மகிழ்ந்தனர், திருமகளை வழிபட்டுச் செல்வம் பெற்றனர், கலைமகளை வழிபட்டுக் கல்வி பெற்றனர் என்று தொல்காப்பியம் போன்ற நூல்களில் சொல்லப்படுகிறது.

                                                                     * * *

எங்களுக்குப் போன வருட கொலு, மாயவரத்தில்.  மகன், மருமகள், பேரன் வந்து சிறப்பு செய்தார்கள். இந்த வருடம் இந்த சமயத்தில் நாங்கள் மகன் (நியூஜெர்சி  )வீட்டுக்கு வந்து இருக்கிறோம். இங்கு  வந்து விட்டதால் எங்கள்  ஊரில் வீட்டில் டிரங் பெட்டியில் இருக்கும் பொம்மைகளை மனதால் நினைத்து, கொலுப் படியில் எழுந்து அருளச்  செய்து வழிபட்டேன். இந்த வருடம் இப்படித்தான் மானசீக கொலு என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

பேரனுடன் தினமும் அவனுடைய  விளையாட்டுச் சாமான்களுடன் கொலு மாதிரி வைத்து விளையாடிக் கொண்டு இருந்தேன். அவன் ,போன வருடம் ஊரில் வைத்தது போல் வை ஆச்சி! டெக்ரேட் செய் ஆச்சி! , நான் சந்தனம், பன்னீர் தெளித்து எல்லோரையும் வாங்கன்னு கூப்பிடுவேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.எல்லோரும் அதை கேட்டு சிரித்துக் கொண்டு இருந்தோம்..

மகனும், மருமகளும்,  வெள்ளிக்கிழமை (அமாவாசை அன்று) மாலையில், வாங்க கடைக்குப் போகலாம் என்று அழைத்து போனார்கள், காரில் போய் கொண்டே இருந்தோம், ரொம்ப தூரமா என்ன கடைக்கு என்ற  போது அங்கு வந்து பாருங்கள் தெரியும் என்று அழைத்துப் போனார்கள்,  எடிசன் என்ற இடத்தில் இருக்கும் ஒருவர் வீட்டுக்கு. அங்கு நிறைய பேர் அட்டைப்பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு இருந்தார்கள், வீடு மாதிரி இருக்கே1 என்ன கடை என்று உள்ளே போனால் - ஆச்சிரியம்! கொலு பொம்மைகள்!

”அம்மா! நம் வீட்டிலும் கொலு வைக்கலாம் ,பொம்மை பாருங்கள் ”என்றான் மகன் .அந்த வீட்டின் கார் ஷெட்டில் படி அமைத்து அழகாய் பொம்மைகள் அடுக்கி வைத்து இருந்தார் விற்பனைக்கு. கொஞ்சம் தான் சின்ன பொம்மைகள் .  மற்றவை எல்லாம் பெரிய பெரிய பொம்மைகள். ஒரு பொம்மையைத் தூக்கிப் பார்த்தால் கனமே இல்லை. ஆச்சரியமாய் இருந்தது அப்புறம் தெரிந்து கொண்டேன், பேப்பர் கூழ பொம்மைகள்! அழகாய் மண் பொம்மைகள் போலவே இருந்தது. அவருக்கு, கும்பகோணம், பண்ருட்டி, காரைக்குடியிலிருந்து பொம்மைகள் வருமாம்,மண் பொம்மையும் உண்டு நிறைய உடைந்து இருந்தது.கொலுவுக்கு ஒருவாரம் முன்பே வந்து விட வேண்டும், இப்போது விற்று விட்டது என்றார்.

நாங்கள் பிள்ளையார்,  பத்துமலைமுருகன்,(மலேஷியா) , வாழைமரத்தோடு இணைந்த கலச பொம்மை, மரப்பாச்சிப் பொம்மைகள் வாங்கினோம். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டு வைக்கும் பழக்கம் இருப்பதால் , முதன் முறை வைக்க போகிறீர்களா என்று கேட்டு விட்டு உள் இருந்து  மரப்பாச்சிப் பொம்மைகளைக் கொண்டுவந்து கொடுத்தார்,.

அழகிய யோக நரசிம்மர், பூவராகப் பெருமாள், உலகளந்த பெருமாள், கல்யாண, காதுகுத்து செட், திருக்கழுக்குன்ற   கழுகு  குருக்கள் செட், எல்லாம் அழகாய் இருந்தது, மதுரைவீரன், ஐயனார், வாஸ்து லட்சுமி,(மடிசார் கட்டிக் கொண்டு, கையில் விளக்கு வைத்து கொண்டு கதவை திறந்து உள் வருவது போனற சிலை வாஸ்து லட்சுமியாம்) கிரகலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சுபலக்ஷ்மி, காசி விசாலாட்சி, பிள்ளையார்பட்டி பிள்ளையார் பொம்மைகள் இருந்தன. எல்லாம் மிகப் பெரியவை!

போட்டோ எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தபோது இரண்டு காரில் வந்த கூட்டம்  ஆண்களும், பெண்களுமாய் உள்ளே வந்து விட்டார்கள்.
‘சின்ன இடம்,  நாம் வாங்கி விட்டோம், இடைஞ்சல் செய்யக் கூடாது ,வெளியே வருவோம் ”என்று வந்து விட்டோம். வரும்வழி எல்லாம்,  ”எல்லாப் பொம்மைகளையும் வாங்க வில்லை என்றாலும் படமாவது எடுத்து இருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வந்தேன்.

கொலு பொம்மைகளை வாங்கிவிட்டு வரும்போது பசியாற, எடிசனில் சரவணபவன் ஓட்டலுக்குப் போனோம்.  அங்கு  தோசை செய்வதைக்  கண்ணாடித்  தடுப்பு வழியாகப் பார்க்கலாம்.
 அதை போட்டோ எடுக்க அனுமதி பெற்று எடுத்த படம்;-






மசால் தோசைக்கு மசால்வைக்கிறார்.
அழகாய்ச் சுருட்டுகிறார்

தினமும் வேலை வேலை என்று இருந்த மகன் , சனிக்கிழமை குழந்தையாய்ச் சிரித்து மருமகளுடன் , மற்றும் எங்களுடன் சேர்ந்து படிகள் அமைத்தான்.
எனது மகன், எப்போதும் தன் அலுவலக் வேலையின் நினைவில், என்ன சாப்பிட்டோம், என்று தெரியாமலும், குழந்தையோடு விளையாடக்கூட நேரம் இல்லாமலும் தினமும்  இரவு வெகுநேரம் வேலை செய்துகொண்டு  இருந்தான்.  இரண்டு நாட்களாகக் கொலு வைக்கும் வேலையில், பழைய உற்சாகம் தொற்றிக் கொள்ள,  வேலைகளை மறந்து , மகிழ்ந்து இருந்ததைப் பார்க்கும் போது இது போல பண்டிகைகள் மனதைக் குதூகலப்படுத்தி  மேலும் தெம்பாய் வேலைகளை செய்ய வைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பொம்மைகள் இல்லை யென்றாலும், நம் வீட்டை அழகாய் சுத்தமாய் கலை நயத்தோடு வைத்துக் கொள்ளுதல், கைவேலைகள் செய்தவற்றை வைத்து அலங்கரிப்பது என்று தங்கள் எண்ணங்களை  பிரதிபலிக்க செய்ய நவராத்திரி விழா உதவுகிறது,  உடல் நலம், மனநலம் எல்லாம் இதனால் நன்றாக இருக்கிறது. மனதைக் குதூகலப்படுத்த உதவுகிறது. உறவுகள், நட்புகள் கலந்து பேச நேரம் ஒதுக்கும் நாளாகவும் இருக்கிறது. நாமும் விழாக்களைக் கொண்டாடி மகிழ்வோம்.

எங்கள் வீட்டுக் கொலு:-
                                                 
                                                         பேரன் வைத்த கொலு

அவன் பார்க்கும் டாய்  ஸ்டோரி கதாபாத்திரங்கள்
                               என் பொம்மையும் கொலுவில் வையுங்கள் தட்டில்

சுண்டல் செய்ய மாடல் கிச்சன்  அடுப்பு 
கொலுவில் வைக்க பைக், கார், விளையாட்டு   சமையல் அறை, பந்துகள்
கார்ட்டூன் கதாபாத்திரங்கள்
                                           கார்கள் டிரக்கில் வந்து இறங்குகிறது.  


மகன் வீட்டு கொலு


கண்ணாடி ஜாடிக்குள் இருப்பது ,பைன் மரத்தின் காய்கள். அதைச் சேகரித்து மருமகள் கலர் செய்து  ஜாடிக்குள்  போட்டு  இருக்கிறாள்.மரத்தட்டில் கோலம் போட்டு  நடுவில் சிறிய விளக்கு வைத்து இருக்கிறாள்.

 என் கணவர் செய்த  அம்மன் முகம்.  (சந்தனத்தில் செய்த  அம்மன்) 
 புடவை நகை அலங்காரம் மருமகள் செய்தாள்.
கிரீடம்  கிறிஸ்மஸ்  மரத்தில் தொங்கும் மணி.அங்கு கிடைப்பதை வைத்து அம்மனை  அலங்காரம் செய்து விட்டார்கள்  என் கணவரும் , மருமகளும்.

வாழ்க வளமுடன்!
                                                                        ----------