செவ்வாய், 21 செப்டம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

நானும் என் கணவரும் கடந்த வாரம் உறவினர் திருமணத்திற்காக மதுரை போய் இருந்தோம்.
திருமண வீட்டில் மணமக்களுக்கு ஆசிர்வாதம் செய்ய அழகான குங்குமச் சிமிழில் அட்சதை அரிசியை போட்டு தந்தார்கள். இருந்த இடத்திலிருந்து அட்சதையை போடும் போது அது மற்றவர்கள் மேல் தான் விழும். மணமக்களுக்கு பரிசு பொருள் கொடுக்க போகும் போது அட்சதையைப் போட்டு வாழ்த்திவரலாம்.இன்னொரு வீட்டுக் கல்யாணத்தில் எல்லோரும்’அப்படியே இருங்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு மணமக்கள் வருவார்கள் அப்போது அட்சதைப் போட்டு ஆசிர்வாதம் செய்யுங்கள்’ என்றார்கள். இது நல்ல யோசனையாக இருந்தது. வயதானவர்கள் படி ஏறி கூட்டத்தில் இடித்துக் கொண்டு போகாமல் இருந்த இடத்தில் வாழ்த்த முடியும்.

திருமண வீட்டில் வெகு நாள் பார்க்காத உறவுகள், நண்பர்களைப் பார்த்து அன்பை பரிமாறி கொண்டபின் ’ஒரு வாரம் நீ இருந்து வா நான் அடுத்த ஞாயிறு வந்து அழைத்துப் போகிறேன்’ என்று என் தங்கை வீட்டில் விட்டு விட்டுப் ஊருக்கு போய்விட்டார்கள். எல்லோரும் 'மதுரைக்கு நல்ல மழை தான்' என்றார்கள். பின்ன, எப்போதும் விசேஷத்திற்கு வந்துவிட்டு ஒடினால், இப்படித்தான் சொல்வார்கள்.

அவர்கள் சொன்ன மாதிரி நல்ல மழை தான் பெய்தது. தல்லா குளப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ஆகி மண்டல பூஜை நடந்து கொண்டு இருக்கிறது என்றார்கள். திருவிழா வேறு நடக்கிறது இன்று கருட வாகனம் என்றார்கள், அதற்குப் போனோம்.
மாலை 4.30க்கு போனதால் கூட்டம் இல்லை. கருட வாகனத்தில் அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் பார்க்க முடியாத படி சுற்றிலும் திரைச்சீலையால் மறைத்து விட்டார்கள்.

உள்ளே பெருமாளை பார்த்து விட்டு வரும் போது என் அம்மாவின் நினைவு வந்து விட்டது. தங்கைகளும் நானும் அம்மாவுடன் மார்கழி மாதம் காலை 4.30க்கு பசுவும் கன்றும் வந்து பால் கறந்து பல்லாண்டு பாடி கதவைத் திறக்கும் போது சென்று வணங்கிய நினைவு வந்தது. சுடச் சுட வெண்பொங்கல் பெரிய நெல்லிக்காய் அளவுதான் தருவார்கள். வாங்கி உண்டு விட்டு அடுத்த கோவிலுக்கு அம்மாவின் ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துக் கொண்டு போவதைப்பற்றி பேசிக் கொண்டே ஆட்டோவில் ஏறினோம். அப்போது நரிமேட்டிலிருந்து நாங்கள் அம்மா,பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பேசிக்கொண்டே நடந்தே போவோம். இப்போது ஆட்டோ,டாக்ஸி,கார் என்று போகிறோம், ஆனால் அப்போது உள்ள மகிழ்ச்சி இல்லை.

அடுத்து நாங்கள் சென்ற கோயில் ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில் ஆகும்.
அந்த கோவிலில் இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் .
கோவில் பக்கத்தில் உள்ள பழைய போலீஸ் ஓட்டுக் குடியிருப்புகள் அடுக்கு மாடி குடியிருப்புகளாய் மாறிவருகிறது. ஒரு சில பழைய வீடுகள் இன்னும் இருக்கின்றன. அதை அப்புறம் கட்டுவார்கள் என நினைக்கிறேன்.பக்கத்தில் இருக்கும் விளையாட்டு மைதானத்தில்
மார்கழி மாதம் போகும் போது காலை போலீஸ் மார்ச்பாஸ்ட் நடக்கும்,வாத்தியங்கள்(பியூகிள்) வாசித்துக் கொண்டு இருப்பார்கள். போலீஸ் பாரேட் நடப்பதைப், பார்க்க அழகாய் இருக்கும்.
மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை வெகு சிறப்பாய் நடந்ததாம் என் தங்கை சொன்னாள்.
தினம் அன்னதானம் நடக்கிறது .

அழகர் பூ பல்லாக்குப் பார்க்க மாரியம்மன் கோவில்தான் வருவோம். அழகான பூப் பல்லாக்கு கோவில் பக்கம் வரும் போது வாடிவிடும். தல்லாகுள பெருமாள் கோவில் அருகில் எதிர் சேவையின் போது வாணவேடிக்கை மிகவும் நன்றாக இருக்கும்.வித,விதமாய் வெகு நேரம் வாணவேடிக்கை நடக்கும்.

ஒவ்வொரு முறை போகும் போதும் நேரம் இருந்தால் மதுரை மீனாட்சியைப் பார்க்க போவோம்.கும்பாபிஷேகம் ஆனபின் போக முடியவில்லை.ஒரு முறை போனபோது முதல் ராஜகோபுர வாசலிருந்து கூட்டம். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று போனால் பொற்றாமரைக் குளம் வரைதான் போக முடிந்தது. அதன் பின் தடுப்பு மூங்கில்கழியை தாண்டி
காவலுக்கு நின்ற பெண் போலீஸ் அதிகாரியிடம் சொல்லிவிட்டு ‘சுவாமியைப் பார்க்க போகிறோம் மீனாட்சியை பார்க்க முடியாது ஒரே கூட்டமாய் இருக்கிறது’ என்றோம் அந்த பெண் போலீஸ் ’மீனாட்சியைப் பார்த்தாலும் சுவாமியைப் பார்த்தாலும் ஒன்று தான் போங்க,போங்க’ என்றார்கள்.

இந்தமுறை எனக்கு இரண்டு முறை மீனாட்சிஅம்மனைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்து.
புதன்கிழமை,சனிக்கிழமை என்று ஒரே வாரத்தில் இரண்டு முறை பார்த்து விட்டேன்.

என் தங்கையின் பெண் ’செவ்வாய்,வெள்ளி,கூட்டமாய் இருக்கும் அப்போது போககூடாது பெரியம்மா! புதன்கிழமை போகலாம்.’ என்றாள். எனக்கும் அன்று பிறந்தநாள். அம்மாவிடம் ஆசி பெற்று வரலாம் என்று போனோம். இலவசமாய் செருப்பு பாதுகாக்க அழகான கட்டிடங்கள் உள்ளது. நான்கு வீதிகளிலும் சுற்றிவந்து கோபுரங்களைத் தரிசிக்க பேட்டரி கார் வசதி உள்ளது.வேறு வாகனக்களுக்கு அங்கு அனுமதி இல்லை.

அம்மன் சன்னதிக்கு முதலில் போனோம். ஊஞ்சல் பக்கம் அம்மனின் சேலைகள் ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறிது நேரம் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ஏலத்தில் பத்து பத்து ரூபாயாகத்தான் ஏற்ற வேண்டுமாம். அம்மனின் பட்டுப்புடவைகள் என்னவாயிற்று? எல்லாம் பாலியஸ்டர் பட்டு புடவைகள். ஒரு புடவைக்கும் அடுத்தபுடவைக்கும் ஏலம் விட நேரம் ஆனது. கூடி இருப்பவர்கள் சீக்கிரம் ஏலம் விட சொன்னார்கள். மடி கணினியை வைத்துக் கொண்டு புடவையின் எண், விலை பார்த்து ஏலம் விட்டுக் கொண்டு இருந்தார்கள். நேரம் ஆகிவிட்டதால் ஒரு அம்மா கன்னத்தில் கை வைத்துக் கொண்டு இருந்தார்கள் போலும் ஏலம் விடுபவர் மைக்கில் கன்னத்தில் இருந்து கையை எடுங்கள் அல்லது இடத்தைவிட்டு நகருங்கள் என்று அதட்டிக்கொண்டு இருந்தார்.

பிள்ளையாருக்குப் பக்கத்திலிருந்து வரிசை ஆரம்பித்து விடுகிறது. கூட்டம் அவ்வளவாய் இல்லை. விறு,விறு என்று நகர்ந்து விட்டது கூட்டம்,15ரூபாய் கட்டணம் ஒரு பக்கம்,இலவச வரிசை ஒரு பக்கம் என்று போனதால் நெரிசல் இல்லாமல் பார்க்க முடிகிறது. உள்ளே போகும் அர்ச்சகர் கொஞ்சம் விலகி நின்றால் இன்னும் சீக்கிரம் பார்க்கலாம். அம்மன் சன்னதியை விட்டு வெளியே வந்தால் என் தங்கை பெண், 'பெரியம்மா சுழலும் லிங்கம் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேட்டாள். ’பார்த்தது இல்லையே எங்கு இருக்கு’ என்று கேட்டேன் ’மேலே அப்படியே விதானத்தை பாருங்கள்’ என்றாள். அண்ணாந்து பார்த்தால் லிங்கம் நம்மை நோக்கி உள்ளது .நாம் எந்தப்பக்கம் நின்று பார்த்தாலும் ஆவுடையாரின் அபிஷேகத்தண்ணீர் விழும் பகுதி நம் பக்கம் நேராய்த் தோன்றுவதைப்போல் அற்புதமாய் வரைந்த அந்த ஒவியர் பாராட்டப்பட வேண்டியவரே.

அடுத்து சோமசுந்தரரைப் பார்த்தோம். நல்ல அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள், சரவிளக்கு வரிசையாக ஜெகசோதியாக பிரகாசமாய் இருந்தது. அம்மன் சன்னதியிலும் இப்படி பிரகாசமாய் விளக்கு இருந்தால் அம்மனை இன்னும் திருப்தியாய்ப் பார்த்து மக்கள் விரைவாய்க் கண்டு களித்துச் செல்வார்கள்.

புது மண்டபத்தில் எங்கள் வீட்டுக் கொலுவிற்காகச் சில அழகு பொருட்கள் வாங்கி வீடு வந்தோம், புரட்டாசி முதல் சனிக்கிழமை என் கணவர் ஊரிலிருந்து வந்தவுடன்,
’ நான் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேனே கூட்டம் இல்லாமல் தரிசனம் செய்தேன்’ என்றவுடன் அவர்களும் இன்று போகலாம் கூடல் நகர் பெருமாள் கோவிலில் தான் இன்று கூட்டம் இருக்கும்’ என்று சொன்னார்கள். கிளம்பினால் நல்ல மழை! ஆட்டோவில் போனாலும் தண்ணீர்! வண்டிக்குள்ளும்! மதுரையில் மழைபெய்தால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும்.
கீழவாசல் எல்லாம் தண்ணீர்! வண்டிகள் தண்ணீருக்குள் மாட்டிக்கொண்டு பரிதாபமாய் நின்று கொண்டு இருந்தன. அம்மன் சன்னதிவாசலிலும் தண்ணீர் நின்றது. மழை நீர் வடிகால் வசதி சரியில்லை.

எனக்கு, கணவருக்கு சீக்கிரம் சுழலும் லிங்கத்தை காட்ட ஆசை. 15 ரூபாய் டிக்கட் எடுத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து சுழலும் லிங்கத்தைக் காட்டினேன் அவர்களும் ஆச்சிரியப்பட்டு ஓவியரைப் பாரட்டினார்கள். பின் சுவாமி சன்னதிக்கு வந்தால் என் கணவர் மேலே பார்! என்று எனக்கு சுழலும் லிங்கம் காட்டினார்கள்.சுவாமி சன்னதி வாயிலில் மேல் விதானத்தில் இரண்டு ஒரங்களிலும் சுழலும் லிங்கம் வரைந்து இருக்கிறார்கள். நாங்கள் அண்ணாந்து பார்ப்பதைப் பார்த்து வெளியூர்களில் வந்த அன்பர்களும் என்ன? என்ன ?என்று கேட்டு எல்லோரும் பார்த்து பரவசப் பட்டார்கள்.

போனமுறை பார்க்க முடியவில்லை. வர வர மீனாட்சி அம்மன் கோவிலும் திருப்பதி பெருமாள்கோயில் மாதிரி ஆகிவிட்டது என்று புலம்பிக் கொண்டு இருந்தது சொக்கன், சொக்கி காதில் விழுந்து இந்த முறை நல்ல காட்சி தந்தார்கள் சொக்கனும் சொக்கியும்.

மதுரையில் தண்ணீர் கஷ்டம் உள்ளது. குடி தண்ணீருக்கு சில வீடுகளில் மோட்டார் போட்டு பிடிப்பதால் சில வீடுகளுக்கு தண்ணீர் வருவது இல்லை.புகார் செய்தால் எடுப்பது போல் எடுத்து விட்டு மறுபடியும் போட்டு கொள்கிறார்கள் என்ன செய்வது! அவர்களாய் திருந்தினால் தான் உண்டு.

இந்த மழை காலத்தில் மழை நீரை நல்ல முறையில் சேமித்து தண்ணீர் பஞ்சத்தை விரட்ட வேண்டும்.வைகையில் நீர் நிறைய வேண்டும்.மக்கள் கஷ்டம் தீர வேண்டும் என்று பிட்டுக்கு மண் சுமந்தவனிடம் வேண்டிவந்துள்ளேன்.

கோவில்பட்டியில் சித்தப்பாவீட்டிற்கு தங்கை,தம்பியோடு போய்வந்தேன்.சித்தப்பா வீட்டீல் துக்கம் நிகழ்ந்து இருந்தாலும்,அதை மறந்து அண்ணன் குழந்தைகளை அன்போடு உபசரித்தார்கள். சித்தப்பாவின் உருவில் என் அப்பாவை கண்டேன்.

நான் ஒரு வாரமும் அன்பு மழையில் நனைந்து வந்தேன். தம்பி, தங்கைகள்வீடு, மாமாபெண் வீடு, தங்கை மகள் வீடு, என் மகனுக்கு பெண் எடுத்த வீடு என்று போய் புது தெம்பைப் பெற்று வந்துள்ளேன். இப்போது
’பெரியம்மா!’,’அத்தை!’ என்று குழந்தைகளின் அன்புக் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.

குரு வணக்கம்
--------------
தந்தைதா யாவானும் சார்கதியிங் காவானும்
அந்தமிலா இன்பநமக் காவானும்-எந்தமுயிர்
தானாகு வானும் சரணாகு வானும் அருட்
கோனாகு வானும் குரு.

அண்ணலே,நீ அருட்குருவாக வந்து என் உள்ளமாகிய கல்லைப் பிசைந்து தெய்வக் கனியாக மாற்றி அமைக்க வல்லவன். என் உடல்,பொருள்,ஆவியெல்லாம் உனக்கே உரியனவாகும்.

எருவை, செடியானது தன் மயமாக்குவது போன்று குரு சிஷ்யனைத் தன் மயம் ஆக்குகிறார். அவர் கருணையே வடிவெடுத்தவர்.
கைம்மாறு கருதாத பேரியல்பை அவரிடம் காணலாம்.மனிதனைத் தெயவமாக மாற்றியமைப்பவரைத் தெய்வமாகக் கருதாது வேறு எங்ஙனம் கருதுவது?
-சுவாமி சித்பவானந்தர்.

ஒவ்வொருவர் வாழ்விலும் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது.
இதை தான்” குரு தானாக வருவார்” என்று அருள் தந்தை கூறுகிறார்--

//குரு என்றால் யார்? குரு என்றால் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும்;தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே,என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே,தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும்,சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி,அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்து விடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதை விட,ஒரு மனிதனுடைய கர்மா,அவனுடைய action, அவனுடைய சிந்தனை,அவனுடைய தெளிவு,அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்து விடுகிறது;அதுவே குருவையும் கொண்டு வந்து கொடுத்து விடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை,சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் தூண்டி விடுகிறது.//

அறிவே தான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞ்ர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வாம்.
-அருள்தந்தை.


புருவத்திடை உந்தன் பூவிரால் தொட்டு
எந்தன் உயிருணர்த்தி
புன்செயல்கள் பதிவழிந்து,பூர்வநிலை அறிவறிய
துரியம் தந்து
கருவறிந்து அகத்தவத்தால் களங்கங்கள் போகப்
பெருங்களத் தமர்த்தி
கருத்துடனே விளைவறிந்து ஐந்து புலனையாளுங்
கலை போதித்து
உருவத்தில் உயிரை,உயிர்க்குள் உள்ளமெய்ப்
பொருளை அறிவாய்க்காட்டி
ஒழுக்கத்தால் உலகினையே நட்புக் கொள்ளும்
அன்புநெறி விளங்கவைத்து
திருத்தமொடு காயகற்பம்,சீர்கர்மயோகம்,
உடற்பயிற்சி தந்து
சிந்தனையை,உடல்நலத்தைச் சீரமைத்து உய்வித்த
குருவே வாழ்க.


எவரொருவர் குருவை மதிக்கிறார்களோ அவர்கள் தரத்தில் உயர்ந்து பிறவிப் பயனை அடைவார்கள்.