வெள்ளி, 28 நவம்பர், 2014

கனவில் வந்த காந்திஜி

                                                       

 தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் கனவில் தேசபிதா வந்து இருக்கிறார் . வந்து 10 கேள்விகளை கேட்டு இருக்கிறார். அவர் அதற்கு அழகான பதில்களை சொல்லி விட்டு  மேலும் ஒரு பத்து பேர்களிடம் அதே கேள்விகளை கேட்டு பதில் சொல்ல சொல்லி இருக்கிறார். அப்படி அவர் அழைத்தவர்களில் ஒருவர் தஞ்சையம்பதி  என்ற வலைத்தளம் வைத்து ஆன்மீக பதிவுகளை அளித்து வரும்   திரு .துரைசெல்வாராஜூ அவர்கள்.  என்னையும் இந்த தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர் அழைப்பை ஏற்று  கேள்விகளுக்கு எனக்கு தெரிந்தவரை பதில் அளிக்கிறேன்.

இப்படி அழைப்பார்கள் என்று தெரிந்தோ என்னவோ, நான் ஒரு முறை காந்திஅடிகளோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் போலும்!அது தான் இந்த படம்.(இது அமெரிக்காவில் வாக்ஸ் மியூசியத்தில் எடுத்தபடம்)

1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்?
வணக்கம் காந்திஜி , வாழ்க வளமுடன்.
நான் இருக்கும் வீட்டை சுற்றி கணபதி இருக்கிறார்.  அவரை வணங்கினால்  துன்பம், கர்மவினைகள், மீண்டும், மீண்டும் பிறந்து துன்புறுவது  எல்லாம் கிடையாது  என்று   விவேக சிந்தாமணி நூல் கூறுகிறது.அதனால் அவரை தினம் வணங்குவதால்   காந்திஜி! எனக்கு மறுபிறவி கிடையாது.

அல்லல்போம் வல்வினைபோ மன்னைவயிற்றிற் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்- நல்ல
குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
கணபதியைக் கைதொழுதக் கால்.

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால் ? சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா?

முதலில் கொடுத்துப் பாருங்கள், என்ன திட்டம் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

3.இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ? என்ன செய்வாய்?

நம் நாட்டுக்கு நலம்பயக்கும் அந்த திட்டத்தை அவர்கள் எதற்கு எதிர்க்கிறார்கள். நல்ல திட்டத்தால் அவர்களே இங்கு வந்து விடுவார்கள்.

4.முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் எல்லாம் ஏதாவது, பேஸ்புக் மற்றும் வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் ஏதாவது எழுதிக் கொண்டு படித்துக் கொண்டு இருந்தால்  நல்ல ஆரோக்கியமாக இருப்பார்கள். அவர்களில் ஏழை முதியோர்கள்,
 ஆதரவற்ற முதியோர்கள் தனியாக இருக்க கூடாது என்று அரசாங்கமே  அவர்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க  உணவு, உடை, மருத்துவ வசதி,  அன்பாக பேசி உரையாட ஆட்கள் என்று அளித்து மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். அவர்களின் திறமைகளை அறிந்து நாட்டின் நன்மைக்கு அவர்களது ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளும்.


5.அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது?
அரசியல்வாதிகள் எல்லாம் மனிதநேயப்பண்பு, சேவை மனப்பான்மை  எளிமை, இனிமை  கொண்டிருக்கவேண்டும்.அவர்கள் மட்டுமே தேர்தலில் ஈடுபடப் புதிய திட்டம் போடப்படும்.

6.மதிப்பெண்கள் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்கு போனால்?
அவர் அவர் தகுதி அவரவர்களுக்கு தெரியும். சரியான மதிப்பெண்கள் வரவில்லை என்றால் மேல் நீதி மன்றம் போவதற்கு உரிமை தேவை.

7.விஞ்ஞானிகளுக்கென்று  ஏதும் இருக்கிறதா?
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்  இணைந்த வாழ்க்கை தான் வாழ்கிறோம், அதனால் விஞ்ஞானிகளிடம் வாழ்வின் முன்னேற்றத்திற்கும், வாழ்வின் சிறப்புக்கும், ஏற்றவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும், விளைநிலங்கள் முழுவதும் வீட்டுமனை ஆகி வருகிறது. அதனால் வருங்காலத்தில் விளைநிலங்கள் இல்லாமல் உணவு பயிர்களை  விளைவிக்கும் வித்தை அல்லது உணவு இல்லாமல் உடலைப்பேணி வளர்க்கும் விஞ்ஞானத்தை  உடனே கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொள்வேன். கண்டுபிடிப்புக்கு வேண்டிய வசதிகளை விஞ்ஞானிகளுக்கு செய்து கொடுக்கும், அரசாங்கம்.

8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?,

 நலத்திட்டங்களை முந்திய அரசு செய்தவற்றைப், பிறகு வரும் எந்த அரசும் மறுக்க முடியாது . மறுத்தால் தோல்வி நிச்சயம். வேண்டும் என்றால் விஞ்ஞானிகளை  இன்னும் அதிகப்படியாக  இரண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க உத்தரவு இடும்.


9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக? 

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். பணக்கார நாடாக இருந்தாலும் வீடு இழந்தோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆட்சிக்கு  வரும் அனைவரும், சொல்லி ஓட்டு கேட்பது ஏழ்மையை ஒழிப்போம், கல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது தான்.
அதை நடைமுறைக்கு கொண்டு வந்தாலே புதுமை செய்தமாதிரிதான்.
மற்ற நாடுகள் ஏற்கனவே நம் மக்களின் அறிவுத் திறமையைக் கண்டு வியக்கிறது,   இல்லாமை, கல்லாமை இரண்டையும்  ஒழித்த புதுமையைச் செய்து விட்டால் எல்லா நாடுகளும் நம் புதுமை கண்டு வியக்கும்.


10.எல்லாமே  சரியாகச் சொல்வது போல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய் உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது ஆகவே வேறு என்ன  பிறவி வேண்டுமென
இறைவன் கேட்டால்?

காந்திஜி ! முதல்கேள்வியிலேயே சொல்லிவிட்டேன் , எனக்கு மறுபிறவி கிடையாது என்று . அப்படியும் இறைவன் கொடுத்தால் அவன் விருப்பம்.  என்னை எப்படி படைக்கவேண்டுமோ அப்படிப் படைத்துக் கொள்ளட்டும்.

இந்த தொடர் பதிவை அனைவரும் எழுதி இருப்பார்கள் நான் காலதாமதமாய் எழுதுவதால் எழுத அன்பர்கள் இருந்தால், விருப்பம் இருந்தால் எழுதலாம்.
                                                                      ---------------
                                                           வாழ்க வளமுடன்.




.

திங்கள், 24 நவம்பர், 2014

அச்சரப்பாக்கம் சிவன் கோவில்



பொன்திரண் டன்ன புரிசடை புரளப்
           பொருகடல் பவளமொ டழல்நிறம் புரையக்
குன்றிரண் டன்ன தோளுடை ய்கலம்
           குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்
மின்திரண் டன்ன  நுண்ணிடை யரிவை
          மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி
அன்றிரண் டுருவ மாய்வெம் மடிகள்
         அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே
                                                                         -திருஞானசம்பந்தர் தேவாரம்

அச்சரப்பாக்கம் கோவிலுக்குப் போன மாதம் 10 தேதி சென்றோம்.  சென்னைக்கு உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்று  இருந்தோம்.   .தேவாரத்தில் இது அச்சிறுபாக்கம் என்று கூறப்படுகிறது.

 நாங்கள் போன அன்று சங்கடஹரசதுர்த்தி. இந்தக் கோவிலில் விநாயகர் மிக முக்கியமானவர். அன்று எதிர்பாராமல் சங்கடஹர சதுர்த்தி அமைந்து விட்டது. கோபுர வாயிலுக்குள் நுழையும் போதே வெல்லக் கொழுக்கட்டை
 பிரசாதம் தந்தார்கள். விநாயகரின் அருள் கிடைத்த மகிழ்ச்சி.

இக் கோவில் மதுராந்தகத்திலிருந்து தெற்கே 16 கி.மீ . தொலைவில் உள்ளது.
இராஜகோபுரத்துடன்  இரண்டு பிரகாரங்கள்   கொண்ட கோவில். இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு அம்பாள்கள் இருக்கிறார்கள்.

ஸ்வாமி பேர் எமையாட்சீசர், அம்மன் சுந்தரநாயகி. (பாலசுகாம்பிகை  எனும் இளங்கிளியம்மை என்பன வேறு பெயர்கள்.)

பாண்டிய மன்னன் பிரதிஷ்டை செய்த ஸ்வாமிக்கு உமையாட்சீசர், அம்மன் மெல்லியலாள்.

எமையாட்சீசர் பழமையானவர் ,சுயம்பு மூர்த்தி. பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  உமையாட்சீசர் பின்னர் வந்தவர்.

கண்ணுவமுனிவர், கெளதமமுனிவர்,பூஜித்த தலம்.

                                   





       கொடிமரமும் நந்தியும் கோபுரவாயிலுக்கு நேரே இல்லாமல் சற்றுத் தள்ளி உள்ளன.
                                        


ஊரின் பெயர்க் காரணம்:-

1. சிவபெருமான் திரிபுர தகனத்தின் போது பிள்ளையாரை வணங்காமல் போனதால் அவர் ஏறிச் சென்ற தேரின் அச்சு முறிந்தாகவும், பின்
சிவபெருமான் விநாயகரை நினைத்தபின் அச்சு சரியானதாகவும் சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஏறி வந்த தேரின் அச்சு முறிந்த இடம் என்பதால் இத்தலம்  அச்சிறுபாக்கம் என்று அழைக்கப்படுகிறது.





2.சிவபெருமான் திரிபுரதகனம் செய்யும் பொருட்டுத் தேரில் ஏறிச்சென்ற போது தேர்வடிவாக தேவர்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவனுக்கு துணைசெய்வதை எண்ணி  அகந்தை கொண்டதால்  இறைவன் அச்சுமுறியச் செய்தார்.  அதனால்  இத்தலம் அச்சிறுபாக்கம் என்றும் கூறப்படுகிறது.

3. பாண்டிய மன்னன்  தனது நாட்டில் திருக்கோவில் பிரதிஷ்டைக்கு வேண்டிய பொருட்கள்,  கங்கை மணல்  ஆகியவற்றை ஏற்றி வரும் போது இத்தலத்தின் இடத்தில் அச்சுகள் முறிந்தன. மன்னன் இறைவனது அசரீரி வாக்கினைக் கேட்டு, இத்தலத்தில் திருப்பணிகள் செய்து தன் நாடு திரும்பினார் என்ற வரலாறும் உண்டு.  வண்டிகள் அச்சுமுறிந்த இடம் இவ்வூருக்கு அருகில் உள்ள வண்டிக்குப்பம்.


கருவறையில் சுவாமியும் அம்பாளும் சிலைவடிவில் இருக்கிறார்கள்
முன் இருப்பது - எமையாட்சீசர்  பழமையான மூர்த்தி

வெளிப் பிரகாரம்

அரசும் வேம்பும் இணைந்து இருக்கும் இடத்தில் பிள்ளையார், நாகங்கள்


அம்மன் சன்னதியில் ஓரத்தில் உள்ள சாஸ்தா
திருஞானசம்பந்தர் பாடல்கள்
உள் கோபுர வாயில்

தீர்த்தம்:-தேவ,பானு சங்கு தீர்த்தங்கள். பானுதீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது.


கோவில் அருகில் ஒரு தேரும், கோவில் எதிரில் ஒரு தேரும் உள்ளது

அச்சு முறிந்த சக்கரங்கள்( இவை பிற்காலத்தில் முறிந்த சக்கரங்கள்)
தலமரம் - கொன்றை. தலவிருட்சத்தின்  அடியில் சுவாமி, அம்மன், திருஞானசம்பந்தர், நந்தி
கோபுர வாசல் அருகில் உள்ள இளங்கிளிஅம்மன்

 இத்தலம் இராஜேந்திர சோழ வளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு கூறுகிறது. இறைவன் பெயர் அக்ஷேஸ்வரர் , அச்சுக் கொண்டருளிய தேவர் என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நான்கு காலபூஜை, 10நாட்கள் சித்திரை மாதத்தில் திருவிழா நடக்கிறது.

உள்ளே இருக்கும் ஸ்வாமி சன்னதிக்கு, வெளியே பெருமாளும் இருக்கிறார்
அலுமேலுத் தாயார்

மூன்று தேவியர்-  நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறுமாம்.



சித்திரைத் திருவிழா நடைபெறும்போது சுவாமி எழுந்தருளும் வாகனங்கள்.
                     
 ஓதுவார் ஞானப்பிரகாசம் அவர்கள் தேவாரங்கள் பாடி, கோவில் வரலாற்றைச்  சொன்னார். அவர், ”தினமும் நமச்சிவாயமந்திரம் சொல்லுங்க நலம் அடைவீர்கள் ”என்றார் .

மனநிறைவுடன் அவரிடம் விடைபெற்றுப்  பின் சென்னை வரும் வழியில் மேல்மருவத்தூர் அம்மனை  நன்றாகத் தரிசனம் செய்து சென்னை வந்து சேர்ந்தோம்.
                                                              =====================
                                                                     வாழ்க வளமுடன்.

சனி, 22 நவம்பர், 2014

மழையும் , சூரியனும்








காலைமுதல் வானம் மேக மூட்டத்துடன் மழை வர பார்த்தது சூரியன் மறைந்து மறைந்து காட்சி தந்தார். தீடிரென்று மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. மழை, சூரியன் காட்சிகளை பாருங்களேன். மழை பார்க்க அலுக்காத ஒன்றுதான் ஆனால் விடாது பெய்யும் பெருமழை அனைவருக்கும் கஷ்டம் தான்.
                       ஏரி குளம் கிணறு ஆறு எல்லாம் நிரம்பி வழிய!
                        மாரி அளவாய் பொழிய மக்கள் வளமாய் வாழ!

                                வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

வெள்ளி, 21 நவம்பர், 2014

அன்று மனிதர்கள் வாழ்ந்த வீடு! இன்று மரங்கள் வளரும் வீடு!


                                                                    கதைகள் சொல்லும் வீடு

பழைய வீட்டின் மீது நாலு மரம் வளர்த்து இருக்கிறது. முருங்கை மரம், ஆலமரம், அரசமரம், புங்கமரம் வளர்ந்து இருக்கிறது.காலத்தின் சுவடுகளை தாங்கி நிற்கும் இந்த வீட்டில் எத்தனை கதைகள் இருக்கும் !

கடை முழுக்கு சமயம் படித்துறைக்குப் போன போது அதன் அருகில் இருந்த இந்த பழைய வீடு கண்ணில் பட்டது. புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் நேற்று. அதற்கு  அழகாய் இன்று கவிதை வடித்து விட்டார்கள் கீதமஞ்சரி.

 கீதமஞ்சரியின் அருமையான கவிதையை நீங்களும் படிக்க இங்கு  :-

சந்தடியற்று என்னை அநாதையாக்கிப் போனவர்களின்
எச்சங்கள் இப்போது எங்கோ வெகுதொலைவில்!
எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்து வந்த
பறவைகளின் எச்சங்கள் இதோ பத்திரமாய் என் தலையில்!
பழகிய உயிர்மூச்சுகளின் பிரிவெண்ணி 
பாழ்நினைவுகளால் தடுமாறிடும் பொழுதுகளிலெல்லாம்
வருடிக்கொடுகின்றன இலைக்கரங்களால் கிளைகள்!
சுவர்பிளந்து உள்ளேகுகின்றன வேர்க்கால்கள்!
நானிருந்த இடத்தில் நாளையிருக்கலாம்
ஆலும் அரசும் புங்கையும் முருங்கையும்!
ஆனாலும் என்னை நீங்கள் அடையாளம் காணலாம்
வந்தமரும் பட்சிகளின் ஆரவார ஒத்திசைவில்!


நன்றி கீதமஞ்சரி.

கேட்டீர்களா? வீடு பாடும் கவிதையை.


                                                              வாழ்க வளமுடன்.
-                                                                         ------------------

புதன், 19 நவம்பர், 2014

மெல்ல விடியும் பொழுது

காலை பொழுதின் அழகை நின்று ரசிக்க  நேரம் இல்லாமல்  ஓடிக் கொண்டு இருந்த காலங்கள் ஒன்று உண்டு. காலை மாலை இரண்டு நேரமும் வானத்தை பார்ப்பது அழகுதான். மீண்டும் நேரம் கிடைத்த  போது நான் கண்ட காட்சிகளை  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

                   

கார்த்திகை பனி மூட்டத்தில்  சூரியன் எழுவது கடலலையின் மேல் சூரியன் காட்சி அளிப்பது போல் இல்லே!

பறவையும் , மரமும், சூரியனும் 


ஓவியர்கள் நிலா, மரம், பறவை வருவது போல் பெரும்பாலும் வரைந்து இருப்பார்கள்   அது போன்ற ஒருகாட்சி   கிடைத்தது.

மேக மூட்டத்தில் நிலவை போல் காட்சி அளிக்கும் சூரியன்


காலை நேரத்தில் சூரியன் சந்திரன் போல் தோன்றும் ,  அந்த மாயத்தோற்றத்தை  ஒரு விடியலில் கண்ட காட்சியை பதிவாக்கி இருக்கிறேன்.

முழுநிலா வரும் காலமும் அது தேயும் போது ஒவ்வொறு தோற்றமும் அழகுதான். மூன்றாம் பிறையை சீக்கிரம் பார்த்துவிட வேண்டும் சிறிது நேரத்தில் மறைந்து விடும். 

நிலவோ! சூரியனோ!


பவுர்ணமி நிலா போல் இருக்கிறதா?


பனியை விலக்கி வெளி கிளம்பும் சூரியன்

காலை பனியை விலக்கி கொண்டு தன் இளம்கதிரை வீசி பனி மூட்டத்தை வெளி கிளம்பி வரும் காட்சி இரவு மேகங்களுடன் மறைந்து மறைந்து விளையாடும்  நிலவை போல் இருக்கிறது அல்லவா?


உணவும் தண்ணீரும் எடுக்க வரும் பறவைகள்







உணவு உண்ணும் மைனா

                                       
                                             இது என்ன பறவை கண்டு பிடியுங்கள்?


காலை நான் வைக்கும் உணவை எடுக்க வந்த பறவைகளை கண்டு களித்தீர்களா?

                                                            வாழ்க வளமுடன்.
=======================================================================